A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

27 May 2014

அழியா அழல்

“அறம் என்ற சொல்லை அறியாத எவரும் இல்லை. அறமென்றால் எதுவென்று முழுதறிந்தவரும் இல்லை” – ஆஸ்திகன், முதற்கனல்
காவியத்திற்கும் இதிகாசத்திற்கும் நுட்பமான வேறுபாடுண்டு. இதிகாசம் எனும் சொல் ‘இது இப்படி நடந்தது’ என்பதை குறிக்கும். காவியம் லட்சிய மனிதர்களைக் காட்டுவதாகும். ராமாயணத்தை காவியம் என்றும் மகாபாரதத்தை இதிகாசம் என்றும் வரையறை செய்யலாம். பாரதத்தின் மாந்தர்கள் கூர்மையானவர்கள் கட்டற்ற அதிகார விழைவும் காமமும் கொண்டவர்கள், குரோதத்தின், வன்மத்தின் பெருநெருப்பில் தங்களையே அவியாக்கிக் கொண்டவர்கள். காவிய நாயகர்கள் லட்சிய குணங்களுடன் காவிய தருணங்களில் வாழ்பவர்கள். இதிகாச மாந்தர்கள் மானுட குணம் கொண்டு காவிய தருணங்களில் வாழ்பவர்கள். அதன் காரணமாகவே நமக்கு மிகவும் நெருக்கமானவர்களும் கூட. 





சில ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஏன் பாரதம் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுகிறது? பெரும் கலைஞர்களை தன்னகத்தே ஈர்த்துக்கொண்டே இருக்கிறது? காலந்தோறும் மீண்டும் மீண்டும் எழுதப்படுவதற்கான காரணம் என்ன? ஜெயமோகன் எழுதும் வெண்முரசு தொடர் நாவல் வரிசையில் முதல் நாவலாக வெளிவந்திருக்கும் முதற்கனல் நாவலின் முன்னுரையில் பாரதத்தின் தனிசிறப்பை கச்சிதமாக முன்வைக்கிறார் “அத்துடன் என்றும் மனிதகுலம் எதிர்கொள்ளும் அடிப்படையான அறக்கேள்விகள் அனைத்தையும் அது ஆராய்கிறது. அழியாத ஞானத்தை அவற்றுக்கான விடைகளாக அளிக்கிறது. அந்த ஞானத்தை நோக்கிச்சென்ற மாமனிதர்களின் உணர்ச்சிகளையும் தேடல்களையும் மோதல்களையும் வீழ்ச்சிகளையும் மீட்புகளையும் சித்தரிக்கிறது. ஆகவே ஒரு ஞானநூலாகவும் பேரிலக்கியமாகவும் ஒரே சமயம் திகழ்கிறது. சென்றகால வரலாறாகவும் இன்றைய வாழ்க்கையாகவும் உள்ளது.”

வியாச பாரதத்தை பத்து தொடர் நாவல்களாக வெண்முரசு எனும் பொது தலைப்பின் கீழ் எழுதத் தொடங்கியிருக்கிறார் ஜெயமோகன். ஐம்பது பகுதிகளும் பத்து அத்தியாயங்களும் கொண்ட முதற்கனல் எனும் வெண்முரசு தொடரின் முதல் நாவல் முடிந்து இரண்டாம் நாவலான மழைபாடல் எண்பது பகுதிகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது

செவ்வியல் காவியத்தை, இதிகாசத்தை, மறு உருவாக்கம் செய்வதன் அடிப்படை விதிகள் என்ன? ஆதார கதை தருணங்களை மாற்றாமல் அந்நிகழ்வுகளை புதிய கோணங்களில் அணுகி, அதன் பின்புலங்களை கற்பனையால் விரித்து, கதை மாந்தர்களின் உள் மன உணர்வுகளின் மீது வெளிச்சம் பாய்ச்சி புதிய ஒன்றை உருவாக்க முடியும். என்னளவில் நான் வாசித்த எம்.டி.வாசுதேவநாயரின் இரண்டாம் இடமும், பி.கே. பாலகிருஷ்ணனின் ‘இனி நான் உறங்கட்டும்’ நாவலும் யதார்த்தவாத எழுத்துக்களின் எல்லையில் நின்று பாரதத்தை அணுகுகின்றன. பாரதம் கட்டற்ற கற்பனை எனும் மதகரி மீதேறி பவனி வருகிறது. பாரதம் முழுக்க யதார்த்த வாழ்வின் தர்க்கங்களால் விளங்கிக் கொள்ள இயலாத அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன. வாழ்வை பற்றி  நம்முள் உறைந்திருக்கும் தொன்மையான பழங்குடி மனிதன் கொள்ளும் பெருவியப்புதான் அற்புதங்களையும் அதிசயங்களையும் புனைகிறது. இந்திய செவ்வியல் ஆக்கங்கள் அற்புதங்களைத் தவிர்த்ததில்லை. அதுவும் பாரதம் போன்ற செவ்வியல் ஆக்கங்களில் அவை முக்கியமான கதை தருணங்களும்கூட. ஆழ்ந்த குறியீட்டு தன்மையும் அவைகளுக்கு உண்டு. அதேவேளை, பாரதத்தின் தரத்திற்கு பொருந்தாத தட்டையான, அபத்தமான பிற்சேர்க்கைக் கதைகளை கையாள்வதில் கவனம் தேவை. ப்ருகு குல பிராமணர்கள் பல முற்பிறவி கதைகளை இட்டுக் கட்டி குல மேட்டிமையை நிலைநிறுத்த முயன்றனர் என்று ஐராவதி கார்வே அவருடைய யுகாந்தா நூலில் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையில் ஒரு சமநிலை பேணப்பட வேண்டும். முதற்கனல் அதை கச்சிதமாக பேணுகிறது. ஜெயமோகன் இதை புராண யதார்த்த வாதம் என்கிறார்.

விநாயகர் ஒற்றைக் கொம்பொடித்து வியாசர் சொல்ல பாரதம் எழுதினார் என்பது தொன்மம். முதற்கனலில். இப்புராண தருணத்துக்கு அற்புதமான கவித்துவம்கூடிய யதார்த்த வார்ப்பு அளித்திருக்கிறார் ஜெயமோகன்  “புதர்களை விலக்கி வந்த மதகளிறு ஒன்று தலைகுலுக்கி, காதுகளை விசிறி, துதிக்கை சுழற்றி, ஓங்காரமெனப் பிளிறி, அவர் இருந்த கல்லாலமரத்தைக் குத்தியது. திரும்பித் தலையை எடுத்து மேலும் இருமுறை ஓங்காரமெழுப்பி அது பின்வாங்கியபோது அதன் தந்தங்களில் ஒன்று ஒடிந்து மரத்தில் பதிந்திருப்பதைக் கண்டார் மகாவியாசர். அதை எடுத்து சிவந்த மென்மணல் விரிந்த கதுப்பில் ஓம் என எழுதினர். அதுவே அவருடைய காவியத்தின் முதல் சொல்லாக அமைந்தது.” 

மற்றுமொரு தருணத்தையும் குறிப்பிடலாம் ஜனமேஜயன் முன்னின்று நடத்தும் சர்ப்ப சத்ர வேள்வியில் நாகங்கள் அவியாக்கப்பட்டபோது அரச நாகங்களான தட்சகனும் தட்சகியும் இந்திரனிடம் சரண் புகுந்துவிடுவார்கள். ஜனமேஜயன் இந்திரனை சிறைபிடிக்க வேதியர்களுக்கு அறைகூவல் விடுப்பான். வைசம்பாயனர் எல்லாவற்றையும் அவியளித்து இந்திரனை விளிப்பார்.

“இந்திரனே, எங்கள் வேள்வி முழுமையடைந்தது என்றால் இங்கே வேள்வித்தூணாக நடப்பட்டிருக்கும் அத்திமரக்கிளையில் வந்து நில்!” எனக் கூவினார். அப்போது வானம் இடியொலியுடன் பிளக்க மின்னலின் பாதை ஒன்று மண்ணுக்கிறங்கியது. அந்த மின்னல் தீண்டிய அத்திமரம் எரிய ஆரம்பித்தது. வைசம்பாயனர் “இதோ இந்திரன் அத்தி மரத்திலே கட்டப்பட்டு நிற்கிறான்” என்றார்.” இந்திரன் வேத கடவுள். அவனின் வஜ்ராயுதம் மின்னலாக ஒளிர்கிறது. இந்த குறியீடை ஜெயமோகன் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார்.

