பதிவர்: பாலாஜி![]() |
Source: io9.com |
தமிழில் குழந்தைகளுக்கான மாய மந்திர கதைகள் நிறைய உள்ளன. இவை இன்றும்கூட முக்கால்வாசி சமயங்களில் வெறும் நீதி போதனை கதைகளாகவும், மகிழ்ச்சிகரமான முடிவை நோக்கியே செல்லும் கதைகளாகவும் இருக்கின்றன என்பதுதான் வருத்தமான விஷயம்.
நெய்ல் கைமான் குழந்தைகளுக்காக எழுதிய "The Graveyard Book" இந்த வகை புத்தகங்களில் இருந்து பெரிதும் மாறுபட்டு உள்ளது. அது நெகிழ்ச்சியான முடிவை நோக்கி இழுத்துச் சென்றாலும், மிகையான கற்பனை உலகு ஒன்றை நமக்குக் காட்டினாலும், வாசகரை அதில் ஊன்றி படிக்க வைப்பதில் வெற்றி பெறுகிறது.
குழந்தைகளுக்கான கைமானின் இன்னொரு புத்தகம் Neverwhere. பிபிசி தொலைகாட்சியில் நெடுந்தொடராக வந்த இதை பின்னர் நாவலாக எழுதியிருக்கிறார். இது கொஞ்சம் பெரியவர்களுக்கான ஒரு இருண்ட- மிகைகற்பனைக் கதை என்று சொல்லலாம். இப்படி தமிழில் தம் கட்டிச் சொல்லும்போது, மிரட்டல் இலக்கிய வகைமையைச் சேர்ந்த புத்தம் புதிய செவ்வியல் நாவல் மாதிரி இருக்கிறது, ஆனால் அப்படியெல்லாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆங்கிலத்தில், "Dark Fantasy" நாவல் என்று சொன்னால், கொடு புத்தகத்தை என்று கேட்பீர்கள். இதைப் படிக்கும்போதோ, படித்து முடிக்கும்பொழுதோ இப்படி எல்லாம் நடக்குமா என்று கேள்வி கேட்காமல் இருந்தால் இந்த நாவல் மிகவும் ரசிக்கலாம்.