“அறம் என்ற சொல்லை அறியாத எவரும் இல்லை. அறமென்றால் எதுவென்று முழுதறிந்தவரும் இல்லை” – ஆஸ்திகன், முதற்கனல்
காவியத்திற்கும் இதிகாசத்திற்கும் நுட்பமான வேறுபாடுண்டு. இதிகாசம் எனும் சொல் ‘இது இப்படி நடந்தது’ என்பதை குறிக்கும். காவியம் லட்சிய மனிதர்களைக் காட்டுவதாகும். ராமாயணத்தை காவியம் என்றும் மகாபாரதத்தை இதிகாசம் என்றும் வரையறை செய்யலாம். பாரதத்தின் மாந்தர்கள் கூர்மையானவர்கள் கட்டற்ற அதிகார விழைவும் காமமும் கொண்டவர்கள், குரோதத்தின், வன்மத்தின் பெருநெருப்பில் தங்களையே அவியாக்கிக் கொண்டவர்கள். காவிய நாயகர்கள் லட்சிய குணங்களுடன் காவிய தருணங்களில் வாழ்பவர்கள். இதிகாச மாந்தர்கள் மானுட குணம் கொண்டு காவிய தருணங்களில் வாழ்பவர்கள். அதன் காரணமாகவே நமக்கு மிகவும் நெருக்கமானவர்களும் கூட.
