- சிறப்புப் பதிவர்: சிவா கிருஷ்ணமூர்த்தி
"துணை" என்ற திரு. தி.ஜானகிராமன் அவர்களின் சிறுகதை, 1950ல் மணிக்கொடி இதழில் வந்தது. ஐந்தினைப் பதிப்பகம் வெளியீட்டான தி.ஜானகிராமன் படைப்புகள் சிறுகதைகள் தொகுதி-1ல் உள்ளது. நுட்பமான நகைச்சுவைக்கு ஒரு நல்ல உதாரணமாக இந்தக் கதையை தைரியமாகச் சொல்லலாம்.
வீட்டிற்குள் வரும் கதைசொல்லி அப்பாவுடன் ஒரு தாத்தா ஊஞ்சலில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறார்.
தாத்தாவின் பெயர் சின்னக்குழந்தை, வயது எழுபத்தொன்பது.
அவரை மஸ்டர் டே என்ற வருடத்தில் ஒரு நாள் பென்ஷன் ஆபிஸில் முகத்தைக் காட்டுவதற்காக பத்திரமாய் அழைத்துச் செல்லும் வேலை கதைசொல்லிக்கு வருகிறது சின்னக்குழந்தையை மட்டுமல்ல அவரது தகப்பனார் லேடிகிழவரையும் (லேடி கிழவரின் வயது தொண்ணுற்று எட்டு!).
அப்பா நன்றாக இருக்கிறாரா என்ற கேள்விக்கு சின்னக்குழந்தை பதிலளிப்பதாகத் தொடங்கும் கதை, லேடி கிழவர் ஆஸ்துமாவினால் படும் சிரமத்தையும் (ஒரு ஐம்பது அல்லது அறுபது வயதுக்காரருக்கு பொருந்தும்) அதையொட்டிய 'அந்தக்கால` விவரணைகளையும் பேசி ஒரு மெல்லிய புன்னகையோடு விரிகிறது.
