அது ஒரு முடிவுறாத மதிய நேரம். முந்தைய நாள் வரை அலைந்ததில் உடல் களைப்பைத் தாண்டி எழுந்துகொள்ள முடியாத அசதியில் ஆய்ந்திருந்தேன். விழித்திருந்தேனா தூக்கத்தில் கனவு காண்கிறேனா என அறிய முடியாத நிலை. அவ்விதம் கிடப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். முழுவதும் விழிக்க முடியாமல் காலையா மாலையா எனத் தெரியாத நிலை. அரைவிழிப்பில் எதிரே ஓடிக்கொண்டிருந்த டிவியைப் பார்த்தேன். ஷேக்ஸ்பியரைப் பற்றி ஒரு ஆவணப்படம். ஷேக்ஸ்பியர் என உண்மையில் யாராவது இருந்தார்களா? அடிதடிக்குப் பெயர் போன மார்லோ எனும் நாடக ஆசிரியர் தான் ஷேக்ஸ்பியர் எனும் பெயரில் எழுதினாரா என மிக விரைப்பாக டை கட்டிய ஆசாமி பேசிக்கொண்டிருந்தார். நான் மீண்டும் தூக்கத்துக்குப் போனேன்.
1965இல் சினிமா மோகம் தலைவிரித்தாடியபோது நாடகத்துக்காக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை செலவழித்த பம்மல் சம்பந்தம் முதலியார் தனது நெருக்கமான உறவினரிடம் ஒரு நாடகத்தை சொல்லிக்கொண்டிருந்தார். கண்பார்வை மங்கிய முதலியார் நாடகக் காட்சிகளையும், நடிகர்களின் முகபாவங்களையும், மேடை அமைப்பையும், வசனங்களையும் சொல்லச் சொல்ல அந்த நபர் எழுதி வந்தார். மரப்பாவை போல சொற்பாவை அமைத்தவர் நாடகத்தை நவீனமயமாக்கியது மட்டுமல்லாது, நாடகத்தமிழ் எனும் இயலை மீட்டெடுத்து பல நூல்களை வெளியிட்டவர்.
