தலைவியின் விரக தாபம் போல தன்னிடம் காதலைச் சொன்ன குயிலின் மனமாற்றத்தில் குழம்பி பரிதவிக்கும் நமது கவிஞர் கடுந்துகிலில் ஆழ்ந்துவிடுவதை முதல் பகுதியில் பார்த்தோம். நான்கு நாட்களுக்குப் பிறகு தன்னைச் சந்திக்க வரச்சொன்ன குயில் இடைப்பட்டவேளையில் குரங்கு, காளை எனப் புது காதல் முயற்சிகளில் ஈடுபட்டுவிட்டதைக் கண்டு கவிஞரின் மனம் பித்து பிடித்தலைந்தது. ஆனாலும் காலை புலர்ந்ததும், புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி மண்ணத் தெளிவாக்கிய ஜோதி கவிஞரையும் தெளிவடையச் செய்துவிட்டதாம். `குயிலென்னை எய்துவிட்ட தாழ்ச்சியெல்லாம்` சற்றே ஒதுக்கிவைத்தவர், தன்னருகே பறந்த கரும்பறவை ஒன்றைக் கண்டார்.
மாஞ்சோலையைத் தேடிப் போகும் வழியில் இதென்ன புது குழப்பம்? காலை வெளிச்சத்தில் சரியாகத் தெரியாத காரணத்தால் வீதிக்கு வந்து கரும்பறவையைத் தொடரத் தொடங்குகிறார். ஒருவேளை இதுதான் நமது குருவியோ? மாரீசனைப் போல் ஏதேனும் கபடநாடக வேசத்தை பூண்டு தன்னை மீண்டும் வசப்படுத்தப் பார்க்கிறதோ எனும் குழப்பத்தில் கரும்பறவையைப் பார்த்து நிற்கிறார். தேவதூதனின் பிறப்பை அறிவித்த நட்சத்திரம் போல எதை அறிவிப்பத்ற்காக கரும்பறவை அவரை வலம் வருகிறது?
யான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும்
கரும்பறவையைத் தொடர்ந்தால் தனது மாஞ்சோலைக்கு சென்றுசேர்கிறார். ஆங்கு மரக்கிளையில் வீற்றிருந்த தனது `நீசக்` குயிலை பொய்வேஷம் போட்டதற்குக் கொன்றுவிடலாமோ எனும் எண்ணம் கவிஞருக்கு உதிக்கிறது. உடனடியாக அழத்தொடங்கும் குயில், தன் கதையைக் கேட்டபின்னும் நம்பிக்கை வராவிட்டால் நீயிற் தன்னை அழித்துவிடவேண்டுமெனக் கெஞ்சுகிறது.

