2008 முதல் 2013 வரை கவிஞர் இசை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு (பெரும்பாலும் கவிதை நூல்கள் குறித்து). நிறைய இருக்கும் என்று பார்த்தால் இந்த ஆறு ஆண்டுகளில் எண்ணி பதினைந்து கட்டுரைகள்தான் எழுதியிருக்கிறார். அவையும் நெடுங்கட்டுரைகள் அல்ல, எல்லாம் சேர்ந்து நூறு பக்கங்கள்கூட வரவில்லை.
‘மதுரையிலிருந்து கோவைக்கு... வழி: கரூர், சேலம்,’ என்ற தலைப்பிட்ட முன்னுரையில், கோணங்கி துவங்கி சுகுமாரன் வரை, முப்பத்து ஏழு பேரை தன் படைப்பூக்கத்துக்கு உடன் அழைத்துக் கொள்கிறார். துவக்கத்திலும் முடிவிலும் வரும் இளங்கோவையும் இசையின் தொழுகைக்குரிய அவ்வையையும் சேர்த்தால் முப்பத்து ஒன்பது. 39+1, வோல்வோ பஸ் போலிருக்கிறது!