28 Jun 2013

Civilization – the West and the Rest by Niall Ferguson

சிறப்புப் பதிவர்: ரவி நடராஜன் 


அலுவலக வேலை காரணமாக பயணம் மேற்கொள்ளும்பொழுது, புதிய ஊரில், புதிய இடத்தில் தூக்கம் வராமல் புரளுவது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனால் அவ்வாறு புரண்டபோது, விடுதி அறையில் இருந்த தொலைகாட்சி ரிமோட்டில் சானல்களை மாற்றுகையில் புத்தக விமர்சனம் ஒன்று காலை 3 மணி என்றபோதும் என் ஆவலைத் தூண்டி, புத்தகத்தின் பெயரை பத்திரமாக எழுத வைத்தது. இது புதிது. பிறகு அந்தப் புத்தகத்தைத் தேடிப் படித்ததுடன், அந்த எழுத்தாளரின் இன்னும் மூன்று புத்தகங்களை வாசித்ததும் வேறொரு கதை.

அப்படி என்ன விஷயம் இந்தப் புத்தகத்தில்? 

ஒரு மேற்கத்திய எழுத்தாளர், “மேற்குலகின் ஆதிக்கம் முடியும் நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!” என்கிறார். 

1970 –களில் ஒரு சராசரி அமெரிக்கர், ஒரு சராசரி சீனரை விட 70 மடங்கு பணக்காரராக இருந்தார். 2000-களில், அதே சராசரி அமெரிக்கர், அதே சீனரைவிட 5 மடங்குதான் பணக்காரர் என்ற நிலைக்கு வந்து விட்டார். சீனாவின் ராட்சச முன்னேற்றம் ஒரு காரணம் என்றாலும், அமெரிக்கரின் முன்னேற்றத் தொய்வும் இன்னொரு காரணம்.  1970க்கு முந்தைய 30 ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட 14 மடங்கு முன்னேற்றம் என்பது, மனித சரித்திரத்தில் எங்கும் எப்போதும் நிகழ்ந்ததே இல்லை.

இதையெல்லாம் கேட்கக் கேட்க என் முழு தூக்கமும் கலைந்து இந்தப் புத்தகம் பற்றிய தொலைகாட்சி விமரிசனத்தை உன்னிப்பாக கவனிக்கத் துவங்கினேன். ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளரும், ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியருமான, Niall Ferguson என்பவரின், “Civilization – the West and the Rest”, என்ற புத்தகம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த உரையாடல் அன்றிரவு புதிய பல சுவாரசியமான வாதங்களை கவனத்துக்குக் கொண்டு வந்தது. புத்தகத்தையும் வாங்கிப் படிக்க வைத்தது.

ஒரு 500 ஆண்டுகளுக்கு முன் மேற்குலகு மற்றும் அதன் ஆதிக்கம் என்று எதுவும் இல்லை. சீனாவும் இந்தியாவும் உலக வல்லரசுகளாய் திகழ்ந்து வந்தன. மேற்குலகம் எப்படி இந்தக் குறுகிய காலத்தில், உலகை ஆட்டிப் படைக்கும் அளவுக்கு வளர்ந்தது? ஏன் எங்கோ இருக்கும் சிரியாவில் அமைதி நிலவ, எல்லோரும் அமெரிக்கா ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்? ஏன் பாகிஸ்தானின் பல தீவிரவாத உதவி அமைப்புகளை ஒடுக்க அமெரிக்காவை எதிர்பார்க்கிறோம்? ஏன் யாருமே ஒரு சிறிய லத்தீன் அமெரிக்க நாட்டின் பிரச்சனையை தீர்த்து வைக்கக்கூட, இந்தியாவை நினைத்துப் பார்ப்பதில்லை?

27 Jun 2013

இதயம் பேசுகிறது — மணியன்

பதிவர் - சரவணன்


    தமிழில் பயண இலக்கிய முன்னோடி ஏ.கே.செட்டியார். அவருடைய நூல்கள் உலகத்தரம் என்றால், வார இதழ் தரத்தில் எழுதியவர்கள் கல்கி தொடங்கி, சாவி, லேனா தமிழ்வாணன் வரைப் பலர். என்றாலும் தமிழ் எழுத்துலகில் இது ஒரு நலிந்த பிரிவுதான்.

மணியன் அறுபதுகளில் ஆனந்த விகடனில் தனது இதயம் பேசுகிறது பயண இலக்கியத் தொடர் மூலம் கணிசமான வாசகர்களைப் பெற்றவர். விகடனால் புத்தகமாகவும் வெளியிடப்பட்ட இந்தத் தொடருக்கு, எழுதப்பட்டு ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டதாலேயே, ஒரு 'காலப்பெட்டகம்' மாதிரியான மதிப்பு இன்றைக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லலாம். பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்துக்கும் 1966 இறுதி வாக்கில் சென்று வந்திருக்கும் மணியன், தான் சென்ற இடங்களில் எளிய மக்களின் இதயங்கள் பேசுவதைக் கேட்டு அதையே தான் இந்தப் புத்தகமாக எழுதியிருப்பதாக 'என்னுரை'யில் சொல்கிறார். எஸ்.எஸ்.வாசனின் முன்னுரையும் இருக்கிறது.

புத்தகத்தில் சரியான பயணத்தேதிகளை மணியன் குறிப்பிடவே இல்லை. இது முக்கியமான குறையே. இப்பொழுது மீண்டும் புத்தகத்தைப் புரட்டியதில், அமெரிக்க எம்பஸி அவருக்கு அமெரிக்கா வருமாறு அழைத்த கடிதம் இருப்பதைக் கவனித்தேன் (முதலில் அது ஏதோ ஜனாதிபதி சம்பிரதாய வாழ்த்துரை என்று எண்ணி ஸ்கிப் செய்திருந்தேன் :). கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி செப் 13, 1966.

மணியனை அழைத்த நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான். வழியில் ஒரு சில நாடுகளைச் சேர்த்து ஒரே பயணமாகச் சென்றுவந்துள்ளார். அவருக்கு அதுவே முதல் வெளிநாட்டுப் பயணம்.  முதல் விமானப் பயணம் என்றும் நினைக்கிறேன்.  

மணியன் முதலாவதாகச் சென்ற நாடு எகிப்து. அங்கே கெய்ரோ மியூசியத்தில் மம்மிகளைப் பார்த்துவிட்டு வந்தபோது ஏதோ ஆஸ்பத்திரி சவக்கிடங்கிலிருந்து வெளியே வருகிற உணர்வுதான் ஏற்பட்டது என்கிறார். அதன்பிறகு அன்று சாப்பிடக்கூடப் பிடிக்கவில்லையாம்! நான் இதை எதிர்பார்க்கவில்லை. பிரான்ஸ், இங்கிலாந்து பயணங்களில் விசேஷமாகக் குறிப்பிடும்படி ஒன்றுமில்லை.


26 Jun 2013

ஆம்னிபஸ் 365


ஆம்னிபஸ் தளம் 365 பதிவுகளை இன்று கடக்கிறது. 

ஆம்னிபஸ்சின் முதல் பதிவைஒரு விளம்பரம் என்று கொள்ளலாம். அதனைத் தவிர்த்தால் புத்தக / கதை / ஆசிரிய / சப்ஜெக்ட் அறிமுகத்தில் இந்தப் பதிவு 365’ஆவது பதிவு.

ஒரு நாளும் இடைவிடாமல் எழுதினோம் என்பதுவே பெரிய சாதனை. சில நாட்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதினோம் என்பது சாதனையோ சாதனை.

