A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

28 Feb 2013

நினைவு அலைகள் - டாக்டர் தி.சே.செள.ராஜன்

'பிரபல வைத்தியனாக இருந்து, காங்கிரஸில் ஈடுபட்டு, சத்தியாகிரகம் செய்து, தீண்டாமையை ஒழிக்க பன்முறை சிறை சென்ற, அரசாங்க மந்திரியாகச் சிலகாலம் உத்தியோகம் வகித்த நான் முதுமை பருவத்தில் என்னை விவசாயியாக எண்ணி இந்த கிராமத்தில் வாழ்வதற்குப் போய் சேர்ந்தது ஒரு பெரிய விந்தை. எனது வரவை உற்ஸாகத்தோடு கிராமவாசிகள் வரவேற்கவில்லை...அந்த ஊர் வேசிகளுக்குக் கூட என்னிடம் நன்மதிப்பு இல்லை..'
 
 
- டாக்டர் தி.சே.செள.ராஜன்.
 
 
பின்னட்டை வாசகத்தைப் படித்துவிட்டு நினைவு அலைகள் புத்தகத்தை வாங்கினேன். நான் ஒரு நாஸ்டால்ஜியா பைத்தியம். பழங்கால வாழ்வு பற்றிய யாராவது ஏதாவது எழுதியிருந்தாலும் உடனடியாக படித்துவிட வேண்டும் என ஆசைப்படுவேன். அதுவும் குறிப்பாக, தமிழ்நாட்டின் பழங்கால கதைகள், சமூக பழக்கங்கள், அக்காலகட்டத்து மனிதர்கள் பற்றி எழுதப்பட்டிருந்தால் அனுபவித்துப் படிப்பேன். நம் முன்னோர்கள்  மிக எளிமையாக வாழ்ந்தவர்கள் எனும் சித்திரம் பரபரவென ஓடிக்கொண்டிருக்கும் நம் வாழ்வின் அர்த்தத்தை சீண்டிப் பார்க்கிறது. விஞ்ஞான காலகட்டம், தொழில்நுட்பங்கள் நம் விரல் நுனியில் எனப் பெருமைப்பட்டுக்கொண்டாலும், ஒரு சமுதாய மனிதனாக நாம் எந்தளவு முன்னேறிவிட்டோம் எனும் கேள்வியைக் கேட்க வைக்கும் புத்தகம். எண்பது வருடங்களுக்கு முன்னர் எழுதிய நினைவு அலைகள் ஆகட்டும், ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட பக்தி இலக்கியங்களாகட்டும், எல்லாமே இப்போது எழுதப்பட்டவை போல நம் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன.
 
 
 
புத்தகத்தின் முன்னுரையை கல்கி எழுதியுள்ளார். இரவு ஒன்றரை மணிக்குப் படிக்கத் தொடங்கி கீழே வைக்க மனமில்லாமல் காலை ஐந்து மணிவரை படித்து முடித்திருக்கிறார். புத்தகமென்றால் இதுவல்லவா புத்தகம் என மிகவும் சிலாகித்து எழுதியுள்ளார். கல்கி சொல்வது போல ஒரு தன்வரலாறு இத்தனை சுவாரஸ்யமாக எழுத முடியுமா எனும் எண்ணம் எனக்கும் உண்டானது. நூறு வருடங்களுக்கு முன்னான இந்தியாவையும், நமது கிராமங்களின் வாழ்வையும், இந்திய சுதந்திர போராட்ட நிகழ்வுகளையும் அழகாக எழுதியுள்ளார்.
 
 
 

27 Feb 2013

எம்.ஆர்.ராதா. காலத்தின் கலைஞன்


எம்.ஆர்.ராதா. காலத்தின் கலைஞன்
ஆசிரியர்: மணா
பக்கங்கள்: 216
விலை: ரூ.130
உயிர்மை பதிப்பகம்.

* நான் டெக்னிக்கல் பின்னணி உடையவன் அல்ல.
* நான் இசையை ரசிப்பவன் மட்டுமே.
* நான் ஒரு சாதாரண மசாலா ரசிகன் மட்டுமே.

சிக்கலான அல்லது பிரச்னைக்குரிய திரைப்பட விமர்சனம்னா மேற்சொன்ன Disclaimer உடன்தான் அந்தப் பதிவையே துவக்குவார்கள். இதுக்கு நிறைய உதாரணங்களை பார்த்திருக்கலாம். அதே போல் இந்தப் புத்தகத்திலும் ஒரு பலமான ‘டிஸ்கி’ உள்ளது. அதாவது:

26 Feb 2013

மயங்குகிறாள் ஒரு மாது - ரமணி சந்திரன்

ரமணி சந்திரனை தொடர்ந்து புறக்கணிக்கும் ஆம்னிபஸ் தளத்தை நாங்களும் புறக்கணிப்போம் என்று மிரட்டல் விடுத்த ரமணி சந்திரன் கொலைப்படை மாதருக்காய் இந்தமுறை ரமணி சந்திரன் நாவலுக்கு விமர்சனம்.

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் மயிலை சாய்பாபா கோயிலுக்குக் குடும்பத்துடன் போயிருந்தேன். கோயிலின் தியான மண்டபத்தில் நன்கு பரிச்சயமான முகமாக ஒரு அம்மணி அமர்ந்திருந்தார்.

அம்மாவிடம் கேட்டேன், “அவங்களை எங்கயோ பார்த்தாப்போல இருக்குல்ல?”

“டேய், ரமணி சந்திரன்’டா அவங்க. பிரபல நாவலாசிரியர்”




25 Feb 2013

நிலா நிழல் – சுஜாதா


ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் லட்சியம் பல தடைகளைத் தாண்டி வெற்றிபெறும்போது அது சாதனையாகிறது. தடைகள் என்பது பெரும்பாலும் திசைதிருப்புதல்களாகவே அமையும். இலவசமாக கொடுக்கப்படுவதில் வெறுக்கப்படுவது அறிவுரைகள் மட்டுமே. நமக்கான பாதையில் ஒவ்வொரு சிக்னலிலும் ஒருத்தர் நின்று கொண்டு அவர்களின் பாதையை நமக்குள் திணிப்பார்கள். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று லட்சியம் நோக்க நடந்துகொண்டிருக்கும் நமக்கு வேறொரு வழி போகும் ஒரு சொகுசுப் பேருந்து மனதிலொரு சஞ்சலத்தை ஏற்படுத்தும். அந்த கணத்தில் சரியாக எடுக்கப்படும் ஒரு தவறான முடிவு நம்மை வேறொரு பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும்.

இந்த நாவல் சுற்றிவருவது ஒரு குடும்பம், குறிப்பாக ஒருவனை மட்டுமே. முகுந்த். முகுந்தனின் கிரிக்கெட் ஆசை. நம் நாட்டில் தேசப்பற்றினை பொங்கிவழியச்செய்யும் வஸ்துக்களில் கிரிக்கெட்டுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடமுண்டு. சச்சினை கடவுளாகக் கும்பிடுவதிலிருந்து மகனுக்கு சச்சின் என்று பெயர்சூட்டுவது வரை எல்லாமே இதில் அடக்கம். நான் கூட அதே மதம்தான். எங்கள் மதம் கிரிக்கெட், எங்களுக்கான கடவுள் சச்சின். இருபத்தி மூன்று வருடங்களாக பள்ளி, கல்லூரி, வேலை என்று இடங்களும், கடமைகளும் மாறுந்தோறும் எனக்குள் திணிக்கப்படும் பிரச்சினைகளை சமாளிக்கவேண்டிய கட்டாயங்களில், ஆறுதல் சொல்ல யாருமற்ற அரைவட்ட நிலவொளிகளில், பலநாட்களை கடந்து வந்திருக்கிறேன். சொல்ல விஷயங்கள் பலவிருந்தும் கேட்க யாருமற்ற ஒரு தனிமையில் இதயச்சிறைகளில் துயரத்தின் ஓலம் எதிரொலிக்கும் வேளைகளில், கதறி அழவிரும்பாத ஆண்மையில், இவற்றையெல்லாம் மறக்க ஒரு நேரக்கடத்தியாக அறிமுகமாகி ஒரு போதையாகி பின்னர் அதுவே ஒர் மருந்தாகவும் ஆனதெனக்கு கிரிக்கெட். முக்கியமாக சச்சின்.

முகுந்த், நன்றாக கிரிக்கெட் ஆடக்கூடிய ஒரு வளர்ந்த, கல்லூரி செல்லும் சிறுவன், இளைஞன். நன்றாய்ப் படிக்கும் ஒருவனுக்குத் தம்பியாகவும், படிப்பு மட்டுமே வாழ்வை உயர்த்தும் எனுமொரு உயர்கொள்கை கொண்ட தந்தைக்கும் மகனாகவுமானவன். லட்சியத்தின் போக்கில் நமக்காக வாய்ப்புகள் வருவதென்பதரிது. முகுந்தனின் விளையாட்டுத்திறனை அறிந்து பல்கலைக்கழக அணியில் ஆட வாய்ப்பு வருகிறது. அதுவும் பம்பாய்க்கு சென்று. படிப்புதான் உன்னை உயர்த்தும் என்று தடை போடுகிறார் அப்பா. வேறு வழியில்லை லட்சியத்தை விட்டு வேறு வேலை பார்ப்போம் என்று மனதொடிந்த நிலையில் ஆர்த்தி மூலமாக ஒரு வாய்ப்பு வருகிறது. முகுந்த் பொய் சொல்லி பம்பாய் செல்கிறான், கிரிக்கெட் ஆட.
ஒரே ஆறுதலாக இருக்கும் அம்மா, அப்பாவிடம் போட்டுக் கொடுக்கும் அண்ணன், ஒழுங்காக பயிற்சிக்கு செல்லமுடியாததால் திட்டும் கோச், நன்றாக பவுலிங் போடுவதால் தன்னை வெறுக்கும் சக விளையாட்டுக்காரன் என அனைத்தும் பாதகங்களாகி வெறுப்பிற்கு இட்டுச்செல்கிறது முகுந்தனை. அந்த சமயங்களிலெல்லாம் அதிகமாக நேசிக்கிறான் கிரிக்கெட்டை. தனது இயலாமைகள் மாறும் எனும் கனவோடு.

பொய் சொல்லி பம்பாய்க்கு சென்று கிரிக்கெட் ஆட, முதலிரண்டு மேட்ச்களில் முகுந்தன் தான் மேன் ஆப் த மேட்ச். மும்பையில் தூரத்து உறவுக்காரியான மாடர்ன் லல்லி மேல் காதலாகிறான். முந்தைய எல்லா சிக்கல்களின்போதும் பொறுமைகாத்து தனக்கான நாள் வருமென காத்திருந்தவன் லல்லியிடம் மயங்கி தனக்கான நாளை வீணடிக்கிறான். முகுந்தன் இல்லாது அவன் ஆடும் அணி தோற்கிறது. அவளிடம் பெற்ற முத்தமும், அவளின் ஸ்பரிசமும் முகுந்தனைத் தொலைக்கிறது. ஒவ்வொருத்தனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாளோ இல்லையோ, தோல்விக்குப் பின் நிச்சயம் ஒருத்தி இருப்பாள். இந்த போதையிலிருந்து விடுபட்டவன் எப்படி லட்சியத்தை அடைகிறான் என்பதே மிச்சம்.

லட்சியத்தை மிக நேசிக்கும்பொருட்டு எந்தத் தடையோ மனப்பிறழ்ச்சியோ வந்தாலும் அந்த உயர் லட்சியம் நம்மை சரியான பாதைக்கு இழுத்துவிடும். ஒரு சுய-முன்னேற்றத்தனமான கதையாகத் தோன்றினாலும் சொல்லப்பட்ட விதம் நடுவில் எங்கும் இடைநிறுத்த முடியாத அளவு சுவாரஸ்யமானது. சில புத்தகங்களைப் படிக்கும்போது நாயகனோடு நம் மனம் பயணப்படும். சில புத்தகங்களில் மட்டுமே நாயகனாகவே தன்னை பாவித்துக் கொள்ளும். அத்தகைய வகையில் நான் கடந்து வந்த பாதையை ஒவ்வொரு பக்கத்திலும் நினைவூட்டிய ஒரு புத்தகமிது. கிரிக்கெட்டை காதலிப்பவர்களுக்கு நிச்சயம் பரிந்துரைப்பேன்.

