A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

8 Jul 2013

The Invention of Hugo Cabret - Brian Selznick

பதிவர் - சரவணன்

    இந்த அபூர்வமான புத்தகத்தைப் படித்திருக்காவிட்டாலும் மார்டின் ஸ்கோர்ஸசி எடுத்த படமாகத் திரையில் பலர் பார்த்திருக்கக்கூடும். அபூர்வம் என்பது வடிவம், உள்ளடக்கம் இரண்டிலுமே.

    வடிவத்தை முதலில் பார்க்கலாம். ஐநூறு பக்கங்களுக்குமேல் உள்ள இந்தப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிட முடியும். காரணம், பாதிக்கு மேலான பக்கங்கள் (ஆசிரியரே வரைந்த) படங்களாலேயே ஆனவை. படங்களிலும் ஒரு சிறப்பு. மற்ற புத்தகங்களில் ஓவியர், தன் கதாசிரியர் வார்த்தைகளால் சித்தரித்திருக்கும் அதே காட்சிகளையே ஓவியமாகத் தீட்டியிருப்பார். இந்தப் புத்தகத்தில் அப்படிக் கிடையாது. இங்கே கதையானது வார்த்தைகள் வழியாகவும், சித்திரங்கள் வழியாகவும் மாறி மாறிப் பயணிக்கிறது. அதாவது, எழுதப்பட்ட வரிகளை எப்படி வாசிப்பீர்களோ, அதே மாதிரி படங்களையும் ‘வாசிக்க’ வேண்டும். பிறகு விட்ட இடத்திலிருந்து மீண்டும் சொற்கள் கதையைத் தொடரும். பிறகு கொஞ்சம் படங்கள்... இப்படியே புத்தகம் முழுவதும். சித்திரங்கள் அனைத்தும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போன்ற மிக நேர்த்தியான பென்சில் டிராயிங்ஸ். (இதில் சிலவற்றை கூகுள் இமேஜ் தேடலில் புத்தகப் பெயரைக் கொடுத்துப் பார்க்க முடியும்.)

    ஹியூகோ படத்தைப் பார்த்தவர்கள் அதன் ஆரம்பக் காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். லாங் ஷாட்டில் ஈஃபில் டவர், கொஞ்சம் கொஞ்சமாக ஜூம் செய்து பாரிஸ் நகரம், அதிலொரு புகைவண்டி நிலையம், பரபரப்பாக அலைந்துகொண்டிருக்கும் மக்கள் திரளுக்கிடையில் ஓடி, சந்து பொந்துகளில் புகுந்து, பிரமாண்டமான கடிகார அறையிலிருந்து அதன் முகப்பு (டயல்) ஊடாக எட்டிப் பார்க்கும் சிறுவன்... அந்தக் காட்சி அப்படியே ஒரு ஸ்டோரிபோர்டு மாதிரி இப்புத்தகத்தின் துவக்கத்தில் வரையப்பட்டிருப்பதுதான்!

  
     உள்ளடக்கமும் புதுமையானதே. குழந்தைகளின் உலகில் நடக்கும் திருப்பங்களும், வியப்புகளும் நிறைந்த கதை; அதனூடாக ஆரம்பகால ஃப்ரெஞ்ச் சினிமா வரலாறு, இல்யூஷனிஸ்ட்கள் எனப்படும் அந்தக்கால மாயவித்தைக்காரர்கள் பற்றிய தகவல்கள், ஆட்டோமேட்டான் என அழைக்கப்பட்ட அன்றைய முன்னோடி இயந்திர மனிதர்கள் பற்றிய வியப்பூட்டும் செய்திகள் என இந்தப் புத்தகத்தில் புதைந்துள்ள எண்ணற்ற பொக்கிஷங்கள் நம்மைக் கட்டிப்போட்டு விடுகின்றன.