மூன்று வருடங்களுக்கு முன் எனக்குப் பிடித்த நாவல்கள் என்று நான் எழுதிய பட்டியல் இது:

01. பொன்னியின் செல்வன்
02. எப்போதும் பெண் (சுஜாதா) 
03. மன்மதப் புதிர் (பி.கே.பி.)
04. சங்க சித்திரங்கள் (ஜெயமோகன்)
05. கள்ளிக்காட்டு இதிகாசம்
06. மோகமுள் 
07. சில நேரங்களில் சில மனிதர்கள்
08. தொட்டால் தொடரும்
09. ஸ்ரீரங்கத்து தேவதைகள்
10. ஏழு நாள் சூரியன் ஏழு நாள் சந்திரன் (பாஸ்கர் சக்தி)

இவற்றில் ஐந்து புத்தகங்களை ஆம்னிபஸ்சில் கவர் செய்தோம். 

பொன்னியின் செல்வன், மோகமுள், சிநேசிம, கள்ளிக்காட்டு இதிகாசம், ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் ஆகியவற்றை தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் அறிவர். எண்பதுகளின் வாசகர்கள் நிச்சயம் தொட்டால் தொடரும் அறிவர்.

மன்மதப் புதிர் அடலஸன்ஸ் வயதின் தடுமாற்றத்தில் இருக்கும் சின்னப்பெண்ணின் கதை. பிகேபி’யின் தன்னிகரற்ற ஸ்பெஷாலிட்டியான வசன நடையிலேயே மொத்தக்கதையும் சொல்லப்பட்டிருக்கும்.

சங்க சித்திரங்கள் நான் ஜெமோவின் தீவிர வாசகன் ஆவதற்கு முதற்படி அமைத்துத் தந்த தொடர்.

ஏழு நாள் சந்திரன் ஏழு நாள் சூரியன் ஒரு எளிமையான பாஸ்கர் சக்தியின் ஸ்பெஷல். மறுவாசிப்பிற்குத் தேடுகிறேன், கிடைப்பேனா என்கிறது.

இப்படிப் பத்து புத்தகங்கள் தாண்டி ஏதும் தெரியாமலேயே எந்த தைரியத்தில் ஆம்னிபஸ் தளத்தை ஆரம்பித்தேன் என்பது ஆச்சர்யமாகவே இருக்கிறது.

எனினும், ஒரு அசட்டு சிந்தனையில் ஆரம்பித்த ஆம்னிபஸ்சுக்கு என்று ஒரு அதியற்புதமான கூட்டணி அமைந்தது. வித்தியாசமான சிந்தனைகள், ரசனை, வாசிப்புத் திறன் கொண்ட ஒரு கூட்டம். அவர்கள் தொடர்ந்து படித்து, எழுதிய பதிவுகள், அறிமுகங்கள் ஆம்னிபஸ்சை ஒரு வருடம் தடையின்றி ஓடச் செய்தது. 

இந்தப் பத்துப் புத்தகங்கள் மாத்திரமல்ல உலகின் சிறந்த புத்தகங்கள், இன்னமும் பல்லாயிரம்க் உண்டு என எனக்கு தங்கள் நூல் அறிமுகங்கள் வாயிலாக நண்பர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.

நம் கூட்டணி நண்பர்களைத் தாண்டி அன்பர்கள் பலர் சிறப்புப் பதிவர் அடையாளம் சுமந்து தாம் வாசித்தவைகளை மற்றவர்களுடன் இங்கே பகிர்ந்து கொண்டார்கள்.

ஆக, 365 பதிவுகளில் சில ரிப்பீட்டுகள், சில சிறப்பு வாரங்கள் தவிர்த்தால் குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட நூலாசிரியர்கள் எழுதிய 350 புத்தக அறிமுகங்கள் நிகழ்ந்துள்ளன. .

இந்த ஆம்னிபஸ் பேருந்தை ஓட்டியவர்களும், நடத்துனர்களும், பயணிகளும் என எல்லோரும் இந்தப் பயணத்தின் இனிமைக்குக் காரணம் ஆகிறார்கள். எல்லோருக்கும் எப்படி நன்றி என்ற மூன்றே எழுத்துகளைச் சொல்லி முடிப்பது என்று புரியாமல் நிற்கிறேன்.

புரிந்து தெளிகையில், இந்தப் பயணத்தின் அதி சுவாரசிய தருணங்கள் சிலவற்றைப் பகிர்ந்தவாறே என் நன்றி நவிலலை நிகழ்த்துவேன்.

365 பதிவுகள் நிறைந்துவிட்டாலும் ஆம்னிபஸ் பயணம் தொடரும். இனி தினம் ஒரு பதிவு என்ற கட்டாயம் ஆம்னிபஸ்சுக்கு இல்லை. புதிய நண்பர்களின் கூட்டணியுடன் நல்ல பல புத்தக அறிமுகங்கள் இங்கே அவ்வப்போது நிகழும்.

ஆம்னிபஸ்சில் தொடர்ந்து பயணிக்குமாறு வாசக அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

25 Jun 2013

The Devotion of Suspect X - Keigo Higashino

சிறப்புப் பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)


தன் கணவனிடமிருந்து விவாக ரத்து பெற்ற யாசுகோ டீனேஜ் மகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். சாப்பாட்டுக் கடையொன்றில் வேலை செய்யும் அவள், தான் தன் கடந்த காலத்தைக் கடந்து வந்துவிட்ட நினைப்பில் இருக்கிறாள். ஆனால், அவள் வேலை செய்து கொண்டிருக்கும் கடைக்கு அவளது முன்னாள் கணவன், டோகாஷி, வரும்போது கடந்த காலம் அவளைப் பிடித்துக்கொள்கிறது. 

வேலை செய்யும் இடத்தில் அவனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க மனமில்லாத அவள், அவனை ஒரு ரெஸ்டாரண்டில் சந்திக்க ஒப்புக் கொள்கிறாள். அங்கு அவனிடம் பேசிவிட்டு இனி நீ என்னைத் தொல்லை செய்யக்கூடாது என்று சொல்லி வீடு திரும்புகிறாள் யாசுகோ. ஆனால் அவளைப் பின்தொடர்ந்து டோகாஷியும் அவளது வீட்டுக்கு வந்து விடுகிறான். 

அபார்ட்மெண்ட்டில் மற்றவர்கள் முன்னால் அவனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க மனமில்லாமல் வேண்டா வெறுப்பாக அவனைத் தன் வீட்டுக்குள் வர அனுமதிக்கிறாள் யாசுகோ. அவன் வந்த கொஞ்ச நேரத்திலேயே அவளது மகள் மிசாடோ ஸ்கூல் விட்டு வீடு திரும்புகிறாள். மிசாடோவுக்கு டோகாஷி வளர்ப்புத் தந்தை முறை. 

பணம் கொடுத்து தன் முன்னாள் கணவனை வீட்டைவிட்டு வெளியேற்றப் பார்க்கிறாள் யாசுகோ. அவள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளும் டோகாஷி, மிசாடோ பற்றி மோசமாகப் பேசுகிறான். அதனால் கோபமடைந்த மிசாடோ ஒரு பூச்சட்டியை எடுத்து டோகாஷியைத் தாக்குகிறாள். அடி விழுந்ததும் டோகாஷிக்குக் கோபம் வந்து விடுகிறது. மிசாடோவை பதிலுக்குத் தாக்குகிறான். தன் மகளை அவன் கொன்று விடப் போகிறான் என்ற பயத்தில் யாசுகோ மின்சார வடத்தைக் கொண்டு டோகாஷியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து விடுகிறாள்.

24 Jun 2013

On Writing - Stephen King - ஆம்னிபஸ் பயணம்

On Writing புத்தகத்தின் முன்னுரையிலிருந்து
This is a short book because most books about writing are filled with bullshit...Rule 17 of The Element of Style says 'Omit needless words'. I will try to do that here.
என ஒரு பத்தியில் முன்னுரையை முடித்துவிடுகிறார் கிங், ஸ்டீபன் கிங். நமக்கெல்லாம் முன்னுரையே விளக்க உரை போலப் பத்து பக்கத்துக்கும் குறைவில்லாமல் எழுதினால் தான் திருப்தி. முன்னுரையே இல்லாமல் ஒரு புத்தகம் எழுத ரொம்பவும் தைரியம் வேண்டும் - பலருக்கு அது கிடையாது.
 