 நாவல் ஜனமேஜயனின் சர்ப்ப சத்ர வேள்வியில் துவங்கி வியாசரின் காவியம் வழியாக பயணிக்கிறது. சந்தனுவின் மரணம், விசித்திரவீரியனுக்காக பீஷ்மர் காசி இளவரசிகளை கவர்ந்து வருவது, பேரன்பு கசந்து கொற்றவையாகி காடேகும் அம்பை. விசித்திரவீரியனின் மரணம், அம்பிகை அவன் மீது கொண்ட காதல், வியாசரின் உதவியுடன் நியோக முறையில் அம்பிகையும் அம்பாலிகையும் கர்ப்பம் தரித்தல், அம்பை தீ புகுதல், சிகண்டியின் எழுச்சி என்று விரிகிறது கதை. சத்தியவதி, பீஷ்மர், வியாசர், அம்பை, அம்பாலிகை, விசித்திரவீரியன், சிகண்டி ஆகியவர்கள் நாவலின் முக்கிய பாத்திரங்கள்.     

ஜெயமோகன் முன்னுரையில் “மகாபாரதத்தின் மாபெரும் கதை மாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது.” என்று எழுதுகிறார். இந்நாவலில் சித்தரிக்கப்படும் விசித்திரவீரியன் இதற்கொரு உதாரணம். நோய்மையின் துன்பத்தில் உழலும் அவனிடத்தில்தான் எத்தனை தெளிவு! ஆதுரசாலையில் வாழ்வின் பெரும் பகுதியை கழித்து வெளியுலகையே அறியாதவன்தான் அதிகபட்ச அக விடுதலையை அனுபவிக்கிறான். நேற்றைச் சுமந்து வருந்தவும் நாளையை எண்ணி கவலையுறவும் அவனுக்கு நேரமில்லை. இன்றில் மட்டுமே நிலைத்திருக்கும் வரம் பெற்றவன். தன் வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மனிதர்களின் உள்ளத்திலும் அவனளித்த பிரியத்தாலும் கனிவாலும் என்றென்றைக்கும் வாழ்கிறான். அம்பிகையின் காதல் கணவனாக, அம்பாலிகையின் களி தோழனாக, ஸ்தானகரின் ஆப்த நண்பனாக, அன்னையின் மனம்  கவர்ந்த மகனாக, மருத்துவர்களுக்கு மனம் ஒப்பி ஒத்துழைக்கும் நோயாளியாக அந்த சிறு வாழ்வில் அவன் ஏற்ற அத்தனை பாத்திரங்களிலும் பூரணத்தை எட்டியவன்.

அம்பிகை. அம்பாலிகை குறித்து விரிவான சித்திரம் வருகிறது. குறிப்பாக அம்பிகையின் ஆளுமை பூரணமாக வெளிப்படுகிறது. அதிகம் அறியப்படாத பாத்திரங்களான பால்ஹிகர், காசி அரசி புராவதி, அக்னிவேசர் போன்றவர்கள் கூட நிறைவாக உருவாகி இருக்கிறார்கள். விதுரனின் அன்னை ஒரு சூதபெண் என்பதை தாண்டி எந்த தகவலும் வியாச பாரதத்தில் இல்லை. ஆனால் முதற்கனலில் சேடியாக வரும் சிவையின் ஆளுமையும் அவளின் மனக் குழப்பங்களும் தெளிவாக பதிவாகியுள்ளன. ஆம், இது நவீன ஜனநாயக யுகம், இங்கே எல்லா குரல்களுக்கும் இடமுண்டு, எல்லா குரல்களிலும் ஒரு நியாயமும் உண்டு. மாபெரும் வீரனுக்கு சொல்வதற்கு என்னவுண்டோ அப்படி ஆண்மையற்ற நோயாளிக்கும் சொல்வதற்கு ஏதோ ஒன்றுண்டு. இது வெற்றியடைந்தவர்களின் சாகச கதைகள் மட்டுமல்ல. ‘ஜெயம்’ ‘மகாபாரதம்’ ஆன போதே வீரகதை யுகத்திலிருந்து வெகுவாக நகர்ந்துவிட்டது. வெற்றியடைந்தவன் பெறும் வெறுமையையும் அதை அடையமுடியாதவனுக்குக் கிட்டிய ஞானத்தையும் பாரதம் பேசுகிறது.

சிறிய கதைமாந்தர்களின் விரிவாக்கம் என்பது ஒரு புறம் இருந்தாலும் ஜெயமோகன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள் அற்புதமாக உருபெற்று கதை தருணங்களில் ஒளிர்கின்றன. மாபெரும் ஆளுமைகளைத் தவிர்த்து அணுக்க சேடிகளின், அமைச்சர்களின், சூதர்களின் பார்வையில் மட்டும் இக்கதையை வாசிக்கவும் இடமுண்டு. அவர்கள் பாரதத்தின் பெரும் ஆளுமைகளின் பிரதிபிம்பங்களாக, ஆடிகளாக, விமர்சகர்களாக வருகிறார்கள். உதாரணமாக விசித்திரவீரியனின் ஆப்தராக வரும் ஸ்தானகரின் பாத்திரம். ஸ்தானகருக்கும் விசித்திரவீரியனுக்கும் இடையிலான உரையாடல்கள் ஒவ்வொன்றும் நம்மை புன்முறுவல் பூக்க செய்கின்றன. அவருடன் மரணத்தை கூட விவாதிக்க விசித்திரவீரியனால் முடிந்திருக்கிறது. சத்யவதியின் அணுக்க சேடியாக வரும் சியாமை சத்தியவதியின் நிழலாக நாவல் முழுவதும் தொடர்ந்து வருகிறாள். அவளின் உள்ளத்தை அறிந்தவளாகவும் தவறாத நிதானமும் தேர்ந்த அரச மதிசூழ்கை ஆலோசகராகவும் இருக்கிறாள். பீஷ்மர் எப்போதும் தனிமையில் இருந்தாலும் அவருடைய முதன்மை சீடன் ஹரிசேனன் அவரிலிருந்து விலகி நின்று அவரை நோக்கியபடியே இருக்கிறான்.  

ஜெயமோகனின் நாவல்களில் குரு எனும் ஆளுமை எப்போதும் தெளிந்த ஞானம் அளிக்கும் சமநிலையிலிருந்து பிறழாதவர்களாகத்தான் இருப்பார்கள். இந்நாவலில் விசித்திரவீரியனுக்கு வைத்தியம் செய்ய தென்னகத்திலிருந்து வருகிறார் அகஸ்தியர், அகஸ்தியர் எனக்கு விஷ்ணுபுரத்தின் ஆயுர்வேதி கணதேவரை நினைவுபடுத்தினார் வியாசனுக்கு ஆசானாகும் தென்மதுரை பெருஞ்சாத்தன், சிகண்டிக்கும் துரோணருக்கும் திருஷ்டத்யும்ணனுக்கும் வில்வித்தை பயிற்றுவிக்கும் க்ஷத்ரிய குல தனுர்வேத ஞானி அக்னிவேசர், மூர்க்கமாக அம்பு தொடுக்கும் சிகண்டியை எதிர்கொள்ளும் அக்னிவேசர் காலூன்றி சமநிலை தவறாமல் நிகழ்த்தியது ஒரு நடனம். வியாசனுக்கு மைந்தனாய் பிறந்து தந்தைக்கு குருவான சுகன், தனக்குள்ளிருக்கும் இசையில் லயித்து அதை யாழில் மீட்கும் முதுசூதர் தீர்க்கசியாமர் ஆகியவர்கள் அத்தகையவர்கள். உலகியலுக்கு அப்பால் அவர்களின் விழி என்றென்றைக்கும் உள்ளவற்றின் மீது நிலைத்திருக்கும். காலம் அவர்களுக்கு எத்திசையிலும் புலப்படும் சமவெளி. தாங்கள் கண்டடைந்த ஞானத்தின் சிறு துளிகளை சொற்களில் ஏற்ற தெரிந்தவர்கள் அவர்கள்.

