மேற்கத்திய ஊடகங்களின் செல்லப்பிள்ளையாக உலகெங்கும் அவர் கொண்டாடப்பட்ட காலத்தில், என் முன் நிறுத்தப்பட்ட பிம்பம் ஒன்றும் அத்தனை உவப்பானதாக இல்லை. குழந்தைகளின் இளமையையும் துடுக்குத்தனத்தையும் களவாடி வாழ்க்கை வணிகத்திற்கு தேவையான சரக்கு மூட்டைகளை முதுகில் ஏற்றி முதிரா இளம் பருவத்திலேயே போட்டிக் களத்தில் இறக்கி ஓடவிட்டு ஆராதிக்கும் அன்னையர்களும் தந்தையர்களும் நிறைந்த சமூகத்தில் பலிகடா ஆவதென்னவோ குழந்தைகள்தான். தம் பிள்ளைகள் பிறவி மேதைகள் என்று நம்பும் உரிமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டுதான் எனினும், பெரும்பாலும் அவர்களுடைய நியாயமற்ற எதிர்பார்ப்புகளின், கனவுகளின் சுமையில் மழலை மேதைகள் தங்கள் சுயத்தை கண்டறிவதற்கு முன்னரே போலியான பாவனைகளில் தங்களை இழந்து சுவடின்றி மறையும் நிகழ்வுகள்தான் இங்கு மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. மலாலாவும் அரசியல் காரணங்களுக்காக அப்படி ஊதிப்பெருக்கபட்ட பிம்பம் என்றொரு மனப்பதிவு எனக்கிருந்தது. அவர் பங்குகொண்ட ஒரு உரையாடல் நிகழ்ச்சி அந்த மனப்பதிவை மறுபரிசீலனை செய்ய வைத்தது. அதன் பின்னர்தான் சென்றாண்டு வெளியான அவருடைய சுயசரிதையை வாசிக்கத் தொடங்கினேன்.
27 Jan 2014
19 Jan 2014
யுவன் சந்திரசேகர் - 23 காதல் கதைகள் முதல் நினைவுதிர்காலம் வரை
பதிவர் - வெ. சுரேஷ்
1999 அல்லது 2000ம் வருடம் என்று நினைக்கிறேன்.வழக்கம் போல விஜயா பதிப்பகம் சென்று சில வழக்கமான சிறு பத்திரிக்கைகள் வாங்கிவிட்டு வேறு ஏதாவது இருக்கிறதா என்று நோட்டமிட்டதில் அரண்யம் என்ற பளபளப்பான ஒரு பத்திரிக்கையை பார்த்தேன் முதல் இதழ் என்று தெரிந்து புரட்டியதில் பரிச்சயமான சில எழுத்தாளர்கள் பெயர் இருந்ததால் வாங்கினேன். அதில்தான் யுவன் சந்திரசேகர் என்ற பெயர் அறிமுகமாகியது. 23 காதல் கதைகள் என்ற சிறுகதையா குறுநாவலா என்று சொல்லமுடியாத ஒரு ஆக்கத்தைப் படித்தேன். சற்றே காமச்சுவை தூக்கலாக இருந்தபோதிலும் பதின்ம பருவத்தின் மனநிலையும் மனித வாழ்வில் சிறியதாகத் தோன்றும் எளிய தற்செயல் நிகழ்வுகளின் நீடித்த தீர்மானகரமானத் தாக்கங்களும், மனித சுபாவத்தின் எளிதில் அனுமானிக்க முடியாத தன்மைகளும் அழகாகப் பதிவாயிருந்தன. யுவன் சந்திரசேகர் என்ற பெயரை மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். பின் அவரேதான் எம்.யுவன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுபவர் என்றும் தெரியவந்தது.