*
சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் ஆம்னிபஸ் நண்பர் பாஸ்கர் மற்றும் ஸஸரிரி கிரியும் ஆம்னிபஸ்ஸில் இணைய முடியுமா எனக் கேட்டனர். துபாய்னா ஈரோட்டு பக்கம் தூத்துகுடி பக்கம் இருக்கிறது எனும் நினைப்பில் நானும் வாரத்துக்கு ஒரு பத்தகம் பற்றி எழுதிடலாம் என தெகிரியமாக ஒத்துக்கொண்டேன். வாரத்துக்கு ஒரு புத்தகம் படித்திடலாம் எனும் முன் அனுபவம் இருந்ததாலும், ஐநூறு வார்த்தைகள் எழுதினால் போதும் என நண்பர்கள் சொன்னதாலும் ஒத்துக்கொண்டேன். 

23 Jun 2013

தமிழகத்தில் அடிமை முறை - ஆ.சிவசுப்பிரமணியன்

சிறப்புப் பதிவர்: ஆனந்தராஜ்

தமிழ் இலக்கியமோ, சமய இலக்கியமோ  எல்லாமே மன்னர் பரம்பரை வழி பற்றிதான் சொல்கிறது. இப்போதே கல்வியில் இப்படி ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதென்றால் அந்தக்காலத்தில் சாதாரண கடைக்கோடி தமிழனின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என நிறைய யோசித்தாயிற்று. 

நாளந்தா  பல்கலை தமிழ் பல்கலை என கதை விட்டாயிற்று..!
(நாளும் + தா = நாளந்தா )

திண்ணைப் படிப்பு சமணர்கள் வந்த பின்தான் ஆரம்பித்தது. அதுவும் விருப்பமுள்ளவர்களாலும், அரசசபையில் பேச பாடவும் மட்டுமே விதிவிலக்காக சேர்த்து கொள்ளப்பட்டது. 


சரி... சாதாரண  குடிமக்களின் நிலை என்னவாக, எப்படி இருந்தது...?  வரலாறு  என்றாலே  கத்தி சண்டையும்,  நாலு கொலைகளும்,  எதிரி நாட்டு மக்களை, மன்னனின் மனைவியை,  அவர்தம் மக்களை சிறைபிடித்தலும், ஊரை கொள்ளையடித்தலும் தான் என ஆகிப்போய் விட்டது. 


அதுவும் இல்லையெனில் புலிகேசி வடிவேலு மாதிரி ஒரு "பில்ட் அப்" உடன் புலவர்களை கொண்டு கவி வடித்து...  அதை நாம இப்ப மனன பாடமாக படித்து.... அடடடா .. !

அதெப்படி.... அந்த காலத்திலேயே எல்லோருக்கும் கல்வி கிடைத்து "மன நிம்மதியான வாழ்க்கை" வாழ்ந்திருப்பார்கள் என நினைத்து "கல்வி"யின்பாற் திருப்பினால்  பண்டைய தமிழகத்தில் கல்வி முறை அதல பாதாளத்தில் வீழ்ந்திருந்தது போலும். சாமானியர்களுக்கும்  கல்விக்கும் காத தூரம்.

முத்தொள்ளாயிரத்திலும்... இன்னபிற சங்க இலக்கியங்களிலும் குறிப்பிட்டதுள்ளது போல, வயசுக்கு வந்த எல்லா பெதும்பைகளும் சேர சோழ பாண்டியர்களின் படுக்கையை நினைத்து விரகதாபம் கொண்டிருந்தார்களா, இல்லை துணைவனை / மகனை   போருக்கு அனுப்பி விட்டு வழிமேல் விழி வைத்து காத்திருந்தார்களா? தோழியருடன் தலைவனை நினைத்து காதல் கவிதைகள் பாடிக்கொண்டிருந்தனரா, இல்லை கஞ்சிக்கு வழியில்லாமல் அல்லலோகல்லல்லோகப்பட்டு அலைந்தார்களா?  எதுவும் அறியக் கிடைக்கவில்லையா , இல்லை மறைத்துவிட்டார்களா எனப்புரியவில்லை. 

வழக்கமான தேடலில் அடிமை முறை பற்றி ஆ சிவசுப்பிரமணியன் எழுதிய “தமிழகத்தில் அடிமை முறை”  என்றொரு  புத்தகம் கிடைத்தது. இந்தச் சிறுநூல் நூலாசிரியர் ஏற்கனவே (1984) வெளியிட்ட நூலின் விரிவாக்கம் ஆகும்.

“அடிமைத்தனம்” தமிழரிடை  இருந்ததில்லை என வி.கனகசபை  மற்றும்  எஸ்.ரா போன்றவர்கள் கூறியிருப்பினும் தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், சுவடிகள்,  பயண, குறிப்புகள், அரசு ஆவணங்கள்  போன்ற   எண்ணற்ற கணக்கிலடங்கா செய்திகள் குறிப்புகள் மூலம் தமிழகத்தில் அடிமை முறை நிலவியதை நிறுவுகிறார் ஆசிரியர் 

தமிழத்தில் சமூக நிலை மன்னராட்சியில்  மிக மிக மோசமான நிலையை எட்டியிருந்தது.  இதை சர்வ சாதாரணமாக "கிராமங்களை" கொடையளித்த மன்னர்களின்/அரசர்களின் கல்வெட்டுக்களின் மூலம் அறிந்து கொண்டிருப்போம். அப்போது அந்த கிராமங்களை சேர்ந்த  மக்களின் “கதி” என்னவென்று யாரும் நினைத்து பார்த்ததில்லை.

சங்க கால, பல்லவர் கால பிற்கால சோழ, நாயக்கர் கால,  மராட்டிய கால அடிமை முறைகள்  என பின்னி பெடலெடுத்து தமிழத்தின் பரம்பரை அடிமை முறையான பண்ணையாள்,  தேவரடியாள்,  படியாள் முறை பற்றியும் அவற்றின் தொடர்ச்சியாக இந்த நூற்றாண்டில் உள்ள வழக்கு முறையையும் விளக்குகின்றார். 

புதியதாக எதையும் சேர்க்காமல் நாம் படித்தறிந்த  தமிழ் இலக்கியத்திலிருந்தும்,  பக்தி இலக்கியத்திலிருந்தும் , கண்டறிந்த கல்வெட்டுக்களிலிருந்தும்,  சுவடிகளிலிருந்தும்,  மக்களின் வழக்காற்றிலிருந்தும் இதற்கான சான்றுகளை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார். 

சற்றேறக்குறைய 29  அடிமை ஆவணங்கள் என அறியப்பட்டவற்றை -புரிந்து கொள்ள எதுவாக 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட- ஆவணங்களை பின்னிணைப்பில்  இணைத்துள்ளார்.

"அடிமைகள் இருந்தார்கள்"  ஆனால் அவர்கள் சமுதாயத்தின்  மன்னரின் அரசனின்  வளர்ச்சியை தீர்மானிக்கும் நிலையில் இல்லை என ஆசிரியர் கூறி "அடிமை சமூகம் இருந்ததில்லை" என ஜகா  வாங்கியிருப்பது "அடிமைத்தனத்தின்" கோரத்தை தெள்ளத்தெளிவாக விளக்கும்.

முக்கியமான குறிப்பு :  "தமிழன்" என்றொரு அகங்காரத்தில் படிப்பதை விட அடிமைத்தனம் மலிந்த தொல் குடியை சார்ந்த  "சாதாரண மனிதன்" என்றொரு கோணத்தில் கவனத்துடன் படித்தறிந்து கொள்ள வேண்டிய "வரலாற்று உண்மை" இந்த புத்தகம்.

