நண்பர் எஸ். சுரேஷ் முன்னொரு மதிப்பீட்டில் இப்படி எழுதினார் : "ஒரு கொலை வழக்கின் விடையைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, ஸ்காட்லாந்தின் அழகைக் கண்டுபிடிப்பதும்தான் நாவலின் கருப்பொருள். பார்த்துப் பார்த்து எழுதப்பட்ட விவரணைகளால் தான் அறியாத இடங்களுக்கும் வாசகர் கொண்டு செல்லப்படுகிறார் - நாவலின் முடிவில், ஸ்காட்லாந்துடன் தனக்கு நெருங்கிய ஒரு பந்தம் இருப்பதான உணர்வு வாசகரின் மனதில் ஏற்பட்டுவிடுகிறது. சிறந்த எழுத்தாளர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும். தே அவர்களில் ஒருவர்."
இதைப் படித்ததிலிருந்தே தே (Josephine Tey) எப்படி எழுதுவார் என்ன என்று அறிந்து கொள்ள ஒரு ஆர்வம் வந்து விட்டது - எனவே அவரது The Daughter of Time கிடைத்தபோது மறுயோசனையின்றி படிக்க எடுத்துக் கொண்டுவிட்டேன். தே ஏமாற்றவில்லை என்பது மட்டுமல்ல, இந்த ஆண்டு நான் படித்த நாவல்களில் மிகச் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று என்று கொஞ்சம்கூட யோசிக்காமல் சொல்லுவேன். பக்கத்துக்கு பக்கம் பரபரப்பு, விறுவிறுப்பு, எதிர்பாராத திருப்பங்கள். இத்தனைக்கும் இது நமக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பிரிட்டிஷ் அரசர்களைப் பற்றிய கதை. அதுவும் ஐநூறு ஆண்டுகளுக்கும் முந்தைய அரதப்பழசான ராஜா ஒருவன் மீது பிரிட்டிஷ் வரலாற்றில் பதியப்பட்ட அவதூறுகளை மறுத்து, அவன் நல்லவன் என்று நிறுவும் கதை. அதிலும் இது சீரியஸ் கதைகூட இல்லை - ஒரு திருடனைத் துரத்திக் கொண்டு ஓடும் இன்ஸ்பெக்டர் ஆலன் கிராண்ட் ஒரு பாதாள அறைக்குள் தடுக்கி விழுந்து காலை உடைத்துக் கொள்கிறான்; அதன்பின் மருத்துவமனையில் படுத்தபடியே தன் புலன் விசாரணையை நடத்தி நடந்தது என்ன என்ற உண்மையை அவன் கண்டுபிடிப்பதாகச் செல்கிறது கதை.
இருந்தாலும், இது இந்த ஆண்டு நான் படித்த நாவல்களில் மிகச் சிறந்தவற்றுள் ஒன்று.