ஆசிரியர் : பல்லவி அய்யர்
தமிழில்: ராமன் ராஜா
இது ஒரு கிழப்பு பதிப்பக வெளியீடு
விலை ரூ. 200.
எங்க குழுவில் ஒரு சீனர் இருந்தார். தலைவர் அமெரிக்கர். ஒவ்வொரு கூட்டத்திலும், ஏதாவது ஒரு விஷயத்தில் இந்தியா சீனாவை ஒப்பிட்டு பேச ஆரம்பித்து விடுவார். குளிர் காலம், விபத்துகள், மக்கள் இப்படி.
ஒரு முறை அந்த சீனர் விடுமுறைக்கு ஊருக்கு போய்வந்து ஷாங்காய், பெய்ஜிங், கங்க்ஜூ மற்றும் அவரது கிராம புகைப்படங்களை குழுக் கூட்டத்தில் அனைவருக்கும் காட்டினார். அனைத்து இடங்களிலும் ஒரே அழுக்கு. நம் தில்லி, கல்கத்தா மாதிரியே இருந்தன. வழக்கம்போல் ஒவ்வொரு புகைப்படத்தையும் காட்டி, உங்க ஊரிலும் இப்படித்தானா என்று தலைவர் என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஒரே ஒரு உதாரணம் சொல்லிட்டு இதை தாண்டிப் போயிடறேன். ஷாங்காயில் ஒவ்வொரு போக்குவரத்து சிக்னல் பக்கத்திலும் போலீஸ்காரர்கள் நின்றிருந்தனர். ஏன் அப்படின்னு நமக்கு தெரியும். ஆனா அமெரிக்கருக்கு தெரியாதே. சீனர் சொன்னார் - போலீஸ்காரர் இல்லேன்னா மக்கள் சிக்னலை மதிக்கவே மாட்டாங்க. உடனே தலைவர் என்னைப் பார்த்தார். நான் எப்படி நம்ம நாட்டை விட்டுக் கொடுக்க முடியும்?. துணிந்து சொன்னேன் - சைனாவில்தான் இப்படியெல்லாம் நடக்கும். எங்க ஊரில் நோ.
அதற்கு பிறகு பல முறை அந்த சீன நண்பரிடம் பேசியதிலிருந்து சீனாவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் பிறந்தது. அப்பொழுது பார்த்து வாங்கியதே இந்த புத்தகம்.
பல்லவி சைனாவில் ஐந்து வருடங்கள் ஆசிரியராகவும், செய்தியாளராகவும் பணிபுரிந்ததால், இரு நாட்டையும் ஒப்பிட்டு, அதன் அடித்தட்டு மக்களை மிக நுணுக்கமாக கவனித்து பல விஷயங்களை எழுதியிருக்கிறார். அவர் அங்கு இருந்த சமயத்திலேயே ஒலிம்பிக்ஸ் வந்ததால், பெய்ஜிங் நகரம் எப்படியெல்லாம் மாற்றமடைந்தது, அதற்காக மக்கள் எப்படி கஷ்டப்படுத்தப்பட்டனர் என்று மிகவும் விரிவாக விளக்கியிருக்கிறார்.
அங்கேயும் லஞ்சம் அதிகமாக இருக்கிறது. எல்லா விஷயத்திலும், எல்லா மட்டத்திலும் பணம் விளையாடும் என்றாலும், வேலை - நெடுஞ்சாலை/ ரெயில்பாதை போடுவது, கட்டிடங்கள்/மேம்பாலங்கள் கட்டுவது ஆகியவை - கண்டிப்பாக நடந்து விடும். அதுவும் மிக வேகமாக கட்டப்படும் மற்றும் தரமாகவும் இருக்கும் என்கிறார். ஒரு பெரிய பெருமூச்சுதான் வருது நமக்கு!
வீட்டு ரிப்பேர், வண்ணப்பூச்சு அடிப்பது, குழாய் / கழிவறை சுத்தம் செய்வது ஆகிய பற்பல காரியங்களை அமெரிக்கர்கள் தாங்களே பொருட்களை வாங்கி வந்து சொந்தமாக செய்து கொள்வதை பார்த்திருக்கிறேன். அதே போல் சைனாவிலும் இருக்கிறார்கள்னு சொல்லிவிட்டு, இந்தியாவில் self-service என்ற வார்த்தையே யாருக்கும் தெரியாது என்றும் கூறியிருக்கிறார் பல்லவி.
இணையக் கட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருப்பதாகவும், அப்படி கட்டுப்படுத்துவதற்கு மட்டும் ஆயிரக்கணக்கான பேர் இருப்பதாகவும் இந்த புத்தகத்தில் வருகிறது.
கம்யூனிசம், மதம், தலாய் லாமா, உணவு, குடி - ஆகிய அனைத்தையும் மிகவும் விரிவாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
கடைசியாக, இது ஒரு மொழிபெயர்ப்பு புத்தகம் என்பதே தெரியாதவாறு அருமையாக தமிழாக்கி இருக்கிறார், ராமன் ராஜா.
சீன அடித்தட்டு மக்களின் வாழ்க்கை, அவர்கள் பழக்க வழக்கங்கள், மாணவர்களின் நிலை, இன்னும் பற்பல விஷயங்கள் சீனாவைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்றால், இந்தப் புத்தகம் கண்டிப்பாக படிக்கப்பட வேண்டியதாகும்.
***