தமிழகத்தில் அடிமை முறை
ஆசிரியர் : ஆ. சிவசுப்பிரமணியம்,
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629001,
விலை : ரூ. 120.00
இணையம் மூலம் இந்தப் புத்தகத்தை வாங்க: நூலுலகம்

22 Jun 2013

இனி ஒரு விதிசெய்வோம் – இரவிச்சந்திரன்

பதிவர் : சரவணன்

    இரவிச்சந்திரன் சுஜாதாவின் நண்பர், அவருடன் பணியாற்றியவர். 'சுஜாதாவுடன் இத்தனை காலம் பழகியிருக்கிறேனே, அந்த ஒரு தகுதி போதாதா எழுதுவதற்கு?' என்று கேட்டு (சிந்துவெளி நாகரிகம் முன்னுரை) எழுதவந்து, அவரது பாணியை அடியொட்டிச் சில சிறுகதைகள் எழுதியவர். 'சிறுகதை எழுதுவதில் எனக்கு அடல்ட்ரியில் ஏற்படும் த்ரில் இருக்கிறது' என்று கூறியிருக்கும் இவர் சுஜாதாவுக்கு முன்பே காலமாகிவிட்டார். சுஜாதாவைப் பின்பற்றி எழுதியவர் என்பதைத் தவிர தமிழ் எழுத்துலகில் இரவிச்சந்திரனைப் பற்றி வேறு அபிப்பிராயங்கள் இல்லை. அப்படி என்னதான் அவர் எழுதியிருக்கிறார் என்று பார்க்க விரும்புபவர்கள் இனி ஒரு விதிசெய்வோம் படிக்கலாம். இந்தப் புத்தகத்தில் நான்கு கதைகள் உள்ளன. இனி ஒரு விதிசெய்வோம் என்ற முதல் கதை குறுநாவல் வடிவத்தில் இருக்கிறது. மற்ற மூன்றும் சிறுகதைகள்.

   

21 Jun 2013

Miss Smilla’s Sense of Snow - Peter Hoeg

சிறப்புப் பதிவர்: எஸ்.சுரேஷ் (@raaga_suresh)

aka. Miss Simlla's Feeling for Snow

ஆறு வயதுச் சிறுவன் ஒருவன், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல்தளத்திலிருந்து கீழே விழுந்து செத்துப் போகிறான். அது வெறும் விபத்து என்று சொல்லி வழக்கை முடிவுக்குக் கொண்டு வர காவற் துறையினர் விரும்புகின்றனர். அதே குடியிருப்பில், அந்தச் சிறுவனோடு நட்பாக இருக்கும் மிஸ் ஸ்மில்லாவுக்கு அச்சிறுவனின் மரணம் விபத்து என்பதில் நம்பிக்கையில்லை.நடந்ததை அறிய அவரே தொடங்கும் விசாரணை அவர் உயிருக்கே உலை வைக்கப் பார்க்கிறது.

நாவலின் கதையென்று எடுத்துக் கொண்டால், த்ரில்லர் வகையைச் சேர்ந்த எந்த ஒரு நாவலின் கதையாகவும் இது இருக்கலாம். கதையின் நாயகமாக ஒரு பெண்; அவள் அபரிதமான திறமை கொண்டவள், ஆனால் சமூக உறவுகளில் சிக்கல். அமைதியான, ஆனால் பலசாலியான ஒரு ஆண், அவனிடம் நாயகிக்கு ஒரு ஈர்ப்பு; இக்கட்டான சமயத்தில் அவளுக்கு உதவ அவன் இருக்கிறான்; தங்களுடைய லாபத்தில் மட்டுமே குறியாக இருக்கும் ஒரு நாசகார நிறுவனம்; பதினைந்து நிமிட புகழுக்காக ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்யத் தயாராக இருக்கும் ஒரு வில்லத்தனமான விஞ்ஞானி. இப்படி ஒரு சாதாரண த்ரில்லருக்குத் தேவையான மசாலாக்கள் அத்தனையும் இங்கே உண்டு. ஆனால் பீட்டர் ஹாக்கின் பனி குறித்தப் புரிதலும், அவருடைய எழுத்து நடையும் படித்துவிட்டுத் தூக்கி வீசும் இன்னொரு நாவலாக இல்லாமல் திரும்பத் திரும்ப வாசிக்கும் நாவலாக Miss Smilla’s Sense of Snowவை காப்பாற்றி விடுகின்றன.

20 Jun 2013

ஐரோப்பிய சிந்தனையாளர்கள் - எழுத்தின் தேடுதல் வேட்டை - நாகரத்தினம் கிருஷ்ணா

முன்னர் ஒரு விவாதத்தில் என்னுடன் விவாதித்த நண்பர் ஒருவர் வரிசையாகப் பல மேற்குலக சிந்தையாளர்களின் தத்துவங்களை பொளந்து கட்டிக்கொண்டிருந்தார். இணையத்தில் கொஞ்சம் நோண்டினால் கிடைக்கக்கூடிய பல விவரங்களை வரிசையாகச் சொல்வது பெரிய விஷயம் அல்ல என்பதால் விவாதத்தில் இருந்தவர்கள் பெரிதும் ஆச்சர்யப்படவில்லை. கொஞ்ச நேரத்தில் விவாதம் திசையறியாமல் சென்றபோது அவர் வார்த்தை விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்தார். அதற்குக் காரணமும் நண்பரிடம் இருந்தது. நமது சிந்தனைகள் எதுவும் மொழியியல் வரலாறு பற்றிய அறிமுகமில்லாதவர்களை சென்றடைய முடியாது என்றார். வெறும் பெயர் உதிர்ப்புகளாக அல்லாமல் மிக விரிவாக ஒரு சிந்தனைத்தளத்தைத் தொடரும் போது தவிர்க்க இயலாதபடி நாம் மொழியியலின் அடிப்படைகளோடு சண்டை போட்டுக்கொண்டிருப்போம் என்றார். அவரது வாதத்தில் உண்மை இருந்தாலும், கட்டுடைப்பு என சில வாதங்களை மொழி அடிப்படைகளை மட்டும் கொண்டு தகர்க்க முடியும் எனும் நம்பிக்கை எங்களுக்கு வரவில்லை.
 
நாகரத்தினம் கிருஷ்ணாவின் `எழுத்தின் தேடுதல் வேட்டை` கட்டுரைத் தொகுப்பைப் படிக்கும் போது நண்பர் கூறியது சரிதானோ எனும் எண்ணம் மேலோங்கியது. ஒரு குறிப்பிட்ட மொழியில் ஒரு காலகட்டத்தில் மிகத் தீவிரமான சிந்தனைகள் வெளிப்படும்போது, அப்போது புழங்கிய மொழி வளங்களை நாம் கணக்கில் கொள்ளாமல் இருக்க முடியாது. பண்டைய இந்தியாவின் சமஸ்கிருத மொழி ஆகட்டும், கடந்த நூற்றாண்டின் பிரெஞ்சு மொழியியல் ஆய்வாளர்கள் முன்மொழிந்த சிந்தனைகள் ஆகட்டும் இந்த கூற்றை ஊர்ஜிதம் செய்வது போலுள்ளன. தீவிரம் கூடாத படைப்புகள் வெளிவரும் மொழியில் அமைந்திருக்கும் சிந்தனைத்தளமும் மிகவும் மேலோட்டமாக மட்டுமே இருக்க முடியும். மொகலாய ஆட்சியிலும், ஆங்கிலேய ஆட்சியிலும் நம் மொழியில் வெளியான படைப்புகளை சங்க இலக்கியங்களோடும் , பக்திகாலகட்ட இலக்கியங்களோடும் ஒப்பிட முடியாது அல்லவா?

