19 Nov 2012

விட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர் - மலர்மன்னன்


எதுவும் வேண்டாம் என்று ஓடிப் போகிறவர்களைக்கூட நம் மக்கள் எல்லாம் தரக்கூடிய மகானாக வழிபட்டு அவரைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமாய் கூடிச் சிறை பிடித்துவிடுகிறார்கள்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள திருவட்டீஸ்வரன்பேட்டைதான் சென்னையின் வரைபடத்தில் பிரதானமாக இருந்தது - நூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன்.  சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள போளூர் ஒரு காலத்தில் அங்குள்ள சம்பத் கிரி என்ற மலையையொட்டி பொருளூர் என்று அழைக்கப்பட்டது, அதன் அருகாமையில் உள்ள பர்வத மலை சங்க காலத்தில் நவிர மலை என்று பாடப்பட்டிருகிறது, நாம் சாதாரணமாக செங்கம் என்று அறியும் ஊர் செங்கண்மாநகராக வெளிர் குடி மன்னர்களின் தலைநகரமாக இருந்தது என்பன போன்ற உபரி தகவல்கள் மலர்மன்னன் எழுதிய, "விட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர்." என்ற புத்தகத்தில் கிடைக்கின்றன.

காவலாளி தோதாவின் உடம்பை அழுந்தத் துடைத்துவிட்டதும், சிவந்த சருமத்தில் மஞ்சள் வெயில்பட்டு அவன் பொற்சிலை போலப் பிரகாசிக்கலானான். கூட்டத்தில் ஒரு பொற்கொல்லனும் இருந்தான். சொக்கத் தங்கமா ஜொலிக்கற இந்த சாமி கைபட்டதெல்லாங்கூட தங்கமாயிடுமா என்று மனதுக்குள் வியந்துகொண்டான் அவன். இவ்வாறு அவன் நினைத்த மாத்திரத்தில் அதுவரை வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்த தோதா சட்டெனப் பொற்கொல்லனைப் பார்த்துப் புன்னகைத்தான். பொற்கொல்லன் சிறிது துணிவு வரப்பெற்றவனாக தோதாவின் அருகில் சென்றான். தன் இடுப்பில் செருகியிருந்த சுருக்குப் பையில் கையை நுழைத்து ஒரு செப்புக் காசை வெளியில் எடுத்தான். தோதாவின் வலது உள்ளங்கையில் அதை வைத்து அழுத்தினான். தோதா அதை ஒரு பார்வை பார்த்தான். உடனே செப்புக் காசை வாயில் போட்டுக்கொண்டு குதப்பத் தொடங்கினான். சில நிமிடங்களுக்குப் பிறகு 'தூ' என்று அதைத் துப்பினான். அது வெளியே சிறிது தொலைவில்போய் விழுந்தது. 

 "தோதா துப்பிய செப்புக் காசை அனைவரும் பார்த்தனர். அது இப்போது ஒரு பொற்காசாக மின்னிக் கொண்டிருந்தது! 'ஆ' என்று ஒரு வியப்புக் குரல் கூட்டத்திலிருந்து வீறிட்டெழுந்தது. பொற்கொல்லன் ஓடிச் சென்று அந்தக் காசைப் பொறுக்கி எடுத்துக் கொண்டான். அங்கிருந்தவாறே தோதாவை நோக்கி விழுந்து வணங்கி எழுந்தான். எங்கே யாராவது தன்னிடமிருந்து அதைப் பிடுங்கிக்கொண்டுவிடுவார்களோ என்று அஞ்சியவன் போல் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தான். அதைப் பார்த்த தோதா தூ, தூ என்றான். முகத்தில் ஏளனம் படர்ந்தது. அங்கே இருக்கப் பிடிக்காமல் எழுந்து சத்திரத்தைவிட்டுப் புறப்பட்டான். 'சாமீ, சாமீ' என்று அனைவரும் அவனைப் பின் தொடர்ந்தனர். தோதா அருணாசலத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தான்."


நூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன் மஹராஷ்டிராவிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த ஒரு தையல்காரக் குடும்பத்தில்  பிறந்த தோதாவுக்கு பாண்டுரங்க பக்தியும் தரிசனமும் வாய்கிறது; இகவுலகைத் துறந்து, திருவண்ணாமலையை ஒட்டிய போளூரின் சந்தைத் திடலில் ஒரு சாக்கடைக்கு அருகிலிருந்த மேட்டில் விட்டோபா சாமியாகக் வாழ்ந்து மறைகிறார்.  அவர் ஆன்மிக உபதேசம் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை,  பெரிய அளவில் பக்தி செய்ததாகவும் தெரியவில்லை, எதுவும் பேசாமல் அமைதியாக சாக்கடையோரமாக உட்கார்ந்திருந்தவரிடம் வெளிப்பட்ட சித்திகளின் ஆற்றலுக்காக மக்கள் அவரை வழிபட்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.

விட்டோபாசாமியின் சித்திகள் பலவும் பல சித்தர்களின் வாழ்வில் பேசப்பட்டுவிட்ட காரணத்தால் அவை நமக்குப் பழகிப் போனவையாக இருக்கின்றன, அவரது அபார விருப்புவெறுப்பின்மைதான் நம்மை பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. அவர் இருந்த செக்கடி மேட்டில் ஒரு சாக்கடைக் குட்டை இருந்திருக்கிறது. அதனருகில்தான் விட்டோபாசாமி இருந்திருக்கிறார். மழைக்காலங்களில் இந்தக் குட்டை நிரம்பி செக்கடி மேட்டையே மூழ்கடித்து விடுகிறது என்றால் அதன் நீர்வரத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம். ஒரு முறை அப்படி வெள்ளக்காடாக இருந்த செக்கடி மேட்டின் நீர் வற்றியபோது விட்டோபாசாமியின்  தலையின் உச்சியைத் தவிர  உடல் முழுதும் மண்ணில் புதைந்திருந்ததாம்.  சுவாரசியமாக, ஒரு கதை மாதிரி இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் மலர்மன்னன்.

மக்களின் சகல குறைகளையும் தகடு, மந்திரம் என்ற எந்த உபகரணத்தின் துணையும் இல்லாமல்  இருந்த இடத்தில் இருந்தது இருந்த மாதிரியே இருந்து மக்கள் தங்கள் நம்பிக்கையால் மட்டுமே தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்ளக் காரணமாக இருந்த விட்டோபா மறைந்தபோது சேஷாத்ரி சாமிகள்,  "இதோ ஜோரா போறான் பாரு விட்டோபா. பாரு, பாரு, இதோ போறான் பாரு... எல்லாருக்கும் முன்னாடியே போறான் பாரு" என்று வானத்தைப் பார்த்துக் கூவிக்கொண்டே திருவண்ணாமலையின் தெருக்களில் ஓடினாராம்.  விட்டோபாசாமியின் கடைசி காலத்தில் அங்கே அவருக்கு ஒரு மண்டபம் கட்டித் தந்த மக்கள் அதற்குமுன் அவரது வசிப்பிடமாக இருந்த சாக்கடைக் குட்டையை எப்போதோ  கவனித்திருக்கலாம்.

அருமையான அச்சு, அருமையான காகிதம். நாம் நம்பிக்கையுடன் கொண்டாடிய எண்ணற்ற ஆன்மிகப் பெரியவர்களில் அறியப்படாத ஒருவரைப் பற்றிய அறிமுக நூல் என்ற அளவில் சிறப்பானது.

- "விட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர்" -
மலர்மன்னன்,
ஆன்மிகம்
கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பி.லிட்., திரிசக்தி  பப்ளிகேஷன்ஸ், கிரிகுஜா என்க்ளேவ், 56/21, பர்ஸ்ட் அவென்யூ, சாஸ்திரி நகர், அடையார்,  சென்னை 20.

4 comments:

  1. சேஷாத்ரி சாமிகள் கூறியது வியப்பு தான்...

    நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி ஸார்.

      Delete
  2. உங்கள் தளத்தில் முகநூல் கருத்துப்பெட்டி, இவ்வாறு வருவதை தடுக்க இந்த தளத்தைப் பார்க்கவும்....

    http://www.bloggernanban.com/2012/11/facebook-debugger-tool.html

    நன்றி...

    ReplyDelete
    Replies


    1. ஏன் தடுக்கணும், நல்லா இல்லையா?

      ஒரு நண்பரிடம் கெஞ்சிக் கூத்தாடி இந்த முகநூல் பெட்டியை வர வச்சிருக்கோம் :)

      Delete