A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

24 Nov 2017

கடல் குதிரைகள் - ஜானிஸ் பாரியாட்

‘ஒருகால்,இதன் பொருட்டே மக்கள் எப்போதும் எழுதுகிறார்கள் போலும். ஏனெனில் நாம் எப்போதும், மாற்றமே இல்லாமல், கற்பனைக்கு அப்பாற்பட்ட இழப்பின் விளிம்பிலேயே நிற்கிறோம்’- ஜானிஸ் பாரியாட், sea horses

Image result for seahorse janice pariat

கற்பனையின் திமில்களின் மீதேறி சறுக்கி விளையாடும் படைப்புகள், நிகழ்வுகளை பின்னிச் செல்லும் படைப்புகள் என இலக்கிய படைப்புகளை பொது புரிதலுக்காக இருவகையாய் வகுக்கலாம். செவ்வியல் மற்றும் பின் நவீனத்துவ எழுத்துக்கள் முந்தைய போக்கை பிரதிபலிக்கின்றன. உலக வாழ்வின் ஆதார இயங்குவிசையை கண்டடைந்து தங்கள் எழுத்துக்களில் வசப்படுத்த முயல்கின்றன. இரண்டாம் வகை எழுத்து தனி மனிதனின் பிடிவாதமான  காலத்துக்கு எதிரான போராட்டம். அணுவணுவாக அவனை அரித்து கண் முன் நழுவி செல்லும் காலத்தை ஒரு சட்டகத்தில் நிறுத்தும் பேராசையின் வெளிப்பாடு. தேவதச்சன் நேர்ப்பேச்சின் போது, ‘ வாயில் மென்று கொண்டிருக்கும் ஆரஞ்சு மிட்டாய் கரைந்து விடுமே என அஞ்சுவேன்,’ என்கிறார். கலைஞன் தன் வாழ்வின் இனிமைகளை, துயரங்களை காலத்துக்கு அப்பால் விட்டுச் செல்ல முனைகிறான். இவை வெறும் நினைவேக்க எழுத்துகள் என புறம் தள்ளிவிட முடியாது. ஜானிஸ் அதிகமும் இரண்டாம் வகையை சேர்ந்தவர். எனினும்கூட பரந்துபட்ட மெய்யியல் அறிதலும், அரசியல் நோக்கும், பரந்த இலக்கிய வாசிப்பும்  உள்ளவர் என்பது புலப்படுகிறது. அவருடைய சிறுகதைகளிலும் நாவலிலும் இத்தன்மையை நாம் அடையாளம் காண முடியும். ‘கலை படைப்புகள் உண்மையில் அழகிய தழும்புகள்’ என்று எழுத அவரால் முடிகிறது. 

19 Nov 2017

தேவகானம் - கவிக்கோ அப்துல் ரகுமான்


கனியும் நீ படைத்தனை 
கையும் நீ கொடுத்தனை 
கனியை நான் பறிக்கவும் 
கைய சைக்கச் செய்தனை 
கனியில் உள்ள சுவையும்நீ 
கனியை உண்ட மகிழ்வும்நீ 
கனியையா சுவைத்தனன்?
கனியுனைச் சுவைத்தனன் 




துவங்கும் முன்னதாகவே.....

1) சமீபத்தில் நான் வாசித்தவைகளுள் மிகச்சிறந்த புத்தகம் என்று இந்தப் புத்தகத்தைக் குறித்து உரக்கச் சொல்லுவேன்.

2) நல்ல கவிதைகளின் அபிமானிகள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது என்றும் பரிந்துரைப்பேன்.

3) மரபுக் கவிதைகளைப் பரிச்சயம் செய்ய விரும்புவோர் முயற்சி செய்ய வேண்டிய முக்கியப் புத்தகம் இது என்றும் சொல்லுவேன்.

4) இறைவன் இருக்கிறான்; அவன் ஒருவனே என்று நம்புபவர் நீங்கள் என்றால் இந்த புத்தக மதிப்புரை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். நேரடியாக நான் கீழே கொடுத்துள்ள சுட்டியைத் தட்டிப் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் துவங்கி விடுங்கள்.


--- x ---
பக்கத்திற்கு இரண்டு கானங்கள் என நூற்று எண்பது பக்கங்களுக்குத் திகட்டத் திகட்டத் தித்திக்கும் கவிதைகள். 

தேவனைப் பற்றிய கானங்கள் என நமக்குக் கிடைக்கும் இவை தனக்கு தேவனால் உணர்த்தப்பட்ட கானங்கள் என்கிறார் கவிக்கோ. 

ஒருவர்  ஒவ்வொரு புத்தகம் வாங்குவதற்கும் பின்னாலேயே கூட ஒரு கதை  இருக்கிறது என்று என் முந்தைய விமர்சனப் பதிவில் சொல்லியிருந்தேன். புத்தகம் வாங்கவே கதை உண்டு என்றால், புத்தகம் எழுதிட ஒரு சரித்திரமே இருக்கும் அல்லவா?

இந்தப் புத்தகம் எழுத ஏற்பட்ட உந்துதலை கவிக்கோ இப்படிச் சொல்லுகிறார்.