நாவல் | சுஜாதா | பக்கங்கள் 168 | விலை ரூ. 115
இணையத்தில் வாங்க: கிழக்கு

24 Feb 2013

காட்ச்-22 நடைபிணங்களின் நகைச்சுவை

சிறப்பு பதிவர் : அஜய்

போர் குறித்து பலருக்கும் இருக்கும் எண்ணம் என்ன? போர்க்காலம் தேசப்பற்று எழுச்சியடையும் காலம்,  அது வெறியாகவும் மாறும் காலம். போர்க்களத்தில் தங்கள் வாழ்வை பலி கொடுக்கும் இளைஞர்களைப் பார்த்து மற்றவர்கள் பெருமைப்படுகிறார்கள், அவர்களுக்காக பரிதாபப்படுகிறார்கள். போர்க்களம், தேசப்பற்று, அதில் களப்பலி காணும் இளைஞர்கள் குறித்த பெருமையும் துயரமும் - புத்தகங்களும் இதர ஊடகங்களும் இவ்வுணர்வையே பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றன.

ஆனால் இது குறித்து மாற்றுப் பார்வை கொண்ட எழுத்தாளர்கள் பலரும் உண்டு, அவர்கள் போரின் மறு முகத்தைத் தங்கள் படைப்புகளில் விவரித்திருக்கின்றனர்.  முதலாம் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் பங்கெடுத்த போர் வீரர்கள் இவர்கள், தங்கள் அனுபவ சேகரத்தை புத்தகங்களாகப் பண்படுத்திக் கொடுத்திருப்பவர்கள் இவர்கள். எரிக் மரியா ரிமார்க் (Erich Maria Remarque), ஜேம்ஸ் ஜோன்ஸ் (James Jones) போன்றவர்கள் தீவிரமான, நிதர்சன படைப்புகளைத் தந்தனர். கர்ட் வோன்னகட் (Kurt Vonnegut) போன்ற சிலர் நிஜ வாழ்வின் கொடூரத்தை அறிவியல் புனைவுகளாகக் கலந்தடித்துக் கொடுத்தனர்.

அப்புறம் ஜோசப் ஹெல்லர் இருக்கிறார். இரண்டாம் உலகப் போரில் குண்டுவீசிய விமானப்படை வீரர்களில் ஒருவர்தான் ஜோசப் ஹெல்லர். போரின் குரூரங்களை இருண்ட அங்கதமாகப் பார்க்கும் ஒரு ராட்சத பித்து நிலையை போதப் பார்வையாக்கும் அவரது காட்ச் 22 என்ற நாவல் இருக்கிறது - பிணவறையின் அச்சத்தையும் அழுகையையும் சிரிப்பையும் சமநிகழ்வாய் விவரிக்கும் நாவல்.


23 Feb 2013

சுஜாதாவின் குறுநாவல்கள் 1

சுஜாதாவின் குறுநாவல்கள்
முதல் தொகுதி
 Photo Courtesy/to buy: உயிர்மை


சுஜாதாவின் பல புத்தகங்களை மூன்று வருடங்கள் முன்பு தொடர்ச்சியாக வாசித்தேன். அதற்கு அப்புறம் சில பல வேலைகள் இருந்ததால் புத்தகம் வாசிக்கும் பழக்கமே நின்று போய், இப்போது ஆம்னிபஸ்க்காக தொடர்ச்சியாக புத்தகம் வாசிக்கும் பழக்கம் மீண்டும் தொற்றிக் கொண்டுவிட்டது. ஏனோ சுஜாதாவின் புத்தகங்களை  மறு வாசிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனத்தின் ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தாலும், புதிய புத்தகங்களை படிக்க முடியாமல் போய் விடுமே என்ற பயம் இருந்ததால் இதை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தேன். அதைப் போக்கும் பொருட்டுதான் சென்ற இரண்டு வாரங்களாக சுஜாதாவின் இரண்டு (இலக்கிய) புத்தகங்களை அறிமுகம் செய்தேன். அதைத் தொடர்ந்து இந்த வாரம் அவரின் குறுநாவல்கள் (கால வரிசைப்படி தொகுக்கப்பட்டது)


                                      


21 Feb 2013

ஆழ்நதியைத் தேடி - ஜெயமோகன்

தமிழிலக்கியத்தின் ஆன்மிக சாரம் என்ன? எனும் வினாவை பிந்தொடர்ந்து சென்ற ஜெயமோகனின் தேடல்கள் கட்டுரைகளாக இத்தொகுப்பில் உள்ளன. ஆன்மிக நோக்கு என்பதை முழுமையான உண்மையை நோக்கிய ஒரு நகர்வு, ஒட்டுமொத்தமான அணுகுமுறை என விளக்குகிறார். முழுமையான என்பதை holistic என்பதன் தமிழாக்கமாகப் பார்க்கலாம். மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை மையமாகக் கொண்டது மதநோக்கு/தத்துவ நோக்குள்ள ஆன்மிகம். அண்டத்தில் மனிதனின் இருப்புக்கு அர்த்தம் என்ன? உண்மையில் எல்லயற்ற பரிமாணம் கொண்ட பிரபஞ்சத்துக்கும் சராசரியாக எண்பது வருடம் வாழ்ந்து செல்லும் மனிதனுக்கும் என்ன உறவு இருந்துவிட முடியும். புலன்களின் சங்கமமான அகத்தில் `தான்` எனும் இருத்தலின் உணர்வில் பிற அனைத்தையும் வரையறை செய்ய விழைகிறான் மனிதன். தனது இருப்புக்கு முன்னால் சிறு குருவியின் இருப்பையும், ஒரு கருப்புத்துளையின் இருப்பையும் நிர்ணயிக்கப் பார்க்கிறான்.

ஆம்னிபஸ்ஸில் எழுதும் பாஸ்கர் ஒரு இலக்கிய விவாதத்தில் கூறியது - தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து பிரபஞ்சாகார தரிசனங்களை எட்டிப் பிடிப்பதுதான் இலக்க்கியத்தின் பிரதான நோக்கம். அவ்வகையில் தனிப்பட்ட அனுபவங்களை மானுடப் பொதுமைக்கான தத்துவமாக மாற்றும் கலையே இலக்கியம் எனச் சொன்னார். அடிப்படையான அக எழுச்சிகளுக்குக் காரணத்தை அறிந்துகொள்ளாவிட்டால், ஒரு கதையோ நாவலோ அந்தந்த சூழ்நிலைக்குள்ளாகவே முடங்கிப் போய்விடும் அபாயம் உள்ளது. ஏதோ ஒரு கட்டத்தில் காலத்தை கடந்து நிற்கும் சாத்தியத்தை முழுமெய் நோக்கு எனவும் சொல்லலாம். தத்துவத் தளத்தில் மீனின் வயிற்றில் கடல் என்பது ஒரு முழுமெய்யானப் பார்வையைத் தரும் உண்மை.



20 Feb 2013

விருட்சம் கதைகள், தொகுப்பாசிரியர் அழகியசிங்கர்

விருட்சம் இதழில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு. அதிலும் குறிப்பாக, முதலிரண்டு ஆண்டு இதழ்களில் வெளிவந்தவை. 1992--ஆம் ஆண்டு பதிப்பு. இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளை எழுதியவர்கள் : வண்ணநிலவன், அழகியசிங்கர், சுரேஷ் குமார் இந்திரஜித், காசியபன், ஐராவதம், ஆனந்த், மா. அரங்கநாதன், ஸ்டெல்லாபுரூஸ், பாரவி, ஆர். ராஜகோபாலன், நகுலன், கோபிகிருஷ்ணன், தமிழவன், இரா. முருகன், எம். யுவன், ஜெயமோகன், ரவீந்திரன், க்ருஷாங்கினி, விட்டல்ராவ், அசோகமித்ரன், அஜித் ராம் ப்ரேமிள்.

இப்படி ஒரு தொகுப்பைப் பார்க்கும்போது இது போன்ற முயற்சிகளுக்கு ஏற்பட்ட கதியை நினைத்து வருத்தப்படுவது நியாயம்தானே? ஏனென்றால் இன்றும் அழகியசிங்கர் 'நவீன விருட்சம்' என்ற சிற்றிதழை நடத்துக் கொண்டிருக்கிறார், அது ஒன்றும் அவ்வளவு சுகமாக இருப்பதாகத் தெரியவில்லை.  இது சம்பந்தமான ரான்ட் பதிவின் பிற்பகுதியில் வருகிறது.

19 Feb 2013

செய்பவன் நான் இல்லை, திருமலைத் தலைவனே


செய்பவன் நான் இல்லை, திருமலைத் தலைவனே
ஆசிரியர்: P.V.R.K.பிரசாத். இ.ஆ.ப (ஓய்வு)
தமிழில்: கலைமாமணி டாக்டர் P.B.ஸ்ரீனிவாஸ்
பக்கங்கள்: 410
விலை: ரூ.150
வானதி பதிப்பகம்

PVRK.பிரசாத்.இ.ஆ.ப(ஓய்வு). இந்தியாவில் பல்வேறு இடங்களில் பற்பல பதவிகள் வகித்தவர். 1979-84 வரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர். அந்த காலகட்டத்திற்கு முன் அவர் இருந்த விதம் - சிகரெட், குடி, சீட்டுக்கட்டு - ஜாலியான வாழ்க்கை. திருப்பதி பாலாஜி முன் பதவியேற்றதிலிருந்து அடுத்த இருபது ஆண்டுகள் (இன்று) வரை அவருடைய வாழ்க்கை - தலையில் குடுமி, நெற்றியில் நாமம். ஒரு நாளைக்கு சுமார் ஐந்து மணி நேரம் வரை பூஜை, பக்தி, பாடங்கள். இவரது சக-கல்லூரி மாணவர்கள், இன்றைய கோலத்தைப் பார்த்து, நம்ம பிரசாத் இப்படி மாறுவான்னு நான் நினைக்கவேயில்லை என்று சொல்கிறார்களாம். மேலும் இவரது குடும்பம், குழந்தைகள் அவர்களின் திருமணங்கள் ஆகியவற்றைப் பற்றி இந்தப் புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

18 Feb 2013

பசித்த பொழுது – மனுஷ்யபுத்திரன்




கவிதை என்றால் அதற்கென சொல்லப்பட்டிருக்கும் அனைத்து இலக்கணங்களையும் தாங்கி நிற்கவேண்டும் எனும் கூற்றுகளுக்கு மத்தியில் அப்படியான ஒரு பிம்பத்தை உடைத்து சாதாரண வார்த்தைகளின் கோர்வைகளால் நம்மை மயக்கும் கவிதைகள் மனுஷ்யபுத்திரனுடையவை. தொகுப்பில் பெரும்பாலும் உரைநடைக் கவிதைகள் தாம். கொடுக்கப்படும் அன்பு, மறுக்கப்படும் பாசம், பிரிவாற்றாமை, தனிமை, துயர், பிரிவு, சந்தேகம், துக்கம் என மனதிற்கு வலியேற்படுத்தும் அனைத்தையும் கவிதையாக்கி இருக்கிறார்.

தனது சுற்றத்தைத் தீவிரமாக கவனிக்கிறார். ஒவ்வொரு கவிதையும் நாம் கடந்து செல்லும் அல்லது மறந்து செல்லும் ஒரு நுணுக்கமான விஷயத்தை விவரிக்கிறது. கல்யாண்ஜிக்கு பறவைகள் போல மனுஷ்யபுத்திரனுக்குப் பூனைகள். வாசிக்கும்போதே அவை நம்மை அருகார்ந்து காலைச்சுற்றி மடிமேல் ஏறிப்படுத்துக் கொள்கின்றன. காதலையும் பிரிவையும் ஒருசேரப் படிக்கும்போது ஏற்படும் உணர்வுகளை எழுத ஏலாது.

