5 Dec 2013

அலெக்ஸ் - பியர் லிமாதே


அலெக்ஸ் அழகிய இளம் பெண். அவள் போகுமிடமெல்லாம் ஒருவன் தன்னைத் தொடர்ந்து வருவதை அவள் கவனிக்கிறாள். எதற்காக அவன் தன் பின் வருகிறான் என்பது அவளுக்குக் குழப்பமாக இருக்கிறது. ஒரு நாள் இரவு அவள் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில் அவளைப் பின்தொடர்பவன் ரோட்டில் வைத்தே அவளை அடித்து உதைத்து ஒரு வேனுக்குள் தள்ளி ஓட்டிச் செல்கிறான். இந்தக் கடத்தலைப் பார்த்த ஒருவர் போலீசுக்கு குற்றச்சம்பவத்தைத் தெரிவிக்கிறார்.

பயன்பாட்டில் இல்லாத, ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கும் பாக்டரி மாதிரியான இடத்துக்கு அலெக்ஸ் கொண்டு செல்லப்படுகிறாள். கடத்தியவன் அவளை ஒரு மரக்கூண்டுக்குள் தள்ளி பூட்டி வைக்கிறான். அந்தக் கூண்டு மெல்ல மெல்ல மேலே உயர்த்தப்படுகிறது. கூரையிலிருந்து தொங்கும் அலெக்ஸிடம், நீ கொஞ்சம் கொஞ்சமாகச் சாவதை நான் பார்க்க வேண்டும், என்று சொல்கிறான் அவன்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் போலீஸ்காரர்கள் கடத்தல் நடந்த இடத்துக்கு வந்து துப்பு துலக்குகிறார்கள். ஆனால் அவர்களால் உருப்படியான எதையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. கடத்தப்பட்டது யார், கடத்தியது யார் என்ற அடிப்படைத் தகவல்கள்கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. கமி வர்ஹூவன் தயக்கத்துடன் இந்தக் குற்றத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார். விசாரணையின் எதிர்பாராத திருப்பங்கள் கமாண்டன்ட் வர்ஹூவனையும் நம்மையும் உள்ளிழுத்துக் கொள்கின்றன.

3 Dec 2013

நமக்குத் தெரியாத பேக்கர்


எலிசபெத் பேக்கர் எழுதியிருக்கும் ‘பேக்கரின் மறுபக்கம்’ எனும் நினைவு குறிப்பு பேக்கரின் சுவாரசியமான வாழ்க்கைக்கு நல்ல சாட்சியமாகும். கோட்டயத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, வேலூர் கிறித்தவ மிஷன் கல்லூரியில் டாக்டர். இடா ஸ்கட்லரின் கீழ் மருத்துவம் பயின்றவர் எலிசபெத். டாக்டர். இடாவின் ஆளுமையால் உந்தப்பட்டு கிராமப்புறங்களில் மருத்துவ சேவையில் ஈடுபட்டார். லாரி பேக்கரை மணப்பதற்கு முன் கரீம் நகரில் (ஆந்திரம்) மிஷன் மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். திருமணத்திற்கு பின்னரும் கூட இமாலய மலையடிவாரத்தில் இருந்த ஒரு கிராமத்தில் மருத்துவ சேவையை தொடர்ந்தார், பின்னர் கேரளாவின் மேற்குச் தொடர்ச்சி மலை கிராமங்களிலும் தொடர்ந்தது அவருடைய மருத்துவ சேவை. 


பேக்கர் அவர் உருவாக்கிய கட்டிடங்களுக்காக என்றும் நினைவுகூரப்படுபவர். பெருந்திரள் மக்களை மனதில் கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், சூழியல் பிரக்ஞையுடன், மகத்தான லட்சியத்தை மனதில் சுமந்து, நம் மண்ணுக்கு உகந்த தனித்துவமான கட்டிடக்கலை பாணியை உருவாக்கியது இந்திய மக்களுக்கு அவருடைய மகத்தான் பங்களிப்பு. இந்நூல் கட்டிடக்கலை ‘நிபுணர்’ பேக்கரின் நிபுணத்துவத்தை, கட்டிடக்கலை நுட்பங்களைப் பற்றி அதிகம் தொட்டு காட்டவில்லை (அதனால் தான் இது பேக்கரின் மறுபக்கம்!). மாறாக, அவருடைய நிறை வாழ்வை அண்மையில் நின்று அவதானித்த அன்பு ததும்பும் கண்கள் விட்டு செல்லும் எளிய சித்திரமே இந்நூல். இதனூடாக நினைவுகளைப் பதியும் எலிசபெத்தின் சித்திரமும் உயிர் பெருகிறது.