பீஷ்மருக்கும் வியாசருக்கும் ஞானத்தின் தருணங்களும் அகம் கொந்தளிக்கும் கணங்களும் உண்டு. பெருங்காதலுடன் வரும் அம்பையை நோகடித்து அனுப்பும்போது அவருள் உறையும் புன்னகை பீஷ்மரின் அந்தரங்கத்தின் மிகக் குரூரமான பகுதியின் வெளிப்பாடு என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் அதே பீஷ்மர் தான் பெருந்தோள்களுடன் கதை சுழற்றி வந்த சிற்றப்பா பால்ஹிகரை தொழுதுவிட்டு துவந்த யுத்தத்தை தொடங்குகிறார். காசி நாட்டு இளவரசிகளை கைபற்றிவரும்போது பீஷ்மரின் வில்வித்தை நடனமாகத்தான் தோற்றமளிக்கிறது. தன்னைக் கொல்ல வரும் சிகண்டிக்கு பூரண ஆசியளித்து தானறிந்த வில்வித்தையை அவனுக்கு அளிக்கிறார். தனது தந்தைக்கு தாதையாகும் பெரும் பேறு பெற்றவராகிறார். பீஷ்மர் எனும் மகத்தான ஆளுமையை பற்றி சொல்லும்போது “ஒரு கணமேனும் தன்னைப்பற்றி நினையாதவர்களுக்கு மட்டுமே உரிய கருணை நிறைந்த புன்னகை கொண்டிருந்தான்” என்று எழுதுகிறார். இந்த ஒற்றைவரியின் ஆழமும் விரிவும் பிரமிக்க வைப்பது.

ஜெயமோகனின் எழுத்துலகில் எப்போதும் எல்லா உன்னதங்களையும் மகத்துவங்களையும் தீவிரமான தருணங்களையும் தலைகீழாக  சட்டென்று புரட்டிப் போடும் பகுதி ஒன்று வரும். எல்லா தீவிரத்தையும் பகடி செய்யும் ஒரு குரலும் படைப்பில் ஒலிக்கும். பின்தொடரும் நிழலின் குரலில் வரும் அபத்த நாடகம். புறப்பாடு தொடரின் இறுதி அத்தியாயம், விஷ்ணுபுரத்து சுமத்திரனின் ப்ரஹசனம். இன்றைய காந்தி எழுதி முடித்த பின்னர் சுடப்பட்டு இறப்பது எப்படி என்ற காந்தியை பற்றிய பகடி கட்டுரை என பலவற்றை சுட்டி காட்டலாம்.    கங்கை மைந்தன் பீஷ்மரின் பிறப்பை பற்றி விடம்பன் எனும் சூதன் பாடும் பகுதி அத்தகையது. அவன் பாடும் ராம கதை பகடியின் உச்சம். “பீஷ்மரின் கதை கேளுங்கள். அவர் இந்த அஸ்தினாபுரியை அவரே உருவாக்கும் ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றும் பாதுகாவலர் அல்லவா?” எத்தனை சத்தியம்! பீஷ்மரும் அவரது ஏழு சகோதரர்களிலும் தீஞ்சொல்லின் காரணத்தினால் மண்ணில் பிறந்த அஷ்ட வசுக்களில் புவியில் எஞ்சியவன் பீஷ்மன். கங்கை தாயின் கையை கடித்ததால் அவள் அவனுக்கு தீஞ்சொல்லும் பின்னர் சொல் மீட்சியும் அளிக்கிறாள். “நீ செய்யும் தீமைகளை முழுக்க நல்ல நோக்குடனேயே செய்வாய். ஆகவே உனக்கு எப்பாவமும் சேராது, நீ பிறவியறுப்பாய்” என்று பீஷ்மரின் வாழ்வின் சாராம்சத்தைப் போகிறபோக்கில் லகுவாகச் சொல்லிவிட முடிகிறது. மரித்த தன் ஏழு சகோதரர்களின் ஒற்றை உடல் பீஷ்மர். ஓங்கி நிற்கும் மலைச் சிகரத்தின் தனிமையை தன் வாழ்வாக கொண்டவர். 

“இதிலுள்ளவை வேறு இடங்களிலும் இருக்கக்கூடும், இதில் இல்லாதது எதிலுமே இருக்காது” – வியாச பாரதம் ஆதி பர்வம்.

பாரதம் பண்டைய இந்தியாவின் பண்பாட்டு களஞ்சியம். நீதி நெறிகள், சமூக அமைப்பு தொடங்கி நிலவியல் வரை பல்வேறு குறிப்புகள் அதிலுள்ளன. ஜெயமோகன் ஒரு பெரும் பயணி. இந்திய தேசமெங்கும் தேசாந்திரியாக சுற்றித் திரிந்தவர். இப்பயண அனுபவங்கள் நாவலின் நிலவியல் சித்திரங்களுக்கு உயிரளிக்கின்றன. ஆந்திரத்தின் ஸ்ரீ சைலம் (மானசாதேவி, ஆஸ்திகன் வாழும் நாகர் குல கிராமம்), பஞ்சாப் (சப்தசிந்து கரை), பாகிஸ்தானின் முல்தான் (ஹம்சபுரம்), பாலை பிரதேசமான சிபி தேசம் (பலூசிஸ்தான் பகுதி), பனிமூடிய இமயமலை அடிவாரம், காசி, கங்கைக்கரை பிரதேசங்கள், யமுனைக்கரை பிரதேசங்கள், விந்திய மலை தொடர்களுக்கு அப்பால் உள்ள சுகாசாரி மலை, பாஞ்சாலம், கங்கநாடு என நுட்பமான நிலகாட்சிகள் காணக் கிடைக்கின்றன.

கதை, நிலக்காட்சி மட்டுமின்றி புதிய சொற்களுக்காகவும் இந்நூல் வாசிக்கப்பட வேண்டும். நாவல் முழுக்க புதிய சொற்களை உருவாக்கிக்கொண்டே வருகிறார். labour ward எனும் ஆங்கில சொல்லுக்கு நிகராக ஈற்றரை என்பதை பயன்படுத்தலாம், மவுன விரதம் என்று பொதுவாக நாம் விளிக்கும் சொல்லுக்கு மாற்றாக பேசாநெறி என்பதை பயன்படுத்தி இருப்பார். ஜாதகம் எனும் வடமொழி சொல்லுக்கு ஈடாக பிறவிநூல் எனும் பயன்பாடு, பரவலாக ஒப்பனை அறை எனும் பயன்பாட்டிற்கு மாற்றாக அணியறை எனும் பயன்பாடு, பாற்கடலுக்கு மாற்றாக பாலாழி ஆகியவைகள் கவனிக்கத்தக்கவை. மனசாட்சி எனும் சொல்லை காட்டிலும் அகச்சான்று எனும் பயன்பாடு வெகு பொருத்தமாக இருக்கிறது. நிமித்தகர்கள் பயன்படுத்தும் பிரஸ்ன மண்டலம் எனும் சொல்லிற்கு மாற்றாக வினாகளம் எனும் சொல், ப்ரத்யக்ஷம் மற்றும் அனுமான பிரமாணங்களை தமிழில் முதலறிதல் என்றும் உய்த்தறிதல் என்றும் குறிப்பிடுகிறார்.  காரியல்பு, வெண்ணியல்பு போன்ற சொற்கள் தமோ குணத்தையும் சத்வ குணத்தையும் குறிக்கின்றன. தட்சகன் பரீக்ஷித் மகராஜனை சிறு புழுவாக பழத்தில் புகுந்து கடிக்கும் போது பயன்படுத்திய சொல்  விஷமுத்தம். விஷமுத்தம் எத்தனை அழகான, வீரியமான சொற்பிரயோகம்! கனிவும் குரூரமும் ஒருசேர அமைந்த அபூர்வமான சொல். 