என்றால் எனும் கவிதையில் உன்னிடம் வீழும்போது அது எப்போதும் மீட்சியற்றதாக இருக்கவேண்டும் எனும் அதிதீவிர அன்பும், அமைதிக்குத் திரும்புதல் எனும் கவிதையில் இருவருக்குமிடையேயான ஈகோவினால் இருவரும் பிரிய நேரிட அதனால் ஏற்படும் மௌனத்தையும் எழுதியிருக்கிறார். உறவுகளையும் உறவுகளுக்கிடையேயான நெருக்கம், காதல், பிரிவு, ஈகோ போன்றவற்றையும் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்.

ஒரு கடைசி சந்திப்பை உணராமல் உணர்த்தும் ஒரு கடைசிக்கோப்பை தேநீர், எள்ளல் மிகு வாசகர் சந்திப்பு’, மழையில் சோகத்தை கரைக்கும் ஒரு திரும்பும்போது மட்டும் இன்னும் பல கவிதைகளை மனதிற்கு மிக நெருக்கமாக உணரலாம். தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த கவிதைகள் சில.

புனித ஒப்பந்தம்
மரத்திலிருந்த பறவை
தரையிலிருந்த வேடனிடம்
ஒப்பந்தம் செய்துகொண்டது
நான் உன் கைகளுக்கு வரும்போது
நீ அழுத்தமாகப் பிடிக்கக்கூடாது என்றது
வேடன் புன்னைகையுடன்
தலையசைத்தான்
நான் பாடும்போது
நீ மௌனமாக இருக்கவேண்டும் என்றது
வேடன்
மௌனமே சிறந்த மொழி என்றான்
உனது உணவுப் பழக்கங்களை
எனக்குக் கற்றுத் தரக்கூடாது என்றது
வேடன்
அது ஆரோக்கியமானதல்ல என்றான்
என்னை அடைக்கும் கூண்டிற்கு
என்னிடமும் ஒரு மாற்றுச் சாவி இருக்க வேண்டும் என்றது
வேடன்
அதுதானே சமத்துவமும்கூட என்றான்
என்னைத் தேடி வரும் நண்பர்களை
இணக்கமாக நடத்தவேண்டும் என்றது
வேடன்
அது நம் பண்பாடு என்றான்
என் பூர்வீக நினைவுகளை
அவமதிக்கக் கூடாது என்றது
வேடன்
தனித்தன்மைகள் முக்கியமானவை என்றான்
நீ தன்னம்பிக்கை இழக்கும்போது
என் சிறகுகளை வெட்டக் கூடாது என்றது
வேடன்
தானும் பறத்தலின் இன்பத்தை  அறிவேன் என்றான்
எனக்கு ஆகாயம் நினைவுக்கு வந்துவிடும்போது
என்னைப் போக விடவேண்டும் என்றது
வேடன்
உன் பாதைகள் உன்னுடையதே என்றான்
இறுதியாக
என்னைத் தொடும்போது
நீ வேடன் என்பதை மறந்துவிடவேண்டும் என்றது
வேடன்
தான் ஒரு வேடனேயல்ல என்று சத்தியம் செய்தான்
பறவை அப்போது 
என்றென்றைக்குமாக மறந்துபோனது
தான் ஒரு பறவை என்பதை.
இந்தக் கவிதையை வாசித்து முடிக்கையில் துரோகத்தின் சூழ்ச்சியறியா ஒரு பறவையாகிப் போனேன்.

பயமற்ற வாழ்வு
கொசுக்கள்
எல்லா இடங்களுக்குள்ளும்
எப்படியோ நுழைந்துவிடுகின்றன
எறும்புகள்
எந்தப் பாதுகாப்பிலிருந்தும்
எதையாவது கொண்டுவந்துவிடுகின்றன
மின்மினிகளுக்கு
இந்த இருளைக் கடப்பதில்
எந்தக் குழப்பமும் இல்லை
சில்வண்டுகள் கலைத்துவிடுகின்றன
ஊரடங்கு உத்தரவுகளின்
பயங்கர மௌனங்களை
எவ்வளவுக்கெவ்வளவு
சிறியதாக இருக்கிறோமோ
அவ்வளவுக்கவ்வளவு
பயமில்லாமல் இருக்கலாம்
இந்தக் கவிதை பேசுவது வெறும் உருவத்தின் அளவைப் பற்றி மட்டுமல்ல, நாம் சார்ந்திருக்கும் பிரச்சினைகளை..

கடைசியாக
அழியும் டைனோசர்களில்
கடைசி டைனோசர்
நானாகத்தான் இருக்கவேண்டும்
பிறகு
இந்த உலகை 
முழுமையாக ஆளட்டும்
சின்னஞ்சிறு பூச்சிகள்!

இப்படியாக, ஒரு சில வாரங்களாகவே நான் மனுஷ்யபுத்திரனாக மாறியிருக்கிறேன். ஆழ்ந்த நிம்மதி, உறக்கம், அமைதி. புத்தகத்தை முடித்த பிறகும் மீண்டும் மீண்டுமாய் அதில் என்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறேன். மனதிலிருக்கும் காயங்களுக்கும் தழும்புகளுக்கும் மயிலிறகாய் இருக்கின்றன இக்கவிதைகள். கவிதை என்றால் காத தூரம் ஓடுபவர்களுக்குக் கூட இந்த புத்தகத்தை பரிந்துரைப்பேன். வாசிக்க அவ்வளவு எளிதாகவும் மனதில் ஒரு பெரும் புயலையும் அதற்குப் பிறகான அமைதியையும் ஏற்படுத்தவல்லது இந்தப் புத்தகம்.

கவிதை தொகுப்பு | மனுஷ்யபுத்திரன் | பக்கங்கள் 432 | விலை ரூ.350
இணையத்தில் வாங்க: கிழக்கு

17 Feb 2013

சிறகுகளும் கூடுகளும் - பெருமாள் முருகனின் ஆளண்டாப் பட்சி

சிறப்பு பதிவர் : அஜய்

பெருமாள் முருகன்  நாவல்களின் அமைப்பை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன் - ஒன்று, அதன் களம், சூழல் சார்ந்து. விளைநிலங்கள் விற்கப்படுவதாகட்டும், மாதாரிகளின் வாழ்நிலமாகட்டும், திரையரங்காகட்டும், அதன் களம் துல்லியமாகப் பதிவாகியிருக்கும். இரண்டாவது, மனிதர்கள், உறவு சார்ந்து  - மனித உறவுகளில் உள்ள பாசமும் பிணைப்பும், அதற்கு நேர்மாறாக, அவற்றில் உள்ள வன்முறையும் பொறாமையும்; காலம் மனிதர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும் அதனால் உறவுகளில் ஏற்படும் இயல்பான நெருக்கங்களும் விலகல்களும். இவை ஒன்றாக இணைவதையே பெருமாள் முருகனின் நாவலாக பார்க்கிறேன்,  அவருடைய சமீபத்திய நாவலான ஆளண்டாப் பட்சி வரை.



16 Feb 2013

கருப்புக் குதிரை -சுஜாதா

கருப்புக் குதிரை
சுஜாதா
….எனக்கு சிறுகதைகளை படிக்க சுவாரசியமாக எழுத வேண்டியது முக்கியம். பல வேலைகளுக்கிடையே வாசகர்கள் தங்கள் நேரத்தை உனக்காக ஒதுக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு உன் அத்தனை திறமைகளையும் பயன்படுத்தி நல்ல தெளிவான கதையைச் சொல்லாமல் என்ன என்னவோ சோக விவரங்களும் புரியாத தத்துவமும் பேசுவதில் எனக்கு விரும்பமில்லை. இந்தக் கதைகளை நீங்கள் இலக்கியத்தில் சேர்க்கிறீர்களோ இல்லையோ, வாசகர்களுக்கு சில மணி நேரங்கள் உலகை கணித்து கதையை முடித்தும் சற்றே மேம்பட்ட மனிதர்களாவீர்கள் என் நம்புகிறேன்.
                                                                                                    சுஜாதா (முன்னுரையிலுருந்து)


சென்ற வாரம் “தூண்டில் கதைகள்”(ஐ) தொடர்ந்து இந்த வாரம் “மீண்டும் தூண்டில் கதைகள்” என்ற தலைப்பில் ஆனந்த விகடன் பத்தரிகையில் எழுதப்பட்ட சிறுகதை தொகுப்பு. தூண்டில் கதைகளில் சொல்லப்பட்ட மாதிரியே, கதையின் முடிவில் ஒரு சொடக்கு அல்லது ஒரு திருப்பம், அதுதான் இந்த கதைகளின் அடிநாதம். தூண்டில் கதைகளை விட இந்த கதைகள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்தாக எனக்கு தோன்றுகிறது. காரணம் சிறுகதைகளின் பக்க அளவும், வெகு வேகமாக முடிவை நோக்கி செல்லும் கதையின் முடிவாகவும் இருக்கலாம். எதுவாக இருப்பினும், முன் சொன்ன பதிவின் சில வரிகளை இங்கும் நினைவு கூர விரும்புகிறேன். 

இலக்கியமா இல்லையா என்று ஆசிரியரே கவலைப்படாதபோது, என்னை போன்ற வாசகன் மனதில் தோன்றும் நிம்மதி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இந்த தொகுப்பிலும் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள், சென்ற பதிவை போலவே சிறுகதைகளின் முடிவை பற்றி இங்கு பேசப்போவது இல்லை, சிறுகதையை பற்றி சிறு அறிமுகம் மட்டுமே, முடிந்தால் அந்த கதை பற்றி என்னுடைய எண்ணம். அவ்வளவே.


15 Feb 2013

குதிரைகளின் கதை – பா.ராகவன்



சென்ற வருடம் காரைக்குடி புத்தக கண்காட்சியின்போது அகப்பட்ட புத்தகம் இது. பொதுவாக, வாங்க வேண்டும் என ஏற்கனவே இறுதி செய்து வைத்திருக்கும் புத்தகங்களைத் தவிர பிறவற்றை வாங்குவதற்குமுன் முன்னுரையை ஒரு இரண்டு நிமிடமாவது வாசிப்பேன். அப்படி வாசித்ததால் வாங்கிய புத்தகம்தான் பா.ராவின் 'குதிரைகளின் கதை'. குமுதம் ஜங்ஷன் இதழில் ‘காந்தி சிலை கதைகள்’ எனும் பெயரில் வெளிவந்த எட்டு சிறுகதைகளின் தொகுப்பிது. 



14 Feb 2013

மனுஷா மனுஷா - வண்ணதாசன்

ஆம்னிபஸ் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் காதலர் தின வாழ்த்துகள்.

`அந்தக் கல்திண்ணையின் சூடும், கல்-மையும் கூட இப்போதும் உணரமுடிகிறது. என்னுடைய அண்ணன் மகளுடைய கல்யாணம் முடிந்து, ஒவ்வொருத்தருக்காகக் கணக்கு முடித்து ரூபாய் கொடுத்துவிட்டு நான் உட்கார்ந்திருந்த உச்சிப் பகல் அது. தபால்காரர்கள் வருகிற நேரமும் அதுதானே. கல்யாண வீட்டுக்குத் தபால் கொண்டு வருகிற அவருடைய முகத்தில் கூட, கல்யாண வீட்டு அலுப்பும் சந்தோஷமும் இருக்கிற மாதிரித் தோன்றும். அவர்தான் `மனுஷா மனுஷா` பார்சலைக் கொடுத்தார். அதைச் சுற்றி முடிச்சுப் போட்டிருந்த டொயின் நூலின் தடிமன் இந்த வரியை எழுதும் விரல்களில் மீண்டும் தட்டுப்படுகிறது. மனம் எதை எதை எல்லாம், தேவையோடும் தேவையில்லாமலும் ஞாபகம் வைத்துக் கொண்டு அல்லல்படுகிறது பாருங்கள்.`

- மனுஷா மனுஷா முன்னுரையில் வண்ணதாசன்


இதுதான் வண்ணதாசன்! அவரது படைப்புகளின் தன்மையை தனது வாழ்விலிருந்தே பெற்றுக் கொண்ட கலைஞன். படைப்புகளுக்காக வேண்டி அவர் `படைப்பதில்லை`. பத்தே கதைகள் கொண்ட இத்தொகுப்பில் உள்ளவை அவர் சொல்வது போல தேவையோடும் தேவையில்லாமலும் ஞாபகம் வைத்து அல்லல்படுபவர்களின் கதைகள்தான். ஞாபகம் என்றொன்று இல்லையென்றால் வண்ணதாசன் எனும் கலைஞன் நமக்குக் கிடைக்காமலேயே போயிருப்பார். அதே சமயம் ஞாபகம் இருப்பதால் தான் தேவையில்லாதவற்றைக் கொண்டும் நாம் அல்லல்படவேண்டியுள்ளது. அவ்வகையில் இத்தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றின் பின்புலத்தையும் முன்னுரையில் வண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.

