ஆர். கே. நாராயணின் நாயகர்களில் பெரும்பாலானவர்களைப் போல் நாகராஜ் ஒரு வளர்ந்த குழந்தை. இது குறித்து பொதுமைப்படுத்தி எதையும் எழுதுவதைவிட, "நாகராஜின் உலகம்" நாவலின் துவக்க பக்கங்களில் நாகராஜின் எண்ணவோட்டமாக வரும் ஒரு பத்தியைப் பார்ப்பதே நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைத் தெளிவாகப் புரிய வைப்பதாக இருக்கும்:
கதவின் மறுபுறத்தில் ஒரு மெல்லிய சப்தம் கேட்டது. தன் அம்மா கதவைத் திறக்க முயற்சி செய்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது. அதே சமயம் அவளால் அதைத் திறக்க முடியாது என்பதும் அவனுக்குப் புரிந்திருந்தது. அது எடை மிகுந்த கதவு, தேக்கு மரத்தால் செய்யப்பட்ட பழங்கால கதவு. காலத்தாலும் காற்றாலும் அது கருத்துப் போயிருந்தது. அந்தக் கதவின் நிலையில் தாமரை போன்ற வடிவங்கள் குடையப்பட்டிருந்தன. கதவின் மத்திய சட்டத்தில் கன்னியின் முலைகளைப் போன்ற பித்தளைக் குமிழிகள் அவ்வளவு பளபளப்பாகவும் வசீகரமாகவும் இருந்தன - மிகச் சிறிய வயது சிறுவனாக இருந்தபோது நாகராஜ் தன் பாதங்களில் உயர்ந்து எழுந்து அதன் முலைக் காம்புகளைத் தன் உதடுகளால் தொட முயற்சித்ததுண்டு. அவனது அண்ணன், அவனைவிட உயரமானவன், எப்போதும் அதிர்ஷ்மானவன், அந்தக் குமிழிகளில் தன் வாயைப் பொருத்தி, பாராட்டிக் கொள்ளும் வகையில் நாவால் சப்பு கொட்டுவான். "பால் ரொம்ப இனிப்பாயிருந்ததே!" என்று அவன் கூவுவது நாகராஜைப் பொறாமைப்பட வைக்கும்."
|
பாலுணர்வு! நாமறிந்த பாலுணர்வு குறித்த எந்த ஒரு பிரக்ஞையும் இல்லாத குழந்தைமையின் பாலுணர்வு.