நாவலில் இடம்பெற்றுள்ள உபகதைகள் அதன் சொல் நேர்த்தியாலும்,  குறியீட்டு தன்மையாலும் அவை சொல்லப்படும் தருணத்துடன் இருக்கும் நுட்பமான பிணைப்பாலும் கவனிக்கதக்கவையாக ஆகின்றன. இவ்வகை கதைகள் வாய்மொழி கதையாடலில் தனித்த தேர்ச்சி உடையவர்களான சூதர்களால் பெரும்பொழுது பாடப்படுகின்றன. நாகர் குல சூதர்களின் கதைகள் கூடுதல் மாந்த்ரீக தன்மை உடையவைகளாக இருக்கின்றன. நாகினிகளும் நாக சூதர்களும் நிமித்தகர்களாகவும், சன்னதத்தால் ஆட்கொள்ளப் பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

புராண -  தொன்ம கதைகள், பஞ்சதத்திர பாணி விலங்கின கதைகள், மற்றும் குல கதைகள் என மூன்று பொது வரையறைகளுக்குள் உபகதைகளை அடக்கிவிடலாம். இவை ஒரு பொது வடிவம் என்ற அளவில் மட்டுமே பொருந்தும், இவ்வரையறைகளை மீறி செல்லும் கதைகளும் உண்டு. தாட்சாயாணி, சாவித்திரி- சத்யவான், மகிஷாசுர வதம், சந்திரனின் கதைகள், போன்றவற்றை முதல் வகைப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். அம்பையின் கதையுடன் இணைந்து தாட்சாயினி கதை வாசிக்கப்படும்போது அதன் அடர்த்தி கூடுகிறது. பரசுராமன் – ரேணுகா தேவியின் கதை சித்ராங்கதன் நினைவுகளை ஒட்டி சொல்லப்படுகிறது. சித்திரம் போல அங்கம் கொண்டவன், தன்னுள் ஆழ்ந்திருப்பவன். ஒரு சுனை நீருக்குள் அதே பெயர் கொண்ட கந்தர்வனால் கொண்டு செல்லப்படுகிறான். பரசு த்வஜன் எனும் கந்தர்வனின் நிழலைக் கண்ட ரேணுகையை பரசுராமன் கொல்கிறான். சத்யவதி கனவு கண்ட சித்ராங்கதன் எனும் கந்தர்வன் அவள் மகன் சித்ராங்கதனை கொன்று விடுகிறான். அம்பிகை சத்யவான் – சாவித்திரியின் கதையை விசித்திரவீரியனிடம் கூறுகிறாள். சாவித்திரி ஒவ்வொன்றாக துறந்து,  விடாமல் காலனை பின்தொடர்ந்து சத்தியவானின் உயிருக்காக மன்றாடுகிறாள். மூன்றுவிதமான நதிகளை கடக்கிறாள். இறுதியில் தர்மனின் ஆசியுடன் சத்தியவானையும் அவனுக்காக இழந்தவற்றையும் பெறுகிறாள். அப்போது விசித்திரவீரியன் அவளிடம் கேட்கிறான் “தலைமுறைகளாக நம் மனைவியர் சாவித்திரி நோன்பு கொள்கிறார்களே. அவர்களெல்லாம் எதை விட மறுக்கிறார்கள்?”

மூன்றாவது நதியான பிரஞாவதியை கடக்க முடியாது என்று அம்பிகை உணர்கிறாள். அதில் பிறக்கப்போகும் சந்ததிகளை இழக்க வேண்டும். தன்னால் ஒருபோதும் குழந்தைகளை விட்டுவிட முடியாது என்பதை புரிந்துகொள்கிறாள். குழந்தையா கணவனா எனும் தேர்வில் குழந்தையை தேர்ந்தெடுக்கும்போது கணவனை இழக்கிறாள். கதைக்கு மற்றும் ஒரு தளத்தை திறக்கிறது.

சில உபகதைகள் மனிதர்களின் மனநிலையை சுட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. ஜனமேஜயன் சிறுவயதில் காட்டுக்குச்  சென்று சகோதரர்களுடன் வேள்விச் சடங்கை விளையாட்டாக செய்தான். வேள்விக் குதிரைக்கு பதிலாக அப்போது பிறந்த க்ஷிப்ர தேஜஸ் எனும் நாய்க்குட்டியை கட்டிப் போடுகிறான். வேள்விக்கு அவியாக்க வைத்திருந்த இறைச்சி துண்டை நக்கியது பொறுக்காமல் அதன் கண்களை ரணமாக்குகிறான். அதன் விளைவாக சரமை எனும் நாய்களுக்கான விண்ணக தெய்வம் தீ சொல் இட்டாள். “விழியிழந்த நாய்போலவே நீ வாழ்நாள் முழுக்க இருப்பாய்.” அது முதல் கண்ணிழந்த நாயின் பதைப்பை எப்போதும் தன்னுள் உணர்ந்துகொண்டே இருந்தார். தெரியாதவற்றிலும் அறியாதவற்றிலும் முட்டி மோதி சரிவதையே தன் வாழ்க்கையாகக் கொண்டிருந்தார்.” சிப்பிக்குள் வாழும் பரீட்சித் அன்னையின் முலை மணம் அறியாதவன். அவன் அறிந்ததெல்லாம் கடலின் உப்பு  மணம் மட்டும்தான். ஆகவே அவன் மண்ணில் கால் படாதவனாகிறான். சந்தனுவின் முற்பிறவி கதை சுவாரசியமானது. கனகை எனும் பாம்பு இட்ட நூறு முட்டைகளில் இருந்து வெளிவந்த ஒரு நாகம்  தான் உசகன்.

பொன்நிற தாழை மடல்களுக்குள் புகுந்துகொண்ட தன் சகோதரர்களை போல் அதுவும் அன்னை என்றெண்ணி காட்டு தீயில் புகுந்தழிகிறது. மறுபிறப்பில் சந்திர வம்சத்து அரசனாக பிறக்கும் வரம் பெற்ற உசகன் மண்ணில் சந்தனுவாக பிறக்கிறான். அவன் அன்னைக்காக அவளின் அரவணைப்பிற்காக ஏங்கிக்கொண்டே இருக்கிறான். அவன் கங்கா தேவியிடமும் சத்தியவதியிடமும் கூட முட்டி முட்டி அதைத்தான் தேடி திரிந்தானோ? குருகுலத்து வாரிசுகளை பற்றி நிமித்தர்கள் சொல்லும் கதைகள் அவர்களின் இயல்பை குறிப்பவை. கௌரன் எனும் சாதக பறவையின் கதை, திருதிராஷ்டிரன் எனும் கந்தர்வன் பற்றிய கதை, ஆணி மாண்டவியரின் கதை. விதுரனை பெற்ற சிவை வியாசரை சந்திக்கும் போது அவர் புராண சம்ஹிதை சுவடிகளை புரட்டி கொண்டிருப்பார். பேசா நெறி கொண்ட மாண்டவியர் அதன் காரணமாக கொள்ளைக்காரர்களுக்கு துணை போனதாக கருதப்பட்டு கழுவேற்றப் படுகிறார். பீஷ்மர் சொல்லும் ஒற்றை வரி விதுரனின் வாழ்க்கை சாராம்சம் “ தன்னை சூழ்ந்துள்ள தீமையை அறிந்தும் சொல்ல முடியாதவராக இருந்தார் மாண்டவ்யர்.” ஆம் விதுரனும் அப்படித்தானே அநீதிக்கு சாட்சியாய் உள்ளம் கொதித்துக் கொண்டே என்றும் வலியில் துடிக்கும் ஊழ் கொண்டவர் அல்லவா அவர்?”  சித்ரகர்ணி எனும் சிங்கத்தின் கதை பஞ்சதந்திர சாயலில் சொல்லப்பட்ட மகத்தான கதை. உண்பதும் உண்ணப்படுவதும் புடவியின் அலகிலா விளையாட்டு. அதை சிபி சக்கரவர்த்தியின் கதையுடன் கொண்டிணைத்து அங்கிருந்து க்ஷத்ரிய அறத்தை பற்றிய பெரும் வினாவை எழுப்புகிறது. புரியாத களத்தில் அறியாத எதிரியுடன் ஆடும் ஆட்டம் இது, ஒவ்வொரு நொடியும் எது அறம் எனும் குழப்பத்தை நம்முள் ஏற்படுத்தும். செயல்களின் வழியல்ல நோக்கங்களின் வழி தான் அறம் தீர்மானிக்கப்படுகிறது போலும்.

