நண்பர் போகன் தன்னுடைய தளத்தில் பகிர்ந்திருந்த ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தை வாசிக்க நேர்ந்தது. ராமனை எளிய மக்கள் தங்கள் ஆதர்ச நாயகனாக அணுகி பணிந்து வணங்கி கொண்டாடுவதற்கும், ராமன் எந்த விழுமியத்தின் சாரமாக முன்னிறுத்தப்படுகிறாரோ அதை மண்ணில் போட்டு மிதித்து அந்தப் பெயரை அடையாள அரசியலின் பகடையாட்டத்தில் பயன்படுத்துவதற்குமுள்ள வேறுபாடு மிக அதிகம். ராமனும், கர்ணனும், பீஷ்மனும், யுதிஷ்டிரனும் காலம் காலமாக கொண்டாடப்படும் மகத்தான மானுட விழுமியங்களின் உயிர் வடிவங்கள் அல்லவா? காலந்தோறும் பிறழும் மானுட மனங்களை தியாகத்தாலும் அறத்தாலும் ஈகையாலும் கருணையாலும் நீதியாலும் நெறிபடுத்தும் மாபெரும் யுகபுருஷர்கள் அல்லவா? யுகபுருஷர்கள் என்றாலும் அழுக்கும் அழகும் இணைந்த நம்மைப்போன்ற மனிதர்கள்தானே அவர்களும்.
