15 Oct 2012

விபரீதக் கோட்பாடு – சுஜாதா




சுஜாதா, இவருக்கு அறிமுகம் தேவை இருக்காது. பெரும்பாலும் பலரின் வாசிப்பின் துவக்கம் வாத்தியார்தான். இருந்தும் வெகு சிலரே சுஜாதாவை முழுதாக படிக்க விரும்புவர். பெரும்பாலும் அவர்கள் அனைவரையும் முழுதாய் படிக்க விரும்புபவர்களாக இருப்பர். அப்படியாத் தெரிந்த ஓரிரு நண்பர்களுள் ஒருவர் எப்போதும் அதிகம் பேரிடம் சென்றடையாத சுஜாதா புத்தகங்கள் நிறைய இருக்கிறது என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். உண்மையாகக் கூட இருக்கலாம். அப்படி அவர் எனக்களித்த ஒரு புத்தகம்தான் விபரீதக் கோட்பாடு.


கணேஷ்-வசந்த் கதைதான். ஒரு குட்டி நாவல். தன்னை விட்டு ஓடிப்போன மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு வரும் சாமிநாதன், அவனை மணக்க விரும்பும் தருணா. தருணா சாமியின் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண். சாமியின் அப்பாவித் தனத்தால் ஈர்க்கப்பட்டு அவனை மணந்து கொள்ள விரும்புகிறவள். முதல் மனைவி தன்னை விட்டு ஓடிப் போன விரக்தியில் இருக்கும் சாமிக்கு நல்ல ஆறுதல். இருவரின் திருமணத்திற்கும் ஒரே பிரச்சினை, சாமியின் ஓடிப்போன மனைவி பிரதிமா. எனவே விவாகரத்து வேண்டியிருக்கிறது. அதற்கு முதலில் பிரதிமாவைக் கண்டு பிடிக்க வேண்டுமே? இருவரும் கணேஷ்-வசந்த்திடம் செல்கின்றனர்.


பல துப்பறியும் திரைப்படங்களைப் பார்த்துப் பழகிய பின்னரும், இந்த புத்தகத்தை வாசிக்கையில் அப்படி ஒரு ஈர்ப்பு. அது துப்பறியும் படங்கள்/புத்தகங்களுக்கே உரிய ஒரு ஸ்பெஷாலிட்டி போலும். இவ்வகையான நாவல்களுக்கு ட்விஸ்ட்கள் தான் மிக முக்கியம். ஏதோ ஒரு பக்கத்தில் கடந்து போகும் ஒரு சாதாரண விஷயம் அடுத்த ஐம்பதாவது பக்கத்தில் ஒரு ட்விஸ்ட்டாக முடியும் போது வாவ்வ்.... என்று சொல்லாமல் தொடர முடிவதில்லை. பெரும்பாலும் ஊகிக்க முடிந்த ட்விஸ்ட்களாகவே இருந்தாலும் அந்த ட்விஸ்ட்டை வெளிக்கொணரும் தருணத்தில் இருக்கும் சுஜாதத்தனத்தினை விவரிக்க வார்த்தைகள் இல்லை.


பிரதிமாவைக் கண்டு பிடிக்க வேண்டும். அடுத்து என்னவாக இருக்கும், சாமியின் வீட்டிற்கு சென்று சோதனை, அவர்கள் சம்மந்தப் பட்டவர்களிடம் விசாரணை. வித்தியாசமான நம்பிக்கை கொண்ட சாமியின் சித்தப்பா. எல்லாம் யூசுவலான விஷயங்கள் தான். ஆனால் அங்கு கிடைக்கும் காகிதங்கள், முத்திரைகள், அவர்களின் பேச்சுகள் இவற்றை எல்லாம் கோர்த்து இதுதான் கதை என்று நம்மை அழைத்து செல்வதில்தான் இப்புத்தகத்தின் வெற்றியே. ஜோசியத்தை அன்றே கிண்டலடித்திருக்கிறார் சுஜாதா. கூட்டம் சேர்த்து நல்லது செய்கிறேன் பேர்வழிகளையும்.


பிரதிமாவின் அறையில் கிடைத்த லெட்டர்பேட் காகிதத்தில் படிந்திருக்கும் அச்சை வைத்து அவள் இருக்குமிடத்தை கண்டுபிடித்து விடுகின்றனர். அவளிடம் தொலைபேசுகையில் ஒரு விஷயம் புலப்பட அவளை சந்திக்க விரும்புகிறனர். பிரதிமாவை இவர்கள் சந்திக்கும் முன்னரே அவள் கொல்லப்படுகிறாள். கணேஷ்-வசந்தின் சந்தேகம் வலுக்கிறது. சாமினாதன் மற்றும் அவன் சித்தப்பாதான் கொலைக்கு காரணமாக இருக்கவேண்டும் என்பதை ஊகித்து அதை கண்டுபிடித்து முடிக்கும்போது ஒரு நல்ல சேசிங் பார்த்த அனுபவம் மனதில் வந்தமர்கிறது.


இந்த புத்தகத்தை படித்து முடித்ததும் மனதில் வந்த வருத்தம், வாத்தியார் இருக்கும்போதே இந்த புத்தகம் கேவிஆனந்த் கையில் கிடைக்காமல் போயிற்றே என்றுதான். இந்தகாலத்துக்கு தகுந்தபடி கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து சினிமாவாக எடுத்தால் படம் நிச்சயம் சூப்பர் ஹிட்.


“பெரும்பாலான இலக்கியங்கள் யாவும் வாசகனுக்கு மனச்சிதைவையே தருகின்றன” இது நண்பர் நட்ராஜின் (@nattu_g) யின் ஒரு புகழ்பெற்ற ட்வீட். அத்தகைய இலக்கியங்கள் மத்தியில் இந்த புத்தகம் ஒரு நல்ல மாற்று.

நாவல் | சுஜாதா | 1980 | குமரி பதிப்பகம் | பக்கங்கள் 112 | ரூ. 20

No comments:

Post a Comment