" சந்தையில் சாமான்கள் வாங்கி கொண்டிருந்த காலத்திலேயே எங்கிருந்தோ ஒரு புல்லாங்குழல் இசை என்னை அழைத்துக்  கொண்டே இருந்தது. 
சந்தையும் சாமான்களும் தேவைப்படாத காலம் வந்ததும் அந்தப் புல்லாங்குழல் இசை உரத்து ஒலித்தது. 
அதன் ஈர்ப்பைத் தவிர்க்க முடியாமல் நான் அந்த இசையின் மூலம் நோக்கிப் பயணம் புறப்பட்டேன்."

இப்படித்தான் துவங்குகிறது இந்தப் புத்தகத்தின் சரித்திரம். இந்தப் புத்தகம் உருவாகினதற்கான தேவை.

----x ---



ஒரு மாம்பழத்தைச் சுவைத்து முடித்தவனிடம், "என்னய்யா, பழம் எப்படி இருந்துச்சி?", என்று கேட்டால் என்ன சொல்லுவேன்?

"நல்லா இனிப்புங்க"

"மாம்பழம்ன்னாலே இனிப்புதானய்யா. அதென்ன புதுசா. பழம் எப்படி இருந்துச்சி. அத்தைச் சொல்லு"

"நல்லாதாங்க இருந்துச்சி"

"நல்லா-ன்னா எப்படிய்யா, அதைக் கொஞ்சம் விளக்கிச் சொல்லேன்", என்று கேட்டால் எப்படி ஒரு மாம்பழத்தின் சுவையை விவரிப்பேன்?

மல்கோவாவும், நீலம் மாம்பழமும் ஒன்றேவா? பூவனும் பேயனும் வெவ்வேறா?

இப்படித்தான் இந்தப் புத்தகம் முழுக்க விதம் விதமான மா, பலா, வாழை என சுவைக்கச் சுவைக்க வகைவகையாய் ஒவ்வொரு பக்கத்திலும்  இருந்து தேஞ்சுவையூறும் பாக்கள்; தேவகானங்கள்.
----x ---

சம்பவாமி யுகே யுகே என்று பகவத் கீதையில் சொல்லும் கிருஷ்ண பரமாத்மா யுகத்திற்கு ஒருக்கா புல்டோசர் எதனையேனும் கொண்டு வந்து லோகத்தைச் சமன் செய்து விட்டுப் போனால் என்ன,  வருடாவருடம் சென்னையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் இப்படி என்னத்திற்காய்ப் படுத்தியெடுக்கிறான்.  என்று யோசிப்பவனுக்கு...

அல்லவை தினம்தினம் 
அதிக மாகிப் பூமியில் 
நல்லவை குறைந்து ஞாலம் 
நலிவுறும் பொழுதெலாம் 
வல்லவன் பிறப்பெடுத்து 
வருவதில்லை நேரிலே 
வெல்லுகின்ற இயற்கையின் 
விதிஅதைச் செய்யுமே  

...என்கிறார் கவிக்கோ. 

----x ---

அன்பு செய்தல், கடவுள் மீதான காதல்,  அவனை எல்லாவற்றிலும் காணும் முயற்சி, அருளைத் தா தா என்னும் இறைஞ்சுதல், தான் பெற்றவைகளுக்கு நன்றி நவிலல், ஏற்றத் தாழ்வுகள் குறித்த கேள்விகள்,  கொடைத்தன்மையின் சிறப்பு என்று பலப்பல தலைப்புகளில் அழகான தமிழில், மரபுக்கவிதை வடிவில் முந்நூற்று சொச்ச கவிதைகள். 

காணும் கண்கள் தந்த உன்னைக் 
காணு கின்ற ஆசையால் 
காணும் காட்சி யாவி லும்.. என் 
கண்களால் துளாவினேன் 
காணும் காட்சி நானடா 
காணும் கண்ணும் நானடா 
காணும் பார்வை வந்திடின் 
காண்பை எங்கும் நீயென்றான் 


 கடவுள்  மறுப்புப் பேசுவோருக்கு அருகினில் உலாவி வந்தவர்தாம் கவிக்கோ. அவர்களையும் அங்கங்கே ஒரு பிடி பிடிக்கிறார்.

அறிவெனும் விளக்கொளிக்கு 
ஆண்டவன் அகப்படான் 
அறிவை நீ அணைத்திடின் 
அவனைக் காண லாகுமே  

----x ---

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என்கிறார் குலசேகர ஆழ்வார். திருவேங்கட மலையில் மலராகவோ, மரமாகவோ, உன் கோயிற்கதவாகவோ இல்லை உன் அடியார்கள் மேலேறி நடக்கும் படிக்கல்லாகவோ ஆகியுன்னை அனுதினம் கண்டு உய்வேன் என்கிறார் பெருமாள் திருமொழியில் குலசேகரர்.

செதுக்கி வைத்த கல்லாவதனினும், ஒதுக்கி வைத்த கல்லாய்க் கிடைக்க நினைக்கும் குலசேகரரின் இந்தப் பாடல் எனக்கு எப்போதும் ஓர் வியப்பே.

இந்தக் கருத்தின் இன்னொரு முகத்தை....