19 Jun 2013

The Kalam Effect - P.M.Nair

வேலையை ராஜினாமா செய்பவர்கள், தங்கள் நிறுவனத்தை பிடிக்காமல் விடுவதில்லை. தங்கள் மேலாளருடனான பிரச்னைகளினாலேயே வேலையை விடுகிறார்கள் என்று பொதுவாக சொல்வார்கள். ஒரு அருமையான மேலாளர் அமைந்தவர்கள் என்ன செய்வார்கள்? வேறு எந்த பிரச்னை வந்தாலும் பொறுத்துக் கொண்டு அவருடன் வேலை செய்வதையே பெருமையாகக் கருதி வருவார்கள். அட, இப்படி யாராவது இருப்பார்களா என்று கேட்டால், அதற்கு பதில்: P.M. நாயர். அப்துல் கலாம் போன்ற மேலாளர்  அமைந்ததால், அவரது பணிக்காலமான ஐந்து ஆண்டுகளும் கலாமுடன் விரும்பி மகிழ்ச்சியுடன் பணியாற்றியவர்.

P.M. நாயர், IAS. இந்தியாவில் பல மாநிலங்களில் பல்வேறு பதவிகளை வகித்தவர். அப்துல் கலாம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவரே விரும்பி நாயரை தன்னுடைய தனிச் செயலராக பணிபுரிய விருப்பமா என்று கேட்டாராம். முதலில் தயங்கிய நாயர், பின் நண்பர்கள் கூறியதால், சரி என்று சொல்லி கலாமின் குழுவில் சேர்ந்தாராம். 2002-07 வரையிலான அந்தக் காலகட்டம் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்று உணர்ச்சி வசப்பட்டு எழுதியிருக்கிறார்.

18 Jun 2013

தியாக பூமி - அமரர் கல்கி

சிறப்புப் பதிவர்: சுசிலா ராமசுப்ரமணியன்

முன்குறிப்பு அல்லது முன்னெச்சரிக்கை: கதை சொல்லாமல் விமரிசனம் படைக்கச் சொல்லும் ஆசான்கள் இந்தப் பதிவைக் கடந்து போய்விடுதல் நலம். இது திறனாய்வு அன்று. நேற்று பார்த்த திரைப்படத்தை நண்பருடன் பகிர்ந்து கொள்ளுதல் போன்றதொரு பகிர்வு. நன்றி.

ல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற சரித்திர நாவல்களைப் படித்திருக்கிறேன். குறிப்பாக, பொன்னியின் செல்வனைப் பலமுறைகள் படித்தது உண்டு. கல்கியின் சமூக நாவல்களில் ’அலை ஓசை’ வாசித்தது உண்டு. தியாகபூமி’யை நீண்டகாலமாகத் தேடியது உண்டு; தியாகபூமி புத்தகத்தைச் சொல்கிறேன்.


நண்பர் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பும்போது வழக்கம்போல் கிரியின் கைகளில் அரை டஜன் புத்தகங்கள் இருந்தன (இந்த வரிகளை உங்களுக்காக இடைச் செருகியது; “உங்கள்” கிரி). தேவனின் மிஸ்டர்.வேதாந்தம், கல்கியின் தியாகபூமி இரண்டையும் ‘லபக்’ என்று படியேறுமுன் பிடுங்கிக் கொண்டேன். 

இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் எழுதப்பட்ட புதினம் தியாகபூமி. ஆனந்த விகடனில் கல்கி பணிபுரிந்தபோது படைத்த தொடர்கதை. நல்ல வர்த்தக சினிமா எடுக்கவல்ல கதை. அந்தக் காலத்திலேயே இதே தலைப்பில் திரைப்படம் ஒன்றும் வந்துள்ளதாகத் தெரிகிறது. சரியாக அந்தகாலத்து ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் துவங்குகிறது திரைப்படம்; இல்லையில்லை புதினம். தஞ்சாவூர் ஜில்லாவின் நெடுங்கரை கிராமத்தில் 1918’ல் நடப்பதாகக் கதை.

சம்பு சாஸ்திரியின் மகள் சாவித்திரி. தந்தையுடன் பூஜை, புனஸ்காரங்கள், பஜனை, ஏழை எளியோருக்கு உதவி என்று ஒரு பக்கா கதாநாயகிக்கான அத்தனை குணாதிசயங்களும் கொண்டு வளைய வருகிறாள். அவளது சிற்றன்னை, சிற்றன்னையின் தாயார் என்று இருவரும் சொல்லத் தேவையில்லாமல் சாவித்திரியை அனைத்து விதங்களிலும் படுத்தியெடுக்கிறார்கள். 

மாடர்னான மணவாட்டியை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஸ்ரீதரன். சாவித்திரி ஒரு பட்டிக்காடு என்பது அறியாமல் அவளை ஸ்ரீதரன் மணக்க நேர்கிறது. இங்கேயும் சொல்லத் தேவையின்றி வரதட்சணை கேட்டல், தாலிகட்டும் கடைசி நேரத்தில் இன்னமும் உயர்த்திக் கேட்டல் என்ற குணாதிசயங்கள் கொண்ட ஸ்ரீதரனின் அம்மா.

(அந்த காலத்திலேயே) நான்குநாள் கல்யாணம், நான்காயிரம் வரதட்சணை எல்லாம் தாண்டி சித்தியிடமிருந்து விமோசனம் கிடைத்தது என்று நினைக்கும் சாவித்திரிக்கு தன் புகுந்த ஊரான கல்கத்தாவில் பேரதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. வழக்கமான அல்லல்கள், அவலங்கள், மாமியார் கொடுமைகள். 

கொடுமையின் உச்சமாக நிறைகர்ப்பிணியாக கல்கத்தாவிலிருந்து தன்னந்தனியே கிராமத்திற்குப் பயணப்படுகிறாள் சாவித்திரி. ஊருக்கு வந்தால் அடுத்த அதிர்ச்சி அவளுக்கு முன்னதாகவே அங்கே காத்திருக்கிறது. ஊரை வெள்ளம் சூழ்ந்தபோது வேற்று சாதியினருக்கு உதவியதற்காக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படும் சம்பு சாஸ்திரி மற்றும் குடும்பத்தினர் ஊரைக் காலி செய்துகொண்டு பட்டணம் செல்கிறார்கள்.

சாவித்திரிக்கு அக்ரஹாரம் அனுமதி மறுக்கிறது. சேரி உதவ வருகிறது. அவளும் பட்டணம் பயணிக்கிறாள். குழந்தை பிறக்கிறது. தன் குழந்தையை சம்பு சாஸ்திரியிடம் சேர்த்துவிட்டு சாவித்திரி உமாராணியாக உருமாறுகிறாள். சம்பு சாஸ்திரி தன் பேத்தி எனத் தெரியாமலேயே அந்தக் குழந்தையை வளர்க்கிறார். ”ஓ! ஒரு தென்றல் புயலாகி வருதே!” என்ற பின்னணிப் பாடல் இன்றி புரட்சிப் பெண்ணாக, நவநாகரிக மங்கையாக மாறுகிறாள் சாவித்திரி. காலம் கரைகிறது. ஸ்ரீதரன் தமிழகம் வருகிறான். உமாராணியை அடையாளம் காண்கிறான். தன்னுடன் மறுபடி சாவித்திரி சேர்ந்து வாழ வேண்டும் என கோர்ட்டுக்குப் போகிறான். 

கோர்ட் சொன்ன தீர்ப்பு என்ன? இறுதியில் சாவித்திரி என்ன முடிவு எடுக்கிறாள்; ஸ்ரீதரனுடன் சேர்ந்தாளா? சம்பு சாஸ்திரி தன் மகளை மறுபடி சந்தித்தாரா? இவற்றை வெள்ளித்திரையில்.... இல்லையில்லை கடைசி அத்தியாயத்தில் வாசிப்பீர்.

கதையின் மிகக் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம் “நல்லான்”. சம்பு சாஸ்திரியின் அந்தரங்க உதவியாளன். சம்பு சாஸ்திரியின் சுக துக்கங்கள் அனைத்திலும் கடைசிவரைக் கூட இருக்கும் ’பெயருக்கு ஏற்றதொரு” நல்ல கதாபாத்திரம்.

சரி சரி, இத்தனை சொன்னபின் முடிவையும் சொல்லிவிடுவோம். மகாத்மாவின் அறப்போரில் நாயகனும் நாயகியும் இணைவதாக நிறைகிறது கதை.