பிறகு அவரது குள்ளச்சித்தன் சரித்திரம் படித்தேன். தமிழின் யதார்த்தவாத, இயல்புவாத நாவல்களையே ஒரு 15 வருடங்களாகப் படித்து வந்திருந்த எனக்கு அது ஒரு பெரிய மாறுபட்ட அனுபவத்தைக் கொடுத்தது. அன்றாட வாழ்வில் நடக்கும் இயல்புக்கு மீறிய சம்பவங்களை இயல்பான, குறும்பும் குதூகலமும் கொப்பளிக்கும் நடையில் கூறிய மிக சுவாரசியமான நாவல் அது. க.நா.சுவின் அவதூதர் நாவலுக்குப் பிறகு தமிழில் நான் படித்த நல்ல மீயதார்த்த படைப்பும் அதுவே. இதிலும் வாழ்வின் மீது எதிர்பாராத தற்செயலாக நிகழும் சிறு நிகழ்வுகள் ஏற்படுத்தும் நீடித்தத் தாக்கங்களும், மனித மனத்தின் முன்ஊகிக்க முடியாத புதிர்த் தன்மைகளும் மாற்று மெய்ம்மை என்று அவர் சொல்லும் யதார்த்தத்தை மீறிய நிகழ்வுகளும் பெரும்பங்கு வகித்தன. இத்தன்மைகள் யுவனின் signature அம்சங்கள் என்று சொல்லலாம்.
12 Jan 2014
Borkmann's Point - Hakan Nesser
பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)
வான் வீட்ரன் காவல்துறை பணியில் இணையும்போது அதன் தலைமை பதவியில் இருக்கும் போர்க்மன் ஒரு விஷயத்தை அவதானிக்கிறார். அது வான் வீட்ரனின் மனதில் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது - "கொஞ்சம் ஒழுங்காக யோசித்தால் போதும், குற்றவாளியைக் கண்டுபிடித்து விடலாம் என்று சொல்லுமளவுக்குத் தேவையான தகவல்கள் கிடைத்துவிடும் கட்டம் ஒன்று ஒவ்வொரு வழக்கிலும் வரும். அந்தக் கட்டத்தை அடையும்போது அதை உணர்வதில்தான் நம் சாமர்த்தியம் இருக்கிறது," என்று சொல்கிறார் அவர். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில் துப்பு துலக்க முற்படுகையில் வான் வீட்ரன் இந்த விஷயத்தை யோசித்துப் பார்க்கிறான்.
இந்த நாவலின் அடிப்படையாக இருக்கும் குற்றத்தில் கோடரியைக் கொண்டு கொலை செய்யும் ஒருவன் சம்பந்தப்பட்டிருக்கிறான். மிகக் கூர்மையான கோடரியைக் கொண்டு இருவரைக் கொன்றவன் அவன், அந்தக் கோடரியின் வீச்சு இருவரின் தலைகளையும் உடலிலிருந்து ஏறத்தாழ துண்டித்திருக்கிறது. முதலில் கொலை செய்யப்பட்டவன் போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையானவன், போதை மருந்து விற்பவன். இரண்டவதாக கொல்லப்பட்டவன் ரியல் எஸ்டேட் ஏஜண்ட். இந்த இரு கொலைகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே கோடரிக் கொலைகாரன் மூன்றாவது கொலையைச் செய்கிறான் - இம்முறை சாவது ஒரு டாக்டர். கடலோரத்தில் இருக்கும் சிற்றூரான கால்ப்ரிங்கனில் பதட்டம் பரவுகிறது, அந்தி சாய்ந்தபின் எவரும் வீட்டை விட்டு வெளியே வர தயாராக இல்லை.
இரண்டாம் கொலைக்குப்பின் குற்றவாளியைக் கண்டுபிடிக்க கால்ப்ரிங்கன் காவல்துறைக்கு உதவும் பொறுப்பை வான் வீட்ரனிடம் தலைமை அதிகாரி ஒப்படைக்கிறார். வான் வீட்ரன் அந்நகரின் காவல்துறை தலைமை அதிகாரி பாஸனின் நண்பனாகிறான். பாஸனும் அவரது ஒயின் சேகரமும் வான் வீட்ரனுக்குப் பிடித்துப் போகிறது. பாஸன் விரைவில் ஓய்வுபெறப் போகிறார். அதற்குள் அவர் குற்றவாளியைக் கைது செய்துவிட விரும்புகிறார்.