குல கதைகள் என்பவற்றை மூதாதைகளின் கதை என்று பொதுவாக வகுக்கலாம். ஹஸ்தி, யயாதி, பிரதீபன், சந்தனு – தேவாபி – பால்ஹிகன், பராசரர், பீஷ்மர் என பலருடைய கதைகள் வருகின்றன. பிரதீபன் சுனந்தை கதையில், சுனந்தை முதிய வயதில் கருவுற்று மூன்று பிள்ளைகளை பெறுகிறாள். வெயில் பட்டால் சுருண்டுகொள்ளும் தேவாபியும், அவனை தோளில் சுமந்து இருளில் வெளி செல்லும் பலவான் பால்ஹிகனும், அவர்களைக் கண்டு ஏங்கும் சந்தனுவும் அற்புதமான வார்ப்புகள். இன்னதென்று விளக்கவியலாத ஒரு ஈர்ப்பு எனக்கு இக்கதையின் மேல் உண்டு. அப்பகுதியை மட்டும் நான்கைந்து முறைக்கு மேல் வாசித்திருக்கிறேன். யயாதி பற்றி தண்டகர் சொல்லும் கதையில் தந்தையின் காமத்திற்காக தன் இளமையை அளித்த மைந்தன் புருவின் முகம் தனதாக இருக்கும் என்று பீஷ்மர் எண்ணிக்கொண்டதற்கு மாறாக காமத்தால் அலைக்கழிந்த யயாதியின் முகம் தோன்றுகிறது. ஆடியின் ஆழம் எனும் இவ்வத்தியாயம் பீஷ்மருக்குள் அகழ்ந்திருக்கும் காமத்தை சுட்டிச் செல்கிறது. உண்மையில் புருவின் முகம் விசித்திரவீரியனுக்குதான் பொருந்தும். தந்தையின் முதிய வயது காமத்தின் விளைவாக நோய்மையை அனுபவித்தவன் அவன்தான். ‘முதற்கனல்’ என்பது மாபெரும் அழிவின் முதல் பொறி. ஒரு பெண்ணின் சாபமே குருகுலத்தை அழிக்கும் முதற்கனல். அது அம்பையுடையது என்றல்ல, அதற்கும் முன்னால் கைகூப்பி உதிரம் வடிந்து அறுபது வயதில் பிள்ளைகள் பெற்று மடிந்த சுனந்தையின் கனல்.

மகாபாரதம் சூழ்ச்சிக்கும் வஞ்சத்திற்கும் அரசியலுக்கும் பெயர் போன பேரிலக்கிய படைப்பு. முதற்கனலும் அதற்கு விதிவிலக்கல்ல. அற்புதமான உரையாடல்கள் குறிப்புணர்த்தல் வழியாக பாரதத்தின் மாந்தர்களின் இயல்புகளை ஐயங்களை சுட்டிய வண்ணம் இருக்கிறது. பீஷ்மர் – சத்தியவதி உரையாடல், சத்தியவதி – விசித்திரவீரியன் உரையாடல், பீஷ்மர் – அம்பை உரையாடல் ஆகியவைகள் நுட்பமும் செறிவும் கொண்டவை. சித்திரகர்ணி எனும் சிங்கத்தின் கதை, குஹ்யஜாதை எனும் அன்னை கழுதைபுலி, ஆகியவையின் வழியாக சத்தியவதி – பீஷ்மர் – வியாசரின் உறவு உணர்த்தப்படுகிறது, அவர்களின் மனப்போக்கில் சிறு வெளிச்சம் படுகிறது. குஹ்ய ஜாதை எனும் சொல்லுக்கு பொருள் ரகசிய பிறப்புடையது என்று பொருள். சத்தியவதியுடன் நேரடியாக பொருத்திப் பார்க்க முடிகிறது.  பூடகமான இடைவெளிகளை விட்டு செல்லும் உரையாடல்கள் நம்முள் கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருக்கின்றன. சிகண்டியும் எளிய கிராமத்து பெண் ஊர்னையும் ஒரே கனவை காண்கிறார்கள். அம்பையின் பெருங்காதலே பீஷ்மரை காக்கிறது, அதுவே சிகண்டியின் வன்மத்திற்கு வித்தாகிறது. முதற்கனலின் கதை மாந்தர்கள் சிறுமை அண்டாதவர்கள். சத்தியவதி தன்னை பயன்படுத்திகொள்கிறாள் என்றறிந்தும் ஒருபோதும் பீஷ்மர் அன்னையின் சொல் மீறுவதில்லை. பீஷ்மர் தனக்குள் புன்னகைக்கும் தருணங்களை மற்றுமொருமுறை வாசிக்க வேண்டும். பீஷ்மர் என்றறியாமல் அவரிடமே சிகண்டி “தான் செய்ததை தான் அவரும் செய்தார்” என்று சொல்கிறான். ஆம் அன்னையின் கோபக் கனலை சுமந்த சிகண்டினி சிகண்டியாகிறான். தந்தையின் காமக் கனலை சுமந்த பீஷ்மன் நைஷ்டிக பிரம்மச்சாரி ஆகிறார். 
      
ஜெயமோகன் பயன்படுத்தும் உவமைகளும் உருவகங்களும் தனித்துவமானவை. ஆழ்ந்த குறியீட்டுத் தன்மை கொண்டவை. நாவல் முழுவதும் கவித்துவ கணங்கள் விரவிக் கிடக்கின்றன. மனிதர்களுக்குள் விதியின் நோக்கம் பாசிமணிகளுக்குள் பட்டுச்சரடு போல் ஊடுருவிச் செல்கிறது என்று எழுதுகிறார். செயலற்றுக் கிடக்கும் அஸ்தினாபுரி ஆஸ்திகனுக்கு தோல் கிழிந்த பெருமுரசு போல் தோன்றுகிறது. கங்கையுடன் வளர்ந்த பீஷ்மருக்கு பாலையின் நில விரிவு “பிறிதொரு குலம் வணங்கும் கனியாத தெய்வமாக” காட்சியளிக்கிறது. அம்பையின் அனல் காயாதிருந்த போது “எரிந்த வீட்டில் எஞ்சிய மரச்சிற்பம்” போல் இருக்கிறாள். மஞ்சத்தில் விசித்திரவீரியனுக்காக அம்பிகை காத்திருக்கும்போது “நீந்தும் யானையை போலக் கரிய பெரும்கால்களை ஓசையின்றி துழாவி காலம் நடந்து கொண்டிருந்தது என்று உணர்ந்தாள்”.

குருகுல வரலாறும் அண்மையில் நிகழ்ந்த மாபெரும் அழிவையும் அறியாமல் வளர்ந்த பரீட்சித், நாகங்கள் நிரம்பிய குருக்ஷேத்திரத்திற்கு செல்கிறான். எங்கும் புற்றுகள் சூழ்ந்திருக்கின்றன. பித்தேறி புற்றுகளை சிதைக்கிறான். “ஒரு புற்றை உடைத்தபோது உள்ளே ஒரு யானையின் எலும்புக்கூடு அதன் மத்தகத்தை பிளந்த வேலுடன் இருக்க கண்டான்.” யானை என்பது எத்தனை பிரம்மாண்டமான, தூலமான பேரிருப்பு, அதன் எச்சங்களைப் புற்று மூடிவிட்டது. வரலாறும் அப்படிதான். அத்தனை பெரிய போரும் அதன் வரலாறும் மாபெரும் அழிவும் அறியாமை எனும் புற்றுக்களால் மூடி மறைக்க பட்டிருக்கிறது. மனிதனுக்கு அவனுடைய கடந்த கால நினைவுகள் அவனை துயில செய்யும் இனிய பாட்டிக் கதைகளாக இருக்கும் வரை எந்த சிக்கலும் இல்லை. ஆனால் வரலாறு கருணையற்றது கருமையும் அடர்த்தியும் கூடியது. அது அவனை உறங்கவிடாமல் அச்சுறுத்தித் துரத்திக்கொண்டே தானிருக்கும். அவைகளை விட்டு மனிதன் நழுவி செல்லவும் மறந்து தொலைக்கவும் தான் என்றுமே முயல்வான்