துதிக்கும் தெய்வம் எங்குமே 
தோன்றுவான் எனில்க ழித்து 
ஒதுக்கி வைத்த கல்லிலும் 
இருப்பன் அன்றோ ஈசனே 

...என்கிறார் கவிக்கோ.

----x ---

மரபுக் கவிதைகள்தாம் எனினும் நிரம்பவும் சிக்கலான வார்த்தைகள் கொண்டெல்லாம் கவிதைகளைப் புனையவில்லை கவிக்கோ என்பதனால் நல்ல தமிழ் வாசிக்கத் தெரிந்த எவரும் வாங்கி வாசிக்கும் வண்ணம்  உள்ள புத்தகம். கீழ்கண்ட முகவரியிலோ அல்லது உடுமலை பதிப்பகத்திலோ இந்தப் புத்தகத்தை வாங்கலாம்.

நேஷனல் பப்ளிஷர்ஸ், 2 வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17. 044-2834 3385 < national_publishers@yahoo.com >








2 Nov 2017

மண்புழுக்களின் தேசத்திலிருந்து எழுந்த ராஜநாகம்

தமிழ் புலம்பெயர் எழுத்துக்களை இரண்டாக வகைப்படுத்தலாம், தன் அடையாளங்களை கடந்து வேறொன்றாகும் முயற்சி, அதன் சிக்கல்கள் என்பது ஒரு வகை, தன் அடையாளத்தை இறுகப் பேணி தற்காத்துக்கொள்ளப் போராடுவது மற்றொரு வகை. முந்தைய எழுத்திற்கு மிகச்சிறந்த பிரதிநிதி அ. முத்துலிங்கம். இரண்டாம் போக்கை பிரதிநிதிப்படுத்தும் எழுத்தே மிகக் குறைவு. தெளிவத்தை ஜோசப்பை முன்னோடியாக கொண்டால், சீ. முத்துசாமி இவ்வரிசையில் அவருக்கு அடுத்த இடத்தை அடைபவர். 
Image result for மண்புழுக்கள் முத்துசாமி

2006 ஆம் ஆண்டு மலேசியாவில் நிகழ்ந்த நாவல் போட்டியில் முதற்பரிசு வென்ற நாவல் இது. முத்துசாமி 1970 களிலிருந்தே எழுதி வந்தாலும், ஏறத்தாழ இருபது வருடங்கள் இடைவெளிக்கு பிறகு எழுதிய நாவல். இவ்வகையிலும் கூட தெளிவத்தையுடன் ஒப்புமை உள்ளவரே. அவரும் சில ஆண்டுகள் எழுதாமல் மீண்டும் எழுத வந்தார். 

29 Oct 2017

ஜெயகாந்தனின் "உதயம்"





1954'ல் ஜெயகாந்தனின் இருபதாவது வயதில் அவர் எழுதிய கதைகள். 1956'ல் சிறுகதைத் தொகுப்பாக வெளியாகின்றது. நாற்பது ஆண்டுகள் மறுபதிப்பு காணாமல் 1996'ல் இரண்டாம் பாதிப்பு வெளியாகிறது. 

சத்யஜித் ரே'வின் பதேர் பாஞ்சாலி  குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். உயிர்மை வெளியீடாக வந்த அந்தப் புத்தகத்தில் எஸ்.ரா. இப்படி எழுதுகிறார்.
ஒவ்வொரு திரைப்படம்  குறித்தும் பார்வையாளனிடம்  மூன்று விதமான நினைவுகள் உள்ளன. ஒன்று அந்தத் திரைப்படம் காண்பதற்காகச் சென்றது. அதாவது எந்த ஊரில் எந்தத் திரையரங்கில் யாரோடு படம் பார்க்கச் சென்றோம், அப்போது என்ன வயது என்பது குறித்தது. இரண்டாவது அந்தத் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அது எந்த விதமான எதிர்வினையை உருவாக்கியது. அதில் எது பிடித்திருந்தது, எதை ரசிக்கவில்லை, என்பது போன்று திரைப்படத்தில் உருவாகும் நினைவுகள்.
மூன்றாவது அத்திரைப்படம் வேறு எதைஎதையெல்லாம் நினைவுபடுத்துகிறது.......

சில புத்தகங்களுக்கும் இப்படித்தானே? 

இப்போது ஆன்லைனில் புத்தகம் வாங்குவது என்று பெரும்பாலும் ஆகிவிட்டாலும் சில புத்தகங்களை வருடாந்திர புத்தக விழாவிற்காகவெனக் குறித்து வைத்துக் காத்திருந்து வாங்கும் வழக்கம் இன்றும் எனக்கு  உண்டு.

சில நேரங்களில் சில மனிதர்கள் வாங்க பணம் சேர்த்துக் கொண்டு மாதவரத்திலிருந்து சாந்தி தியேட்டர் வாசலில் இருக்கும் புத்தகக் கடைக்குப் போன கதை உண்டு. மோகமுள் வாங்க மிகவும் சிரமப்பட்டுப் பணம் சேர்த்து, வீட்டுக்குத் தெரியாமல் திருவல்லிக்கேணி வரை சென்று வாங்கி வந்த கதை உண்டு. தொண்ணூறுகளின் மத்தியில் நூற்று முப்பது ரூபாய் (என்று நினைவு) புத்தகம் என்று வீட்டில் சொன்னால் ஜோட்டால் அடிப்பார்கள் என்று மோகமுள் புத்தகத்தில் விலை குறிப்பிட்டிருந்த பக்கத்தை கிழித்த பிறகே வீடு நுழைந்தது ஒரு வரலாறு.

