20 Jun 2013

ஐரோப்பிய சிந்தனையாளர்கள் - எழுத்தின் தேடுதல் வேட்டை - நாகரத்தினம் கிருஷ்ணா

முன்னர் ஒரு விவாதத்தில் என்னுடன் விவாதித்த நண்பர் ஒருவர் வரிசையாகப் பல மேற்குலக சிந்தையாளர்களின் தத்துவங்களை பொளந்து கட்டிக்கொண்டிருந்தார். இணையத்தில் கொஞ்சம் நோண்டினால் கிடைக்கக்கூடிய பல விவரங்களை வரிசையாகச் சொல்வது பெரிய விஷயம் அல்ல என்பதால் விவாதத்தில் இருந்தவர்கள் பெரிதும் ஆச்சர்யப்படவில்லை. கொஞ்ச நேரத்தில் விவாதம் திசையறியாமல் சென்றபோது அவர் வார்த்தை விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்தார். அதற்குக் காரணமும் நண்பரிடம் இருந்தது. நமது சிந்தனைகள் எதுவும் மொழியியல் வரலாறு பற்றிய அறிமுகமில்லாதவர்களை சென்றடைய முடியாது என்றார். வெறும் பெயர் உதிர்ப்புகளாக அல்லாமல் மிக விரிவாக ஒரு சிந்தனைத்தளத்தைத் தொடரும் போது தவிர்க்க இயலாதபடி நாம் மொழியியலின் அடிப்படைகளோடு சண்டை போட்டுக்கொண்டிருப்போம் என்றார். அவரது வாதத்தில் உண்மை இருந்தாலும், கட்டுடைப்பு என சில வாதங்களை மொழி அடிப்படைகளை மட்டும் கொண்டு தகர்க்க முடியும் எனும் நம்பிக்கை எங்களுக்கு வரவில்லை.
 
நாகரத்தினம் கிருஷ்ணாவின் `எழுத்தின் தேடுதல் வேட்டை` கட்டுரைத் தொகுப்பைப் படிக்கும் போது நண்பர் கூறியது சரிதானோ எனும் எண்ணம் மேலோங்கியது. ஒரு குறிப்பிட்ட மொழியில் ஒரு காலகட்டத்தில் மிகத் தீவிரமான சிந்தனைகள் வெளிப்படும்போது, அப்போது புழங்கிய மொழி வளங்களை நாம் கணக்கில் கொள்ளாமல் இருக்க முடியாது. பண்டைய இந்தியாவின் சமஸ்கிருத மொழி ஆகட்டும், கடந்த நூற்றாண்டின் பிரெஞ்சு மொழியியல் ஆய்வாளர்கள் முன்மொழிந்த சிந்தனைகள் ஆகட்டும் இந்த கூற்றை ஊர்ஜிதம் செய்வது போலுள்ளன. தீவிரம் கூடாத படைப்புகள் வெளிவரும் மொழியில் அமைந்திருக்கும் சிந்தனைத்தளமும் மிகவும் மேலோட்டமாக மட்டுமே இருக்க முடியும். மொகலாய ஆட்சியிலும், ஆங்கிலேய ஆட்சியிலும் நம் மொழியில் வெளியான படைப்புகளை சங்க இலக்கியங்களோடும் , பக்திகாலகட்ட இலக்கியங்களோடும் ஒப்பிட முடியாது அல்லவா?

