சிறப்புப் பதிவர்: மாதவ சோமன்
”சிறுகதை எழுதுவது எப்படி?” - இந்தத் தலைப்பைப் பார்த்ததும் உங்களில் எத்துணை பேர் “சிறுகதை எழுதுவது எப்படி” என்பதைத் தெரிந்து கொள்ள இங்கே ஏதேனும் கிடைக்கும் என்று இதை வாசித்துக் கொண்டிருக்கிறீர்களோ நானறியேன். அப்படி யாரேனும் தடம்தவறி இதை வாசித்துக் கொண்டிருந்தால் முதலிலேயே அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு விடுகிறேன்.
நானும் ஒரு காலத்தில் யாரேனும் எழுதும் ஏதேனும் குறிப்புகளைக் கொண்டு சிறுகதை எழுதிவிட முடியும் என்று நினைத்திருந்தவன்தான். ஸ்டெய்ட்டா ஹீரோ என்கிற கனவெல்லாம் இல்லை நமக்கு. முதலில் சிறுகதை, பிறகு குறுநாவல், அதற்கு அப்புறம் நாவல், பின்னர் மெகாசீரியலுக்கு வசனம், வாய்ப்பு அமைந்தால் சினிமாவுக்கு வசனம், கூடவே கதையும், அதிஷ்டம் கதைவைத் தட்ட டைரக்ஷன், பிறகு டைரக்டர் கம் ஹீரோ வேடம், அரசியல் நுழைவு, எம்.எல்.ஏ., அமைச்சர், முதலமைச்சர் இப்படிப் படிப்படியாக வளர்ச்சி காணவேண்டும் என்ற கனவில் இருந்தவன் நான். அப்படிப்பட்ட கனவுகாண வல்ல வயதில் நம் கையில் சுஜாதா எழுதிய இந்தப் புத்தகம் அகப்பட்டது.
