பிரெஞ்சு எழுத்தாளர் மிஷேல் புஸ்ஸியின் ‘After the Crash’ ('Un avion sans elle'- ஆங்கில மொழியாக்கம் சாம் டெய்லர்) ஒரு த்ரில்லர்தான், ஆனால் அதில் நல்ல கற்பனையைப் பார்க்க முடிகிறது. கதையின் அடிப்படையில் முதற்கோள் (premise) ஒன்றுண்டு, அது இந்த நாவலை ஒருங்கிணைக்கும் சரடாய் அமைந்திருக்கிறது.
1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரிலிருந்து பாரிஸ் செல்லும் விமானம் ஒன்று பிரெஞ்சு- ஸ்வட்ஸர்லாந்து எல்லைப் பகுதியில் உள்ள மலை மீது மோதி வீழ்கிறது. அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இறக்கின்றனர்- பிறந்த மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்றைத் தவிர. அவள் விமானத்திலிருந்து வெளியே தூக்கி வீசப்படுகிறாள். எலும்பை உறைய வைக்கும் குளிரில் அவளை எரியும் விமானத்தின் வெம்மை பாதுகாக்கிறது.
