A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

26 Feb 2014

மாதொருபாகன் - பெருமாள் முருகன்

பதிவர் : Paval MV (@paval)


பொன்னாளை கல்யாணம் கட்டிய புதிதில், மொட்டையாக மரங்கள் எதுவுமின்றி இருந்த தன் மாமனார் வீட்டு வாசக்களத்தில், ஒரு பூவரசங்கொம்பை கொண்டு நட்டுவைத்த காளி, இந்த பன்னிரெண்டு வருடத்தில் அது வளர்ந்து, கிளைபடர்ந்து, நிழல்பரப்பி, பூச்செறிந்து நிற்பதை, அதன்கீழ் போட்ட ஒரு கயிற்றுக்கட்டிலில்  படுத்தபடி தனிமையில் ரசித்துக்கொண்டிருப்பதாக ஆரம்பிக்கும் அந்த முதல் அத்தியாயத்திலேயே நாவலின் கதை தொடங்கிவிடுகிறது.


மருமவன் சீராக மாமனார் வீட்டுக்கு வந்து சேர்ந்த அந்த பூவரசங்கொம்பு துளிர்த்து, வளர்ந்து இன்று மரமாகிவிட்டது. ஆனால், காளியும் பொன்னாளும் ஆரம்பித்த வாழ்க்கை சுற்றமும் நட்பும் சூழ, அனைவரின் கவனமும் பெற்றபடி வாசலில் நிற்கும் ஒரு துளிர்க்காத மொட்டை பசுங்கொம்பாகவே நின்றுவிட்டிருந்தது. அது துளிர்க்குமா, மரமாகுமா என்பதை வெள்ளித்திரையில் காண்க என்பதுதான் நாவலின் மையக்கதை.

நோம்பிவிருந்துக்கு பொன்னாளின் தாய் வீட்டிற்கு வந்த காளி, அந்த பூவரசமரத்தின் அடியில் சோம்பலாக படுத்துக்கிடக்கும் ஒரு பகல்பொழுதில் ஆரம்பமாகும் நாவல், மறுநாள் விடியல் நேரத்தில் காளி அவனுடைய தொண்டுபட்டிக்கு சென்று சேர்வதுடன் முடிவடைகிறது, அந்த சில மணி பொழுதின் நடுவில் அவர்கள் இருவரின் வாழ்க்கையும், திருச்செங்கோட்டு சுற்றுவட்டாரமும், அந்தகாலகட்டத்து சமூக அரசியல் பண்பாட்டு சூழல்களும், குடியானவர்கள் வாழ்வியலும் அவர்களை சுற்றிய சகமனிதர்களின் கதையும் என்று, பொன்னாளின் பார்வையிலும் காளியின் பார்வையிலும் நாவல் முன்னும்பின்னுமாக -திரைக்கதை பாணியில் சொல்வதாக இருந்தால் 'narrative flashback’ உத்தியில் சொல்லப்பட்டு- சுவாரசியமாக செல்கிறது.

நாவலில் வரும் இளவயது கூட்டாளிகளும், பின்னர் மாப்பிள்ளை-மச்சான் உறவுக்காரர்களாகவும் ஆகிவிட்ட காளி-முத்து என்ற இரு குடியானவ ஆண்களின் இருவேறு விதமான குடிப்பழக்கம் போல, -கையில் எடுத்ததும் கீழே வைக்காமல் ஒரே மூச்சில் படித்துவிட்டு பின்னர் வேறு வேலை பார்க்கப்போகும் படைப்புகள் ஒரு வகை, படைப்பாளி வரிகளுக்கிடையில் பொதித்துவைத்துள்ள வர்ணனைகளில் / சம்பவங்களில் / மெளனங்களில் வாசகன் தனக்கென்று ஒரு சிறு உலகத்தை உருவாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக அசைபோட்டு, பின்னர் கடந்துசெல்லும் வகை படைப்புகள் ஒரு வகை-, மாதொருபாகன் இதில் இரண்டாம் வகை

காடு திருத்தி கழனியாக்கிய குடியானவ குடிகளின் ஆரம்பம், காடு திருத்துவதற்கு முன் மேய்ச்சலுக்கு அங்கு வரும்  புதியவர்களுக்கும் காட்டின் பழங்குடிகளுக்குமிடையே வழமையாக நடக்கும் உரசல்கள், பின் அதே மண்ணில் நிரந்தரமாக அம்மக்கள் குடியேறும்போது வரும் குற்றவுணர்வும் பயமும் உருவாக்கும் சிறுதெய்வ பக்தி, சடங்குகள், இடப்பெயர்ச்சிகள், சமூகம் வளர்ந்து நாகரிகம் பெருகும்பொழுது, சிறுதெய்வங்கள் மேல் எழுந்து நிற்கும் மாபெரும் கடவுளர்கள். அதை மறுத்தும் ஆதரித்தும் ஏட்டுச்சுரைக்காய் பண்டிதர் விளக்கங்கள். தொன்மையான பழக்கவழக்கங்கள், மனிதமனங்களின் விசித்திரங்கள், உறவுகளின் சிக்கல்கள், குடியானவ நுணுக்கங்கள், வெள்ளைக்கார நாட்டாமையில் குமாஸ்தா படிப்பில் உச்சம் பெற்று அதிகார பீடம் ஏறும் நம்மவர்கள், அவர்கள் நம்பும் சமூக ஒழுக்கத்தின் விழுமியங்களை சமூக பெரும்பான்மை மக்கள் மேல் திணிக்கும் அபத்த அரசியல், என்று போகிற போக்கில் இந்த நாவல் தொட்டுச்செல்லும் களங்கள் எண்ணிலடங்காதவை,

விவரித்து சொன்னால் ஒரு பெரும் இதிகாசமாகவே விரியும் அளவிற்கு பரப்பு கொண்ட உள்ளடக்கம், அதை விஸ்தாரம் குறையாமல், நுணுக்கமாக, அதே நேரம் படு சுவாரசியமாக இரு காதல்மனங்களின் உறவின் தவிப்பை சொல்லும் உணர்வுப்பூர்வமான கதையில் பொதித்து வைத்திருப்பது  நாவலாசிரியர் பெருமாள்முருகனின் மாபெரும் வெற்றி.

