சிறப்பு பதிவர்: சரவணன்
ஜான் கிரஷாம் வழக்கறிஞர்களையும் வழக்குகளையும் மையமாக வைத்து லீகல் திரில்லர் எழுதுபவர். இவருடைய புத்தகங்களில் சற்றே வித்தியாசமானது ‘ஸ்ட்ரீட் லாயர்’. (மேலும் வித்தியாசமான- காமெடி- புத்தகமான ‘ஸ்கிப்பிங் கிருஸ்மஸ்’ தவிர).
இப்புத்தகத்தின் கதாநாயகன் மைக்கேல் ப்ரோக், வாஷிங்டன் நகரில் அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய சட்டக் குழுமமான டிரேக் அன் சானி-யில் பணியாற்றுகிற அதிபுத்திசாலியான, பெரும் வணிக நிறுவனங்களுக்காக ஆஜராகிற, ஆன்ட்டி-ட்ரஸ்ட் லாயர். இன்னும் மூன்றே ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஆகிவிடும் நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பவன். என்ன, அவனது மணவாழ்வுதான் ஊசலாட்டத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் ஒருநாள் வீடற்றவன் ஒருவன், கையில் துப்பாக்கியோடு அலுவலகத்துக்குள் நுழைந்து மைக்கேல் உட்பட ஆறு பேரைப் பணயக் கைதிகளாக பிடித்துவைத்துக் கொள்கிறான். தன்னை வெறுமனே ‘மிஸ்டர்’ என்று அழைக்கச் சொல்லும் அவனுக்குக் கோரிக்கைகள் எதுவும் இல்லை. மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் வழக்கறிஞர்களுக்கு ஏழைகள், வீடற்றவர்கள் மீது ஏதாவது அக்கறை இருக்கிறதா?, என்று கேள்விகளால் துளைக்கிறான். பிறகு போலீசாரால் அனைவரும் மீட்கப்படுகிறார்கள்— ஒரு அதிரடி நடவடிக்கை மூலமாக.
இந்தச் சம்பவம் மைக்கேலின் வாழ்க்கையைப் ‘புரட்டிப் போட்டுவிடுகிறது’. யார் இந்த ‘மிஸ்டர்’ என்று ஆராயப்புகும்போது அவனுக்குக் கிடைப்பது சில அதிர்ச்சித் தகவல்கள். ‘மிஸ்டரின்’ நிஜப்பெயர் டி வான் ஹார்டி என்றும், அவன் குடியிருந்த ஒரு மலிவான இடத்திலிருந்து அவனையும், இன்னும் பலரையும் காலி செய்ததில் தனது நிறுவனத்துக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் தெரிய வருகிறது. அதுவும் அப்படிக் காலி செய்யப்பட்டவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல, டில்மான் கான்ட்ரி என்ற முன்னாள் பெண்-தரகன் ஒருவனுக்கு வாடகை கொடுத்துவந்தவர்கள் என்று தெரியும்போது கொந்தளிப்பாக உணர்கிறான். இதுவரை அவன் சிறிதும் அக்கறை செலுத்திக் கவனித்திராத சாலையோர மக்களின் உலகம் அவனுக்கு அறிமுகம் ஆகிறது. காலி செய்யப்பட்ட லோன்டே பர்டன் என்ற பெண்ணும் அவளது நான்கு குழந்தைகளும் வீடில்லாமல் ஒரு பழைய காருக்குள் இரவைக் கழித்து, மூச்சுத் திணறி இறந்துவிடுகிறார்கள். முந்தைய நாள்தான் மைக்கேலின் கையில் உயிர்ப்புடன் இருந்த குழந்தை ஒண்டாரியோ மரணித்து விறைத்துக் கிடப்பது நம்மையே உலுக்குகிறது. அதை மைக்கேலால் ஜீரணிக்கவே முடிவதில்லை. தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எவ்விதத்திலும் நியாயமானதே அல்ல என்று உணர்கிறான்.
