வாசிப்பின் துவக்கம். கற்பனையில் உழல, பகல் கனவில் திளைக்க வாசித்துத் தள்ளினேன். வாசிப்பது கற்பனையில் திளைக்க மட்டுமல்ல, அதை கருவியாகக் கொண்டு இந்த வாழ்வையும் அறிய வேண்டும் எனும் பிரக்ஞையை தனது ‘சுய தரிசனம்’ சிறுகதை வழியே ஜெயகாந்தன் எனக்குள் உருவாக்கினார். இந்த போதத்துடன் நான் வாசித்த முதல் கதை. ஜெயமோகனின் ‘விரித்த கரங்களில்’. அடுத்த கதை அதே ஆசிரியரின் ‘விஷ்ணுபுரம்’. மூன்றாவது கதை, பி.கே.பாலக்ருஷ்ணன் மலையாளத்தில் எழுதி, ஆ.மாதவன் தமிழில் மொழிபெயர்த்த ‘இனி நான் உறங்கட்டும்’ என்ற தலைப்பிட்ட மகாபாரதக் கதை. கர்ணனின் கதை.
--- 
மகாபாரதம் மானுடத்தின் காவியம். தோன்றிய நாள் முதல் இன்று ஜெயமோகன் வரை மீண்டும் மீண்டும் அது மறுஉருவாக்கம் செய்யப்படுவதன் காரணம், மகாபாரதம் அன்றும், இன்றும், இனியும் விகசிக்கப்போகும் மனிதனின் அனைத்து மனோ தத்துவங்களையும், உன்னதங்களையும் பரிசீலிக்கிறது என்பதே. குல,குடும்ப, தனிமனித அறங்களை, எக்காலகட்டமாகிலும் அக்காலகட்டத்து வாழ்வை உரைகல்லாகக் கொண்டு எழும் பேரறம் ஒன்றை நோக்கிய காலாதீதத் தேடல் அதில் உறைகிறது என்பதே.