சிறப்புப் பதிவர்: பாஸ்கர் லக்ஷ்மன்
வேலையில்லாத் திண்டாட்டம் 1970 மற்றும் 80களில் ஒரு பெரிய சமூகப் பிரச்சனையாக இந்தியாவில், குறிப்பாக, தமிழ்நாட்டில், இருந்தது என்பதை மறக்க முடியாது. பாலச்சந்தரின் "வறுமையின் நிறம் சிகப்பு" மற்றும் பாரதிராஜாவின் "நிழல்கள்" இந்தக் கருத்தை பிழியப்பிழிய மக்கள் முன் வைத்தன. அன்றைய முதல்வர் கருணாநிதி ஒரு பேட்டியில் வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு "திறமையுள்ளவர்களுக்கு இன்றும் வேலை கிடைக்கிறது" என்று பதிலளித்ததாக நினைவு. அப்போதெல்லாம் வங்கியில் வேலை கிடைத்துவிட்டால் அதிர்ஷ்டசாலி, புண்ணியவான் என்று பாராட்டு கிடைக்கும், கூடவே பெண்ணும் கிடைக்கும், கூடவே பணம், பொருள், வாகனம் இத்யாதி இத்யாதி.
ஆனால் 90 களில் நிலைமை முற்றிலும் மாறியது.எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற இருளில் இளைஞர்களுக்கு கணினி உலகம் விடிவெள்ளியாய் உதித்தது. கணிதம், அறிவியல், பொறியியல்,தமிழ், தெலுங்கு என எது படித்திருந்தாலும் கணினி உலகம் எல்லோரையும் பாகுபாடில்லாமல் அணைத்துக் கொண்டது."Trespassers will be appointed" என்ற கார்ட்டூன் பார்த்ததாக நினைவு. வருமானம் அதிகம். வெளிநாட்டுப் பயணம்.வெளிநாட்டு வாழ்க்கை என்று யாரும் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டது.