இன்றைக்கும் இப்படிச் சில புத்தகங்கள் நம் கைக்கு வந்து சேர்வதன் பின்னால் கதைகள் சில இருக்கவே செய்கின்றன. 

கவிக்கோ அப்துல் ரகுமான் யாப்பு வடிவில் எழுதிய  தேவகானம் புத்தகம் குறித்து சமீபத்தில் வலைப்பூ ஒன்றில் வாசித்து விட்டு அதை வாங்க ஒரு ஆன்லைன் தளத்திற்குச் சென்றேன்.  அங்கே "புயலிலே ஒரு தோணி"க்கு இணைப்பு கிடைக்க அதையும் வாங்குகிறேன் எனச் சுட்டியைச் சொடுக்கி மொத்தம் 480 ரூபாய்க்கு பில். முப்பது ரூபாய் டெலிவரி சார்ஜ் சேர்த்து 510 ரூபாயைக் கட்டினால் புத்தகத்தை அனுப்புகிறேன் என்றது அந்த இணையப் புத்தகத் தளம்.

ஐநூறு ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கினால் டெலிவரி இலவசம் என்ற அறிவிப்பு கண்ணில் பட, மிச்சம் இருபது ரூபாய்க்கு என்ன புத்தகம் கிடைக்கும் எனது தேடியதில் கண்ணில்  தட்டுப்பட்டதுதான் ஜெயகாந்தனின் "உதயம்". 2011 ஆம் வருடம் நான்காவது பதிப்பில் 40 ரூபாய் விலைக்குப் போட்டிருந்த புத்தகம் அது. மொத்த பில் தொகை 520 ருபாய் இப்போது. 10 ரூபாய் சேர்த்துத் தந்ததில் இன்னொரு புத்தகம் கைக்கு வந்ததில் பேருவகை கொண்டது மனம்.

இத்தொகுப்பில் உள்ள கதைகள் ஜெயகாந்தனின் பிற சிறுகதைத் தொகுப்புகள் எதிலும் வந்ததாகத் தெரியவில்லை.

நாற்பது நெடும் வருடங்களுக்குப் பின் அந்த இரண்டாம் பதிப்பிற்காக புத்தகத்தை ப்ரூஃப் பார்க்கும் ஜெயகாந்தனின் எண்ணவோட்டம் எப்படி இருந்திருக்கும் என்று நாம் யோசித்துக் கொண்டே  இப்புத்தகத்தை வாசிக்கத் துவங்குகையில், பெர்னார்ட் ஷா மற்றும் புதுமைப்பித்தன் இருவரின் இதே போன்ற அனுபவங்களைத் துணைக்கு அழைத்து தன் முன்னுரையில் தன் மனவோட்டம் குறித்து எழுதுகிறார் ஜெயகாந்தன். 


"சாந்தி பூமி" ஒரு உருவகக் கதை வகையறா என்று முன்னுரையில் ஜெயகாந்தனே குறிப்பிடுகிறார். அதாவது ஓபிஎஸ், ஈபிஎஸ், தமிழிசைகளை வைத்து ஒரு நையாண்டிக் கதையை யாரேனும்  எழுத, அதை அறுபது வருடங்கள் கழித்துப் படிப்பவர் ஒருவருக்கு என்னத்தைப் புரியுமோ அதேதான் உங்களுக்கும் புரியும். தொகுப்பின் முதற்கதையாக இந்தக் கதை இருந்துவிடுவதால் தொகுப்பிற்கு ஒரு ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இந்தக் கதை.

"சுமை பேதம்" கதை ஒரு இருபது வயதுக்காரர் பத்து வயதுகளுக்கு ஐம்பதுகளில் எழுதிய கதை எனலாம். "கண்ணன் பிறந்தான்" ஒரு "நல்லதோர் வீணை செய்தே வகையறா சோகக் கதை.

இந்த மூன்று கதைகளையும் கடந்த பின் ஜேகே சம்மர்சால்ட் அடித்து " உதயம், பிழைப்பு, மீனாட்சி ராஜ்ஜியம், காந்தி ராஜ்ஜியம்" என்று அடுத்த நான்கு கதைகளையும் தருகிறார்.

"உதயம்" - ஒரு இருபது வயசுப் பையன் இப்படியெல்லாம் எழுதுவானா என்று யோசிக்கும் விஷயங்கள் எல்லாம் கதையில் வருகின்றன.  நர்த்தனம் ஆடும் நாகராஜன். கலைக்கென காமத்தைத் துறந்த ஒருவன் கதை. கதையினில் நாகன் ஆடும் நர்த்தனத்தையும் விட, ஜேகேவின் வார்த்தை நர்த்தனங்கள் ஆஹாஹா!  இந்த ஒரு கதைக்கே ஃபுல் பைசா வசூல்.

