தன்னுடன் பழகிய பல கலைஞர்களைப் பற்றி சுந்தர ராமசாமி நினைவோடை எழுதியுள்ளார். பிரமிள் மீது இன்றுவரை நீடித்திருக்கும் கவர்ச்சி, அவரது வித்தியாசமான குணாதிசயங்களைப் பற்றிப் படித்துள்ளதால் இந்த புத்தகத்தை வாங்கினேன்.
மாறாத பழக்க வழக்கங்களும், தடம் புரளாத மன சஞ்சலங்களும் இல்லாத மனிதர்கள் இருக்க முடியாது. கலைஞர்கள் அவ்வகையினரில் தனித்துவமானவர்கள். பல சமயங்களில் இத்தகைய குணமே அவர்களது அடையாளமாகவும், மக்கள் மறக்காததாகவும் ஆகிவிடுகிறது. கலை என்பதே விசித்திரத்தின் பெட்டகம் எனும் கூற்று அதற்கு ஏதோ ஒரு பூடகமான அர்த்தத்தைக் கொடுத்து விடும். ஆனால் அதுதான் உண்மை. கலை என்பது இதுதான் எனும் வரையறை ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை வெளியாகிறது. ஒன்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வெவ்வேறு வரையரைகள் கொடுக்கப்படுகின்றன. பெளதிகத்தின் theory of everything என்பதை முடிவு செய்ய விஞ்ஞானிகள் துடிப்பது போல, எதையாவது சொல்லி இது தான் கலை என நிர்ணயித்துவிட முடியாதா என காலங்காலமாய் முயற்சி நடந்துவருகிறது.
இதுவரை கலைக்குதான் வெற்றி.
குருவாகவும், ஆண்டவனாகவும் மாறிவிடும் கலைஞர்கள் இருந்தாலும் கூட, கலைஞர்களும் மனிதர்கள் தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. தீவிரமான மனநிலையில் உயிரைக் கொடுத்து போராடும் குணம் கொண்ட போராளிகள். அவர்களே தப்பிக்க நினைத்தாலும், கலை அவர்களை விடாது. தத்தளிக்கும் லெளகீக வாழ்வில், நாகராஜன் போல, புதுமைப்பித்தன் போல, கலைஞர்களாக வாழ்ந்து வருபவர்கள். மழை வருமுன் மண்வாசத்தைக் கைப்பற்றும் வேட்கை. எதற்காகவோ தீவிரமாக அடித்துக்கொள்வது போலத் தோன்றி பெரும் வில்லனாகக் கூட சித்தரிக்கப்படுபவர்கள்.
