சிறப்புப் பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)
பெங்குவின் இந்தியாவின் பதிப்பாசிரியராக டேவிட் டாவிதார் இருந்த காலத்தில், தி ஹிந்து நாளிதழின் சண்டே மேகசினில் ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகம் அல்லது எழுத்தாளரைப் பரிந்துரைத்து பத்தி ஒன்றை எழுதி வந்தார். அதில்தான் நான் முதலில் பெர் வாஹ்லூ, மாயி கொவால் ஆகிய இருவரையும், அவர்கள் எழுதிய "Laughing Policeman" என்ற நாவலையும் அறிந்தேன். அந்தப் புத்தகம் இங்கேயே கிடைத்தது என் அதிர்ஷ்டம். அதை வாசித்து முடித்ததும் இந்தத் தொடரின் பிற நாவல்களைத் தேடித் தேடி வாசித்தேன். இருவரும் இணைந்து எழுதிய பத்து புத்தகங்களையும் கண்டெடுத்து வாசித்த பிறகுதான் ஓய்ந்தேன்.
இந்தத்
தம்பதியர் எழுதிய முதல் நாவல்தான் ரோஸன்னா. ஸ்வீடனில் உள்ள ஏரிகளில்
ஒன்றில் தூர்வாரும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு இளம் பெண்ணின்
உடல் கண்டெடுக்கப்படுகிறது. அந்தப் பெண் உடலில் உடையேதும் இல்லை. அவள்
கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. ஆனால் அவள் யார்
என்பதையோ எப்போது கொலை செய்யப்பட்டாள் என்பதையோ உள்ளூர் போலீஸ்காரர்களால்
கண்டுபிடிக்க முடியவில்லை. தலைமையகத்திலிருந்து இன்ஸ்பெக்டர் பெக்
வரவழைக்கப்படுகிறார், அவரிடம் இந்த மர்ம வழக்கு ஒப்படைக்கப்படுகிறது.
இன்ஸ்பெக்டர் பெக் மற்றும் அவரது சகாக்கள் இந்தக் கொலை வழக்கை எப்படி
துப்பறிகிறார்கள் என்பதுதான் நாவலின் மையம்.
