குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் ஆம்னிபஸ் தளம் குழந்தைகள் இலக்கியத்தைக் கொண்டாடுகிறது. சிறார் இலக்கியத்தை பற்றிய எனது அடிப்படை புரிதல்களைப் பகிர்ந்துக்கொண்டு முன்செல்வதே சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஓரளவு கோர்வையாக வாசிக்கத் தெரிந்த நாள் முதல் தினமலர் இதழின் சிறுவர் இணைப்பாக வெள்ளிதோறும் வரும் சிறுவர் மலரை வாசித்தது நினைவில் நிற்கிறது. இதழின் கடைசி பக்கத்தில் வரும் பலமுக மன்னன் ஜோ, பேய்ப் பள்ளி, சோனிப் பையன், எக்ஸ்- ரே கண், சிண்டன் போன்ற படக்கதை பாத்திரங்களின் உருவங்களைத் தெளிவாகவே நினைவுக்கூர முடிகிறது. பின்னர் கோகுலம், சந்தாமாமா, டின்கில் என்று சென்ற வாசிப்பு பதின்ம பருவத்தில் ஹாரி பாட்டருக்குத் தாவியது. ஏறத்தாழ அதே சமயத்தில் தமிழில் கல்கியும், தேவனும் எனக்கு அறிமுகமானார்கள்.
