வரலாற்றுக்கு நோக்கம் இருக்கிறதா என்று நமக்கு தெரியாது. அது எங்கு, எதை நோக்கிப் போகிறது என்பதும் நாம் ஒரு போதும் அறிய முடியாதது. ஆனால் வரலாற்றைப் படிப்பதற்கும் வரலாற்றை நிறுவுவதற்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும். அது என்னவாக இருக்க முடியும்? இதுதான் முதுபெரும் கன்னட எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா நம்முன் வைக்கும் கேள்வி. இந்த கேள்விக்கான விடையைத் தேடும் முயற்சியே இந்த நாவல் என்று பைரப்பா கூறுகிறார்- 2010ல் வெளிவந்து, 5 மாதங்களிலேயே 17 பதிப்புகளைக் கண்டு சாதனை படைத்தது ஆவரண எனும் இந்த கன்னட நாவல்.
பைரப்பா ஏறக்குறைய தன் 80வது வயதில் எழுதிய இந்நாவலின் பெயர் வேதாந்தத்தில் மாயையின் மறைத்தல் ஆற்றலான ஆவரண சக்தியைச் சுட்டுகிறது. வெளிவந்தவுடன் மிகத் தீவிரமான சர்ச்சைகளை எழுப்பிய இந்நாவல், கன்னட இலக்கிய உலகின் இரு துருவங்களான பைரப்பா மற்றும் அனந்தமூர்த்தி இருவருக்கும் இடையே பல பத்தாண்டுகளாகத் தொடரும் கொள்கை பனிப்போரின் ஒரு புது அத்தியாயம் என்றும் கூறலாம்.
பைரப்பாவின் பருவம் மற்றும் வம்சவ்ருக்ஷா ஆகிய நாவல்களைப் படித்திருக்கிறேன். அவற்றில் பைரப்பாவைப் பற்றிக் கிடைத்த சித்திரத்திலிருந்து முற்றிலும் வேறானதொரு சித்திரம் ஆவரணவில் கிடைக்கிறது. பருவம் மகாபாரதத்தின் மாயமறுத்து அதைச் சாதாரண, யதார்த்த தளத்தில் அணுகிய நாவல். வம்சவ்ருக்ஷா ஹிந்து சமூகத்தின் ஆழமான புண் போல ஆகிவிட்ட சாதியமைப்பை கேள்விக்குள்ளாக்கும் நாவல். இந்த இரண்டு நாவல்களும் பைரப்பாவை நிச்சயமாக ஒரு இந்துத்துவராகக் காட்டுவதில்லை. ஆனால் இப்போது ஆவரண அவரை முழுக்க முழுக்க ஒரு இந்துத்துவவாதியாக வெளிப்படுத்துகிறது என்றே அவரது விமர்சகர்களால் குற்றம் சாட்டப்பட இடம் கொடுக்கிறது.
அப்படி என்னதான் உள்ளது இந்த நாவலில்? உண்மையிலேயே மிக மிக சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தையே சம்பிரதாய அரசியல் சரிநிலைகளை மீறி கையாண்டு இருக்கிறார் பைரப்பா. திப்பு சுல்தான், ஔரங்கசீப் போன்ற இஸ்லாமிய மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரங்கள்தான் என்ன? அவர்கள் முழுக்க முழுக்க மதவெறியர்களா அல்லது வேறு சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்வது போல் அவ்வப்போதைய அரசியல் சூழ்நீலைகளைக் கருத்தில் கொண்டு எடுத்த நடவடிக்கைகளால் மதச்சாயம் பூசப்படுபவர்களா? இது போன்ற வரலாறு சம்பந்தமான கேள்விகள் ஒரு புறமும் தற்கால வாழ்வில் இந்து இஸ்லாம் மதத்தினருக்கிடையே உள்ள உறவையும், மதம் தாண்டிய திருமணங்கள் தனிமனிதர்கள்மீது ஏற்படுத்தும் பாதிப்பையும் மறுபுறம் வைத்துப் புனையப்பட்டதே ஆவரண, அதாவது திரை.