பெண் ரசிகையின் நட்பால் தனது குடும்பத்தில் உண்டான குழப்பங்களின் காலத்தில் எழுதப்பட்ட தொகுப்பு என்பதால், பல நினைவுகள் மிகவும் அந்தரங்கமானவை எனக்குறிப்பிடுகிறார். சாப்பிட்டேன், குளித்தேன், வேலைக்குப்போனேன் என்பதுபோல இக்கட்டான அக்காலகட்டத்தில் கதைகளும் எழுதியிருக்கிறார்.

எனக்கு மிகவும் பிடித்தது `சொல்லமுடிந்த கதை` எனும் கவிதையைச் சொல்லவேண்டும். குன்னம்குளம் டொமினிக் கதைசொல்லியின் நண்பர். ஒவ்வொரு நாளும் சாராயக்கடையிலிருந்து டொமினிக்கை (அப்படி மொட்டையாகக் கூப்பிட்டால் கோவம் வரும்!) அவரது விடுதியில் விடும் பொறுப்பு கதைசொல்லிக்கு. சின்னச் சின்ன கவிதை நொடிகளுக்காக வாழ்க்கையை வாழ்பவர்களில் டொமினிக் முதன்மையானவர். எதன் மீதும் அபிப்ராயம் சொல்லாமல், வாயப்பொத்திக்கொண்டு கவிதை எழுதும் கதைசொல்லியின் மீது டொமினிக்குக்கு அபிரிதமான கோபம். அதைவிட நிறையாத அன்பும் உண்டு. விடுதிக்குப் போவதற்கு முன் தரையில் விழுந்து கிடக்கும் முந்திரப்பழங்களை சேகரிப்பது அவர்கள் பழக்கம். உன் கவிதை நாசமாகப் போகட்டும் என வாழ்வின் கவிதைக் கீற்றைப் பிடிக்கத் தெரியாத கதைசொல்லியைத் திட்டுகிறார் டொமினிக். அப்பேச்சில் கலந்த முந்திரப்பழங்களின் நெடி போல அன்பும் சிநேகிதமும் பரவியதாகத் தெரிவிக்கிறார்.

இக்கதையை முழுவதுமாகச் சொல்லப்போவதில்லை. ஆனால் இது ஒரு அனுபவம். எண்ணற்ற தத்துவங்களையும் தரிசனங்களையும் சொல்லத் துடிக்கும் கதைசொல்லியின் வேகம் தெரிவதில்லை. மாறாக, வாழ்வே ஒரு தத்துவம். அதில் சிநேகமும் அன்பும், விடைபெற்றபின் எஞ்சும் வாசமும் சொல்பவை ஏராளம். ஏதோ ஒரு கட்டத்தில் நாம் சந்தித்த/சந்திக்கப்போகும் நண்பன் குன்னங்குளம் டொமினிக் போல் திவட்டாத அன்பை செலுத்துபவனாக இருந்துவிட்டால் போதும். டொமினிக் சொல்வது போல நாசமாய்போகட்டும் கவிதைகள்.

அவனுடைய நதி, அவளுடைய ஓடை - பெண்களைப் பற்றிய கதை. வண்ணதாசனின் பெரும்பாலான கதைகள் பெண்களைப் பற்றியதாக இருந்தாலும், இக்கதையில் வரும் ஈஸ்வரி போல ஆண்கள் மத்தியில் தனது மதிப்பென்ன என சதா சிந்திப்பவர்கள் கிடையாது. அவரவர்க்கு ஒரு உலகம். ஒரு அந்நிய ஆடவனாக இல்லாமல், பெண்களின் உலகை எட்டிப்பார்த்து எழுதியதில் இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது இக்கதை. ஒரு பெண்ணுக்குள் பெரிய உலகம் என்றால், அவர்கள் கூடி அமர்ந்து பேசும்போது என்னென்னவெல்லாம் நடக்கும்? விழுந்து விழுந்து சிரிப்பதும்,முந்தின தினம் நடந்தவற்றின் சாரம் வெளிப்படும் பாங்கு, முழங்கால் மட்த்து உட்கார்ந்து அடுத்தவீட்டுக்காரியின் நீண்ட நகங்களை நீவிவிட்டபடி பேசுவதும் எத்தனை சுவாரஸ்யம். அதிலும், சிரித்து சிரித்து கண்களின் கண்ணீர் கசிவதும், இருவர் மட்டும் பேசும்போது திடுக்கென கொப்பளிக்கும் கண்ணீரும் அவர்களது உலகங்களின் ரகசியங்கள், ஈஸ்வரி இவற்றையெல்லாம் வேடிக்கப் பார்ப்பதோடு, வேறு மனிதர்களுக்கு முன்னால் மரியாதையுடன் இருகிவிட்டு பின்னர் நெகிழ்ந்தது போல அவரவர் வசத்தில் தரையில் உட்காருவதும் பூ உதிர்வதுக்கு சமமானவை. ஈஸ்வரி தனக்குக் கிடைத்த வாழ்வோடு மற்றவர்களின் வாழ்வைப் பொருத்திப்பார்த்து வியப்படையும் தருணங்கள் அற்புதமானவை. `நீங்களா உட்காருங்கன்னு சொல்ல வேண்டாம். எழுந்திரிக்கும்போது எழுந்துக்கட்டும்..அவங்களா உட்கார்ந்தாபோதும்னு தோனும்போது உட்கார்ந்துப்பாங்க` என ஈஸ்வரி சொல்லும் இடத்தில், அவளது நினைவு முழுவதும் பிறந்தவீட்டுக்குச் சென்றுவிடுகிறது. ஈஸ்வரியின் அப்பா வரும்போது ஆச்சி, அம்மா எல்லாரும் எழுந்து நின்றாலும், அவள் நின்றுவிட்டாளா எனப் பார்ப்பது கதையில் மிக இயல்பாக அமைந்துவிட்டது.

`கிளைகள் இலைகள்`, `அப்பால் ஆன..` கதைகள் நட்புக்குள் நெகிழும் சந்தர்பங்களையும், எதிர்பாராத நேரத்தில் ஜென்ம விரோதியாகிப்போகும் தருணங்களையும் படம்பிடிக்கின்றன. இயல்பாக பூக்கவேண்டிய நட்புக்குள், சந்தர்ப்பங்கள் எப்படிப்பட்ட குழப்பங்களை திணித்துவிடுகின்றன? அப்பால் ஆன ராஜியின் இயல்பு தான் `அவனுடைய நதி, அவளுடைய ஓடை` ஈஸ்வரிக்கும் என்றாலும், இரு பாத்திரங்களின் நுண்மையான வேறுபாட்டை ஒரே ஒரு வரியில் காட்டிவிடுகிறார் வண்ணதாசன். ஆச்சர்யமான விஷயம். முன்னாள் காதலன் நண்பனாகும்போது, அவனைத் துரத்திவிட்டது ராஜிதான் எனத் தெரியவருகிறது. கணநேரத்தில் `அவனைப் போகச்சொல்லுங்கப்பா` எனச் சொன்னவள், பின்னொரு நாள் நண்பனாக சந்தித்து, அவனது மனைவி இல்லாத சமயத்தில் `நீங்களாவது என்றைக்கும் ஒரேமாதிரி இருக்கணும்` எனச்சொல்கிறாள். இருவர் வாழ்விலும் சந்தோஷத்துக்குக் குறைவில்லை என்றாலும், ஏதோ ஒரு முள்.

மனிதர்களுக்குள் இருக்கும் உறவின் அனைத்து சாத்தியங்களையும் வண்ணதாசனின் கதைகளில் பார்க்க முடிகிறது. ஆக்ரோஷமான விரோதமாக இருந்தாலும், வெறுக்கத்தக்க காதல் தோல்வியாக இருந்தாலும் ஏதோ ஒரு காலத்தில் வாழ்வின் ரணங்கள் ஆறிவிடுகின்றன. புதுவகை உறவில் பழையது ஜனிக்கிறது. எப்படியேனும் எங்கேனும் ஒட்டிக்கிடக்கப் பார்க்கும் மனிதர்களின் கதைகள். உறவின் புனிதம், தனிமனித சுரணை போன்றவையெல்லாம் அடித்துச் செல்லப்பட்டு அன்பும், அந்நியோன்யமும் தழைத்துவிடுகிறது. மண் வேறு, காலம் வேறு, உறவு வேறு ஆனால் பிரியம் எப்போதும் ஏதோ வகையில் மனிதர்களைப் பிணைத்துவிடுகிறது.

மனுஷா மனுஷா
வண்ணதாசன்
சந்தியா பதிப்பகம்
இணையத்தில் வாங்க - மனுஷா மனுஷா

13 Feb 2013

பாகிஸ்தான் - by பா.ராகவன்



* பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு விளையாடினால்?
* பாகிஸ்தானின் வளம் மிக்க பல ஜீவ நதிகள் இந்தியாவுக்கு சொந்தமானதாக இருந்தால்?
* சானியா மிர்சா இந்தியாவின் மருமகளாகவே இருந்தால்?

இப்படி பல கேள்விகள் கேட்டுக் கொண்டே போகலாம். இதெல்லாம் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஆகாமல் இருந்தால் நடந்திருக்கலாம். ஆனால், பாகிஸ்தான் பிரிந்தே ஆகவேண்டும் என்று உறுதியுடன் இருந்த ஒரே நபர் - ஜின்னா. சுதந்தர இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது என்று அடம் பிடித்து, காந்தி, நேரு, படேல், மவுண்ட்பேட்டன் ஆகிய அனைவரும் பலமுறை எடுத்துச் சொல்லியும், பாகிஸ்தானை தனியாக பிரித்துக் கொண்டு போனார். அப்படிப் போனவர் அடுத்த வருடமே, அதாவது செப். 11, 1948ல் மரணமடைந்து விட்டார். அப்போது மவுண்ட்பேட்டனிடம் ஒரு அதிகாரி - ”இன்னும் கொஞ்ச காலம் ஜின்னா இருந்திருந்தால், பாகிஸ்தானை எங்கேயோ கொண்டு போயிருப்பார்” - என்றாராம். அதற்கு மவுண்ட்பேட்டன் சொன்னது - ”இவர் இவ்வளவு சீக்கிரம் இறந்துவிடுவார் என்று தெரிந்திருந்தால், பிரிட்டிஷ் அரசாங்கம் பாகிஸ்தானை பிரிக்கவே விட்டிருக்காது”.

12 Feb 2013

நேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்

விழுப்புரத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் வளவனூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் பாவண்ணன். இந்த ஊரானது என் அம்மா வளர்ந்த ஊர் என்பதால் அவர் கதைகளை வாசித்து, அங்கங்கே அவரைப் பற்றியும் வாசித்ததை விட அவரைப் பற்றி சிறுவயது முதல் என் உறவினர்கள் வாயிலாக நிறைய கேள்விப்பட்டதுண்டு. 


