விருது வாங்கிய புத்தகங்கள் விற்பனையில் அடித்துப்பிடித்து சாதனை படைப்பது வழக்கம் தான். கடந்த புத்தக விழாவில் நாஞ்சில் நாடனின் `சூடிய பூ சூடற்க` சிறுகதை தொகுப்பு (அவருடைய ஆகச்சிறந்தது இல்லையென்றாலும்) விற்பனையில் அப்படிப்பட்ட சாதனையை படைத்தது. மற்ற மொழி புத்தகங்களின் விற்பனையைப் பார்க்கும்போது தமிழ் புனைவு புத்தக விற்பனை என்பதை சாதனை என்றெல்லாம் பெருமையாகப் பேசி விட முடியாது. ஏதோ, பத்து வருடங்களில் ஆயிரம் காப்பி போவதற்கு பதிலாக ஒரு வருடத்தில் மூவாயிரம் விற்றால் சாதனை தான். அப்படி விருது வாங்கிய பிறகு பிரபலமாகும் எழுத்துகளை நசுக்குவதற்கு `விமர்சகர்கள்` தயாராக இருப்பார்கள்.தமிழ் இலக்கிய சூழலுக்குள் வரும் வாசகனுக்கும், சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கும் கற்றுக்கொடுக்கப்படும் முதல் பாடம் - விருது வாங்கிவிட்டாலே, இலக்கிய தரம் குறைந்தது. ஒன்று எழுத்தாளர் சோடை போயிருக்க வேண்டும், அல்லது விருது வழங்கும் அமைப்பின் பிறப்பும் வளர்ச்சியும் சந்தேகத்துக்கிடமாக்கப்படும்.
எந்த மொழிச் சூழலும் இப்படிப்பட்ட சண்டைக்கு விலக்கல்ல. வெயிலும் மழையும் கூடி வந்த அப்படிப்பட்ட சுபநாளில் இயன் மக்வென் எனக்கு அறிமுகமானார். வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த எழுத்துகளைப் பற்றி விவாதிக்கும் இடமான குட்ரீட்ஸ் எனக்குப் பிடித்ததொரு இணையத்தளம். புத்தக மதிப்புரை என பெரிய எழுத்தாளரைக் கொண்டு எழுதப்படாமல், நம்மைப் போல சராசரி வாசகர்கள் சொல்லும் கருத்துகளைத் தொகுக்கும் தளம். பொதுவாக இங்கு அளிக்கப்படும் மதிப்பெண்கள் சோடை போவதில்லை.