சிறப்புப் பதிவர்: சந்தியா
உள்ளூர் நூலகத்தில் சில சமயம் நல்ல புத்தகங்கள் கிடைக்கும்;அவற்றை ரமணி சந்திரன், அனுராதா ரமணனோடு அம்மா பெரிய மனது பண்ணி வீட்டுக்கு எடுத்து வருவார். அப்படித்தான் தி.ஜானகிராமனின் 'உயிர்த்தேன்' வீட்டுக்குள் வந்தது.
தி.ஜாவை முதன்முதலில் செம்பருத்தியில் ஆரம்பித்தது, அப்போது அந்த எழுத்து போர் அடித்தது. மெதுவான விவரணை, அந்தக்கால உலகம் இரண்டும் சேர்ந்து பாதியிலேயே விட்டு விட்டேன். பின்னர் ஒரு முறை ஆனந்த விகடனில் வந்த ஸ்டெல்லா புரூஸின் உறவுக்காரப் பெண் (பெயர் மறந்துவிட்டது) எழுதிய நாவலில் தி.ஜாவின் ‘அன்பே ஆரமுதே’வை சிலாகித்திருப்பார். அதனால் அதையும் வாசித்தேன். அதுவுமே மேற்குறிப்பிட்ட காரணங்களால் அவ்வளவு ரசிக்கமுடியவில்லை. ஒரு நீண்ட இடைவேளைக்குப்பிறகு தி.ஜாவின் ‘முத்துகள் பத்து’ படித்து, பத்துமே பிடித்தது. அதனாலேயே ஆர்வத்துடன் உயிர்த்தேனை எடுத்தேன், முடிக்கும்வரையும் அந்த ஈர்ப்பு கலையவில்லை.