    ஃபிரான்சில் முதன் முதலில் படம் எடுத்தவர்கள் மாயவித்தைக்காரர்கள்தானாம். சினிமா என்ற சாதனத்தின் விட்டலாச்சார்ய சாத்தியங்கள் அவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே புரிந்து போயிற்று. சந்தேகமில்லாமல், அவர்கள் எடுத்த படங்களும் மாய, மந்திர, தந்திரக் காட்சிகள் நிரம்பியவைதான்.

    யோசித்துப் பார்த்தால், மந்திர தந்திரக் காட்சிகள் இருக்கின்றனவோ இல்லையோ, பிலிம் சுருளில் தனித்தனி ஃப்ரேம்களாக உறைந்திருக்கும் பிம்பங்கள், திரையில் ஓட ஆரம்பித்ததும் உயிர்பெற்று எழுந்து, நம் உணர்வுகளை ஆக்கிரமித்து, உள்ளத்தில் இடம்பிடித்துவிடுவது என்பதே ஒரு மிகப்பெரிய மாயாஜாலம்தான் இல்லையா? இதற்கு இணையாக, இந்தப் புத்தகத்தில் பென்சில் கோடுகளாக உறைந்திருக்கும் படங்களும் நாம் பக்கங்களைத் திருப்பத்திருப்ப உயிர்பெற்று ஒரு கதையைச் சொல்லி நம்முடன் உறவாடும் மாயத்தைக் காண்கிறோம். இப்படியாக இந்த நாவல் சினிமாவைப் பற்றிய புத்தகமாக இருப்பது மட்டுமின்றி, புத்தக வடிவில் ஒரு சினிமாவாகவும் இருக்கிறது எனலாம்.

    இதே மாதிரி இயந்திர மனிதர்களை முதன்முதலில் உருவாக்கியவர்களும் மாயவித்தைக்காரர்களே. அவற்றை வைத்து வித்தைகாட்டி ஜனங்களைப் பரவசப்படுத்தினார்களாம். இன்று ஜப்பானில் ரோபாட் பந்து விளையாடுகிறது, நடனம் ஆடுகிறது என்றெல்லாம் கேட்டு ஆச்சரியப்படுகிறோம். இதெல்லாம் என்ன பிரமாதம்? எந்தக் கணினியும், எலக்ட்ரானிக்ஸும் இல்லாத காலத்தில், வெறும் சாவி கொடுக்கிற மெக்கானிசத்தை வைத்துக்கொண்டு ஆட்டோமேட்டான்கள் பேனாவைப் பிடித்துக் கவிதையே எழுதியிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

    சரி, கதையைக் கொஞ்சம் பார்ப்போம். பன்னிரண்டு வயது ஹியூகோ காப்ரே பெற்றோரை இழந்து, தனது சித்தப்பா (அல்லது பெரியப்பாவோ, மாமாவோ) க்ளோட் என்பவர் பொறுப்பில் வளர்கிறான். அவனது அப்பா கடிகாரங்களைப் பழுது பார்ப்பவராக இருந்தவர். அதில் மிஞ்சும் உதிரி பாகங்களைக் கொண்டு அவனுக்கு வேடிக்கையான பிராணி பொம்மைகளைச் செய்துதரும் ரசனைக்காரர். ஹியூகோவுக்கும் சிறு வயதிலேயே கடிகார மெக்கானிசம் பிடிபட்டுவிடுகிறது.