அலுவலகத்தில் என் அணியில் (team) இருக்கும் ஒரு பையன் மூன்று வருடங்களுக்கு முன் தாய்லாந்து போய் வந்தான். இல்லையில்லை. நீங்கள் நினைப்பது இல்லை. யாரோ ஒரு ட்ராவல் ஏஜென்ட் ஒருத்தன் ஒன்றரை லட்சம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இவன் அங்கே போயிருக்கிறான். இறங்கின நேரத்தில் அந்த ஊர்ப் பணத்தில் நான்கு நாள் தின்ன மட்டுமே கையில் காசு இருந்ததாம்.

வேலையின்றி அன்ன ஆகாரமின்றி அல்லலுற்று ஒரு வட இந்தியனைச் சந்தித்து தட்டுத் தடுமாறி தனக்குத் தெரிந்த  ஹிந்தியில் தன் நிலை சொல்லி அவன் தயவில் தாயகம் திரும்பினானாம். இந்தக் கதையின் 1950'களின் மிகக்  கொடூரமான டிராஜிடி வடிவம் "பிழைப்பு". பிழைக்கச் செல்பவர்கள் செத்துப் போவது என்னவோர் முரண்! அது இன்றும் தொடர்வதுதான் முரண்களில் மூத்த முரண்.

"மீனாச்சி ராஜ்ஜியம்" உலகின் முதலும் மூத்ததுமான தொழில் ஒன்றில் ஈடுபடும் மீனாச்சியின் வாழ்க்கைக்குக் கோடு. இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும் என்பதான கேள்விகளுக்கு கதை நடுவில் ஒரு பதிலும் தருகிறார் ஜேகே.

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய "அனிமல் ஃபார்ம்" கதை இந்தியச் சாயலில் "காந்தி ராஜ்ஜியம்" என்று தொகுப்பின் கடைசிச் சிறுகதையாக. கதை உங்களுக்குத் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

தன் நூற்றைம்பது சிறுகதைகளை இருபது வருடங்களில் எழுதி முடித்த ஜெயகாந்தனின் முதற்பத்துக் கதைகளில் தேர்ந்தெடுத்த ஏழு கதைகள் இவை என்பதுதான் இந்தத் தொகுப்பின் சிறப்பு.

இந்தத் தொகுப்பு "உடுமலை" ஆன்லைனில் கிடைக்கிறது. அவசியம் வாங்கிப் படியுங்கள்.


20 Oct 2017

சைக்கிள் முனி - இரா.முருகன்



இரா.முருகன் "மூன்று விரல்" நாவலுக்கு பாஸ்கர் லஷ்மண் இங்கே முன்னமே விமர்சனம் எழுதியிருக்கிறார்.

சக்ரி டோலெட்டியின் இரண்டு திரைப்படங்களுக்கு இரா.முருகன் வசனம் எழுதியிருக்கிறார். அவற்றுள் ஒன்று நம்ம நாயகரின் "உன்னைப்போல் ஒருவன்" என்பதாலும், இன்னொன்று நான் திரையில் கண்டுகளித்த பில்லா-2 என்பதாலும் இத்தகவல் நமக்குப் பரிச்சயம்.

என் நெருங்கிய எழுத்தாள சீனியர் ஒருவர் பேச்சினூடே தன் அபிமான மற்றும் குருநாத ஸ்தானத்தில் இருப்பவர்கள் என்று இரண்டு பேரைக் குறிப்பிட்டார். அவர்களுள் இரா.முருகனும் ஒருவர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதற்கு முந்தைய சீசனுக்குத் தெரிவான அஷ்வின் முருகன் இரா.முருகனின் மகன்.

இவைதான் இரா.முருகன் குறித்து நான் இதுவரை அறிந்த தகவல்கள்.

2010 - 2011 சீசனில் கிழக்குப் பதிப்பகம் ஓட்டிய கிளியரன்ஸ் சேல் ஒன்றில் அள்ளிவந்த புத்தகங்களுள் "சைக்கிள் முனி"யும் ஒன்று. தலைப்பு தந்த சுவாரசியத்தில்தான் புத்தகத்தை வாங்கினேன் எனலாம்.

வழக்கம்போல நம்ம அலமாரியில் ரொம்ப நாளாய் உறங்கிக்  கொண்டிருந்த புத்தகத்தை இரண்டு காரணங்களால் வெளியே எடுத்தேன்.

ஒன்று - ஆன்றோர் சான்றோர் எல்லாம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க  ஆம்னிபஸ் தளத்தை என் பர்சனல் டொமைனில் இருந்து ஒரு தனி டொமைனுக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். < sasariri to Omnibusonline >. இப்படியேனும் ஆம்னிபஸ் தளம் மீண்டும் உயிர் பெறுகிறது.

இரண்டு: ஐம்பது புத்தகங்கள் சவால் ஒன்றை ஏற்றுள்ளேன். 50 புத்தகம் வாசியாது ட்வீட்டர் திரும்புவது இல்லை என. 

நான் கையில் எடுத்த முதற்பத்தில் சைக்கிள் முனியும் ஒன்று.