பாரதத்தில் வரும் நாகங்கள் வெறும் பாம்புகள் அல்ல. “நாகங்கள் காமம், அகங்காரம் எனும் ஆதி இச்சைகளின் பருவடிவங்கள்” நாகங்கள் குன்றா படைப்பாற்றலின், வளத்தின், காலத்தின் குறியீடும் கூட. சர்ப்ப சத்ர வேள்வியின் பொருளும் நோக்கமும் முற்றிலும் வேறோர் தளத்தில் விரிந்து செல்கிறது. நாகங்கள் ஒருபோதும் முற்றழியாது. அப்படி அழியவும் கூடாது. வேள்வியில் நாகங்கள் விழ தொடங்கின. “ அவர்கள் ஒவ்வொருவர் நடுவிலிருந்த இருட்டும் பாம்புகளாகியது. அவர்களின் மடியின் மடிப்புகளுக்குள் இருந்த நிழல்கள் பாம்புகளாக மாறின. அவர்களின் அக்குளுக்குள் இருந்த துளியிருள் பாம்பாயிற்று. பின் அவர்களின் வாய்களுக்குள்ளும் நாசிகளுக்குள்ளும் இருந்த நிழல்கள்கூடப் பாம்புகளாக மாறி மண்ணில் நெளிந்து செல்லக் கண்டனர். அன்னை மடியில் தாவி ஏறும் குழந்தைகள் போல, ஆற்றில் கலக்கும் சிற்றோடைகள் போல நெருப்பை அணுகி அதில் இணைந்துகொண்டன”. ஆடி என்பதை பலவகையிலும் பயன்படுத்தி இருக்கிறார். சித்ராங்கதன் அசைவற்ற நீலநிற நீரில் தன்னை நோக்கியபடி காணாமல் போகிறான். அக்னிவேசர் வைக்கும் தேர்வில் நீர்நிலை அதிர்கிறது. பீஷ்மர் தன்டகர் எனும் நாக சூதரின் யானத்தில் யயாதியை காண்கிறார். அசைவற்ற நீர்/திரவம் ஆழ்மனதை குறிக்கிறது என்று புரிந்துகொண்டேன்.  அம்பிகை கண்ணீர்துளியை போலுள்ள வைரத்தை ஆடைக்குள் எப்போதும் புதைத்து வைத்திருக்கிறாள். மனம் நெகிழ்ந்து உதிரும் ஒற்றை துளி நீர். விசித்திரவீரியன் மீது கொண்ட பெருங்காதலின் ரகசிய சின்னம். சத்வ, ரஜஸ், தமஸ் முக்குணங்களை அடிப்படையாக கொண்டு மூன்று இளவரசிகள், திருதுராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியவர்களுடன் கருநிலவு, பிறை நிலவு, முழு நிலவு மற்றும் நிறங்கள் ஆகியவைகளுக்கு இடையிலான தொடர்புகளை குறிப்புணர்த்திய வண்ணம் செல்கிறார். வராகி – அம்பை -  பன்றியிடம் முலைப்பால் அருந்தி வளரும் சிகண்டி என நுட்பமான பிணைப்பை நிகழ்த்தி சிகண்டி அம்பையின் மறுபிறப்பு என்பதை புதிய கோணத்தில் முன்வைக்கிறார். 

ஞானத்திற்கும் அறிவுக்கும் இடையிலான முரணை, அல்லது வாழ்க்கைக்கும் ஏட்டு ஞானத்திற்கும் இடையிலான முரணை ஜெயமோகன் தன் படைப்புகளில் எப்போது விவாதித்தபடியே வருவார். விஷ்ணுபுரத்தின் பிங்கலன் சட்டென்று நினைவுக்கு வருகிறான். முதற்கனலில் பராசரர் வியாசரின் பாத்திரங்கள் இதே கேள்வியை எழுப்புகின்றன. வியாசன் தன் காவியத்தின் முதற் சொல்லை அடையும் தருணம், வியாசன் ரிக் வேத மந்திரத்திற்கு விளக்கம் அளிக்கும் தருணம் போன்றவை அபாரமான கவித்துவம் கொண்டவை. “முனிவர்களே, மலர்களில் தேன் அருந்திச் சிறகடிக்கும் வண்ணத்துபூச்சிக்குதான் வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தழை தின்னும் பசுவுக்கு அல்ல.” மற்றுமொரு மேற்கோளை சுட்ட வேண்டும் “பராசரா, உன்னிலிருப்பது ஞானம். அது மரங்களை மடித்து உண்டு காடதிரக் காலெடுத்து நடந்து செல்லும் மதகரி..கவிதையோ இசையென்னும் சிறகு முளைத்த பறவை . அது விண்ணில் நீந்தும், மலர்களில் தேனுண்ணும்..” ஞானமும் கவித்துவமும் அதன் உச்சத்தில் இணையும் புள்ளியில் பறக்கும் யானையாக மண்ணில் உதிக்கிறார் வியாசர்.    சுவர்னை, சோபை, வ்ருஷ்டி ஆகிய தேவதைகள் அம்பையுடன் ஊடாடும் தருணங்களும் கவித்துவம் நிறைந்தவை.

 அத்தியாயங்களின் பெயர்கள் கூட கவித்துவமும் மறைபொருளும் கொண்டவை. நாகங்களின் அழிவுக்காக தொடங்கப்படும் வேள்வி, வேள்வி ஒளியால் ஆனது, இருளை அழிப்பது, முதல் அத்தியாயத்தின் பெயர் வேள்வி முகம், இறுதியில் நாகங்கள் ஆஸ்திகனின் முயற்சியால் பிழைக்கின்றன, இருள் முற்றழியவில்லை, இறுதி அத்தியாயத்தின் பெயர் வாழிருள். “ஒளியைச் சிறுமகவாகத் தன் மடியில் அள்ளிவைத்து கூந்தல் சரியக் குனிந்து முத்தமிட்டுப் புன்னகை செய்தது.” இருள் எல்லாவற்றையும் தோற்றுவிக்கும் அன்னை ஆகிறது. இவ்வரியுடன் இணைத்து முதல் அத்தியாயத்தில் பிரபஞ்ச தோற்றத்தை பற்றி ஆஸ்திகனுக்கு மனசாதேவி சொல்லும் கதையை இணைத்துக்கொள்ள வேண்டும். சத்வம் மற்றும் ரஜசின் தோற்றத்தை கூறும் அவள் தமஸை பற்றி குறிப்பிடவில்லை. அது ஏன் எனும் கேள்விக்கான விடை தான் இறுதியில் வருகிறது. எரியிதழ் என்பது எத்தனை கவித்துவமான சுட்டல்.  எரியும் மலரிதழ். அம்பைக்கு மிக நெருக்கமான படிமம். ஒரு மலர் மெல்ல மெல்ல பற்றி எரிய தொடங்குகிறது. அது எரிந்தடங்கவில்லை. அடுத்த அத்தியாயத்தின் பெயர் அணையா சிதை. அடிநெருப்பின் குளிர்ந்த நீலம் சிகண்டியாகிறான். அந்த அத்தியாயத்தின் பெயர் தழல் நீலம். 

தர்க்கங்களால் விளக்கிக் கொள்ள இயலாத ஆழ்மனதிலிருந்து வெளிவந்த சில பகுதிகளைக் குறிப்பிடலாம். எல்லாமும் கலங்கி தெளிவற்று தெரியும் பாதாள சுனை போன்ற சில பகுதிகள் விஷ்ணுபுரத்திலும் கூட உண்டு. நாகங்கள் கொள்ளும் ஒன்பது யோகங்கள், அன்னையின் சொல்லுக்காக சிகண்டினி ஸ்தூனகர்ணனின் முன் தவம் செய்து சிகண்டியாவது, பித்துநிலையில் பால்ஹிகர் ஆடிபிம்பம் குறித்து சிகண்டியுடன் அரற்றும் தருணம், பாதாளத்தில் விழுந்து கிடக்கும் ஒரு குழந்தை நாகத்தின் உடல் வழியாக வெளியே வருவது பற்றி நாக சூதன் சொல்லும் கதை ஆகியவை அத்தகைய பகுதிகள்.   

