நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவருடைய ‘இந்திய சுதந்திர போர்’ எனும் நூலில் காந்தியின் தண்டி யாத்திரை குறித்து இவ்வாறு எழுதுகிறார்
“நெப்போலியன் எல்பாவிலிருந்து திரும்பியவுடன், பாரிஸ் நகர் நோக்கி நடந்து சென்ற காட்சியுடனோ , அல்லது முசோலினி இத்தாலியில் அரசியல் ஆதிக்கத்தை கைப்பற்றுவதற்காக ரோம் நோக்கிச் சென்ற காட்சியுடனோதான் மகாத்மாவின் தண்டி யாத்திரையை ஒப்பிட வேண்டும்”.
ஏப்ரல் 6 , 1930. தொடுவானம் வரை பரந்து விரியும் ஆழ்கடல் முகட்டில் காந்தி, அங்கு குழுமியிருக்கும் பெரும் மக்கள் திரளை நோக்கி நிற்கிறார். அவரது உள்ளத்தில் ஆழ்கடலின் அமைதி, குழுமியிருக்கும் மக்களின் அலையோசையை ஒத்த ஆர்ப்பரிப்புகளுக்கு இடையே மூடிய தன் கைவிரல்களைத் திறந்து அந்த வெள்ளை நிற உப்பை உயர்த்திக் காட்டுகிறார். இந்திய சுதந்திர போராட்டத்தின் மகத்தான மற்றுமொரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது.