பதிவர் : ச. அனுக்ரஹா
242 நாவல்கள், 37 சிறுகதைத் தொகுப்புகள் 59 குழந்தைக் கதைகள் மற்றும் இன்னும் பல ஆக்கங்களைப் படைத்த பெரும் வங்க எழுத்தாளர் ஆஷாபூர்ண தேவி. சாஹித்திய அகாதமியின் 'ஃபெல்லோஷிப்' மற்றும் ஞானபீட விருதினைப் பெற்ற இவர் முறையாக பள்ளி, கல்லூரி சென்றவர் அல்ல. 1909-இல் பிறந்து கல்கத்தாவில் ஒரு விரிந்த குடும்பச் சூழலில் வளர்ந்தவர். பழமைவாதியான அவரது பாட்டி, வீட்டுப் பெண்கள் கல்வி கற்பதை அனுமதிக்கவில்லை. வீட்டில் தனது சகோதரர்கள் பாடம் சொல்லிக் கொள்ளும்போது உடனிருந்து தானாகவே எழுத படிக்க கற்றுக்கொண்டார். அவரது தாயின் புத்தக விருப்பம், அவருக்கு மிக இளமையிலேயே புத்தகங்களையும் வாசிப்பையும் அறிமுகப்படுத்தியது. சிறுவயதிலேயே கவிதைகளும் குழந்தைகளுக்கானக் கதைகளும் எழுத தொடங்கியவர், தன் திருமணத்திற்குப் பின் வளர்ந்தவர்களுக்கான கதைகளும் நாவல்களும் எழுதினார். தன் எழுத்துலகைப் பற்றி கூறுகையில், "நான் எப்பொழுதும் சாமானியர்களைப் பற்றிதான் எழுதுகிறேன். ஒரு சீரழிந்த சமூகத்தில், பெண்களே முதலில் சுரண்டப்படுகிறார்கள். அவர்களின் நிலை என்னை உலுக்குகிறது, அதை நான் சித்தரிக்க முயற்சித்திருக்கிறேன்" என்று கூறுகிறார்.