மகாபாரதம் காட்டும் சமூகச் சித்திரத்தை ஒட்டியதுதான் முதற்கனல் காட்டும் சித்திரமும். நால்வர்ணங்களில் க்ஷத்ரியர் மற்றும் பிராமண வர்ணங்களை பற்றிய விரிவான சித்திரம் வருகிறது. சுக்கிர நீதியிலிருந்து எடுத்தாளப்பட்ட கதையின் வழியாக க்ஷத்ரிய வர்ணத்தின் பங்களிப்பும் முக்கியத்துவமும் உணர்த்தப்படுகிறது. உத்தாலகர்-ஸ்வேதகேது கதைகள் பிராமண அறத்தை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. மீனுண்ணும் பிராமணர் ஒருவர் ஹம்சபுரத்தில் சந்திக்கும் சிகண்டியிடம் தங்களுக்கு கோவில் காரியங்கள் கிடைக்காததால் ஒதுக்கப்படுவதை குறித்து வருந்துகிறார். அதேபோல் சூதர் குலத்தை பற்றிய விரிவான சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன. விதுரனின் அன்னையான சிவை -  அம்பாலிகையுடனான உரையாடல் வழியாக அவர்களின் உட்பிரிவுகள், திருமண சடங்குகள் போன்றவை விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. சூதர்கள் அம்பையின் தீஞ்சொல்லுக்கு ஆளான சௌப நாட்டு சால்வனை கைவிட்டு வெளியேறுவது அவர்களின் சமூக அதிகாரத்தின் சான்றாகும். அவர்கள் கைவிட்டு சென்ற தேசத்தில் இருந்து ஒவ்வொரு குலமாக வெளியேறி செல்கிறார்கள். நாகர் குலம் பற்றிய சித்திரமும் இடம் பெற்றுள்ளன. அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் அவர்களின் சமூக இடம் போன்றவை குறித்து பல்வேறு தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. சூத்திர குலங்களின் எழுச்சி, அரசு குறித்தான விரிவான சித்திரம் மழைபாடல் நாவலில் வருகிறது.     

ஷண்முகவேல் இந்நாவலின் ஒவ்வொரு பகுதிக்கும் வரைந்த வண்ண ஓவியங்களுடன் செம்பதிப்பாக நற்றிணை பதிப்பகம் அச்சில் கொண்டு வந்திருக்கும் முதற்கனல் நாவல் தமிழ் பதிப்பு துறையில் நிச்சயம் ஒரு மைல்கல். ஷன்முகவேல் வரைந்திருக்கும் ஓவியங்களை பற்றி அவசியம் விரிவாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும். சப்தசிந்துவில் தாமரை தடாகத்தில் இளமழையில் நனையும் பீஷ்மரின் ஓவியத்தை பறவை கோணத்தில் வரைந்திருப்பார். அந்த கோணம் அந்த ஓவியத்தை எங்கோ கொண்டு சென்றுவிடுகிறது. ஓவியத்தில் நாவலின் நுண் தகவல்களை மிக சரியாக கொண்டு வந்திருப்பார். உதாரணமாக மீன் செதில்கள் மின்ன சத்தியவதி யமுனையில் நீராடும் போது இருளில் புல்லாங்குழல் வாசிக்கும் சந்தனு, அம்பை தீ புகும் போது சிகண்டியின் நிமிர்வு, நிருத்தனின் சரணாகதி என ஒவ்வொரு ஓவியங்களிலும் நுண்மை துலங்குகிறது. நாகங்கள் வரும் ஒவ்வொரு ஓவியமும் அதன் கற்பனையின் வீச்சாலும், வண்ணங்களின் தேர்வாலும் பாரதத்திற்கு தேவையான புனைவுலகை சித்தரிக்கிறது. தட்சகன் சர்ப்ப சத்ர வேள்விக்கு வருவது, பாற்கடல் கடைதல் (அதில் தென்படும் தேவாசுர நிழல்கள்), பத்தி விரித்த நாகமென எழும் கங்கை நீருக்கு முன் சிறு ஓடத்தில் மிதக்கும் அம்பையும் படகோட்டி நிருத்தனும், குருக்ஷேத்திரத்தில் கையறு நிலையில் இருளில் புற்றுகளும் நாகங்களும் நிழல்களும் சூழ்ந்திருக்க தட்சகனின் இமையா செவ்விழிகள் நிலைத்திருக்க மண்டியிட்டு அமர்ந்திருக்கும் பரீட்சித்தும் கைகட்டி பின்நிற்கும் கவிஜாதனும், இன்னும் பல ஓவியங்களும் கனவுலகை உருவாக்கி கையளிக்கின்றன. சில ஓவியங்கள் அத்தியாத்தின் சாராம்சத்தையே சொல்லக்கூடியவை. கங்கைக் கரையில் பாறை உச்சியில் கால் மடக்கி தனித்து அமர்ந்திருக்கும் பீஷ்மரின் ஓவியம் இடம் பெற்றுள்ள அத்தியாயத்தின் பெயர் வேங்கையின் தனிமை! மகிஷாசுர வதத்தில் அவர் பிரயோகித்திருக்கும் வர்ணங்கள் முக்குணங்களின் இயல்பை மிகச்சரியாக காட்டுகின்றன. சில அத்தியாயங்களில் வேறு பகுதிகளை ஓவியங்களாக வரைந்திருக்கலாம் என்றும் தோன்றியது. உண்மையில் எவ்வித பலனையும் எதிர்நோக்காமல் தினமும் சில மணிநேரங்களை ஒதுக்கி ஓவியங்களை அளித்த ஷண்முகவேல் – மணிகண்டன் கூட்டணியின் மகத்தான பங்களிப்பை அங்கீகரித்தாக வேண்டும்.

“கடலலைக் குமிழி நிலையற்றது..கடலே காலவெளியில் ஒரு வெறும் குமிழி”.

இந்நாவலை பற்றி எழுதி முடித்த நிறைவே எனக்கு ஏற்படவில்லை. ஒவ்வொரு பகுதியை பற்றியும் குறைந்தது ஒரு பக்கம் எழுத முடியும். வியாசரை பற்றி, சத்தியவதியை பற்றி, அம்பையை பற்றி, சிகண்டியை பற்றியெல்லாம் விரிவாக எழுத பல விஷயங்கள் உண்டு. நாவலின் அடிப்படைக் கூறுகளை மட்டுமாவது தொட்டுக் காட்ட முயன்றிருக்கிறேன்.  மகாபாரதம் அழியா, அணையா அழல். என்றும் இருக்கும் பெருநெருப்பு. இதோ இங்கொருவர் இன்று அதற்கு அவியிட்டு கொண்டிருக்கிறார். அந்நெருப்பு ஓங்கி வளரட்டும். என்றென்றைக்கும் ஒளி வழங்கட்டும். அதன் தழல் துளிகள் நம்முள் அணையாமல் இருக்கட்டும். 

“நேற்றும் கவிகள் இதை பாடினார்கள். இன்றும் பாடுகிறார்கள். வருங்காலத்திலும் புவியில் நிகழ்ந்த இவ்வரலாற்று கதையை கவிகள் பாடிக்கொண்டு தான் இருப்பார்கள்” –வியாச பாரதம், ஆதி பர்வம்

-சுகி
முதற்கனல் 
நாவல் 
ஜெயமோகன் 
நற்றிணை பதிப்பக வெளியிடு  

7 comments:

  1. புராண மகாபாரதம் மாயாஜாலம் நிறைந்தது. உதாரணமாக அம்பை பழிவாங்குவதற்காக தவம் செய்ய, இறைவன் தோன்றி ஒரு மாலையை கொடுத்து, இதை அணிந்து போரிடுபவனை பீஷ்மரால் வெற்றி கொள்ள இயலாது என்கிறார். குந்தி, சூரியனுடன் கலந்து கர்ணனை பெறுகிறாள்...இது போல பல. ஆனால் ஜெமோ மறுஆக்கம் செய்கிறேன் பேர்வழி என்று கூடுமானவரை மாயாஜாலத்தை தவிர்த்திருக்கிறார்
    சமகாலத்திய உதாரணத்தை பார்த்தோமென்றால் Batman எத்தகைய நவீன உத்திகளை பயன்படுத்தி தன்னை super hero வாக ஆக்கி கொள்கிறான் என்று காண்பிக்கபடுகிறது. முதலில் தோன்றிய Batman படங்களில் நவீன ஆயுதங்கள் இருக்கும். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு போன்ற விஷயங்கள் காண்பிக்கப்பட்டிருக்காது. சுருக்கமாக இப்படி சொல்லலாம். விஞ்ஞான தொழில் நுட்பம் முதலில் வந்த பொழுது, மாயாஜாலம் போல அதையே பிரதானப்படுத்தியிருந்தார்கள். ஆனால் விஞ்ஞான தொழில் நுட்பம் உச்சம் பெற்றிருக்கிற இந்த காலத்தில், மறுபடியும் பழைய விஷயமான மனித உழைப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி இவற்றிற்கு மிக்கியத்துவம் கொடுத்து தொழில் நுட்பத்தை பக்க பலமாக, இரண்டாம் இடத்திற்கு தள்ளியிருக்கிரார்கள்.