ஆனால் இவர்கள் துப்புத் துலக்கிக் கொண்டிருக்கும் வேளையில் மூன்றாவது கொலை நிகழ்ந்துவிடும்போது கால்ப்ரிங்கன் காவல் துறையில் டிடெக்டிவாகப் பணியாற்றும் பீட் மோர்க் வான் வீட்ரனின் சகாவுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறார். அதில் அவர் இந்த வழக்கு சம்பந்தமாக வித்தியாசமான ஒரு விஷயத்தைத் தான் கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பெண் அதிகாரி காணாமல் போய் விடுகிறார் - கோடரி கொலைகாரன்தான் அவரைக் கடத்திச் சென்றிருக்க வேண்டும்.
4 Jan 2014
காந்தியின் நிழல் - எ.கே செட்டியாரின் அண்ணலின் அடிச்சுவடில்
பதிவர் - கடலூர் சீனு
சமீபத்தில் திரைக்கலை விஞ்ஞானம் வளர்ந்த வரலாறு குறித்த சில பதிவுகள் படித்துக் கொண்டிருந்தேன். மேற்கு உலகம் முழுக்க சலனப் படம் உருவாக்கிப் பார்க்கும் உத்வேகம் அலைஅலையாக எழுந்து பரவி, தொடர்ச்சியாகப் பல விஞ்ஞானிகளால் அந்த உத்வேகம் செப்பனிடப்பட்டு, கிட்டத்தட்ட மௌனப்படங்கள்வரை விஞ்ஞானம் வளர்ந்து விடுகிறது.
இந்தத் தருணத்தில் விஞ்ஞானத்திற்கும் கலைக்கும் கலப்புப் பிள்ளையாக விளைந்த திரைப்படம் வணிகமே என வணிகர்களாலும், கலையே என்று கலைஞர்களாலும் அலைக்கழிக்கப்பட, இந்த இரண்டையும் சமன் செய்யும் ஆளுமையாக உருவெடுத்தார் சார்லி சாப்ளின். சாப்ளின் ஒரு தொழில்நுட்பமாக திரைப்பட அறிவியலின் பலம் பலவீனங்களை அறிந்தவர். அவரது காலத்தில் 18 துண்டுகள் வழிதான் ஒரு ஷாட் படம் பிடிக்க இயலும். விளைவு, திரையில் காட்சிகள் வேகத் த்வனியில் அசையும். இந்த பலவீனத்தையே தனக்கான பலமாகப் பயன்படுத்தி, அற்புதமான நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கியவர் சாப்ளின். கலை தன் வெளிப்பாட்டு ஊடகத்தின் பலவீனங்களைத் தனது படைப்புத் திறனால் தாண்டுவது ஒரு தீர்வென்றால், அறிவும் தனது அத்தனை சாத்தியங்கள் வழியாகவும் இந்த பலவீனத்தை தாண்ட முயல்கிறது.
3 Jan 2014
ராஜீவ்காந்தி சாலை - விநாயகமுருகன்
ஃபேஸ்புக்கில் ஒரு பெரும் அலையை ஏற்படுத்தி
வெளியாகியிருக்கும் புத்தகம் ராஜீவ்காந்தி சாலை. நாவல் எழுதிக்கொண்டிருக்கும்போதே விநாயகமுருகன்
போட்ட ஸ்டேட்டசுகளும், அதன் பிறகு நடந்த சர்ச்சைகளும் அனைவரும் அறிந்ததே. வெறும் பொட்டல்காடாகவும்
சவுக்குத்தோப்பாகவும் இருந்த பழைய மாமல்லபுரம் சாலை ராஜீவ்காந்தி சாலையாக உருவெடுத்ததன்
பிண்ணனி என்ன, பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் நிகழ்ந்த நகரமயமாக்கலின் விளைவுகள்,
மக்களின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்கள் இவற்றைப் பேசுகிறது இந்நாவல்.
