ஆசிரியர் : ஜனனி ரமேஷ்
முன்பு படித்த புத்தகத்தில் (சீனா - விலகும் திரை) பல்லவி தன் சீன மாணவர்களிடம் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசும்போது, தலாய் லாமா பற்றியும் கேட்பார். அப்போது அந்த மாணவர்கள் அவரைப் பற்றி பேசவே பயந்தார்கள் / மறுத்தார்கள் என்று படித்தேன். அதே போல் என் சீன நண்பரும், தலாய் லாமா பற்றி ஏதேனும் கேட்டால், உடனடியாக பேச்சை மாற்றி விடுவார். அப்போதிலிருந்தே தலாய் லாமா பற்றி மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அவா எழுந்தது. அதே போல், அவர் ஏன் இந்தியாவில் ‘அடைக்கலம்’ புகுந்திருக்கிறார்? சீனா - திபெத், திபெத் - இந்தியா ஆகிய உறவுகளைப் பற்றியும் படிக்க வேண்டும் என்றபோது, கிடைத்ததே இந்த புத்தகம். தலாய் லாமாவின் பிறப்பிலிருந்து இன்று வரை அவரது வரலாறு, இந்திய-திபெத்-சீனத்திற்கு இடையேயான உறவுகள் / பிரச்னைகள் ஆகிய அனைத்து கேள்விகளுக்கும் இந்த புத்தகத்தில் பதில் உண்டு.
