குழந்தை வளர்ப்பு
ஒரு வாழ்க்கைக்கலை. கற்றது கைம்மண்ணளவு. [“பிள்ளைவளர்ப்பு இவ்வளவு கஷ்டமாயிருக்கும்னு
ஏன் எனக்கு முன்னாலேயே சொல்லவில்லை” என்று என்னைப் பெற்றவளிடம் கேட்டு, “நான் பெற்ற
துன்பம் பெறுக இவ்வையகம்” என்று அவர் வாழ்க்கைச் சக்கரம் பற்றி எனக்கு பல்பு கொடுத்த
கதை இங்கே வேண்டாம்…!] நான் எழுதப்போவதைப் பற்றி என் இரு குழந்தைகளோடு விரிவாகக் கலந்துரையாடி,
குழந்தைகளின் அனுமதி/மறுபார்வை பெற்றே அனுப்பப் பட்டிருக்கிறது! எதற்கும் இருக்கட்டும் என்று அனுபவத்திலிருந்து முன்னெச்சரிக்கைக்
குறிப்புகள்:
1. பெற்றவரின் கல்வி எப்போதுமே முடிவதில்லை! ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை, என் மகனோ/மகளோ எனக்குச் சொல்லித் தரப்போகிறார். உண்மையான ஊக்கத்துடன், ஒரு மாணவருக்கான பயபக்தியுடன் மகன்/மகளிடமிருந்து அவர்களைப் பற்றியும் என்னைப் பற்றியுமே கற்றுக் கொள்கிறேன். அப்போது தான், என் மகன்/மகளை தனித்துவம் நிறைந்த இன்னொரு மனிதராக மதிக்கிறேன் என்று பொருள்! என் மகன்/மகள், என் நிறைவேறாத கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள, கடவுள் கொடுத்த இன்னொரு வாய்ப்பு இல்லை!
2. என் மகன்/மகள் தனித்துவமானவர் என்றால், என் மகன்/மகளுக்குத் தனித்துவம் தரும் சூழலில் எனது பங்கு என்ன என்பதை, நல்ல இரும்புக்கடையில் எடைபோட்டு உணர்வது அவசியம். நட்புவட்டத்தில் / இணையவெளியில், பலர் பல மாதிரிச் சொல்கிறார்கள்: 'ஏன் உங்கள் மகன்/மகளுக்கு ஹிந்து/தமிழ்ப் பண்பை/பழைமையைப் போதிக்கிறீர்கள்? ஆங்கிலம் மட்டுமே சொல்லிக்கொடுங்கள்! நாத்திகம் மட்டுமே சொல்லிக் கொடுங்கள்!' என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளதில் தான் குழந்தைகளோடு கலந்துரையாடுகிறேன். ஏனென்றால், குழந்தைகள் என் செயல்கள், என் உடல்மொழி என்று பலவற்றிலிருந்தும் வாழ்க்கைப் பாடம் கற்கிறார்கள்.








