உப்புச் சத்தியாகிரக யாத்திரை நடந்தது சித்திரை மாதத்தில். தமிழ் நாட்டில் அது கடுமையான வெயில் காலம். காலை எட்டு மணிக்கே கால் சுடும். தரை எல்லாம் சூடாக இருக்கும். நடந்து செல்வதே கடினம். தண்ணீர் தாகமிருந்து எளிதில் சோர்வு உண்டாகும்.
இயற்கையுடன் அரசாங்கமும் சேர்ந்து கொண்டு அவர்களுக்கு தொல்லை தர ஆரம்பித்தது.
அந்த வருஷத்தில், ஜே. ஏ. தார்ன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தார். ஆள் அப்படி ஒன்றும் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்க மாட்டார். ஆனால் ஒத்துழையாமை இயக்கத்தை சமாளிக்க,, பிரிட்டிஷ் அரசுக்கு, ஒரு புதிய ஆயுதத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்தவர் இந்த தார்ன் துரைதான்.
தென்னாப்பிரிக்காவில் காந்திஜி சத்தியாகிரகம் செய்தபோது எதை சத்தியாக்கிரகிகள்மீது பிரயோகிக்க மார்ஷல் ஜான் ஸ்மட்ஸ் மனம் கூசினாரோ, அந்த குண்டாந்தடியை, சர்வதாராளமாக பிரயோகிக்க வழி காட்டினவர் இந்த தார்ன்தான்.
சத்தியாக்கிரகிகளைக் கைது செய்யாமல், அவர்களைக் கொடூரமாக அடித்து காயப்படுத்தும் மிருகத்தனமான செயலை ஏவி விடுவதை நியாயம் என்று சொன்ன புண்ணியவாளன் இவர்தான்.
இப்பேர்பட்ட கொடூர எண்ணமுடைய ராட்சதனான தார்ன், தம்முடைய அதிகார எல்லைக்குள்ளேயே சத்தியாக்கிரகம் செய்ய வருகிறார்கள் என்றால் சும்மா இருந்து விடுவாரா?
உடனே மாவட்ட அதிகாரிகளைக் கூட்டி, சத்தியாக்கிரகிகள் எல்லாம் சட்ட விரோதிகள் என்றும், அவர்களுக்கு உணவு, உடை, இருக்க இடம் அளிப்பது குற்றம் என்றும் அப்படி யாராவது செய்தால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் கிராமந்தோறும் தண்டோரா போடச் செய்தார். பயமுறுத்தும் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கச் செய்தார். அதிகாரிகளைவிட்டு மக்களை மிரட்டினார்.
|
அகிம்சை என்பது அன்பு நெறி என்று அடையாளம் கண்டுகொண்டு பிரிட்டிஷ் அரசு தன் வன்முறையைக் கைவிட்டு விடவில்லை - அன்பு நெறி என்பதற்காக அகிம்சைப் போராட்டம் இந்தியர்களால் தேர்ந்தெடுக்கப்படவுமில்லை. சுதந்திரப் போராட்டம் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது என்ற காரணத்தால், பிரிட்டிஷ் அரசு மனித உரிமைகளை மதிக்கும் அரசாகச் செயல்பட்டு இந்தியர்களின் அறப் போரை மதித்து இந்தியாவுக்கு சுதந்திரத்தை சும்மா கொடுத்துவிடவில்லை.