தங்களைக் கவர்ந்த புத்தகங்களைப் பற்றி எழுத்தாளர்களை எழுதச் சொல்லி ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டும் என அ.முத்துலிங்கம் செய்த முயற்சியின் பயன் இத்தொகுப்பு. தமிழின் முக்கியமான எழுத்தாளர்களிடம் அவர்களது பரிந்துரைகளை கேட்டு வாங்கி்யதையே ஒரு சிறுகதையாக எழுதியுள்ளார். எழுத்தாளர்களைக் கவர்ந்த புத்தகம் எனக்கேட்டாதாலோ என்னவோ சமகாலப் படைப்புகளை அதிகம் பரிந்துரைத்துள்ளனர். அவர்களை பாதித்த புத்தகம் எனக் கேட்டிருந்தால் வேறு ஒரு லிஸ்ட் கிடைத்திருக்கலாம்.
அசோகமித்திரன் (சா.கந்தசாமி - மாயவலி), இந்திரா பார்த்தசாரதி (யோஸ் சரகமோ - இரட்டை), இரா.முருகன் ( மாதவன் குட்டி- ஓர்ம்மகளூடெ விருந்து), ஜெயமோகன் (எம்.கோபாலகிருஷ்ணன் - மணல்கடிகை), பொ.கருணாமூர்த்தி (My Days - R.K.Narayanan), மனுஷ்யபுத்திரன் (ஜெயமோகன் - ஏழாம் உலகம்), அ.முத்துலிங்கம் (Teacher Man - Franck McCourt), நாஞ்சில் நாடன் (ஆழி சூழ் உலகு - ஜோ.டி.க்ரூஸ்), பாவண்ணன் (காலபைரவன் - புலிப்பானி ஜோதிடர்), எஸ்.ராமகிருஷ்ணன் (எண்பெருங்குன்றம் - வேதாசலம்), வெங்கட் சாமிநாதன் (கூகை - சோ.தருமன்), வாஸந்தி (Embers - Sandor Marai) எனப் பல எழுத்தாளர்களது கட்டுரைகள் தொகுப்பில் உள்ளன.
என்னை மிகவும் கவர்ந்த கட்டுரைகள் - ஷோபாசக்தி எழுதிய `ஆடு, புலி, புல்லுக்கட்டு` (ஜெனே - Les Bonnes) மற்றும் `படிப்பின் பயணம்` எனும் தலைப்பில் சுஜாதா எழுதிய கட்டுரை, `கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது` ஜெயமோகனின் கட்டுரை.