பதிவர் - கடலூர் சீனு
சமீபத்தில் திரைக்கலை விஞ்ஞானம் வளர்ந்த வரலாறு குறித்த சில பதிவுகள் படித்துக் கொண்டிருந்தேன். மேற்கு உலகம் முழுக்க சலனப் படம் உருவாக்கிப் பார்க்கும் உத்வேகம் அலைஅலையாக எழுந்து பரவி, தொடர்ச்சியாகப் பல விஞ்ஞானிகளால் அந்த உத்வேகம் செப்பனிடப்பட்டு, கிட்டத்தட்ட மௌனப்படங்கள்வரை விஞ்ஞானம் வளர்ந்து விடுகிறது.
இந்தத் தருணத்தில் விஞ்ஞானத்திற்கும் கலைக்கும் கலப்புப் பிள்ளையாக விளைந்த திரைப்படம் வணிகமே என வணிகர்களாலும், கலையே என்று கலைஞர்களாலும் அலைக்கழிக்கப்பட, இந்த இரண்டையும் சமன் செய்யும் ஆளுமையாக உருவெடுத்தார் சார்லி சாப்ளின். சாப்ளின் ஒரு தொழில்நுட்பமாக திரைப்பட அறிவியலின் பலம் பலவீனங்களை அறிந்தவர். அவரது காலத்தில் 18 துண்டுகள் வழிதான் ஒரு ஷாட் படம் பிடிக்க இயலும். விளைவு, திரையில் காட்சிகள் வேகத் த்வனியில் அசையும். இந்த பலவீனத்தையே தனக்கான பலமாகப் பயன்படுத்தி, அற்புதமான நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கியவர் சாப்ளின். கலை தன் வெளிப்பாட்டு ஊடகத்தின் பலவீனங்களைத் தனது படைப்புத் திறனால் தாண்டுவது ஒரு தீர்வென்றால், அறிவும் தனது அத்தனை சாத்தியங்கள் வழியாகவும் இந்த பலவீனத்தை தாண்ட முயல்கிறது.