நூற்றைம்பது வார்த்தைகள் எழுதிவிட்டேன். இன்னும் புத்தகத்தைக் குறித்து ஒன்றும் பேசாமல் இருப்பது நியாயமில்லை, எனவே....


மொத்தம் பத்து சிறுகதைகள். பத்தாவது சிறுகதை மட்டும் நாற்பது பக்கங்களுக்கு நீளும் ஒரு நெடுங்கதை. 

டீமானிடைசேஷன், டிஜிட்டலைசேஷன், இந்த சேஷன் அந்த சேஷன் என்று குதிக்கிறோம். புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று ஒரு ஸ்டார் கொக்கரித்தார். பிரதமர் டீமானிட் தோல்வியென ஒப்புக்கொண்டு மன்னிப்பு  கேட்கவேண்டும் என்கிறார் இன்னொரு ஸ்டார். இந்த ஸ்டார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் இணையக் குளுவான். அந்த ஸ்டார் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார் பக்தர். 

டீமானிடைசேஷன் தந்த எதிர்மறைப்  பலாபலன்கள் படக்-படக் என்று செயலுக்கு வந்த இரண்டாம் தினத்திலேயே மக்களைத் தெருவுக்குத் தருவித்து  பல்லை இளித்து விட்டது. நேர்மறைப் பலன்களைத் தரிசிக்கத்தான் சில யுகங்கள் காத்திருக்க வேண்டும் என்று பக்த சிகாமணிகள் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

"சில்லு" சிறுகதை இந்த டீமானிடைசேஷனுக்கு நேர்மார். நேர்மறைப் பலாபலன் அனைத்தும் உடனே கிட்டிவிடுகிறது. எதிர்மறைப் பலன் இருபத்தைந்து வருடங்கழித்து நிகழ்கிறது. அறிவியல் புனைவுகள் வரிசையில் நல்ல சுவாரசியமான கதை. 

எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் டீ சாப்பிடப் போனவர், டீக்கடை வாசலில் வடையைக் கடித்துக் கொண்டு பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த போது அப்படியே பக்கவாட்டில் சரிந்தவர், பின் எழவேயில்லை, நெஞ்சுவலியில் நொடியில் மாண்டே போனார். அந்த மரணத்தை அந்த டீக்கடைக்காரர் என்றுமே மறக்கமாட்டார். பொருள் வாங்க வந்துவிட்டு மறக்கமுடியாத அனுபவத்தைத் தந்துவிட்டுப் போகும் வாடிக்கையாளர்கள் நூறுபேரை ஒவ்வொரு கடைக்காரரும் பார்க்கத்தான் செய்கிறார். ஆனால் இதுபோன்ற அனுபவத்தை எல்லாம் எப்படி மறக்க இயலும்? "

"சாயம்" சிறுகதை இப்படிச் செத்துப் போகும் ஒரு வெள்ளையனைத் தரிசிக்கும் ஆசிரியரின் அனுபவக் கதை.  

இந்தத் தொகுப்பில் ரொம்பவும் சுவாரசியக் கதை என்றால் அது "முக்காலி". உள்ளதில் கடினம் நகைச்சுவைக் கதைகள் எழுதுவதுதான்.

"பொறித்த, வெந்த நெருப்புக்கோழி சாப்பிடும் அகோரப் பசி அழகிகள், கோழி சைசில் பாதி இருக்கும் இவனை ஏடாகூடமாக ஏதாவது செய்துவிட்டால் என்ன ஆகும் என்ற திகிலோடு கணேசன் அவன்  நீட்டிய கையைக் குலுக்காமல் நின்றான்."

என்றும்....

"அற்ப சந்தோஷம் அடைந்த அவன் இனி ஆயுசுக்கும் கை அலம்புவான் என்று கணேசனுக்குத் தோன்றவில்லை " 

என்றெல்லாம் எழுதி செம்ம ஜாலியாக கலகலக்க வைக்கிறார் ஆசிரியர்.

"பாருக்குட்டி" ஏனோ "ஸ்ரீரங்கத்து தேவதைகளை நினைவுபடுத்துகிறது. இஸ்பிரேஷனாக இருக்கலாம்.

இப்படியெல்லாம் எழுதுவார்களா என்று நாம் யோசிக்கும் ஒரு கதைக்களம் "வாயு". நாற்பது பக்கங்களுக்கு குசு விடுவது பற்றிய ஒரு கதை. குசு விடும் போட்டி ஒன்றை நடத்துகிறது தொலைக்காட்சி வாய்க்கால் ஒன்று. யார் அயராது, அசராது குசு விடுகிறார்களோ அவருக்குப் பரிசுப்பணம். ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு காரணத்திற்காக போட்டிப்பணம் வெல்ல அங்கே வருகிறார்கள். மொச்சைக் கொட்டை தின்றுகொண்டே இருக்கிறார்கள். 

இப்படியெல்லாம் மேலைநாடுகளில் உண்மையிலேயே போட்டி நடக்குமா என்று யோசிக்கிறோம் நாம். நடந்தாலும் ஆச்சரியம் இல்லைதான். இருந்தாலும் இந்தக்கதை ஒரு அன்-ஆர்தடாக்ஸ் முயற்சிதான். இதுபோன்ற வேறு யாரும் எழுதிய அஆ கதைகள் குறித்து தெரிந்தால் சொல்லுங்கள் (பின்னூட்டத்தில்).

