பதிவர் - ஸ்வப்னா அரவிந்தன்
பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இதில் உள்ள இவரது கதைகள் ஏறத்தாழ எல்லாமே நெகட்டிவாக இருக்கின்றன. யாரையும் நம்ப முடியாது, எல்லாரும் துரோகம் செய்கிறார்கள், எல்லாம் செத்துக் கொண்டிருக்கிறது, எவன்டா ஏமாறுவான் என்று உலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்பது போல் நினைக்க வைக்கும் கதைகள், ஒரு நண்பர் சொன்ன மாதிரி, "உலகம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்ற தொனி,' இவற்றில் இருக்கிறது. கடைசி கதையில் மட்டும் கொஞ்சம் நம்பிக்கை - ஆனால் அதுவும் யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்ற முழுகிக் கொண்டிருக்கிறவனின் நம்பிக்கை.
பாராட்டி எழுதுவதற்கு இருக்கும் விஷயங்கள் இரண்டு. முதலாவது, வட்டார வழக்கு. இதிலுள்ள கதைகள் ஒரு வாழ்க்கை முறையை நமக்குத் தெரிவிக்கின்றன, இதன் பேச்சு மொழி தமிழுக்கு வளம் சேர்க்கிறது. இரண்டாவதாகப் பார்த்தால், இதிலுள்ள மத நம்பிக்கைகள். மரத்தின் உச்சிக்குப் போகும் சிறுவன் ஒருவன் மேகத்திலிருந்து ஒரு பாம்பு கிளை விட்டுக் கிளைக்குப் பறந்து தாவி வருவதைப் பார்த்து பயந்துபோய் இறங்கி விடுகிறான் - அல்லாஹூ தன் வீட்டை யாரும் பார்த்துவிடக் கூடாது என்று இந்த மாதிரி பாம்புகளை அனுப்பி வைப்பாராம், அவை கொத்துவது கண்களில் (பக்கம் 8). இதே மாதிரி ஜின்னுகளை வைத்துக் கொண்டு தகடு வைப்பது எடுப்பது, அரேபியா சார்ந்த நம்பிக்கைகள் என்று கொஞ்சம் இருக்கின்றன. இதெல்லாம் வாசிக்க சுவாரசியமாக இருக்கின்றன. தோப்பில் முஹம்மது மீரான் இதை இன்னும் கொஞ்சம் சீரியஸாக எடுத்துக் கொண்டு செய்திருக்கலாம்.