வளவனூர் கிராமம் என்றால் திரைப்படங்களில் காட்டும் வயல்வெளிகள், தோப்பு துறவுகள் சூழ்ந்த பசுஞ்சூழலும் இல்லை, வானம்பார்த்த கள்ளிக்காடுமில்லை. பரபரப்பான விழுப்புரம் - பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் சத்திரம் பஸ் ஸ்டாப் விட்டு இறங்கினால் தென்னந்தோப்பு அதைக் கடந்தால் வரும் ஒரு யூகலிப்டஸ் தோப்பிற்கு முன்னதாக என் தாத்தா வீடு. வீட்டின் முன்னால் நூறு மீட்டர் தூரத்தில் சினிமாத்தனமான ஒரு அழகான ரயில் நிலையம். காலை-மாலை வேளைகளில் மட்டும் ஊரெங்கும் புகை மணம் பரப்பி கடந்து செல்லும் பாசஞ்சர் வண்டிகள், அவ்வப்போது தடதடத்துச் செல்லும் கூட்ஸ் வண்டிகள், ரயில் பாதையைக் கடந்தால் எப்பவும் காய்ந்து கிடக்கும் அந்த ஊரின் எப்போதோ நீர்நிறைந்திருந்ததாக எல்லோரும் சொல்லும் ஓர் ஏரி. கொஞ்சம் சின்ன டவுன் என்று சொல்லத்தக்க பெரிய கிராமம்.

வீட்டிலிருந்து சிவன் கோயில் போகும் வழியில் மணமணக்கவும் சுடச்சுடவும் கமர்கட் செய்து விற்கும் வீடு சென்று கடலை மிட்டாய்களும், கமர்கட்டுகளும் வாங்கும் போது எதிர்சாரியில் இருக்கும் ஒரு வீட்டைக் காட்டி மாமா சொல்லுவார், “இதுதான் பாவண்ணன் வீடு. உங்க பெரிய மாமாவோட க்ளாஸ்மேட்டுடா. பெரிய ரைட்டர் இப்போ”. அவர்கள் வீட்டில் தைத்த துணியொன்றை வாங்கி வர ஒருமுறை படியேறிச் சென்ற நினைவும் மங்கலாக உண்டு.

இவரது சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றுக்கு ஈடாக இவர் கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்த பதினைந்துக்கும் மேலான நூல்கள் பேசப்படுகின்றன. மொழிபெயர்ப்பிற்காக அகாதமி விருதும் பெற்றவர். கவிதைகளையும், நாட்டுப்புறப் பாடல்களையும் ஒரு மொழியினின்று மொழிபெயர்க்கும் அளவிற்கு மொழித்தேர்ச்சி பெறுதல் என்பது அசாதாரண காரியம் என்றே தோன்றுகிறது.


காவ்யா வெளியீடாக 1992’ஆம் வருடம் தொகுக்கப்பட்ட பாவண்ணனின் “நேற்று வாழ்ந்தவர்கள்” சிறுகதைத் தொகுப்பு வழக்கம்போல சமீபத்தில் ஒரு பழைய பேப்பர் கடையில் கிடைத்தது. இப்போது இந்தப் புத்தகம் சந்தையில் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை. இணையத்தில் தேடியபோது நிறைய நூலகங்களின் கேட்டலாகில் தட்டுப்படுகிறது.

இந்தச் சிறுகதைத் தொகுப்பை ஏனோ அதன் வரிசையில் வாசிக்காமல் என் மனம் போன போக்கில் முன்னும் பின்னும் புரட்டிப் புரட்டித்தான் படித்தேன். ஒவ்வொரு கதையும் இறுதியில் ஒரு மனசைத் தைக்கும் துன்பத்துடனே பெரும்பாலும் நிறைகிறது. கதை மாந்தர்கள் யாரும் ஃபேண்டஸி ஆசாமிகள் அல்லர். பெரும்பாலும் கீழ்த்தட்டு மக்களின் முகத்தில் அறையும் அவலமே கதை.

பாவண்ணன் எழுதுவது போல் நேரடியாகக் கதை சொல்லும் ஒருத்தரை நான் இதுவரை வாசித்ததில்லை என்றே சொல்வேன். கதைக்கென இவர் ரொம்பவெல்லாம் கற்பனைக் குதிரையை ஓட்டிப் பிரயத்தனப்படவில்லை. இவரது கதைககளன்கள் பெரும்பாலும் நம் சக மனிதர்களின் அன்றாட வாழ்க்கையே. 

பெரிதாக ஜெர்க் அடித்து, ஆஹா ஓஹோ என்று சிலாகிக்கத்தக்க சொற்களை உபயோகித்து, பெரும் வர்ணனைகளைக் கொண்டு கதையை அலங்கரிக்கும் வேலையே இல்லை. சற்றும் பாசாங்கற்ற ஒருநடை தொகுப்பில் உள்ள அத்தனைக் கதைகளிலும். கதாசிரியனை எங்குமே முன்னிறுத்தாத கதைகள். படிக்கப் படிக்க ஆச்சர்யமாக இருக்கிறது.

“வேஷம்” கதையில் அச்சேயாகாமல் வெளியாகும் ஒரு புத்தகக் கதைவழி இந்த தேசத்தின் சரித்திரத்தைப் போகிற போக்கில் சொல்லும் லாவகத்தில் துவங்குகிறது சிறுகதைத் தொகுப்பு. 

இல்லாமையின் உச்சத்தில் வாய்க்கு ருசியாக உண்ண வக்கில்லாமற் போகும் மாசக்காரியான ஆந்தாயி கதை அவள் பிள்ளைகள் பிசையும் மீன்குழம்புச் சோறோடு சேர்த்து நம் மனசையும் பிசைவது. ”கல்” உடைக்கும் மீனாவின் கதை முடிவு நம் முகத்தில் அறைந்தால், கல் விட்டெறியும் குப்புசாமியின் “தர்மம்” நம்மை நகைக்க வைக்கிறது.

”மரணம்” கதைநாயகன் குப்புசாமியுடன் பாராட்டும் நட்பு நம்மில் ஒவ்வொருவரும் வாழும் காலகட்டத்தில் யாரோ ஒருவருடன் பாராட்டிய ஒரு நட்பை நினைவுறுத்தும். எத்தனை நெருங்கிய நண்பனானாலும் அவனையும், “வீட்டுக்கெல்லாம் வராத”, என்று சொல்ல முடிவது என்னவொரு அவலம்? சமூகத்தின் ஏற்றத்தாழ்வை கதையின் போக்கில் தொட்டுச் செல்கிறார் பாவண்ணன். போதனை, புரட்சி போன்ற சமாசாரங்களெல்லாம் இல்லாமல் நெருடாமல் உள்ளதை உள்ளபடி பகர்கிறார். இக்கதையின் இறுதிப் பத்தி இல்லாமலேயே கூட கதை நிறைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

”நேற்று வாழ்ந்தவர்கள்” கதை பற்றி நிறைய பேசலாம். குதிரை வண்டி ஓட்டுபவனான பார்த்தசாரதியின் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை  அவனது அன்பான மாமனின் மகளை மணக்கும்போது மேலும் ஆசிர்வாதம் நிறைந்ததாய்த் தோன்றுகிறது. திருமணத்திற்குப் பிறகு சீர்செய்ய முடியாத படிக்கு அவன் வாழ்க்கை சின்னாபின்னமாவதும், அதைச் சீர்செய்யக் கையாலாகாத திடீர்த் தருணமொன்றில் அவன் பூணும் திரும்பி வரவியலாத துறவறமுமே கதை.  இந்தத் தொகுப்பின் சில கதைகள் எங்கள் கிராமத்தைச் சுற்றியே வருவதால் அக்கம்பக்கத்து கிராமங்களின் பெயர்களைக் கதைகளில் வாசிக்கையில் மனசு ரொம்பவும் சந்தோஷப்பட்டது.

என் தாத்தாவின் முதலாளியும் நண்பருமான ரெட்டியாரும் கூட பார்த்தசாரதியின் கதையில் வருகிறார். அவர் மகள்களைக் கோலியனூர் கோயிலுக்குத் தன் குதிரை வண்டியில் பார்த்தசாரதி அழைத்துச் செல்வதாகச் செல்கிறது கதை.

விடுமுறை நாள் ஒன்றின் மாலைப் பொழுதொன்றில் குடும்பத்துடன் ரெட்டியார் வீட்டிற்கு மரியாதை நிமித்தம் நாங்களெல்லாம் சென்றிருந்தோம். பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் பெரிய தோட்டத்தினிடையே ஒரு வசதியான மாளிகை வீடு. காபி, பலகார உபசரிப்புகள் எல்லாம் முடிந்து நாங்கள் விடை பெற்ற போது வாயிலில் நின்றிருந்த குதிரை வண்டியில் ஏற்றி எங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் ரெட்டியார்.

அன்று எங்களுக்கு வண்டியோட்டியது பார்த்தசாரதியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.

நேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்
சிறுகதைத் தொகுப்பு
காவ்யா வெளியீடு.
201 பக்கங்கள் / விலை.ரூ.26/- (1994 பதிப்பு)

11 Feb 2013

மதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் – சுகுமாரன்



மலையாள இலக்கியங்களின் ஒரு முக்கிய அங்கமாகவும், மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களில் மிக முக்கியமானவருமாக இருக்கும் வைக்கம் முகமது பஷீரின் ஒரு குறுநாவல்தான் மதிலுகள். அவர் வைக்க ஆசைப்பட்ட பெயர்பெண்ணின் மணம்’. ஒரு மிகப்பெரும் பரிசை விட சிறிய புன்னகை நம்மை நெகிழ்த்திவிடுவதில்லையா? அதுபோலத்தான் இந்தப் புத்தகமும். மிகச்சிறியது எனினும் ஏற்படுத்தும் தாக்கமும் பாதிப்பும் அதிகம். நானே பூங்காவனமும் பூவும்இது நாவலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரி, இதுதான் பஷீர். அவர், அவர் சார்ந்த நிகழ்வுகளின் கோர்வை அவ்வளவுதான். அதிலொரு சம்பவம் இந்த மதிலுகள்.

ஒரு போராட்டத்தில் பஷீர் சிறைசெல்ல நேர்கிறது. அங்கு அவர் காணும் வார்டர்களின் அட்டூழியங்கள் பணத்தினால் கைதிகளுக்குக் கிடைக்கும் சௌகர்யங்கள் போன்றவற்றை விவரிக்கிறார். அங்கு யாரும் தன்னளவுக்கு ஈடில்லை என்று நினைக்கிறார். தனக்கான ஒரு ரோஜாத் தோட்டத்தை அங்கு உருவாக்கி, அவைகளுடனும் அங்கிருக்கும் மரங்களுடனும் உறவாடித் திரிகிறார். புரட்சி, போராட்டம் என்றெல்லாம் கடந்து வந்த பாதையை யோசித்துப் பார்க்கையில் ஒரு பெரும் மகிழ்ச்சியொன்றை இழந்ததன் சுவடுகள் அவரை ரணமாக்குகின்றன.

பெண், தான் கடந்துவந்த பாதையில் குறுக்கிடாத ஒரு இன்பமாக அவர் கருதுகிறார். ஒரு பெண்ணின் மணத்துக்காகவும் ஸ்பரிசத்துக்காகவும் ஏங்குகிறார். தினம் தினம் பேருந்திலோ வேறெங்காவதோ பெண்களைப்பார்த்து விட்டு அவர்களைத் தொலைத்துத் தவிப்பதல்ல இந்தத் தவிப்பு. அதுவரை பெண்ணின் மணம் காணாத ஒரு தவிப்பு. பெண்கள் சிறைக்கும் ஆண்கள் சிறைக்கும் இடையே இருந்த ஒரு ஓட்டை அடைக்கப் பட்டிருக்கும் சுவடைக் கண்டு வருந்துகிறார். அப்போது மதிலுக்கு அப்புறத்திலிருந்து ஒரு குரல் கேட்கிறது. மதிலே சாட்சியாக இருவரும் காதலிக்கிறார்கள். முகம்பார்க்காத காதல். ஒரு நேசம். கதையின் நுட்பமான பகுதியே, அந்த இடைப்பட மதிலின் பூச்சலில் பஷீர் அந்தப் பெண்ணின் மணத்தை உணருகிறார். அது, அவர் வளர்க்கும் ரோஜாக்கூட்டங்களின் மணத்தை விட அவருக்கு மகிழச்சி தரக்கூடியதாக இருக்கிறது.

