சிறப்பு பதிவர் - மானஸி
அப்பா, அம்மா, 5 பிள்ளைகள், அவர்களின் மனைவியர், குழந்தைகள் என ஒரே கூரையின்கீழ் வாழும், பணத்துக்குக் குறைவில்லாத ஒரு கூட்டுக் குடும்பம். ஆனால் மனதளவில், உணர்வுகளை கவனித்துப் பார்த்தால், இவர்கள் அனைவருமே ஒரு கூரையின்கீழ் வாழும் தனித்தனி மனிதர்களகத்தான் இருக்கிறார்கள். இவர்களிடையே நடக்கும் பரிவர்த்தனைகள் கடமையாகவும், தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும்தான் நடக்கின்றன.
வீட்டுக்குப் பெரியவர், அத்தனை செல்வத்துக்கும் உடைமையாளர், அன்பான மனைவி இருந்தும் அவளால் தன் உடல் தேவைகளை ஈடு கட்ட முடியாமல் போகும்போது வேறு உறவுகளை நாடிப் போய் குடும்பத்திடமிருந்து உணர்வளவில் பிரிந்து விடுகிறார்.
வீடு இரவு தங்க மட்டும் போகும் இடமானது... பணத்தைத் துரத்த துரத்த அதைக் குவித்து வைத்து எண்ணும் போதை வெறியாக மாறிவிட துரத்தலின் காரணமே தெரியாமல் காலம் ஓடியது.
அண்ணன் தம்பிகளிடையே நிலவும் உறவு ஒரே நிறுவனத்தில் உடன் பணிபுரிபவர்கள் போலத்தான் இருக்கிறது. பெண் குழந்தைகள் என்பதினால் தன் குழந்தைகளையே ஒதுக்கும் ஒரு மகன். வீட்டுப் பசுமாடுகளிடம் காட்டும் அன்பைக்கூட அவரால் பாசத்துக்கு ஏங்கும் தன் பெண்ணிடம் காட்ட முடியவில்லை. ஓடி வரும் குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச முடியாதபடிக்கு, இன்னும் பல வருடம் கழித்து அவள் திருமணத்துக்குப் போட வேண்டிய நூறு பவுன் நகைதான் அவருக்கு மனதில் சுமையாய் இருக்கிறது. வியாபாரம், பணம் சேர்த்தல் என்கிற வெறி பிடித்த ஓட்டத்தில் குடும்ப உறவுகள் சுமையாகவும் கடமையாகவுமே தெரிகின்றன.
நால்வருமே வெளியின் திசைகளில் அலைந்து களைப்புறும்போது இளைப்பாறும் இடமாகவே வீட்டைக் கருதினர். அவர்களுடைய வெளியுலகத்தின் நீட்சியாக இருக்கவியலாத வீட்டின் மீதிருந்த வெறுப்பு, ... எதிர்பாராத உரசல்கள் எல்லாவற்றாலும் அவர்கள் வீட்டை விட்டுத் தம்மைத் துண்டித்துக் கொள்ள விரும்பினர்.