ஒரு இளைஞனொருவன் ஒரு Multiplex கட்டிடத்தின்
ஐந்தோ ஆறாவதோ மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான். செத்தவன் ஒரு கணிப்பொறியாளன்.
அவனைத் தற்கொலைக்குத் தூண்டியது எது என்பதில் தொடங்கி விரிகிறது நாவல். ராஜீவ்காந்தி
சாலை உருவாக்கத்தில் தங்களது நிலங்களை இழந்து வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர் சிலர்.
சிலரின் நிலங்கள் ரியல் எஸ்டேட்காரர்களால் வாங்கப்பட்டு அவர்களோ லட்சங்களுக்கு அதிபதிகளாகின்றனர்.
இவ்வாறாக நாவலூர் சுற்று சென்னைப் பூர்விகவாசிகள் கண்ணகிநகர், செம்மஞ்சேரி போன்ற பகுதிகளுக்கு
ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களின் சிலர் சிறு சுய தொழில் செய்துகொண்டோ, ஐடி நிறுவனங்களுக்கு
குரூப்-4 ஊழியர்களாகவோ பண்புரிகிறார்கள்.
ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி நாட்டின்
பல பக்கங்களிலிருந்தும் மக்களை சென்னையில் சங்கமிக்கிறது. மாதம் ஒரு லட்சம் சம்பளம்
வாங்கினாலும் அதிகரித்த தேவைகளினாலும், பவிசான வாழ்க்கை முறையினாலும் வந்தேறிகளான இவர்கள்
எத்தனை எரிச்சலான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதையும் தெளிவுறச் சொல்கிறது நாவல்.
கேளிக்கைகளுக்கு அதிகம் செலவழிப்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். இந்நாவலின் மையக்கருத்தின்
ஓரிழை, ஐடி துறையினருக்கு அதிகம் தேவைப்படுவதும் அவர்களை வாதைக்கு உள்ளாக்குவதுமாக
இருப்பது பணமும் காமமும். ஐடியில் வேலை செய்பவர்களுக்கு அளவுக்கு மீறின சம்பளமும்,
தேவைப்படும்போதெல்லாம் காமமும் இன்ஸ்டண்ட்டாக கிடைக்கிறதெனும் ஒரு போலி பிம்பத்தைத்தான்
இந்த நாவல் தோற்றுவிக்க முயல்கிறது. சௌம்யா கதாபாத்திரம் தவிர மற்ற அனைவருமே இவ்வாறாகத்தான்
சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் உண்மை அதுதானா என்றால், இல்லை. இல்லாமலும் இருக்கலாம்.
’கார்ப்பரேட் எத்திக்ஸ்’ எனும் பெயரில்
உள்ளே நடக்கும் தில்லாலங்கடி வேலைகளை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறார். ஜாப்-செக்யூரிட்டி
என்ற ஒன்று இல்லாத ஒரு காரணத்தினாலேயே எந்த ஒரு சூழலிலும் தம்மைத் தற்காத்துக் கொள்ள
எவரையும் பலியிடும் தயக்கம் இவர்களில் யாருக்குமிருப்பதில்லை. தனி ட்ரிப் அடித்து காசுபார்க்க
நினைக்கும் டிரைவர் லூர்துவின் வேலையைக் காப்பாற்ற காசிம் பாயை மாட்டி விடும் அந்த
தருணத்தில் இக்குணம் ஐடியினருக்கு மட்டுமானதல்ல, தன் நிலையைத் தக்கவைத்துக் கொள்ள மக்களே
அப்படி மாறிவிட்டார்கள் என்பதை உணர்த்துகிறது.
நாவலில் அதிகம் பேசப்பட்டிருப்பது காமம்.