அவள் பெயர் நாராயணி, அவளுக்கு ஒரு ரோஜாச்செடியைப் பரிசளிக்கிறார். அது மதிலுக்கு அப்பால் நன்றாக வளர்கிறது இவர்களின் காதலைப்போல. தன்னை விரும்புகிறவன் தன்னைத்தான் விரும்புகிறானா இல்லை தன் நிலையில் யார் இருந்தாலும் விரும்புவானா என்றறிய விரும்புகிறாள். தானொரு அழகியில்லை, தானொரு அதிர்ஷ்டமற்றவள் என்றெல்லாம் கூறுகிறாள். எல்லாப் பெண்களையும்போல தன்னை விரும்புபவனை இழக்க விரும்பாத ஒரு மனம். இறுதியில் இருவரும் சிறைக்குள் ஓரிடத்தில் சந்திக்க முடிவெடுக்கிறார்கள்.

வேதனையின் துளிகளால் நாவல் முடியும்போது ஒரு துன்பத்தின் நிழலை மனதில் பரப்பி விடுகிறது. விரும்பிய ஒரு பொருள் கிடைக்காமல் போகும்போது ஏற்படும் துக்கத்தை பிரதிபலிக்கிறது இந்த நாவல். மொழிபெயர்ப்பு அவ்வளவு உவப்பாக இல்லையென்றாலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவல்லதாக இருக்கிறது கதை. இதை ஒரு சினிமாகவும் அடூர் கோபாலகிருஷ்ணன் எடுத்திருக்கிறார். வெறும் 52 பக்க ஒரு குறுநாவல் ஒரு வெற்றிச் சித்திரமாக ஆனதில் அடூருக்கு இருந்த சோதனைகள் என்னென்ன என்பதை அவர் ஒர் பேட்டியில் சொல்லியிருக்கிறார். அது பின்னிணைப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் பெரும் சவாலாகக் கருதியது பஷீரை திரையில் பிரதிபலிக்கத்தான். அந்த திரைக்காவியம் யூ-ட்யூபில் கூட காணக் கிடைக்கிறது.

குறுநாவல் | மொழிபெயர்ப்பு | காலச்சுவடு | பக்கங்கள் 70 | விலை ரூ. 50
இணையத்தில் வாங்க: உடுமலை

10 Feb 2013

Non-stop India – Mark Tully



’நான் இரண்டு நாகரிகங்களின் குடிமகன்’ என்று சொல்லும் மார்க் டுல்லி, கொல்கத்தாவில் 1935ல் பிறந்த பிரித்தானியர். படிப்பு முடித்த பின் பிபிசியின் இந்தியச் செய்தியாளராய் பணியாற்றியிருக்கிறார். 2002ல் சர் பட்டமும் 2005ல் பத்ம பூஷன் பட்டமும் வாங்கியிருக்கிறார். இளம் பருவத்தை இங்கிலாந்தில் கழித்ததாலும், அங்கேயே படித்ததாலும் தன்னிடம் இருக்கும் பிரிட்டிஷ்நெஸ் ஒரு போதும் மறையாது என்கிறார் டுல்லி. இருந்தபோதும் ’இந்தியாவும் இங்கிலாந்தும் விளையாடினால் நான் இந்தியா பக்கம்’ என்கிறார். இரண்டு இடங்களில் ஒரே சமயத்தில் ஊன்றியிருக்க விரும்புபவர் கொஞ்சம் குழப்பத்தோடு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், டுல்லியின் நேர்காணலைப் படிக்கும் போது அவர் ரொம்பத் தெளிவாக இருக்கிறார் என்பது புரியும். (மார்க் டுல்லி - பரத்வாஜ் ரங்கன் நேர்காணல்)


வரலாற்றாய்வாளர் - எலிசபெத் கொஸ்தோவா

சிறப்பு பதிவர் : அஜய் 

எக்காலத்திலும் நம்மை அச்சத்தில் உறைய வைக்கும் இயல்பு கொண்ட ஒரு தொல்கதையை 'வரலாற்றாய்வாளர்' நவீனப்படுத்துகிறது.  பல திரைப்படங்களுக்கும் புத்தகங்களுக்கும் கதைக்கருவைக் கொடுத்த தொல்கதை இது - ப்ராம் ஸ்டோகர் தன் டிராகுலாவை உருவாக்க அடிப்படையாக இருந்த 'கவுண்ட் டிராகுலா' (Count Dracula) அல்லது 'வ்லாத் தெபஸ்' (Vlad Tepes) என்ற அந்த நிஜ மனிதரைத்தான் சொல்கிறேன். டிவிலைட் (Twilight) தொடரை அதன் வெற்றியின் பாதிப்பில் நகல் செய்து எழுதப்பட்ட நாவல் இல்லை இது. இரத்தக் காட்டேரிகள், vampirism   போன்ற விஷயங்கள் அதிக அளவில் இல்லாத, முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்கும் கதை எலிசபெத் கொஸ்தோவாவின் 'வரலாற்றாய்வாளன்'. இது டான் ப்ரௌவுனும் அவரது சகாக்களும் பொங்கலிட்டுப் பரிமாறும் பழகிய சரக்கில்லை. சிறப்பான கதையமைப்பு கொண்ட இந்த நாவலில் அவற்றைவிட தேர்ந்த கதை சொல்லல் உண்டு. 

இந்த நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பெயர் சொல்லப்படாத கதைசொல்லியின் பார்வையில் இதன் முதல் பகுதி துவங்குகிறது. நாவலின் எந்த இடத்திலும் இவரது பெயர் குறிப்பிடப்படுவதில்லை. எழுபதுகளில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறார் இவர். இந்தப் பகுதியில், ஒரு விடலைப் பருவ மாணவியான கதைசொல்லி தன் தந்தை பால் உடன், ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கிறார். பால் சமூக அமைதி மையம் ஒன்றை நிர்வகிக்கிறார், அது மனிதாபிமான சேவைகளைச் செய்கிறது.  சொர்க்கம் போன்ற கதைசொல்லியின் வாழ்க்கையில் ஒரு புத்தகம் குறுக்கிடுகிறது - அவரது தந்தையின் நூலகத்தில் ஒரு நாள் அது எதிர்ப்படுகிறது. மரக்கட்டையில் செதுக்கிய வடிவங்களில் மசி பூசி அச்சிடப்பட்ட அதன் ஓவியங்களில் டிராகுலாவோடு தொடர்புடைய டிராகனின் ஒற்றை உருவமும் இருக்கிறது. அது குறித்து தன் தந்தையிடம் விளக்கம் கேட்கிறார், ஆனால் அவருக்கு எதுவும் பேசும் விருப்பம் இல்லை. ஆனால் எப்படியோ தன் தந்தையிடமிருந்து உண்மையை வரவழைத்து விடுகிறார். கதை சொல்லியின் தந்தை கொஞ்சம் கொஞ்சமாகப் பேசத் துவங்குகிறார்.

9 Feb 2013

தூண்டில் கதைகள் -சுஜாதா



தூண்டில் கதைகள்
சுஜாதா
Photo Courtesy/To buy: Tamil books online



...சம்பிரதாயமான பழைய கால சிறுகதை வடிவம். முடிவில் ஒரு சொடக்கு அல்லது துடிப்பு இவைதான் இந்தக் கதைகளின் பொது அம்சம். இதைப் படிப்பவர்கள் இவை இலக்கியமா இல்லையா என்று கவலைப்பட வேண்டியது இல்லை. உற்சாகமாக, சுலபமாகப் படிக்க முடியும்...
                                                              சுஜாதா (முன்னுரையிலிருந்து)
 
                                                           

இது மாதிரி முன்னாடியே தெளிவாக சொல்லிவிட்டால் இதை இலக்கியமாகப் பொருட்படுத்தலாமா, இதன் உள் அர்த்தம் என்ன, இதில் படிமங்கள் உண்டா, உண்டெனில் அவற்றின் பொருள் என்ன, படிமங்கள் எந்த அளவுக்கு படிமப் பொருளைத் தாண்டிச் செல்கின்றன என்று எல்லாம் கேள்விகளைக் கேட்டு மண்டையைப் போட்டு பிய்த்து கொள்ள வேண்டாம் பாருங்கள். 

குமுதம் இதழில் 12 வார தொடராக வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பே இந்த புத்தகம். மொத்தம் 12 சிறுகதைகள் (12 வாரம் என்றால் 12  சிறுகதைகள், இதுகூடவா தெரியாது!). சுஜாதா முன்னுரையில் சொன்ன மாதிரி, ஒரு சின்ன அதிர்ச்சிதான் கதையின் நாடி, சில கதைகளில் இவை கதையின் கடைசி வரியில் வருகின்றன, சில கதைகளில் கடைசி பத்தியாக வருகின்றன. ஒருசில ஆண்டுகள் முன்னமேயே இந்தத் தொகுப்பைப் படித்திருந்தாலும், யாரைப் படிப்பது என்று குழப்பம் இருப்பதால், படித்ததையே மீண்டும் படிப்போம் என்று முடிவு செய்து விட்டேன். இந்த கதைகளின் முடிவை நீங்களே படித்து தெரிந்துக் கொள்ளுங்கள், கதையின் சுருக்கம் மட்டுமே, இங்கு சொல்ல விரும்புகிறேன்.



8 Feb 2013

குழந்தைகளும் குட்டிகளும்- ஒல்கா பெரோவ்ஸ்கயா



அப்பாவை பற்றிய நினைவுகள் என்று சில புகைமூட்டமான பிம்பங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. எனது எட்டாவது வயதில் அவர் எங்களை விட்டு பிரிந்தார். அப்பாவை பற்றிய நினைவுகளை மீட்பது இன்றும் எனக்கொரு மிகப்பெரிய சிக்கல். அசல் நினைவுகளும் புகைப்பட- செவிவழி செய்தி கற்பனைகளும் இணைந்து ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டது. அப்பாவின் நினைவுகளை மீட்க முயலும் போதெல்லாம் நினைவில் தவறாமல் வரும் நபர்கள், அவர் வளர்த்த ஜான்சியும், டாக்கியும், ப்ரூசியும், முயல்களும், புறாக்களும், கிளிகளும், மீன் தொட்டியும் தான். 




7 Feb 2013

ஜான் பான்வில்லின் லெமூர் - தேய்வழக்குகளின் சலிப்பு


ஐரீஷ் எழுத்தாளரான ஜான் பான்வில் சமகால உலக இலக்கியத்தில் முக்கியமானவர். இவர் எழுதிய The Sea என்ற நாவல் விமரிசக அங்கீகாரமும் புக்கர் போன்ற பரிசுகளும் பெற்ற ஒன்று. இது தமிழில் ஜி. குப்புசாமி அவர்களால் 'கடல்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காலச்சுவடு பிரசுரம். இந்த தமிழாக்கத்தை எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இவ்வாறு பரிந்துரைக்கிறார் : "புக்கர் பரிசு பெற்ற நாவலான ஜான் பான்வில்லின் 'கடல்' தமிழில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. ஐரீஷ் எழுத்தாளரான ஜான் பான்வில் சமகால உலக இலக்கியத்தில் முக்கியமானவர். இந்த நாவலை தமிழாக்கம் செய்திருப்பவர் ஜி குப்புசாமி."

