இன்று (10-10-2012) எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் (ராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் நாராயணசுவாமி) பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட விமர்சனம் என்றாலும் அவரது படைப்புகளைப் பற்றி விரிவாகப் பேசவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதும் இதை எழுதக் காரணம்.
*
சிறுவயதில் தூர்தர்ஷனில் பார்த்த ’சுவாமியும் நண்பர்களும்’ நாடகத்தை ரெண்டு வருடங்களுக்கு முன் எனது பத்து வயது அக்கா மகனுடன் பார்க்கும்போதும் சுவாரஸ்யமாக இருந்தது பெரிய விஷயமல்ல. இன்றைய கால முப்பரிமாணத் திரைப்படங்கள், வீடியோ கேம்களுக்கு மத்தியில் மால்குடி கிராமத்து சுவாமிநாதன், ராஜம் நண்பர்கள், அவர்கள் படித்த ஆல்பர்ட் மிஷன் பள்ளிக்கூடம் என சிறு வட்டத்துள் பெரிய உலகத்தை இக்காலச் சிறுவர்களும் ரசிக்கும்படி படைத்ததுதான் முக்கியமான விஷயமாகத் தோன்றியது.
ஆர்.கே.நாராயணுக்குத் தமிழ் சூழலில் இயங்கிய ஆங்கில எழுத்தாளர் என்றளவில் கூடப் பெரிய வரவேற்பு இருந்ததாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் நவீனத் தமிழ் எழுத்தாளர்கள் உருவான 1940களின் காலத்தில் தென்னிந்தியாவில் வாழ்ந்தபடி பல புனைவு நூல்களை எழுதிக்கொண்டிருந்தார்.தொன்னூறுகளின் இறுதிவரைத் தொடர்ந்து அரைநூற்றாண்டுக்கு மேலாக இயங்கி வந்துள்ளார். புனைவு மட்டுமல்லாது, அபுனைவு நூல்கள், சுயசரிதம், மகாபாரதம், ராமாயணக் கதைகள் எனப் பலவகைகளை எழுதியுள்ளார். தமிழ் எழுத்தாளர்கள் இவரைப் பற்றி அவ்வளவாகக் குறிப்பிட்டதில்லை. யாரேனும் எழுதியிருந்தால் ஆம்னிபஸ் வாசகர்கள் பின்னூட்டப் பெட்டியில் தெரிவிக்க வேண்டுகிறேன். குடியரசு இந்தியாவின் சிக்கல்களை தனது புனைவு நூலில் முன்வைக்கவில்லை எனப்பரவலாக இருந்த கருத்து ஒரு காரணமென்றால் படைப்புகளின் எளிமையான மொழி உண்டாக்கிய தோற்றப்பிழை அவரது புறக்கணிப்புக்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். பஷீர் படைப்புகளும் சிக்கலில்லாத மொழியில் உலகைக் காட்டுகிறது என்றாலும் ஆர்.கே நாராயணனின் புனைவில் வெளிப்படும் வாழ்க்கைப் பார்வை மற்றும் எளிமையானச் சூத்திரங்களை பாத்திரங்கள் மேல் போட்டுப் பார்த்த புனைவுலகம் மத்தியவர்க்க சிறுநகர் வாழ்க்கைக்குள் அடங்கிவிடுகிறது.
