I do not write this book for merely writing it. Nor is it my object to place one phase of history of South Africa before the public. My object in writing the present volume is that the nation might know how Satyagraha, for which I live, for which I desire to live and for which I am equally prepared to die, originated and how it was practiced in a large scale – M.K.Gandhi
காந்தியின் மீது ஆச்சரியமும் அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் காந்தி திரைப்படத்தைப் பார்த்த பின் தான் உருவானது. பலரும் இந்த திரைப்படமே தங்களை காந்தியின் பால் ஈர்த்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அத்திரைப்படம் ஒரு சாதனை; சில மணிநேரத்தில் காந்தியைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றும் வல்லமை அதற்கிருந்தது. அதற்காக அடுத்த நாளிலிருந்து நான் காந்தியவாதியாகிவிட்டேன் என்றில்லை; ஆனால், காந்தியை நோக்கித் திருப்பிவிட்டது அந்தப் படம் தான் என்பதை உறுதியாகச் சொல்வேன். சத்தியாகிரகம் என்றால் என்ன? அது எப்படித் தொடங்கியது என்ற அடிப்படை விஷயங்களை அதை உருவாக்கியவர் வழியாக புரிந்துகொள்வதே எளிதாக இருக்கும். மற்றவர்கள் எழுதும் போது அதன் மீதான தங்களுடைய கருத்துக்களையும் ஏற்றிவிடக்கூடும். காந்தி, முன்னுரையிலேயே சொல்லிவிடுகிறார், “இதில் எதையும் கூட்டிச் சொல்லவில்லை”. அதே போல், படிக்கும் போது அதிகப்படுத்திச் சொல்லப்பட்டதாக ஒரு வாக்கியத்தைக் கூட உணரமுடியவில்லை.