தேர்ந்த இலக்கியவாதியாகக் கொண்டாடப்படும் ஜான் பான்வில் தமிழக இலக்கியவாதிகளுக்கு ஒவ்வாத ஒரு இழிசெயலும் செய்கிறார் - பெஞ்சமின் ப்ளாக் என்ற பெயரில் துப்பறியும் நாவல் எழுதுகிறார் இவர். இவையும் விமரிசக அங்கீகாரம் பெற்றுவிட்ட காரணத்தாலோ என்னவோ, "பெஞ்சமின் ப்ளாக்காக ஜான் பான்வில் எழுதிய" புத்தகம் என்று முன்னட்டையில் பெரிய எழுத்துகளில் அச்சிட்டு இவரது 'The Lemur' என்ற துப்பறியும் நாவலை விற்பனை செய்கிறார்கள். கொண்டை தெரிந்தபின்னும் என்ன வேஷம், கலைத்து விடலாமே, என்று நாமானால் சொல்வோம், ஆனால் இதில் ஒரு வணிக உத்தி இருக்கிறது : பெஞ்சமின் ப்ளாக்கை அறிந்தவர்களுக்கு அவரது இயற்பெயர் ஜான் பான்வில் என்பது ஒரு பொருட்டாக இருக்கப் போவதில்லை, ஜான் பான்வில் என்ற இலக்கியவாதி அப்படி என்னதான் பெஞ்சமின் ப்ளாக்காக எழுதியிருக்கிறார் என்று தீவிர இலக்கிய வாசகர்கள் சிலர் இதை ரகசியமாகப் படிக்கக்கூடும். எப்படியும் லாபம்தான்.

இந்த நாவலின் கதைச் சுருக்கத்தை முன் அட்டையின் உட்பக்க ஃப்ளாப்பில் உள்ளபடி சொல்கிறேன் - புத்தகத்தின் அட்டையிலேயே சொல்லிவிட்டதை பதிவில் சேர்ப்பதை தப்பு சொல்ல முடியாது. அப்படியும் அடாவடியாக தப்பு சொல்பவர்களைப் பசித்த புலி தின்னட்டும்.

"'வில்லியம் 'பிக் பில்' முல்லோலாண்ட் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் கோடி கோடியாக சம்பாதித்தவர். சிஐஏவில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் இப்போது தன் மகள் லூசியின் துணையோடு முல்லோலாண்ட் அறக்கட்டளையின் தலைவராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். வில்சன் க்ளீவர் என்ற துப்பறியும் பத்திரிக்கையாளர் தனக்கு எதிரான உண்மைகளை அம்பலப்படுத்தும் வாழ்க்கை வரலாறு ஒன்றை எழுதத் திட்டமிட்டிருக்கிறார் என்ற செய்தியை அறியும் முல்லோலாண்ட், தன் மகளின் கணவன், ஜான் கிளாஸ்ஸிடம் தன் அதிகாரப்பூர்வமான வாழ்க்கை வரலாற்றை எழுதும் பணியை ஒப்படைக்கிறார்.

"ஆனால் கிளாஸ்ஸின் இளம் ஆய்வாளன் கிளாஸ்ஸையே பிளாக்மெயில் செய்கிறான், இதனால்  கிளாஸ் விதிர்விதிர்த்துப் போகிறார். தன் ரகசியங்களும் முல்லோலாண்டின் ரகசியங்களும் அம்பலமாகிவிடும் என்று அஞ்சுகிறார், அவனை பணிநீக்கம் செய்கிறார். ஆனால் சீக்கிரமே, 'லெமூர்' என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் அந்த ஆய்வாளன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட செய்தியை நியூயார்க் நகர காவல்துறை மூலம் அறிகிறார்.

"அமைதியை விலைக்கு வாங்க முடி‌யாது - நியூயார்க்கின் பணக்கார குடும்பங்களில் ஒன்றானாலும்கூட இது சாத்தியமில்லை. அதிரடி ரகசியங்களால் துளைக்கப்பட்ட லெமூர் ஒரு அற்புதமான சமகால த்ரில்லர், இதில் பெஞ்சமின் ப்ளாக் தன் ஆட்டத்தின் உச்சத்தில் இருப்பதை நாம் காண்கிறோம்"

புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்களுக்கு இந்த அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். புத்தகத்தை வாசித்தவர்கள் முந்தைய பத்தியின் கடைசி வாக்கியத்தை நீக்க வேண்டும் என்று ஆட்சேபம் தெரிவிக்கக்கூடும். மன்னித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே, இது விமரிசக தளமல்ல, வாசக தளம் என்பதால் அந்த மாதிரியான ஆட்சேபணைகளுக்கு இங்கே இடமில்லை.

6 Feb 2013

விலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி

என் அம்மா வளர்ந்த கிராமத்திற்கு விடுமுறைக்குப் போனால் அங்கே படிக்கக் கிடைக்கும் விகட, குமுத, சாவி, இதயம் பேசுகிறது’களுக்கு இடையே வித்தியாசமானதாகத் தனியே இருப்பது “சோவியத் யூனியன்” என்ற பத்திரிக்கையே. இந்தியா டுடே புத்தக அமைப்பில் கொஞ்சம் முரட்டுத்தனமாக “என்னைப் படிக்காதேயேன்”, என்று சின்னஞ்சிறுவனான என்னை மிரட்டும் நிறம்போன நிறத்தில் இருக்கும் புத்தகம். அதை யார் அங்கே வாங்கினார்கள், எதற்காக வாங்கினார்கள், யார் வாசித்தார்கள் என்பதெல்லாம் இன்றும் எனக்குக் கேள்விக்குறியே.

மற்ற பத்திரிக்கைகளில் வரும், ‘மாமா/மாமி, சாரி கொஞ்சம் ஓவர், ஆறு வித்தியாசங்கள், முன் ஜாக்கிரதை முத்தண்ணா” போல பகிரங்கமாகப் படிக்கத் தக்கவைகளோ, அல்லது சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு புரட்டத்தக்கதான நடுப்பக்க அம்பிகாவின் கழுத்திற்கு இரண்டு இன்ச் கீழே கிறக்கமாக கமல் கிஸ் அடிக்கும் படங்களோ இல்லாதவொரு புத்தகம் அது. எப்போதேனும் கண்ணில் அகப்படும் துக்ளக் பத்திரிக்கைக்கும் இந்தப் புத்தகத்திற்கும் பெரிய வித்தியாசம் தெரியாது எனக்கு. 



கம்யூனிசம், தொழிலாளி, பேதம், உழைப்பு, உழைப்பாளி, மேலைநாடு, மார்க்சியம் என்ற வார்த்தைகளெல்லாம் வார்த்தைகளாகத் தட்டுத் தடுமாறிப் படித்த பருவம். 

ஒரு காலகட்டத்தில் சோ ராமஸ்வாமியும் கூட பிடிபட ஆரம்பித்தார். ஆனால் இந்த கம்யூனிசம் மாத்திரம் பிரியமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது.

அலுவலகத்தில் சப்வே கவுன்டர் கதவடைத்திருந்த ஒரு நல்லிரவுப் பொழுதில் பீட்ஸா கார்னரில் ”செட்டிநாடு சைவ பீட்ஸா” என்ற புது வகையறாவைச் சுவைத்த வண்ணம் “கம்யூனிசம்னா என்ன சார், எல்லாரும் உழைக்கணும், எல்லாருக்கும் எல்லாமும் சரிசமம், எல்லாருக்கும் சரிசம சம்பளம், சரிசம வசதிவாய்ப்புகள், நோ ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஏஸி கம்பார்ட்மெண்ட், எக்ஸெட்ரா எக்ஸெட்ரா.... அதானே?”, என்று ஃபிடல் காஸ்ட்ரோவின் தீவிர அபிமானி ஒருத்தரிடம் கேட்க, அவருக்கு மளுக்’கென்று கண்ணில் நீர் வந்துவிட்டது.

“என்ன சார்? செட்டிநாடு காரம் ஜாஸ்தியோ?”

“யோவ்.... ஏன்யா இப்பிடி விக்கிபீடியாவைப் படிச்சிட்டு வந்து உளர்றீங்க?”, என்றார். அவர் சட்டையில் பைப் அடித்துக் கொண்டிருந்த சே குவாரே’வும் சேர்த்து என்னை முறைப்பதாய்ப் பட்டது.

ஒரு புனிதப்போராளி ரேஞ்சுக்கு எனக்கு கம்யூனிச மூளைச்சலவை வகுப்பு எடுக்கத் தொடங்கிய நண்பரிடமிருந்து பிய்த்துக் கொண்டு வருவது உன் பாடு, என் பாடு என்றாகிப்போனது. விஷயம் கம்யூனிசம் மீதான என் எதிர்ப்பு அல்ல, அலர்ஜியும் கூட அல்ல. புரிதலின்மை என்று சொல்லிக் கொள்ளலாம். 

சென்ற வருட சென்னை புத்தகக் காட்சியில் வழக்கம் போல @f5here பிரகாஷ், “இது சூப்பர் புக் அண்ணா. இங்க்லிஷ்ல ஜார்ஜ் ஆர்வெல் எழுதினது”, என்று அச்சு வாசம் மாறாமல் அடுக்கப்பட்டிருந்த “விலங்குப் பண்ணை” புத்தகத்தைக் கையில் புரட்டியபடி சொன்னான்.


அன்பர் பிவிஆர் என்கிற பி.வி.ராமஸ்வாமி மொழிபெயர்த்த புத்தகமாச்சே . அவர் அனுப்பிய ”நம்ம மொழிபெயர்ப்பு இந்த புத்தகவிழாவில் ரிலீஸ் ஆகிறது” என்ற டெக்ஸ்ட் மெசேஜ் நினைவுக்கு வந்தது. புத்தகம் ஒரு காப்பி கையில் எடுத்துக் கொண்டேன். சொன்னால் நம்புங்கள்! விலங்குப் பண்ணை புத்தகமானது குழந்தைகளுக்கானதொரு விலங்குகளின் கதை சொல்லும் புத்தகம் என்றுதான் புத்தகத்தைக் கையில் எடுக்கும்வரை நம்பிக் கொண்டிருந்தேன்.

புத்தகத்தைக் கையிலெடுத்துப் புரட்டுமுன் பின்னட்டையை நோட்டமிட்டால் அதில், “கம்யூனிசம், ஸ்டாலின், ரஷ்யா”, என்றெல்லாம் எழுதியிருந்தது. இதென்னடாது வம்பாப் போச்சு,  நமக்கு ஆவாத சப்ஜெக்டு புஸ்தகத்தைத் தெரியாம வாங்கிட்டமோ என்று வாசிக்க ஆரம்பித்தேன்.

ஒருவேளை அந்த பின்னட்டையை வாசிக்காமல் விட்டிருந்தால்  எனக்கு இருக்கும் அரசியல் அறிவுக்கு இந்தப் புத்தகத்தை ஒரு குழந்தைகள் இலக்கியம் என்றுகூட புரிந்து கொண்டிருப்பேன். கையில் எடுத்தால் ஒரு மூச்சில் படிக்கத்தக்க மிகமிக சுவாரசியமான ப்ளாட்.

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஆட்சி செய்பவன் அநியாய அரசியல்வாதியாகவும் ஆளப்படுபவன் முதுகொடிந்த அடிமையாகவும்தான் இருக்கமுடியும் என்ற ஒற்றைவரிக் கருத்துதான் அனிமல் ஃபார்ம் புத்தகத்தின் கதைக்கரு. இதற்கு முதலாளித்துவமோ, ஜனநாயகமோ அல்லது கம்யூனிசமோ விதிவிலக்கல்ல.

ஜோன்ஸ் என்னும் பண்ணை உரிமையாளரிடமிருந்து அவரது மேனார் பண்ணையை விலங்குகள் கைப்பற்றுகின்றன. மனிதர்களுக்கு உழைத்தது போதும் என்று அவை இப்போது இரண்டு புத்திசாலிப் பன்றிகள் தலைமையில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் மகிழ்ச்சியாக உழைக்கத் துவங்குகின்றன. அந்த நம்பிக்கை, உழைப்பு, அவற்றின் திசைமாற்றம், புதிய தலைமையின் தகிடுதத்தங்கள், பன்றிகளின் குள்ளநரித்தனங்கள் என்று கதை பயணித்து வஞ்சித்தலின் உச்சகட்டத்தில் கதை நிறைகிறது.

