பாரதி கண்ட கல்வியும் பெண்மையும்
ஆசிரியர்: பேராசிரியர் டாக்டர் மு.கோவிந்தராசன்
பக்கங்கள்: 160
முத்துக்குமரன் பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை : 14
***
பாரதியின் படைப்புகளைக் குறித்து எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல் இது என்றாலும், ஆசிரியரும் ஒரு கவிஞர் என்பதால் நடுநடுவே அவருடைய கவிதைகளோடும், தொல்காப்பியம், திருக்குறள் முதல் பற்பல நூல்களிலிருந்தும் தகுந்த மேற்கோள்களையும் எடுத்துக் காட்டியுள்ளார். கல்வி, பெண்மை ஆகிய இரண்டைப் பற்றி பாரதி பாடியுள்ள அனைத்தையும் அருமையாக தொகுத்து எழுதியுள்ளார். குழந்தைக் கல்வி, பெண் கல்வி, தேசியக் கல்வி ஆகியவற்றைப் பற்றி பாரதியின் கருத்து என்ன என்பதை இந்தப் புத்தகம் அழகாக விளக்கியுள்ளது. ’மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என ஆவேசப்பட்டு, ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்கும்’ என அறிவுறுத்தி, ‘காதல் செய்யும் மனைவியே சக்தி, கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்’ எனப் பெண்மையை போற்றும் பாரதியை ‘பெண்மை’ பகுதியில் படித்து தெரிந்து கொள்ளலாம்.