ஒரு புது புராஜெக்ட் வாங்குவதிலிருந்து, வேலையத் தக்கவைத்துக் கொள்வது, உடன் வேலை செய்பவர்களுடன்
வேட்கை தணித்தல், அதனால் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்று ஐடியே காமத்தை மையமாக
வைத்துத்தான் இயங்குகிறார்போல ஒரு மாயையை ஏற்படுத்தியிருக்கிறது இந்நாவல். இதுவே இவர்களுக்குப்
பிரச்சினையாகியும் விடுவதாய் எழுதப்பட்டிருக்கிறது. ஐடி துறையினர் பெரும்பான்மையினரின்
பிரச்சினைகளில் மிக முக்கியமானது ஹவுசிங் லோன் ஈஎம்ஐ. சம்பளத்தில் பாதியை அதற்கே தாரை
வார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால் மேற்சொன்ன காமம் சார்ந்த அதிகப்படியான வர்ணிப்புகள்,
ஈஎம்ஐ எல்லாம் ஒரு பொருட்டே இல்லை ஒழுக்கநெறியுடன் வாழ்வதுதான் பெரும் சவாலென்கிறது.
கொடுக்கப்படும் அதிக சம்பளத்தினால்
தங்கள் உடல்நலனைக்கூட கருத்தில் கொள்ளாமல் வேலை செய்து அவதியுறும் இளைஞர்களின் மன அழுத்தத்தையும்
பதிவு செய்திருக்கிறார். எப்போதும் முப்பது சதவீதம் பேர் வேலை செய்யாமல் இருக்க அவர்கள்
வேலையையும் சேர்த்தே செய்யவேண்டியிருக்கிறது மீதமிருக்கும் 70 சதவீதம் ஆட்களால். ஆனால்
பதவி/சம்பள உயர்வெல்லாம் அந்த 30 சதவீதம் பேரை எப்படிச் சென்றடைகிறதென்பதையும், அலுவலகத்தில்
ஒரு இன/மொழி மக்கள் எப்படி குழுவாகி அடுத்தவர் வாய்ப்புகளைப் பறிக்கிறார்கள் எனும்
அரசியலையும் பதிந்திருக்கிறார்.
ராஜீவ்காந்தி சாலையை நம்பிவாழும் ஒரு
சாராரின் வாழ்க்கை இதில் பதியப்படவில்லையே என்றொரு ஆதங்கமும் இருக்கிறது. எல்லா பன்னாட்டு
நிறுவனங்களும் வாரி வழங்குபவையாக இருப்பதில்லை. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போனால்தான்
ஜீவிதம் நல்லபடியாக நகரும் என்றொரு கட்டாயத்தில் பிறந்த குழந்தையைக்கூட ஊரில் விட்டு
வாரமொருமுறை/மாதமொருமுறை போய் பார்த்து கலங்கி கொடுமையே என வேலை செய்பவர்களையும் நானறிவேன்.
இவர்களைப்பற்றியோ, பெரும் ஆசையில் வந்து ஆங்கிலம் பேச வராமல், மனப்பாடத்திட்டத்தில்
மதிப்பெண்களை மட்டுமே கேடயமாக்கி வந்திங்கே கேட்கப்படும் கேள்விக்கணைகளின் வாழ்வையே
வெறுத்து, வேறு வழியின்றி தங்குவதற்கும் உண்பதற்கு மட்டுமே போதுமான அளவிலான சம்பளம்
தரும் பிபிஓ, டேட்டா எண்ட்ரி வேலை செய்பவர்களைப் பற்றியோ இதில் குறிப்புகள் இல்லை.
பார்க்க பவிசாகவும், ஊதாரிகளாகவும்
தோன்றும் ஐடி துறையினரின் மற்றொரு பக்கத்தைப் பேசிய வகையில் மட்டும் “ராஜீவ்காந்தி சாலை” ஒரு மிக முக்கியமான நாவல்.
நாவல் | விநாயகமுருகன் | உயிர்மை | 328 பக்கங்கள் | ரூ. 240 | இணையத்தில் வாங்க