வெறும் கற்பனை கொண்டு மட்டுமே புனையப்பட்ட நாவல் அல்ல இது. ஆய்வின் மூலமாக நாவல் எழுதும் ஒரு திட்டத்திற்காக டாட்டா அறக்கட்டளை மூலம் நல்கை பெற்று, விரிவான கள ஆய்வுகள் செய்யப்பட்டு, திரட்டிய தகவல்களை இந்த கதையினூடாக ஆவணப்படுத்தியிருக்கிறார் பெருமாள் முருகன். இதை அவருடைய முன்னுரையிலும் விவரித்துள்ளார்.

வரலாற்று ஆவணம், உறவுகளின் கதை என இந்த சவாலான இரட்டைக்குதிரை சவாரியில் கண்டிப்பாக மாபெரும் வெற்றி கண்டிருக்கிறது ’மாதொருபாகன்’. வரலாற்று ஆவணமாக பார்ப்பவர்கள், வெறும் புதினமாக பார்ப்பவர்கள், ஆண்-பெண்-சமூக உறவு சார்ந்த ஒரு குடும்பக்கதையாக பார்ப்பவர்கள், வட்டாரமொழி நாவலாக பார்ப்பவர்கள் என, அனைத்து தரப்பினரையும் சென்று சேரும்விதமாக நாவல் அமைந்துள்ளது, தனக்கு கைவரப்பெற்ற அற்புதமான எளிய மொழி நடையில் ஒரு பெரும் வாழ்வனுபவத்தை இந்த படைப்பின் மூலம் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் பெருமாள் முருகன்.

தமிழில் வட்டாரவழக்கு சார்ந்த புனைவிலக்கிய முன்னோடிகளான கி.ரா, பூமணி, பொன்னீலன் போன்றவர்கள் வரிசையில் பெருமாள்முருகன் அவர்களுக்கு ஒரு மதிப்பான இடம் உண்டு. நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை என் பல தளங்களில் செயல்பட்டு கொண்டே அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். திருச்செங்கோட்டு வட்டம் கூட்டப்பள்ளிதான் இவர் பிறந்த ஊர், அந்த பிரதேசத்தை உணர்வுபூர்வமாக உணர்ந்தவராதலால்தானோ என்னவோ, இந்த நாவலில் அந்த மண்ணின் விவரணைகள் மிக கச்சிதமாக ஒரு திரைக்காட்சி போல விரிவாக அமைந்துள்ளன.

நாவல் வெளிவந்து நான்கு ஆண்டுகளும் மூன்று பதிப்புகளும் கண்டுவிட்டது, பல்வேறு மதிப்புரைகளும் விமர்சனங்களும் இணையமெங்கும் கிடைக்கின்றன. அதில் பலவும் இந்த நாவலின் நல்தருணங்களையும் கதாபாத்திரங்களையும், வட்டாரமொழி பயன்பாட்டையும் சிலாகித்து இருக்கின்றன. ஆம்னிபஸ் தளத்தில் வரும் விமர்சனங்கள் நூல் விமர்சனங்கள் என்பதைவிட நூல் அறிமுகங்கள் என்பதால், அவற்றை முடிந்த அளவு தவிர்த்துள்ளேன். புதிதாக படிக்கப்போகிறவர்கள், அவர்களாகவே அந்த தருணங்களையும் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்திக் கொள்ளட்டும். கையேடு வைத்து படைப்பை ரசிப்பதை விட, படிக்கும் பொழுது கிடைக்கும் அந்த எதிர்பாராத பரவசம் தான் வாசகனை ஒரு படைப்புக்கு வெகு அருகில் கொண்டு செல்லும். மாதொருபாகன் அப்படி ஒரு பெரும் வாசக அனுபவத்திற்கு உத்திரவாதமான படைப்பு!

ஆசிரியர்: பெருமாள்முருகன்
பக். 192. விலை ரூ. 140 (2010)
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை
நாகர்கோவில்.
இணையத்தில் வாங்க - Discovery Book Palace

புகைப்பட உதவி - காலச்சுவடு

1 comment:

  1. குறிஞ்சிநெட்டில் என் புத்தக அறிமுகக் கட்டுரை. பெருமாள்முருகனின் கங்கணம் நாவல்.

    /மறந்து போவது வயதாவதன் சாதாரண அறிகுறியாக இருப்பினும் அதன் உச்சத்தில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் கலந்துவிடுகின்றன. நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஆழ்மனது, மூளை பலவீனப்படும் இந்த இறுதிக்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வந்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. உச்சமான போதையின் பிடியிலும் இது நிகழ்வதைக் காணலாம்/

    http://kurinjinet.blogspot.sg/2015/05/10.html?m=1

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...