இந்தக் கதைகளில் பிரச்னை என்னவென்றால் இங்கே பாதிக்கதைகள் ஏதேனும் ஒரு வெளிநாட்டில் நடக்கின்றன. பெரும்பாலும் இங்கிலாந்தில். மூன்று விரல் நாவலின் கதைநாயகன் கூட தாய்லாந்து செல்வதாக பாஸ்கர் லஷ்மண் விமர்சனத்தில் எழுதுகிறார். இங்கேயும் ஒரு சிறுகதையில் ( முக்காலி ) கதையின் நாயகனின் பிழைப்பு தாய்லாந்தில் நடக்கிறது.

ட்வீட்டர் உலகினில் சண்முகம் என்றொரு அன்பர் இருக்கிறார். சமூகம், பூசாரி, ஜவ்வரிசி, வத்தல், வடாம் என்று தன் இணையப்பெயரை (twitter handle) அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார். ஒரு அதிதீவிர இளையராஜா ரசிகர் அவர்.  ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்பாடல்கள் வெளியாகும்போதெல்லாம், "பாட்டுல நேட்டிவிட்டியே இல்லைங்க" என்பார். 

அதுபோல. இங்கே வெளிநாட்டுப் பின்னணியில் கதைகள்  நிகழ்வதால் கதையுடன் நாம் செட்டில் ஆவதற்கு சற்றே நேரம் பிடிக்கிறது. நேட்டிவிட்டி இல்லை பாருங்கள். 

கூடவே இரா.முருகன் செய்யும்  சில தமிழ்ப்படுத்தல்கள்.

ஒரு இடத்தில் ரெஸ்டாரண்ட், ஆப்பிஸ், பாய் ப்ரெண்ட் என்ற வார்த்தைகளை அப்படியே உபயோகிக்கும் அவர் மற்றோரிடத்தில்  டிவி சேனல் என்பதை "தொலைக்காட்சி வாய்க்கால்" என்கிறார். 

அந்தக் கடைசிக் குசுக்கதையை வாசிக்கும்போது இணையத்தில் தங்கிலீஷில் எழுதும் கூட்டம் ஒன்று உள்ளது. ஆங்கிலத்தில் தமிழை எழுதுவார்கள். இதோ இங்கே கீழே இருக்கிறது பாருங்கள், வெகு சமீபத்தில் நான் வாசித்த ஒரு தங்கிலீஷ் பின்னூட்டம் இது - 

Onniyum pannamudiyaadhu aiyyaa... Sila unarvugal aazhmanadhilirundhu varavaendum illayael adhu varaadhu...... Ippozhudhudhaan tamizh azhivu enbadhu velaiyan nam naatirkku avanin pallikoodathai thinithu sendropodhar kural kuduthirukka vaendum pudhidhaaga samaskridhamo Hindi mozhiyo tamizhai azhikka iyalaadhu aangilam thaan ellorayum avaravarin thaai mozhiyaiy irandaam mozhi aakkaa kaaranam..... Idhuthaan arasiyal kaiyaalaagadha thanam.... Iniya Deepavali nalvaazhthukkal.... Ingu naam kettadhu erindhu nalladhu oliyaaga varavaendum enavum naragasuranin vadham Deepavali kondaadu kiroam.... Vadakku mattrum pira india pagudhikallil Diwali aagividugiradhu adhil Ramar Ayodhyavukku thirumbiyadhu kaaranamaaga kondaadapadugiradhu.... China thaan mudhalil pattaasugalai kandupidithanar adhan piraguthaan iroppargalum americargalum vedigundugalai kandupidithanar endru varalaaru..... 
இதை வாசித்து முடிப்பதற்குள் உங்களுக்கு ஒரு பெரும் ஆயாசம் உண்டாகிவிடும். அதுபோல் ஆகிவிட்டது எனக்கு "குசுக்கதை"யினை முழுவதும் வாசித்து முடிப்பதற்குள். சுவாரசியக் கதைக்களத்தில் அசுவாரஸ்ய கதை சொல்லல்.

மற்றபடி இந்தப் புத்தகத்தை வாசித்தவுடன் ஆசிரியரின் மற்ற புத்தகங்களை வாசிக்க ஆவல் மேலிடுவது உண்மைதான். என் பட்டியலில் அடுத்து இருப்பது "த்யூப்ளே வீதி". பார்ப்போம். 