கதை நமக்குப் பழகிய கதை என்றாலும் அமரர் கல்கியின் சொக்க வைக்கும் நடை நம்மைப் புத்தகத்துடன் அப்படியே கட்டிப்போடவல்ல ஒன்று என இந்தப் புத்தகமும் நிரூபிக்கிறது. புத்தகத்தைக் கையில் எடுப்பவர்கள் கடைசி அத்தியாயம் முடிக்கும் வரை புத்தகத்தைக் கீழே வைக்க மாட்டார்கள் என்பது நிச்சயம் (மேஜை மேல் வைப்பார்களா என்றெல்லாம் கேட்கக்கூடாது, ஆமாம்).

நல்ல எண்டர்டெயினிங் கதை வாசிக்க விரும்புபவர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் வாசிக்கலாம். புனைவுகள் படைப்பதில் ஆர்வம் மிக்கவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வித டிப்ஸ்களுக்கும் இந்தப் புத்தகத்தை அணுகலாம். கல்கி நிச்சயம் இந்த இரண்டு ரக வாசகர்களுக்கும் கேரண்டி தருகிறார்.

தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்று சம்பு சாஸ்திரி மூலமாக சொல்லும் ஆசிரியர், பெண் விடுதலை குறித்து சாவித்திரி வழியே சொல்கிறார். தேச விடுதலை பற்றின எண்ணங்களும் கதை நெடூகிலும் உண்டு. இந்தக் கதைக்கும் கதை திரைக்காவியமாகப் படைக்கப்பட்ட போது அதற்கும் அந்த காலத்துப் பொதுஜனங்கள் எப்படி வரவேற்பு தந்தார்கள் என்று தெரியவில்லை. 

தன் கணவனுடன் சேர்ந்து வாழ்வதுதான் சரி என்று, “நம் தேசத்திலேயே ஆதிகாலத்திலிருந்து எத்தனையோ பேர் தியாகம் செய்யவில்லையா? நம் தேசத்தை அதனால்தானே தியாகபூமி என்று சொல்கிறார்கள்”, என்று சம்பு சாஸ்திரி இறுதியில் சாவித்திரியிடம் கேட்கிறார்.

“சுதந்திரத்திற்காகத்தான் தியாகம் செய்வே; அடிமைத்தனத்திற்காக ஒரு போதும் தியாகம் செய்யேன்”, என்னும் சாவித்திரியின் ஆணித்தரமான பதில்கள் மிக வீரியம் மிக்கவை. படிக்கையில் நம்மைப் புல்லரிக்கச் செய்பவை என்றால் அது மிகையில்லை.

__________________

தியாகபூமி
சமூக நாவல்
அமரர் கல்கி
அனைத்து புத்தகக் கண்காட்சிகளிலும் கிடைக்கும்
அனைத்துப் பதிப்பகங்களிலும் நிச்சயம் கிடைக்கும்
விலை ரூபாய். பதிப்பாளரையும் அச்சுத் தரத்தையும் பொருத்தது :)

17 Jun 2013

வெண்ணிற இரவுகள் – ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி


ரஷ்ய இலக்கியங்களைப் படிக்கவேண்டுமென்று ஒரு ஆசை சில நாட்களாகவே இருந்து கொண்டேதான் இருக்கிறது. பொதுவாகவே எல்லோரும் சொல்லிச் சிலாகிக்கும் ஒரு பெயர் தஸ்தயேவ்ஸ்கி. அதில் அப்படி என்னதான் இருக்குமென அறியும் ஆர்வம் எந்தக்கணம் உட்புகுந்ததெனத் தெரியவில்லை. முழுக்க முழுக்க லேபிளை மட்டுமே வைத்து வாங்கிய சரக்கு இது. ஒரு குறு நாவல்தான் எனினும் இப்புத்தகம் தந்த தாக்கம், ஒரு உணர்வு சமீபத்தில் நான் வாசித்திருந்தவற்றில் எதிலும் கிடைத்திருக்கவில்லை.

நிறைய நண்பர்கள் வேண்டும், பெண்கள் நம்மிடம் சரி சமமாக, தோழமையுடன் பேச வேண்டும். இதெல்லாம் பொதுவாகவே இளைஞர்களுக்கு இருக்கும் ஆசைகள், விருப்பங்கள். ஆனால் நாம் காணும் அனைவருமே ஒருபோல இருப்பதில்லை. நாமும் எல்லோரிடமும் ஒரேபோல் நடிப்பதுமில்லை. எல்லோரிடமும் இருக்கும் அவரவர் சுயம் வெளிப்படும் தருணங்களில் உடனிருப்பவர் எவ்வாறு பதில்வினையாற்றுகிறார் என்பதில்தான் நட்பு காதல் போன்ற மற்று உறவுகளும். மனம் முழுக்க அன்பும், தம்மை வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியாத ஒரு சுபாவமும் கொண்டவருக்கு இப்படியாக உறவுகள் அமைவது மிகச் சிரமமே.

இந்தக் கதையில் தஸ்தாயேவ்ஸ்க்கியின் நாயகன் இதுபோலொருவன் தான். பீட்டர்ஸ்பர்க் நகரில் எட்டு ஆண்டுகளாக வசித்தும் ஒருவரைக் கூட நண்பராக பெற்றிடாத ஒருவன். தன்னைத்தான் சோகத்திலோ அன்று கண்ட எதோ ஒரு காட்சியின் மகிழ்ச்சியிலோ ஆழ்த்திக்கொண்டு தனக்கு யாரும் நண்பர்களாய் இல்லததினால் அங்கிருக்கும் தெருக்களில் நடமாடும் ஒவ்வொருவரையும் கவனித்தவாறே, அந்த இயற்கையில் தன்னை கரைத்துக் கொண்டு நடமாடுகிறான். எல்லோரும் அவரவர் கிராமத்துக் குடிலுக்குச் செல்வது இவனுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. எல்லோரும் தன்னைப் பிரிவதாக எண்ணிக் கொள்கிறான். “என்னுடன் வா” என்றழைக்க யாருமில்லாத தனிமை இவனை மேலும் நோகடிக்கிறது.

இது போலான ஒரு இரவு நேர நடை பயணத்தில் இளம் பெண்ணொருத்தியைக் காண்கிறான். அவள் அழுதவாறு இருக்கிறான். ஆறுதல் சொல்லலாமா என்றெண்ணியவன் குறைந்தபட்சம் அவள் ஏன் அழுகிறாள் என்றாவது கேட்கலாமென நெருங்கிச்சென்று தயக்கத்தினால் தன் முடிவைக் கை விடுகிறான். அவள் அழுதவாறே நடந்து செல்கிறாள். ஒரு முரடனொருவன் அவளைத்தொடர்ந்து செல்ல இவன் அவளை காப்பாற்றுகிறான். முதல்முறையாக ஒரு பெண்ணிடம் பேசும் வாய்ப்பையும் பெறுகிறான். அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அவள் அழுத காரணத்தைக் கேட்கிறான். ஆறுதல் கூறுகிறான். தான் அவளுடன் பேசியதில் மகிழ்ச்சி என்றும், இதுவரையிலும் பெண்களிடம் பேசிப் பழகியதில்லை என்றும் கூறுகிறான். அவளுக்குப் பிடித்தமானவனாக இருக்க விரும்புவதாகவும் கூறுகிறான். நாளையும் அதே இடத்தில் அவளுக்காக காத்திருப்பதாக சொல்கிறான். தன்னைக் காதலிக்ககூடாது என்னும் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் அவளும் அடுத்தநாள் அங்கு வருவதாக் உறுதியளிக்கிறாள். இப்படியாக முதல் நாள் இரவு முடிகிறது.