    சித்தப்பா க்ளோட், பாரிஸ் புகைவண்டி நிலையத்தில் கடிகாரங்களுக்குச் சாவி கொடுக்கும் வேலையைச் செய்துவருபவர். பொறுப்பற்ற குடிகாரரான அவரும் ஒருநாள் திடீரென்று காணாமல் போய்விட ஹியூகோ அநாதையாகிவிடுகிறான். க்ளோட் காணாமல் போனது தெரிந்துவிட்டால் வேலைக்கு வேறு ஆளைப் போட்டுவிடுவார்கள்; ஹியூகோவை அநாதை இல்லத்தில் அடைத்துவிடுவார்கள். இப்படியாகாமல் தடுப்பதற்காக, பல மாதங்கள் சித்தப்பாவுக்குப் பதிலாக, இரகசியமாக ஹியூகோவே கடிகாரங்களுக்குச் சாவி கொடுத்து, அவற்றைத் தொடர்ந்து இயங்கவைத்து வருகிறான். மாதாமாதம் அவருக்கு அலுவலக ஜன்னலில் அவரது சம்பளக் காசோலையை வைப்பார்கள். அதையும் போய் எடுத்துவருகிறான். ஆனாலும் சின்னப் பையனாக இருப்பதால் வங்கியில் போய்க் காசோலையை மாற்ற முடிவதில்லை. இதனால் பலநேரங்களில் பட்டினியாக இருக்கிறான். வீட்டு வாசல்களில் வைக்கப்படும் பால் பாட்டில்கள், பிஸ்கட்கள் போன்றவற்றை வேறு வழியில்லாமல் திருடித் தின்னவேண்டிய கட்டாயம். அவன் நிலை ரொம்பப் பாவமாக இருக்கிறது.


  

    இதற்கிடையே புகைவண்டி நிலையத்தில் ஒரு கிழவனார் நடத்தும் பொம்மைக்கடையிலும் பகுதிநேரமாக வேலை செய்கிறான் ஹியூகோ. அங்கிருந்து பற்சக்கரங்கள், ஸ்பிரிங்குகள் போன்றவற்றையும் அவ்வப்போது அபேஸ் பண்ணி வருகிறான். இது எதற்கு? அதாவது, ஒரு  மியூசியத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு ஆட்டோமேட்டான் சேதமடைந்து, எரிந்த குப்பைகளோடு குப்பையாகப் போடப்பட்டிருப்பதைப் பார்க்கிறான் ஹியூகோ. அவனுடைய அப்பா பல ஆண்டுகள் முன்பு அதன் முழு வடிவமைப்பையும் படங்களாக வரைந்து, பிறந்தநாள் பரிசாக ஹியூகோவுக்குக் கொடுத்திருக்கிறார்.   
   
அதை மீட்டுவந்து, அப்பா கொடுத்த நோட்டுப்புத்தகத்தின் உதவியுடன் மீண்டும் வேலைசெய்யவைக்க நினைக்கிறான்.  அதற்குத்தான் இந்த ஸ்பேர் பார்ட்ஸ் அவசியமாகின்றன. அந்த ஆட்டோமேட்டான் கையில் ஒரு பேனா இருப்பதால் அது எழுதப்போகும் விஷயத்தைத் தெரிந்துகொள்ளும் ஆவல் ஹியூகோவை உந்தித்தள்ளுகிறது. அது தன் அப்பாவிடமிருந்து தனக்கு ஒரு கடிதமாக இருக்கலாம் என்பது அவன் எண்ணம். கடைசியில் பழுதுபார்க்கும் முயற்சியில் வெற்றியும் பெற்றுவிடுகிறான். ஆனாலும் ஒரு சிக்கல்—அதை முடுக்குவதற்கான பிரத்தியேக சாவி கிடைக்கவில்லை.

    பொம்மைக்கடைக் கிழவனாருக்கு இஸபெல் என்று ஒரு பேத்தி இருக்கிறாள். ஒருநாள் அந்தச் சிறுமி கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலியில் இருக்கும் சாவி, ஹியூகோவின் இயந்திர மனிதனுக்குரியது என்று தெரியவருவது எதிர்பாராத திருப்பம்!