பிற மொழி இலக்கியம் பற்றி எழுதும்போது ஒரு குறிப்பிட்ட படைப்பாளியின் ஆக்கங்களை மட்டும் கணக்கில் கொள்ள முடியாது. அதேபோல அம்மொழியின் அழகியலை ரசிக்காமல் நம்மால் பல பண்பாட்டு கூறுகளோடு இயைந்து போக முடியாது. மொழி, பண்பாடு, இலக்கியம், மொழியியல் போன்றவை நண்டின் கால்கள் போன்றவை. ஒன்றிரண்டு கால்கள் ஒரு திசையில் இழுத்துச் சென்றால், மற்றவை வேறொரு திசையில் இழுத்துச் செல்லும். ஆனால் நண்டின் மொத்த இயக்கமும் இப்படிப்பட்ட முரணான நகர்வுகளை நம்பியே உள்ளது. அதனாலேயே மணலில் அதன் கால் தடங்கள் நேர்கோட்டில் இருப்பதில்லை. அது போல, மொழி, பண்பாடு, இலக்கியம், ரசனை என ஒவ்வொன்றும் ஒட்டுமொத்த புரிதலை ஒவ்வொரு திசைக்கு அழைத்துச் செல்லும். ஆனால் இதுபோன்ற ஒட்டுமொத்தப் புரிதல் இல்லாமல் ஒரு மொழிக்குள் நம்மால் நுழையவே முடியாது.அதனாலேயே மூல மொழியில் படைப்புகளை ஆராய்பவர்களுக்கும், மொழியாக்கத்தில் அணுகுபவர்களுக்கும் ஒரு இடைவெளி உள்ளது.
நாகரத்தினம் கிருஷ்ணா தனது பிரெஞ்சு மொழி அறிவால் அந்த இடைவெளியைக் கடக்கிறார். பிரான்சின் வடகிழக்குப் பகுதியான ஸ்ட்ராஸ்பெர்கில் வாழ்ந்து வரும் நாகரத்தினம் கிருஷ்ணா பிரெஞ்சு இலக்கியங்களையும், ஆய்வுகளையும் பிரெஞ்சு மொழியில் படித்து வருபவர். பல தமிழ் படைப்புகளை பிரெஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்தவர். நீலக்கடல், மாதாஹரி போன்ற நாவல்களும், சிமான் தெ பொவார், பிரெஞ்சு சிறுகதைகள் அறிமுகம் போன்ற கட்டுரை தொகுப்புகள் தவிர தமிழில் பல சிறுகதைகளும் எழுதியுள்ளார்.
`எழுத்தின் தேடுதல் வேட்டை` கட்டுரை தொகுப்பு பல ஐரோப்பிய சிந்தனையாளர்களை அறிமுகப்படுத்துகிறது. பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமல்லாது, ஆப்ரிக்கா, சீனா நாட்டு படைப்பாளிகள் பிரெஞ்சு மொழியில் எழுதும் நூல்களையும் இவர் அறிமுகப்படுத்துகிறார். பல தேசத்து படைப்பாளிகள் இக்கட்டுரைகளில் இடம்பெற்றிருந்தாலும், அவர்கள் அனைவரும் ஐரோப்பா பண்பாட்டை மையமாகக் கொண்டு படைப்புகளை இயற்றியவர்கள். ஐரோப்பாவை குறிவைத்து எழுதினாலும், முன்வைக்கும் பேசுபொருளால் உலகலாவிய சிந்தனை தளத்திலும் பெரிதும் பேசப்பட்டவையாகவும் அவை இருக்கின்றன.
 