அடுத்த நாள் அவள் வருகிறாள். அவள் வருகையில் மகிழ்வுற்றவன் தன்னைப்பற்றி அவளிடம் கூறுகிறான். ஒரு நல்ல நண்பர்களைக்கூட பெற்றிடாதவன் என்றும் தன் வாழ்க்கை நிலையைப்பற்றியும் தனிமையின் கொடுமையில் வாழ்வதாகவும் கூறுகிறான். அவள் தன்னை நாஸ்தென்கா என அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். தனக்கு ஆதரவென்று ஒரு பாட்டி மட்டும்தான் என்றும், கண் தெரியாத பாட்டி, நாஸ்தென்கா பெரியவளானதும் தன் ஆடையை அவள் ஆடையோடு ஊக்கு குத்திக்கொண்டு எங்கும் போக விடமாட்டாள் என்றும் புத்தகங்கள் படிக்க கூட அனுமதிப்பதில்லை என்றும் கூறுகிறாள். அந்த சமயத்தில் தங்கள் வீட்டு மாடியில் குடியிருந்த ஒருவரைத் தான் நேசித்ததாகவும், ஒரு வருடத்திற்குப்பின் வந்து தன்னை அழைத்துப் போவதாய் சொல்லியிருக்கிறார் என்றும் அவருக்காக காத்திருப்பதாகவும் சொல்கிறாள். அவர் இன்னும் வராததை எண்ணி வருந்துகிறாள். அவருக்கு ஒரு கடிதம் எழுதித்தந்தால் அவரிடம் கொண்டு சேர்ப்பதாகச் சொல்கிறான் இவன். அவளுக்குப் பிடித்தமானவனாக, ஒரு நண்பனாக இரண்டாம் இரவும் முடிகிறது. பகலிலும் கூட அடர்ந்த தனிமை இருளில் வசித்திருப்பவனுக்கு தன் வாழ்வில் ஒரு பெண்ணின் வருகை, இரவில் அவளின் சந்திப்பு அவனது இரவுகளை உறக்கமற்றதாக்குகிறது. வெறும் இரவுகள் அவனுக்கான வெண்ணிற இரவுகளாகிறது.

மூன்றாம் இரவும் இருவரும் சந்திக்கின்றனர். அவருக்காக காத்திருக்கின்றனர் இருவரும். அவர் அன்றும் வரவில்லை. இருவருக்குமிடையேயான புரிதல் இன்னும் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அவள் கூறுகிறாள் “என்மீது நீங்கள் காதல் கொண்டுவிடாமல் இருப்பதால்தான் நான் உங்களை மிக நேசிக்கிறேன்”. அவளறியாமலே அவளுக்கு அவன் மீது ஒரு பற்றுதல் வந்து விடுகிறது. தானும் அவ்வாறு உணர்வதாய்க்கூறி இருவரும் நாளை சந்திப்பதாய்க் கூறி பிரிகின்றனர்.

நான்காம் இரவும் வருகிறது. இத்தனைக்குப்பிறகு அவளின் விம்மல்கள் கண்டு அவன் நொடிந்து போகிறான். அவளைக் காதலிப்பதாக உரைக்கிறான். பல குழப்பங்கள் அவளை சூழ்கின்றன. இருந்தும் ஒரு தீர்க்கமான முடிவெடுக்கிறாள். அந்த சமயத்தில் அவளின் காதலன் வந்து நாஸ்தென்காவை அழைத்துச்செல்கிறான்.

இருவிதமான முடிவுகளே சாத்தியம் எனும்போது, அவை தெரிந்திருந்தும் அந்த நான்காம் இரவின் பக்கங்களைப்படிக்கும்போது ஏதோ ஒரு கோழிக்குஞ்சினை கையில் வைத்திருப்பதான ஒரு பரபரப்பு உணர்வு. இறுக்கிப்பிடித்தால் இறந்துவிடுமோ என்றொரு மனநிலை. அவள் காதலனோடுதான் சேர்கிறாள் என்றபோதும், இவன் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டதை எண்ணும் தருணங்களில் என்னையறியாமல் கலங்கி விட்டேன். இதை வைத்து எத்துனையோ சினிமா பார்த்திருப்போம். இருந்தும் கூட எழுத்தில் அந்த வலியை உணரச்செய்தது மிக அருமை. அதுவும் அவள் காதலன் முன்பாக இவனை வந்து இறுக்க அணைத்துக்கொள்வாள் நாஸ்தென்கா. அப்போது வந்த உணர்வை எழுத்தில் சொல்வது மிகக்கடினம். உணரப்பட வேண்டியதது.

நாஸ்தென்கா, எங்கோ பீட்டர்ஸ்பெர்க் நகரில் உன்னையே எண்ணி வாழ்ந்த ஒருவனின் ஆன்மாவாக என்னை இப்போது கருதுகிறேன். உன்னை நான் ஒருபோதும் காதலித்து விடக்கூடாது என்று சொல்லி எந்தன் ஏமாற்றத்தை தடுத்ததிலாகட்டும், பெண்கள் குறித்த எனது தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறிந்து என்னை ஓர் ஆணாக உணரச்செய்ததிலாகட்டும், எந்தன் தனிமைப் பிணியைப் போக்கி என்றும் மறவா இனிய நினைவுகளைக் கொடுத்ததிலாகட்டும், எந்தன் காதலை உணர்ந்து இறுக அணைத்த அணைப்பிலாகட்டும், எனது அருமை நாஸ்தென்கா இன்றும் இப்போதும் ஒவ்வொரு கணமும் என் நினைவுகளில் நீ நிழலாடுகிறாய், உன்னை அதிகமதிகம் நேசித்துக்கொண்டேதான் இருக்கிறேன்.

குறுநாவல் | ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி | மொழிபெயர்ப்பு | ரா. கிருஷ்ணையா | நியூ செஞ்சுரி வெளியீடு | பக்கங்கள் 94 | விலை ரூ. 70

இணையத்தில் வாங்க: டிஸ்கவரி

16 Jun 2013

ரஸவாதி - பௌலோ கொய்லோ

சிறப்பு  பதிவர் - கிருஷ்ணகுமார் ஆதவன்

ஆடு மேய்க்கும் இடையனான சிறுவன் சந்தியாகு, புதையலிருக்கும் பிரமிடுகளை நோக்கி மேற்கொள்ளும் பயணம் நாவலின் கதைக் கரு. இடையிடையில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிலப்பரப்புகள், சம்பவங்கள் ஒவ்வொன்றும் அவனது பார்வையை விரிவுபடுத்துவதாக இருக்கின்றன. பயண முடிவில் சடுதியில் நேர்ந்துவிடும் ஒரு சிறிய திருப்பத்தின் மூலம் நாவல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

பௌலோ கொய்லோவின் சிறந்த நாவல்களில் ஒன்று இது. உலக  அளவில் அதிகம் விற்பனையான நாவல்களில் ஒன்றும்கூட. பொன்.சின்னத்தம்பி முருகேசன் அவர்களின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகத்தார் இதை தமிழில் வெளியிட்டுள்ளனர். ரஸவாதி - அடிப்படையில் ஒரு தத்துவார்த்தமான நாவலாக இருந்தாலும் மீயதார்த்த பாணியில் எழுதப்பட்டிருக்கும் கதையைக் கொண்டுள்ளது. கதையின் மையத்தில் உள்ள தத்துவம் படிம அமைவிலான சுட்டலாய் ஆங்காங்கே பேசப்படுகிறது.

தேக்கடி ராஜா — எம்.பி. சுப்பிரமணியன்

சிறப்பு பதிவர் : சரவணன்
    
    

    முதலில் இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்— நள்ளிரவு; தலைக்கு மேலே பௌர்ணமி நிலவு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது; அப்பொழுது—
    ...அந்தக் குன்றில் இருந்த சிறிய வீட்டுக்குள் போய்ச் சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு விளக்குடன், பாழடைந்த வீட்டின் பக்கமுள்ள மேட்டினருகில் சென்றது அவ்வுருவம்.

