Book Name: A Suitable Boy
Author : Vikram Seth
Published Year: May 1993
Publisher: Harper Collins(US)/Phoenix (UK)
Author : Vikram Seth
Published Year: May 1993
Publisher: Harper Collins(US)/Phoenix (UK)
மூன்று வருடங்களுக்குமுன் நான் இருந்த வீட்டின் அருகில் ஒரு நூலகம் இருந்தது. சுஜாதாவின் புத்தகங்களில் பெரும்பாலானவற்றை நான் அப்போதுதான் படித்தேன். அவர் எழுதியிருந்த கட்டுரைகளில் ஒன்றில் விக்ரம் சேத்தின் ஆங்கிலக் கவிதைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். நான் விக்ரம் சேத்தை இணையத்தில் தேடியபோதுதான் இப்படி ஒரு புத்தகம் இருப்பதாகத் தெரிந்து கொண்டேன். அடுத்த தடவை நான் புத்தகங்களை மாற்றிக் கொண்டுவரப் போனபோது அந்த லைப்ரரியின் மானேஜரிடம், "விக்ரம் சேதத்தின் "A Suitable Boy" இருக்கிறதா?" என்று கேட்டேன். அவர் என்னை சில நொடிகள் வெறித்துப் பார்த்தார். இவன் புத்தகத்தைத் திருப்பித் தருவான் என்ற நம்பிக்கை வந்தவராக பக்கத்தில் இருந்த ஷெல்பில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார். இப்போது நான் அந்தப் புத்தகத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் ஒருவாறாக என் உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு, "எனக்கு இந்தப் புத்தகத்தை ஒரு மாசத்துக்குக் கொடுப்பீங்களா?" என்று கேட்டேன். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் வாசித்து எந்த ஒரு புத்தகத்தையும் சில நாட்களிலேயே முடித்துவிடுவதை அப்போதெல்லாம் நான் என் வழக்கமாக வைத்திருந்தேன். அப்படியிருந்தும் இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்க ஒரு மாதம் ஆனது. அதன் காரணம் கட்டுரையின் இறுதியில்.
இந்த நாவலின் கதைக்கருவை சில பத்திகளில் சொல்லிவிட முடியாது. பதினெட்டு மாத கால நிகழ்வுகளை விவரிக்கும் மிக நீண்ட கதை இது. பதினெட்டு மாதங்களாக ஒரு தாய் தன் மகளுக்குப் பொருத்தமான வரனைத் தேடிக் கொண்டிருக்கிறாள். கதைக்களம் சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியா, பாத்திரங்கள் உத்தர பிரதேசம், பிஹார், மேற்கு வங்க மாநிலங்களில் பயணிக்கின்றன. கதாநாயகி லதா சுதந்திரமாக சிந்திக்கக்கூடிய புதுமைப் பெண். அவள் மூன்று வரன்களில் ஒருவனைத் தேர்ந்தெடுக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறாள், யாரை இறுதியில் திருமணம் செய்து கொள்கிறாள் என்பதுதான் கதையின் மையக் கேள்வி. இதைத் தவிர லதாவின் குடும்பம் மற்றும் வேறு மூன்று குடும்பங்களின் கதைகளும் இந்த நாவலில் விவரிக்கப்படுகின்றன.
கதையின் முக்கிய பாத்திரங்களைக் கொண்டு விக்ரம் சேத் இந்தியாவை அன்று அச்சுறுத்திய, இன்றும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினைகளை அற்புதமாகத் தன் நாவலினூடாகப் விவரிக்கின்றார். சாதி, ஜமீந்தார் அமைப்பு, இந்து முஸ்லிம் வன்முறை போன்றவை நாவல் முழுதும் தொடர்ந்து பேசப்படுகிறது.
இந்த நாவல் முழுவதும் மெல்லிய நகைச்சுவை இழையோடியபடி இிருக்கும். 1950களின் துவக்ககால இந்தியா எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பற்றிய ஒரு அடிப்படை புரிதலை இந்த நாவல் அளிக்கிறது. ஆதிக்க சாதியினருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் இடையே இருந்த உறவு, இந்து முஸ்லிம் உறவு, அக்கால வட இந்திய மக்களின் பண்பாடு, தங்களை வேகமாக விழுங்கிச் செல்லும் மாற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்ற அவர்களுடைய குழப்பங்கள் - இவையனைத்தும் நமக்கு இந்த நாவலில் தெரிய வருகிறது.
1450 பக்க அளவில் ஒரு மாபெரும் புத்தகம், உங்களுக்கு அத்தனை நேரம் இருந்தால், வாசிக்க முயற்சிக்கலாம்.
கிடைக்கும் இடம் : Murugan Lending Library, Gokul Arcade, Adyar, Chennai.