2004 பதிப்பு 
168 பக்கங்கள் 
விலை: ரூ.60/-

7 Oct 2017

விலைகொடுத்து வாங்க முடியாத பேரனுபவங்கள் - மித்ரஜித் பட்டாச்சார்யா



 பெருநகரத்தில் வசிக்கும் பலரும் மணி பார்ப்பதற்காக கைக்கடிகாரத்தை பார்ப்பது என்பது மறந்து போய் எவ்வளவு வருடமாயிற்று! கடிகாரத்துக்கு சாவி கொடுப்பது என்பது இப்போதைய தலைமுறைக்கு புரியவைக்கக்கூட முடியுமா?  கடிகாரம் என்பது உபயோகம் சார்ந்த வஸ்து என்பது மாறிப்போய் பல ஆண்டுகள் ஆகின்றன. ஒரு சினிமாவில் மனோரமா கைக்கடிகாரம் கட்டிக்கொண்டு பக்கத்தில் நிற்கும் தன் உதவியாளரிடம், மணி என்ன இப்போ, என்று தனது கடிகாரத்தை காட்டி கேட்பார். மற்றொருவர், மணி பார்க்க தெரியவில்லை, உனக்கு எதற்கு கடிகாரம், என்பார். கடிகாரம் இருந்தா மணி பார்க்க தெரியணும்னு என்ன அவசியம்? கார் வச்சிருக்கறவன் டிரைவர் வச்சிக்கறது இல்லை? என்று வாச்சாலகமாய் பதில் சொல்வார் மனோரமா. இந்த நகைச்சுவை -  கொஞ்சம் உண்மை கலந்த ஒன்று.

மணி பார்ப்பதற்கு கடிகாரம் எதற்கு என்பதே இப்போதைய மாநகர புதுமொழி.



15 Sept 2017

The Master and Margarita - Mikhail Bulgakov

“எழுத்தாளர்கள் அடையாள அட்டையால் உருவாவதில்லை”- புல்ககாவ், Master and Margarita.

மிகேல் புல்ககாவ் எழுதிய நாவலான ‘Master and Margarita’ பற்றி தற்செயலாக அறிய நேர்ந்தது. இதற்கு முன் பரிச்சயமற்ற இந்நாவலை, இருபதாம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்று என விமர்சகர்கள் மதிப்பிடுகிறார்கள் எனும் தகவல் வாசிக்க வேண்டும் என்ற பெரும் ஆர்வம் அளித்தது. இந்நாவலை வாசிக்கத் துவங்கிய பின்னர்தான் ‘காலச்சுவடு’ நேர்காணலில் பா.வெங்கடேசன், தன் மீது தாக்கம் செலுத்திய படைப்புகளில் ஒன்றாக இதைக் குறிப்பிட்டிருந்ததை கவனித்தேன்.

ஆழ்ந்த கிறித்தவ மத நம்பிக்கை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் புல்ககாவ். ஸ்டாலினிய ரஷ்யாவில் வாழ்ந்தவர். மருத்துவர், நாடகாசிரியரும்கூட. ஸ்டாலின் அவர் மீது படைப்பாளியாக மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். பல்வேறு இக்கட்டுக்களின்போது ஸ்டாலினே நேரடியாகத் தலையிட்டு அவர் சிறை புகாமல் காத்திருக்கிறார். வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். பிற்காலத்தில் கிடைக்கப் பெற்ற ஆவணங்களில் சோவியத்தின் கடவுள் மறுப்பு புல்ககாவ் மனதை ஆழமாகத் தொந்தரவு செய்துள்ளது தெரிகிறது. “இயேசு  ஒரு இழிமகனாகவும், ஏமாற்றுக்காரனாகவும் சித்தரிக்கப்படுகிறார்... இந்தக் குற்றத்தை என்னவென்று அழைப்பது” என்று எழுதுகிறார். இந்நாவல் ஒருவகையில் அந்த உணர்வைச் சமன் செய்ய எழுதப்பட்டது என்றுகூட தோன்றுகிறது. கற்பிதம் என்றும் பிழையென்றும்கூடச் சுட்டலாம்தான், ஆனால் வாழ்விற்கு பொருள் அளிக்கும் வல்லமை இன்னும் பெருமளவில் மதத்தையும் கலையையுமே சார்ந்திருக்கிறது. மனிதனின் ஆன்மீகத்தை அவனிடமிருந்து பிடுங்கி அழிப்பது அவனுடைய வாழ்வர்த்தத்தையும் சேர்ந்தே அழிப்பதாகும். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்பான ரஷ்யாவை விவரிக்கும் ஸ்வெட்லானா அலெக்சியவிக் நாள்தோறும் தேவாலயங்களில் பெருகும் கூட்டத்தைப் பற்றி பதிவு செய்துள்ளார்.




1 Jan 2017

20ம் நூற்றாண்டின் கொடுங்கோல் வரலாறு- இடி அமீன்- ஸ்டீவ் டாக்வெர்தி


சமீபத்தில் உகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன் பற்றிய ஒரு ஆங்கிலப் புத்தகத்தை வாசித்தேன். "20ம் நூற்றாண்டின் கொடுங்கோல் வரலாறு- இடி அமீன்" என்ற அந்த புத்தகத்தை எழுதியவர் ஸ்டீவ் டாக்வெர்தி  (A Wicked History 20th Century, Idi Amin by Steve Dougherty).

தமிழக அரசியலில் ஹிட்லர், கோயபல்ஸ்க்கு அடுத்து அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட பெயர் இடி அமீனாகத்தான் இருக்கும். அந்த ஒரு ஆர்வத்திலேயே புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். பல திரைப்படங்கள் எடுக்கும் அளவுக்கு தகவல்கள். உடனே உள்ளே இழுத்துக் கொண்டது.




Related Posts Plugin for WordPress, Blogger...