      இதற்குள் பெரிய கறுத்த உருவங்கள் அந்த மனிதனைச் சுற்றிவர ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் அந்தக் குன்றின் உச்சியிலும், சுற்றிலும் சிறியதும் பெரியதுமான கணக்கற்ற யானைகள் தோன்றின. ஆமாம் யானைகள்தான்! நான் எண்ணியதுபோல பேயோ பிசாசோ அல்ல. மனித உருவத்தை நாங்கள் இப்பொழுது பார்க்க முடியவில்லை. சுற்றியிருந்த யானைகள் அவனை மறைத்துவிட்டன. அந்தக்கூட்டத்திலிருந்த ஆண் யானைகளின் தந்தங்கள் சந்திர ஒளியில் மூன்றாம் பிறை மதியைப் போல பிரகாசித்தன. கூட்டத்தின் நடுவே ஒரு புதிய ஒளி தோன்றியது. அந்த ஒளி வருவதைக் கண்டதும் அந்த அதிசய மனிதன் எதற்கோ தீபாராதனை காட்டுகிறான் என்று ஊகித்தேன்.
     அதே சமயம் சுற்றியுள்ள யானைகள் தங்கள் துதிக்கைகளைத் தூக்கி வீறிட்டன. காடே அதிர்ந்தது. என் உடல் நடுங்கியது. பயத்தால் அல்ல, அந்த யானைகள் பிளிறுவதில் இருந்த வீரத்தையும் கம்பீரத்தையும் கண்டுதான். பல வீரர்கள் சேர்ந்து வீர கர்ஜனை செய்யும் காட்சிதான் என் மனத்தில் தோன்றியது. இம்மாதிரி ஓர் அபூர்வமான காட்சியை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. செயலற்று நின்றுகொண்டிருந்தேன். குன்றிலிருந்த யானைகள் எல்லாம் மறைந்துவிட்டன. அந்த மனிதனையும் காணவில்லை.
     என்ன ஒரு சிலிர்ப்பூட்டும் காட்சி! இப்போது இதைக் கேளுங்கள்; இது ஒரு உண்மைச் சம்பவம்! நடந்த இடம்: தேக்கடி; ஆண்டு: 1950-களில்; பார்த்தவர்- எம்.பி.சுப்பிரமணியன். பார்த்ததோடு நில்லாமல் இந்த அதிசய சம்பவத்தின் பின்னணியை ஆராய்ந்து ஒரு அருமையான சிறுவர் நாவலாக எழுதிவிட்டார். அதுவே ‘தேக்கடி ராஜா’. என்னிடமிருக்கும் பதிப்பு வெளியான ஆண்டு 1996. முதல் பதிப்பு வெளியான ஆண்டு தெரியவில்லை. என் அம்மா இக்கதையைத் தான் சிறுமியாக இருந்தபொழுது ’50 களின் இறுதியில் ஏதோ பத்திரிகையில் தொடராகப் படித்திருப்பதாகக் கூறுகிறார். பத்திரிகை கண்ணன் அல்லது  ஒருவேளை விகடனாக இருக்கலாம்.

15 Jun 2013

பிஞ்சுகள் - கி. ராஜநாராயணன்

சிறப்பு பதிவர் : ஸ்வப்னா அரவிந்தன்

கி.ராஜநாராயணனின் எழுத்து யாருக்குமே பிடிக்கும். எளிமையாகக் கதை சொல்பவர், நகைச்சுவை உண்டு, படித்து முடித்தபின் யோசித்துப் பார்ப்பதற்கான விஷயமும் இவரது கதைகளில் உண்டு. கி.ரா. எழுதிய  'கதவு', 'கோமதி' என்ற இரு சிறுகதைகளும் மறக்க முடியாதவை. பிஞ்சுகள் என்ற இந்தக் கதையை இப்போதுதான் படிக்கிறேன்.

'குழந்தைகள் குறுநாவல்' என்று முதல் பக்கத்தில் போட்டிருப்பதைப் பார்க்கும்போது இவர் எழுதியிருப்பது குழந்தைகளுக்கான கதை என்று தெரிகிறது. "இது கையெழுத்துப் பிரதியிலேயே 1978ஆம் ஆண்டின் சிறந்த படைப்புக்குரிய 'இலக்கியச் சிந்தனை' பரிசு பெற்றது,' என்று கதைக்கு முந்தைய பக்கத்தில் போட்டிருக்கிறது, நல்ல கதைதான் என்று நம்பிப் படிக்கலாம். அன்னம் வெளியீடு (1979).


14 Jun 2013

காட்டில் ஒரு மான்- அம்பை


காட்டில் ஒரு மான்
அம்பை
காலச்சுவடு பதிப்பகம்
Photo courtesy: Amazon

குறிப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் நான் படிக்கும் புத்தகத்தில் தெளிவைக் காணவே எழுதப்பட்டது என்பதுதான். எந்த ஒரு சர்ச்சையையும் உருவாக்கும்  நோக்கம் இல்லை. இதன் நோக்கமே அதுதான் என்று நீங்கள் வாதிட்டால் அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கு இல்லை - என் மனசாட்சி எனக்குத் தெரியும்.

எல்லாரும் கருத்து சொல்கிறார்கள். எல்லாவற்றைப் பற்றியும் கருத்து சொல்கிறார்கள். விளக்கம் கேட்டால் உண்மையை நோக்கி ஓட வேண்டும் என்று சொல்கிறார்கள். சரி, ஒருத்தர் அப்படிச் சொல்கிறாரே, அந்தக் கருத்து தப்பில்லையா என்று கேட்டால், "அது அவருடைய கருத்து," என்று பதில் வருகிறது. "அதற்காக அதை நியாயம் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?" என்று கேட்டால், "உனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அவர் அதை எழுதாமல் இருக்க முடியாது, இல்லையா?" என்று பதில் வருகிறது. 

அதுவும் சரிதான் என்று தற்போதைக்கு ஏற்றுக் கொள்வோம்.



13 Jun 2013

நாடகத்தமிழ் - பம்மல் சம்பந்த முதலியார்

அது ஒரு முடிவுறாத மதிய நேரம். முந்தைய நாள் வரை அலைந்ததில் உடல் களைப்பைத் தாண்டி எழுந்துகொள்ள முடியாத அசதியில் ஆய்ந்திருந்தேன். விழித்திருந்தேனா தூக்கத்தில் கனவு காண்கிறேனா என அறிய முடியாத நிலை. அவ்விதம் கிடப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். முழுவதும் விழிக்க முடியாமல் காலையா மாலையா எனத் தெரியாத நிலை. அரைவிழிப்பில் எதிரே ஓடிக்கொண்டிருந்த டிவியைப் பார்த்தேன். ஷேக்‌ஸ்பியரைப் பற்றி ஒரு ஆவணப்படம். ஷேக்ஸ்பியர் என உண்மையில் யாராவது இருந்தார்களா? அடிதடிக்குப் பெயர் போன மார்லோ எனும் நாடக ஆசிரியர் தான் ஷேக்ஸ்பியர் எனும் பெயரில் எழுதினாரா என மிக விரைப்பாக டை கட்டிய ஆசாமி பேசிக்கொண்டிருந்தார். நான் மீண்டும் தூக்கத்துக்குப் போனேன்.
1965இல் சினிமா மோகம்  தலைவிரித்தாடியபோது நாடகத்துக்காக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை செலவழித்த பம்மல் சம்பந்தம் முதலியார் தனது நெருக்கமான உறவினரிடம் ஒரு நாடகத்தை சொல்லிக்கொண்டிருந்தார். கண்பார்வை மங்கிய முதலியார் நாடகக் காட்சிகளையும், நடிகர்களின் முகபாவங்களையும், மேடை அமைப்பையும், வசனங்களையும் சொல்லச் சொல்ல அந்த நபர் எழுதி வந்தார். மரப்பாவை போல சொற்பாவை அமைத்தவர் நாடகத்தை நவீனமயமாக்கியது மட்டுமல்லாது, நாடகத்தமிழ் எனும் இயலை மீட்டெடுத்து பல நூல்களை வெளியிட்டவர்.