பிலேஸ் பஸ்க்கால், மார்கெரித் துராஸ், குளோது லெவி-ஸ்ற்றோஸ், ட்ரூமன் கப்போட், சார்த்தரு, தாய்சீஜி, சிமான் தெ பொவார் போன்றவர்களது சிந்தனைதளங்களுக்கு மிகச் சிறப்பான அறிமுகமாக இந்தத் தொகுப்பு அமைந்துள்ளது.
இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்.ஆத்மாவின் துணிச்சல் மிக்க பயணம் எனும் கட்டுரை குளோது லெவி-ஸ்ற்றோஸ் ஆய்வுகளை அறிமுகப்படுத்துகிறது. மானிடவியலை `அமைப்பியம்(Structuralism)` ஊடாக கட்டுடைத்தவர் குளோது லெவிஸ்ற்றொஸ். அமைப்பியம் அல்லது அமைப்பியல் வாதம் உண்மையில் மொழியோடு தொடர்புடையது. அமைப்பியம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் ஃபெர்டினான் தெ சொஸ்ஸியர் என்ற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மொழியியல் வல்லுனர். இவரது படைப்புகள் உணர்ச்சிக்கும் அறிவுக்குமுள்ள வேறுபாட்டினைக் குறித்து நிறைய பேசுவதாகக் குறிப்பிடுகிறார். பண்டைய சமூகங்களின் அமைப்புகளையும், பழங்குடியினரோடு வாழ்ந்து அனுபவங்களை சேர்கரித்துள்ளார். பண்டைய பண்பாட்டை மட்டும் ஆராயாமல் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களது மந்திரச் சொற்கள், மரபு வழி சிந்தனைகளுக்கும் இன்றைய வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு எனப் பல விஷயங்களைப் பற்றி குளோது செய்து ஆய்வுகளை மிக அற்புதமாக நாகரத்தினம் கிருஷ்ணா நமக்கு வழங்குகிறார்.
குண்ட்டெர் கிராஸ் எழுதிய `நண்டு நடை` நாவலைப் பற்றிப் பேசும்போது ஜெர்மன் ஆன்மாவுக்கும் தூய்மைவாதத்துக்கும் உள்ள தொடர்பை முன்வைக்கிறார். குண்ட்டெர் கிராஸ் சொல்வது போல, நாவலாசிரியரின் பணி உண்மைகளை மட்டும் எழுதுவது. ஆனால் யாருடைய உண்மைகள்? சரித்திரத்தின் அலையில் உண்மை என ஒன்று தனித்து இருக்கிறதா என்ன? நியாயங்களும், அதிகாரங்களும் மட்டுமே தராசுகளின் ஏற்ற இறக்கங்களை நிறுவும் கூறுகளாக இருந்தாலும், வெண்ணை திரண்டு வருவதைப் போல உண்மை என்றேனும் ஒரு நாள் குழப்பங்களைத் தள்ளிவைத்துவிட்டு, இடர்பாடுகளை ஊடுருவி வெளியே வரும் என்கிறார். அதற்கானப் பயணப்பாதையை நண்டு நடை என்கிறார். எங்கெங்கோ செல்வது போலத் தோன்றினாலும், உண்மையை நோக்கி மட்டுமே மானுட மனம் எழும் என்கிறார் கிராஸ். நாஜிக்களின் பயிற்சியில் சில காலம் ஈடுபட்டு, வரலாற்றின் அவலங்களை தன் முன்னே பார்த்தவருக்கு எத்தனை திடமான மானுட நம்பிக்கை என ஆச்சர்யமாக இருக்கிறது. ஆஸ்விச் கேம்ப்புகளுக்குப் பின்னர் கவிதை என்பதே கிடையாது என அடார்னோ கூறியதுக்கும் இவரது கூற்றுக்கும் எத்தனை வித்தியாசம்!
பிரென்சு வார்த்தைகளுக்குள்ளே விரியும் அர்த்தத்தின் மங்கலான நிழலுருவங்களைத் தொடர்ந்து சென்றுச் சிக்கெனப் பிடித்து தமிழ் வாசகப் ப்ரப்புக்குள் கொண்டுவரும் சிரமமான பணியைத் தன்னாலான வகையில் எளிய முறையில் தன் எழுத்தின் மூலமாகத் தொடர்ந்து செய்துவருபவர் `நாகி` என்று பிரியமாக அழைக்கப்படும் நாகரத்தினம் கிருஷ்ணா
ஒரு எழுத்தின் அல்லது இலக்கிய ஆசிரியனின் சமூகம், அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றுடன் அவன் அல்லது அவள் கொண்டிருந்த பகைத்தனமான அல்லது நட்பார்ந்த உறவுகளை எல்லாம் தன் கட்டுரைகள் முழுவதிலும் நாகி பேசிச் செல்கிறார் என அறிமுகத்தில் இந்திரன் எழுதுகிறார். இது முற்றிலும் உண்மை. உண்மையை மட்டுமே படைப்பாளிகள் காண வேணும் என குண்ட்டெர் கிராஸ் சொன்னதுக்கும் இந்திரன் சொல்வதற்கும் அதிகம் வித்தியாசம் இல்லை.
 
புத்தக தலைப்பு- எழுத்தின் தேடுதல் வேட்டை
எழுத்தாளர் – நாகரத்தினம் கிருஷ்ணா
பதிப்பகம் – சந்தியா பதிப்பகம்
இணையத்தில் வாங்க - எழுத்தில் தேடுதல் வேட்டை

No comments:

Post a Comment