இந்திய
தொன்மத்தில், இந்த உலகை எட்டு யானைகள் திசைக்கு ஒன்றாக சுமந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஐராவதம், புண்டரீகம்,
வாமனம், குமுதம்,
அஞ்சனம், புட்பதந்தம்,
சார்வபௌமம், சுப்பிரதீகம்
இவை தான் அந்த எட்டு யானைகள். இவற்றுக்கு மதம் பிடித்தால்?
இவை சுமந்து கொண்டிருக்கும் பூமிக்கு என்னவாகும்?
இந்தக்
நாவலை வாசிக்க வேண்டுமென்று தூண்டியது அதன் பெயர் தான். ஆனால், நாஞ்சிலாரின் மற்ற படைப்புகள்
போல (அதாவது தலைகீழ் விகிதங்கள், மற்ற சிறுகதைகள் போல) இது என்னைக் கவரவில்லை. ஒருவேளை,
பரபரப்பாக ஆரம்பிக்கும் கதை, அதன் முடிவை அடையும் போது அங்கே இங்கே சுற்றிவிட்டு வருவதாலோ
என்னவோ. தனித்தனியாக எடுத்துப் பார்க்கும் போது நிறைய அருமையான விஷயங்களை சொல்லிச்
சென்றிருக்கிறார். சமூகத்தின் மீதான விமர்சனங்கள் வரும் இடங்கள் - விகடனில் அவரெழுதிய
தீதும் நன்றும்-ஐ நினைவுபடுத்துகின்றன.
ஒரு பொய்யான
குற்றச்சாட்டு; அதற்கு ஒரு விபரீத தண்டனை. இங்கே அடிபட்டவன் இரண்டு விஷயங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
பொறுமையாக இருந்து தான் நிரபராதி என்று நிரூபிக்கலாம். அல்லது தன்னை தண்டித்தவர்களுக்கு
பாடம் புகட்ட புறப்படலாம். இவற்றில், இரண்டாவதைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குற்றமாக
செய்து கொண்டு, அவற்றிலிருந்து தப்பிக்க ஓடிக் கொண்டேயிருக்கும் ஒருவனுடைய கதை தான்
‘எட்டுத் திக்கும் மதயானை’. கடைசியில் பகை முளைத்த இடத்திலேயே அன்பும் பூக்கிறது. நாஞ்சிலாரின்
தலைகீழ் விகிதங்களாகட்டும் எட்டுத் திக்கும் மதயானையாகட்டும், கதை முடிவுகளை இவ்வளவு
விளக்கமாகச் சொல்லியிருக்க வேண்டாம் என்று தோன்றவைக்கிறது. அவற்றை குறிப்பால் மட்டுமே
கூட உணர்த்தியிருக்க முடியும்.

