கே. சண்முகதாஸ்
சென்ற தலைமுறையினருக்கு, ‘வாசகர் வட்டம்’ என்ற பெயர் மிக அறிமுகமானது. அதன் நிறுவனர்களான திருமதி லக்ஷ்மியும், கணவர் கிருஷ்ணமூர்த்தியும் 1971-ல் வெளியிட்ட ‘நடந்தாய் வாழி காவேரி’ மீண்டும் காலச்சுவடு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. திரு தி. ஜானகிராமன், திரு . சிட்டி ( பெ. கோ. சுந்தரராஜன்) கைவண்ணத்தில் வந்த எழுத்தோவியம், ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு. இளமையில் என்னை மிகவும் ஈர்த்த, எனக்குள் பாதிப்பு உண்டாக்கிய நூல்களை வாழ்க்கைப் பயணத்தில் இழந்த எனக்கு இது போன்ற மறுபதிப்புக்கள் அளப்பரிய இன்பத்தை தருகின்றன. இன்றைய அரசியல், கலாசார சூழ்நிலைகளின் பின்னணியில் மீண்டும் மீண்டும் இந்நூலை படிக்கும்போது, மாறுபட்ட உணர்ச்சிகள் மனதில் அலையடிக்கின்றன.
“கன்னட நாடு மட்டுமல்ல; மகாராஷ்டிரம், குஜராத், வங்காளம், உத்திரப்ரதேசம், என்று எங்கு போனாலும் புற வேறுபாடுகளையெல்லாம் கடந்து நம் நாட்டு மணம் வீசிக்கொண்டுதானிருக்கும். மொழி, பிராந்தியம் என்ற பெயர்களில் நம் நாட்டை இன்னும் சின்னபின்னபடுத்திக் கொண்டிருக்கும் அறிவிலிகளைக் கண்டு, இந்த இந்திய உணர்வு ஊமை அழுகை போல் எங்களுக்கு ஒலித்தது. ஆற்று நீரும், மண்ணும், கன்னடம், மராட்டி, தெலுங்கு, என்று ஏதோதோ மொழி பேசுவது போலவும், அது அந்தந்த மொழிக்காரர்களின் வயிற்றுக்குள்ளேயே புகுந்து கிடக்க வேண்டும் என்பது போலவும், மனதில் குட்டிச்சுவர்களை எழுப்பி வேரறுக்கும் அறிவிலிகளைக் கண்டு இந்த கிராம எழில் அழுகிறது.”
