சிறப்புப் பதிவர்: இலவசக் கொத்தனார் (@elavasam)
Coffee Table Book என்றாலே உடனே என்ன தோன்றும்? வழவழத் தாளில் படங்கள், அங்கும் இங்குமாய் கொஞ்சமே கொஞ்சம் வார்த்தைகள், கெட்டியான அட்டை, தூக்க முடியாத எடை, நட்சத்திர ஹோட்டல் அல்லது பெரும் பணக்காரர்கள் வீட்டு வரவேற்பறையில் இருக்கும், யாரும் படிக்க மாட்டார்கள். இதுதானே நினைவுக்கு வரும். எதோ இயற்கை காட்சிகள் என்றால் படமாவது பார்க்கும்படியாக இருக்கும் ஆனால் இசை பற்றிய அதுவும் பாரம்பரிய இசை பற்றிய புத்தகம் என்றால்?
பார்க்கலாம், படிக்கலாம், பிரமிக்கலாம், சேமிக்கலாம், இன்னும் பல -லாம்கள் போடலாம். கர்நாடக சங்கீத உலகில் கொடி கட்டிப் பறக்கும் பாம்பே ஜெயஸ்ரீயும் டி.எம்.கிருஷ்ணாவும், விளம்பர உலகில் புகழ் பெற்று விளங்கும் மைதிலி சந்திரசேகருடன் இணைந்து வெளியிட்டு இருக்கும் Voices Within என்ற புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறு விமர்சனம்தான் அது. படங்கள், வழவழ பக்கங்கள், கெட்டி அட்டை, ஒற்றைக் கையால் தூக்க முடியாத எடை என்ற சம்பிராதயமான விஷயங்கள் எதிலும் குறை வைக்காமல் இருந்தாலும் சுவாரசிய தகவல்களையும் சம்பவங்களையும் அள்ளித் தெளித்து கையில் எடுத்தபின் முழுவதும் படிக்காமல் கீழே வைக்க முடியாமல் செய்தது வித்தியாசம்தான்.