    ஜெமோ இதே உத்தியை பின்பற்றியிருக்கிரார். இங்கு கதாபாத்திரங்களின் “மனித விஷயங்களுக்கு” முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வேறு வழியே இல்லை எனும்பொழுது மாயாஜாலம் பட்டும் படாமலும் சொல்லப்படிருக்கிறது. உதாரணம் குந்தியும், மாத்ரியும் புதல்வர்களை பெறும் விஷயம். இவ்வாறு “மனித விஷயமாக” இந்தகதையை சொல்ல வரும்போது பல இடங்களில் இன்னும் மேலாக சொல்லியிருக்க முடியும். கோட்டை விட்டிருக்கிறார். பீஷ்மரை எடுத்து கொள்வோம். மிகவும் வலிமையானவன். பிறந்த உடனேயே கங்கையை நீந்தி கடந்தவன் (?!!!), முறையான போர் பயிற்சி பெற்றவன். ஆக அவனிடம் military discipline இருக்கும். அப்பா சந்தனு கேட்டார்னு (indirectly) தன்னுடைய அரச உரிமையை தியாகம் பண்ணியவன். “மீன்காரி சத்யவதியவே கட்டிக்க, அவளோட பிள்ளைங்க இந்த நாட்டை ஆளட்டும். நான் வெறும் காவல் மட்டும்தான்” அப்படின்னு தளபதி ரஜினி,பானுப்பிரியாட்ட சொல்ற மாதிரி. ”இன்னும் நம்பிக்கையில்லையா? ஒக்காளி பொம்பளையே இனிமே தொடமாட்டேன்” அப்படின்னு நைஷ்டிக பிரம்மச்சரிய விரதம் இருக்காரு. இந்த மாதிரி தியாகம் யாராவது பண்ண முடியுமாய்யா? இல்ல நான் தெரியாமதான் கேக்கேன். மூலாதார அக்கினிய எவனாது அணைக்க முடியுமா? ஜெமோவே சாமியாரா போனவரு இன்னிக்கு சினிமாக்கு வசனம் எழுதுறாரு. இப்ப எழுதியிருக்கற இந்த ரெண்டு புஸ்தவத்துல எத்தனை வரி இதுக்கு contribute பன்ணியிருக்காரு? “நைட்டுக்கு இட்டிலி வேணாம். வயிறு சரியில்ல, கொஞ்சம் தயிர்சாதம் மட்டும் போறும்” அப்படிங்கற மாதிரி இந்த மூலாதார அக்னி தியாகம் சின்ன பிள்ள மேட்டர் இல்லடா. அதுலயும் பீஷ்மர் மாதிரி மாவீரனுக்கு, அந்த அக்னி, ஒக்காளி சொக்கப்பானை மாதிரில்ல எரியும். அவன் என்ன போக்கத்த பயலா? ராஜா வீட்டு பிள்ளை, சொடுக்குனாம்னா ஆயிரம் பிள்ளைங்க அந்தப்புரத்துல வந்து வுழும். இந்த பின்னணில அவனுடய தியாகத்த பத்தி எழுதணும். அத கோட்டை விட்டுட்டாரு.
    அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் பச்ச புல்ல போட்டா பத்திக்கும் அப்படி ஒரு காண்டு. தாய்ப்பாசம், சகோதரி பாசத்த தூக்கி சாப்ட்ருச்சு. ஆனா சடன்னா ஒரு முடிவு. “நமக்கு இதெல்லாம் இனிமே வேணாம், வா, நாம காட்டுக்கு போயிரலாம். புக்கு முடியப்போவுது. ஸ்டேஜை கிளியர் பண்ணனும்னுட்டு வியாச மாமுனி ஜெமோ சொல்லிட்டாரு” பிள்ளை மேலே பாசமா இருந்தவங்க, பேர பிள்ளை மேலே அதை விட பாசமால்ல இருப்பாங்க?. கதைக்கு கண்ணு மூக்கு கிடையாது. ஒத்துக்கிறேன். அதுக்காக ஒரு அளவு இல்லையா? “கதாபாத்திரம் என்ன ஒம்ம மீச மசுருன்னு நெனச்சீரோ? வெக்கறதுக்கும், எடுக்கறதுக்கும்” அப்படின்னு சின்ன தேவர் மவன் பஞ்சாயத்துல கேட்ட மாதிரி நானும் கேக்க வேண்டியிருக்கும்
    கடைசியா ஒண்ணு கேக்கேன். இந்த மரவுரி கட்டி காட்டுக்கு போனாங்கன்னு வருதே, அத எப்படி செய்வாங்கன்னு கதைல எங்கிட்டாச்சும் வருதா? யாராவது சொல்ல முடியுமா?

    ReplyDelete
  2. வருங்காலத்தில் வரப்போகும் புத்தகத்திற்கு இப்போதே விமர்சனம் எழுதியவருக்கு நன்றி. சின்ன கமெண்டை படித்து விட்டு பெரிய கட்டுரையை படிக்கும் போது கொஞ்சம் குழம்பிவிட்டேன். மழைப்பாடலுக்கு விமர்சனமா இல்லை முதற்கனலுக்கா என்று. முதற் கனலுக்குதான்.

    வாங்கிவைத்து பல நாட்களாகியும் இப்போதுதான்படிக்க முடிந்தது. வியாசபாரதத்தில் தக்குணூட்டாக வந்து போகும் பாத்திரங்கள் இதில் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றார்கள். அதுதான் மகாபாரதத்தின் பெருமை. ஓவியங்கள் மற்றுமொரு பலம்.

    ReplyDelete
  3. எனக்கும் பல சந்தேகங்கள் அதில் ஒன்று, கதையில் அடிக்கடி கோதுமை அப்பங்கள் சாப்பிடுகின்றார்கள் அதை எப்படி செய்வார்கள் என்று சொல்லவில்லை. அவரது மற்ற கதைகளில் பல திண்டிகளை பற்றி விளக்கமாக எழுதியவருக்கு இதைப்பற்றி எழுத மனம் வரவில்லையே :(.

    ReplyDelete
    Replies
    1. இதைப் படிக்கவும் http://omnibus.sasariri.com/2012/11/blog-post_23.html

      Delete
  4. பீமன் நன்றாக சமைப்பான் என்று கேள்வி..அவனுடைய பாத்திரம் வரும்போது சமயல் குறிப்புகள் வர கூடும்..குறிப்பாக விராட தேசத்தில் பதுங்கி இருக்கும் காலகட்டத்தை எழுதும் போது வரக்கூடும்..

    ReplyDelete
  5. மழைப்பாடல் விமர்சனம் பகுதி-2
    https://www.youtube.com/watch?v=Vn1IOPB-4Cs

    ReplyDelete
  6. முதற்கனல் மழைபாடல் நாவலின் அமைப்பிலிருந்து விலகியது..முதற்கனலில் மாயாஜாலம் சரளமாக தயக்கமின்றி பயன்படுத்தபட்டிருக்கிறது..மழைபாடல் முதற்கனலில் இருந்து வேறுபடும் புள்ளியும் அதுவே...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...