சிறப்புப் பதிவர்: ரவி நடராஜன்
அலுவலக வேலை காரணமாக பயணம் மேற்கொள்ளும்பொழுது, புதிய ஊரில், புதிய இடத்தில் தூக்கம் வராமல் புரளுவது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனால் அவ்வாறு புரண்டபோது, விடுதி அறையில் இருந்த தொலைகாட்சி ரிமோட்டில் சானல்களை மாற்றுகையில் புத்தக விமர்சனம் ஒன்று காலை 3 மணி என்றபோதும் என் ஆவலைத் தூண்டி, புத்தகத்தின் பெயரை பத்திரமாக எழுத வைத்தது. இது புதிது. பிறகு அந்தப் புத்தகத்தைத் தேடிப் படித்ததுடன், அந்த எழுத்தாளரின் இன்னும் மூன்று புத்தகங்களை வாசித்ததும் வேறொரு கதை.
அப்படி என்ன விஷயம் இந்தப் புத்தகத்தில்?
ஒரு மேற்கத்திய எழுத்தாளர், “மேற்குலகின் ஆதிக்கம் முடியும் நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!” என்கிறார்.
1970
–களில் ஒரு சராசரி அமெரிக்கர், ஒரு சராசரி சீனரை விட 70 மடங்கு பணக்காரராக
இருந்தார். 2000-களில், அதே சராசரி அமெரிக்கர், அதே சீனரைவிட 5 மடங்குதான்
பணக்காரர் என்ற நிலைக்கு வந்து விட்டார். சீனாவின் ராட்சச முன்னேற்றம் ஒரு
காரணம் என்றாலும், அமெரிக்கரின் முன்னேற்றத் தொய்வும் இன்னொரு காரணம்.
1970க்கு முந்தைய 30 ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட 14 மடங்கு
முன்னேற்றம் என்பது, மனித சரித்திரத்தில் எங்கும் எப்போதும் நிகழ்ந்ததே
இல்லை.
இதையெல்லாம்
கேட்கக் கேட்க என் முழு தூக்கமும் கலைந்து இந்தப் புத்தகம் பற்றிய
தொலைகாட்சி விமரிசனத்தை உன்னிப்பாக கவனிக்கத் துவங்கினேன். ஆங்கிலேய
வரலாற்று ஆய்வாளரும், ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியருமான, Niall
Ferguson என்பவரின், “Civilization – the West and the Rest”, என்ற
புத்தகம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த உரையாடல் அன்றிரவு புதிய பல
சுவாரசியமான வாதங்களை கவனத்துக்குக் கொண்டு வந்தது. புத்தகத்தையும்
வாங்கிப் படிக்க வைத்தது.
ஒரு 500 ஆண்டுகளுக்கு முன் மேற்குலகு மற்றும் அதன் ஆதிக்கம் என்று எதுவும் இல்லை. சீனாவும் இந்தியாவும் உலக வல்லரசுகளாய் திகழ்ந்து வந்தன. மேற்குலகம் எப்படி இந்தக் குறுகிய காலத்தில், உலகை ஆட்டிப் படைக்கும் அளவுக்கு வளர்ந்தது? ஏன் எங்கோ இருக்கும் சிரியாவில் அமைதி நிலவ, எல்லோரும் அமெரிக்கா ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்? ஏன் பாகிஸ்தானின் பல தீவிரவாத உதவி அமைப்புகளை ஒடுக்க அமெரிக்காவை எதிர்பார்க்கிறோம்? ஏன் யாருமே ஒரு சிறிய லத்தீன் அமெரிக்க நாட்டின் பிரச்சனையை தீர்த்து வைக்கக்கூட, இந்தியாவை நினைத்துப் பார்ப்பதில்லை?