இங்கே கதைக்களனாகக் கொள்ளப்பட்டது ரஷ்யாவின் ஸ்டாலின் காலகட்டத்துக் கம்யூனிசக் கலாட்டாக்கள். ஆனால் ஒரு புத்தகத்தின் இடத்திலும் கூட ஸ்டாலின் தர்பார் நம் கண்ணுக்குக் காட்டப் படுவதில்லை. முழுக்க முழுக்க விலங்குகளே கதைமாந்தர்கள்.

நெப்போலியன், ஸ்நோபால், ஸ்க்வீலர், பாக்ஸர் என்று பன்றிகளும், நாய்களும், குதிரைகளும் வளையவரும் கதையாகவே இருக்கிறது அனிமல் ஃபார்ம். நையாண்டி விதம் (satire) என்பார்களே அந்த ஸ்டைல் கதை. உள்ளதை நேரடியாகச் சொல்லாமல் அனிமல் ஃபார்ம் மூலமாகக் கோடி காட்டியிருக்கிறார் அனிமல் ஃபார்மின் நிஜ வடிவத்தின் ஆசிரியர் ஜார்ஜ் ஆர்வெல்.

பொதுவாக மொழிபெயர்ப்புப் புத்தகங்களை ரசித்து வாசிப்பவனில்லை நான். ஒரு படைப்பினை அதன் உண்மையுருவில் நாம் உள்வாங்க மொழிபெயர்ப்பு பொதுவாகத் தடையாக இருக்கும் என்பது என் கருத்து. ஆனால், இந்தப் புத்தகத்தைப் பொருத்தவரையில் பிவிஆர் நம்மை ஒரு நேரடித் தமிழ்ப் புத்தகம் வாசிக்கும் அனுபவத்திற்கே கொண்டு செல்கிறார் என்பதை நாம் நிச்சயம் குறிப்பிடவேண்டும். அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கில நாவலை, அதிலும் குறிப்பாக ’ஸ்பெகுலேடிவ் ஃபிக்‌ஷன்” வகை ஒன்றை மொழிபெயர்ப்பதென்பது அத்தனை எளிமையன்று.

அதுசரி, கடைசியில் இந்தப் புத்தகம் வாசித்தாவது கம்யூனிசம் நமக்கு விளங்கியதா என்று கேட்டீர்களா யாரேனும்?

நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ் :)

விலங்குப் பண்ணை -ஜார்ஜ் ஆர்வெல்
தமிழில்: பி.வி.ராமஸ்வாமி
கிழக்கு பதிப்பகம்
144 பக்கங்கள் / விலை. ரூ.85/-
இணையம் மூலம் வாங்க: கிழக்கு

5 Feb 2013

அன்சைஸ் by பா.ராகவன்


அன்சைஸ்
ஆசிரியர்: பா.ராகவன்
பக்கங்கள்: 166
விலை: ரூ.110
மதி நிலையம்.


விமானம் பறக்கத் தயாராகும்போது ஒரு அறிவிப்பு வரும். ”உங்க சீட்-பெல்ட்களை போட்டுக் கொள்ளவும்”. சரின்னு போட்டுக்குவோம். கொஞ்ச நேரம் போனபிறகு, சரி, இப்போ நிலைமை சரியாயிடுச்சு, உங்க சீட் பெல்ட்களை கழற்றி விடணும்னா விட்டுக்கலாம்னு சொல்வாங்க. பிறகு மறுபடி இறங்கும்போதும் அதே மாதிரி போட்டுக்கணும். அதே மாதிரிதான் இந்த புத்தகம் படிக்கும்போதும். விஷயத்தை சொல்றேன். மேலே படிங்க.

அன்சைஸ். பாராவின் கட்டுரைத் தொகுப்பு. மொத்தம் 25 கட்டுரைகள். ஒரே அமர்தலில் மொத்த புத்தகத்தையும் படிச்சி முடிச்சிடலாம். அட 160+ பக்கங்கள்தானேன்னு சொல்லக்கூடாது. அவை சுவாரசியமா இருப்பதால் அப்படி சொன்னேன்.

4 Feb 2013

என் பெயர் ராமசேஷன் – ஆதவன்



அமெரிக்க ஏகாதிபத்தியமா, விஸ்வரூபம் வெளியாகவில்லையா, ராஜா சிறந்தவரா ரகுமான் சிறந்தவரா, ஆணாதிக்கமா, பெண்ணியமா, எகிப்தில் புரட்சியா? இப்படி உலகத்தின் எந்தவொரு மூலையில் என்ன பிரச்சினை நடந்தாலும் அதைத் தீர்க்கக் கருத்துச்சொல்லும் அல்லது புரட்சி பண்ணும் ஒரு அறிவுஜீவிக் கூட்டத்தினிடையே வாழ்வதென்பதொரு சாபம். இக்கூட்டத்தில் விஷயமறிந்து பேசுவோர் சிலர் மட்டுமே. அத்தகைய சிலரின் கருத்துக்கள் பாராட்டத்தக்கவை. ஆனால் மேற்சொன்ன கூட்ட்த்தில் பெரும்பான்மையினர் எக்ஸிபிஷனிஸ்டுகள் அல்லது விளம்பரப் பிரியர்கள். இத்தகையதான ஒரு சூழலை வாய்க்கப் பெற்றவன் தினசரி வாழ்க்கையில் போலி அறிவுஜீவித்தனத்தின் வெளிப்பாடுகளாக வெற்று வார்த்தைப் போர்களைக் கடந்துசெல்லும் தருணத்தில் ஏற்படும் ஆயாசத்தையோ மனவிரக்தி அல்லது வெறுமையையோ தீர்க்க ஒரு நல்ல படமோ ஒரு புனைவோ ஒரு இசையோ போதாது. தாந்தான் இண்டலெக்சுவல் என தனக்குத்தானே நிறுவிக் கொண்டு, நன்றாய்ப் பேசத்தெரிந்த ஒரு கூட்டத்தின் மௌனம்கூட பேரிரைச்சலாய் நாராசமாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது காதுகளிலெப்போதும். நானிப்படியுணரும் எந்தச் சூழலிலும் மனதிற்கொரு நிம்மதி தருபவர் ஆதவன் மட்டுமே.

ஒரு விபத்தினைக் காணும்போதோ ஒரு ஆம்புலன்ஸ் கடந்து செல்லும்போதோ தானாகவே மனது பிழையாக ஒன்றும் இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்வது போல இத்தகைய போலி அறிவுஜீவிகளைக் கடந்து செல்லும் தருணத்தில் அனிச்சையாகவே கைகள் ஆதவனை எடுத்து வாசிக்கத் துவங்கியிருக்கின்றன. என்னளவில் இத்தகைய சங்கடங்களின் மீட்பராக ஆதவன் இருக்கிறார்.

இனி நாவலுக்குள் வருவோம். தன்னை நிறுவுதல் அல்லது அறிமுகம் செய்தல் என்பதொரு கலை. சிலர் பெயரைச் சொல்லுவார்கள், சிலர் குடும்பப் பின்னணியைச் சொல்லுவார்கள், சிலர் செய்யும் தொழிலைச் சொல்லுவார்கள். ஆனால் தன்னை ராமசேஷனாக அறிமுகம் செய்ய ஆதவனின் பிரயத்தனங்கள் இந்தப் புத்தகத்தின் முதல் வரியிலிருந்தே துவங்குகிறது. ராமசேஷனின் அறிமுகம் தன்மையிலிருந்து துவங்கவில்லை. தன் குடும்பம், தன் நண்பர்களிடமிருந்து துவங்குகிறார்.

அப்பாவை ஒரு சம்பிரதாயப் பிச்சு என்கிறார். கட்டிய மனைவியைவிட தாய்க்கும் சகோதரிக்கும் முக்கியத்துவம் கொடுக்குமொரு பழங்காலத்து ஆள். இருந்தாலும் மனைவி அவருக்கு உறவெனும்போது மட்டும் தேவைப்படுகிறார். மகனை மருமகள் கைக்குள் போட்டுவிடாதபடி அதிகாரம் செய்யும் பாட்டி, அவளிறந்தபின் அந்த அதிகாரம் தனக்கு வரவேண்டுமென நினைக்கும் அத்தை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தானொரு இஞ்சினியரின் தாயாக வேண்டுமென்று நினைக்கும் அம்மா.

ஆங்கிலமும் பணமும் இருப்பதானால் மட்டுமே தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்ளும் ராவ், வெறும் சினிமாவுக்காகவும் பணத்துக்காகவும் அவனிடம் நண்பனாக இருக்கும் மூர்த்தி எனும் விசுவாசநாய்என இத்தனை பேரின் முகமூடிகளையும் பாசாங்குகளையும் தோலுரித்து, இவைகள் யாவுமற்ற தானொரு இண்டலெக்சுவல் என்று தலைக்கு வரும் முதல் பவுன்சரியே சிக்சராக்கித் துவங்குகிறார். இருந்தும் ராவின் தங்கை மாலாவைக் காணும் தருணங்களின் தன் மனம் காமுறுவதைச் சுட்டி தானொரு அல்ஷேஷனாக மாறிவிடுவதாகவும் சொல்லுகிறார். தன்னியல்புகளில் தானே குறையுணரும் ஒரு புத்திசாலி.

உறவுகளில் இருக்கும் பாசாங்குகளைக் கட்டவிழ்க்கிறார். இயக்குனருக்கும் மிஸஸ்.ராவுக்கும் இடையே இருக்கும் உறவை அறிந்தபின் அவரிடம் நெருங்கும் சமயத்தில் அவளொரு சபலக்காரி என்று ஜட்ஜ்மெண்டலாக (தமிழில் என்ன?) முடிவெடுத்து நெருங்க அந்தச் சூழலை அவள் தன்வசமாக்கிக் கொள்கிறாள். தன் மகள் ஒரு போக்கிரியுடன் பழகுவதைத் தவிர்க்க நினைப்பவள் ராமசேஷனை ஒரு காமுகனாக்கி மகளிடம் பழகுவதைத் தடை செய்கிறாள். இந்தச் சூழலில் ஆணுக்கு காமம் எவ்வளவு பாதகம் என்றும் பெண்ணுக்கு அவளுடல் எவ்வளவு சாதகமென்றும் விளக்கியிருக்கிறார். அதே சமயம் பிரேமாவைக் கருப்பானவளாக சித்தரித்து அந்த மாதிரியான பெண்களிடத்தே இருக்கும் தாழ்வு மனப்பான்மையையும் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

இப்படியாகச் சில சம்பவங்களின் கோர்வைதான் நாவல் என்றாலும் சொல்லப்பட்ட விதமும் ஆளுமையும் தான் இதில் பிரதானம். தன்னை ஒரு காஸனோவாவாக நினைத்துக் கொள்ளும் ராமசேஷன் தோற்பதென்னவோ காமத்தின் முன்னிலையில் மட்டுமே. ராவுடன் ஏற்பட்ட ஈகோவில் பிரேமாவையும் விடுத்து பங்கஜம் மாமியிடம் போய் தோற்று நிற்கும்போது காமத்துக்கு இறைஞ்சுபவனாகவும், ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தில் தோற்றவனாகவும் தான் தெரிகிறான் ராமசேஷன். ஒரு பெண்ணுடல் ஆணுக்குள் செய்திடும் மாயையை எழுத்தில் கொணர்ந்திருக்கிறார், அவ்வளவுதான்.

கதவுகள் தாழிடப்பட்ட தனியறையிலாவது நாம் எப்போதும் சுமந்துகொண்டிருக்கும் கிரீடத்தையும், புத்திசாலியெனும் முகமூடியையும் ஒருவரும் அறியாதவாறு கழட்டிவைத்துவிட்டு எம்ப்டி த கப்என்று ஜென்னில் சொல்லுவார்களே அதுபோல நம்மை முன்னிலைப்படுத்தாமல் வாசிப்போமேயெனில் நல்லதொரு தரிசனம் கிட்டும் ஆதவனிடத்தே!

நாவல் | ஆதவன் | பக்கங்கள் 200 | விலை ரூ. 120 | இணையத்தில் வாங்க: கிழக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...