    தனித்தனியான செல்லுலாய்ட் ஃபிரேம்கள் திரையில் உயிர்பெற்றுவரும் மாயம் போன்றே இங்கும் ஒரு மாயாஜாலம் நிகழ்வதைப் பார்க்கிறோம். உதிரிகளாக எந்த சுவாரசியமும் அற்ற பற்சக்கரங்கள், பொருத்தமாக ஒன்றிணைக்கப்பட்டு, விசையளிக்கப்பட்டதும் தமக்குள் இவ்வளவுகாலம் உறைந்துகிடந்த மர்மத்தை ஓவியமாக உயிர்பெறச் செய்யும் மந்திரவித்தை! 

    இயந்திரத்தை மனிதனாக்கிய சாவி இஸபெல்லிடம் இருந்ததுபோலவே, அநாதையாக, திருடனாக, அச்சமும், அவநம்பிக்கையும் கொண்டவனாக உலகத்திடமிருந்து ஒளிந்து, பற்சக்கரங்களிடையே வாழ்ந்துவந்த ஹியூகோவை மீட்டு நிஜ மனிதனாக்கும் சாவியாக இருப்பதும் அவளுடைய நட்புதான். இருவரும் சேர்ந்து புத்தகங்கள் வழியாக சினிமா தோன்றிய வரலாற்றைப் படிக்கிறார்கள். ஒரு திரைப்பட சங்கத்தின் மூலம் ஆரம்பகாலப் படங்கள் சிலவற்றைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.

    ஆட்டோமேட்டான் வரைந்த படம், ஹியூகோவின் அப்பா தனது சிறுவயதில் பார்த்த ஒரு திரைப்படத்தில் வரும் காட்சி—முகம்போல வரையப்பட்ட சந்திரனின் ஒரு கண்ணில் ஒரு ராக்கெட் பாய்ந்திருப்பது போன்ற காட்சி அது. அத்துடன், அதன் கீழே ‘ஜார்ஜ்ஷ மெல்லியஸ்’ என்று கையெழுத்தும் போடுகிறது. அந்தப் பெயர்—பொம்மைக்கடைத் தாத்தாவுடையது!

    இப்படியாக இயந்திர மனிதனுக்குள் உறைந்திருந்த இரகசியம் வெளிப்பட்டு மனித இயந்திரமாக இறுகிப்போய் வாழ்ந்துவரும் பொம்மைக்கடைப் பாட்டனாரின் (பப்பா ஜார்ஜ்ஷ) கடந்தகாலம் பற்றிய மர்மத்தை விடுவிக்கிறது. இதில் இன்னொரு முக்கிய விஷயம், ஹியூகோவும், இஸபெல்லும் கற்பனைப் பாத்திரங்களாக இருந்தாலும் ஜார்ஜ்ஷ நிஐத்தில் வாழ்ந்த மனிதர். ஆம், இந்த நாவல் புனைவும், உண்மையும் கலந்த ஒன்று.

    சில புத்தகங்களை எடுத்துப் பார்த்தவுடனேயே நம் கையில் இருப்பது ஒரு ‘ஜெம்’ என்று தெரிந்துவிடுமல்லவா? அப்படியான ஒரு புத்தகம்தான் ஹியூகோ காப்ரே. குழந்தைகளின் உலகம், திரைப்படம், மாயாஜால வித்தைகள், எந்திர மெக்கானிசம் ஆகியவற்றை ஆழமாக நேசிக்கும் ஒருவரே இந்த நாவலை எழுதியிருக்க முடியும். நாவலில் இந்த அம்சங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று அழகாகப் பொருந்தி இயங்குகின்றன - ஒரு கடிகாரத்தின் பற்சக்கரங்களைப் போல. ஒரு குள்ள மனிதனாக மாறி, (அந்தக் கால) சுவர்க்கடிகார எந்திரத்தின் பற்சக்கரங்களுக்கிடையே அலைந்து பார்க்கும் பரவசம், அல்லது நீங்கள் முதன்முதலாகப் பார்த்த மாயாஜாலக் காட்சி தந்த பிரமிப்பு... இவற்றுக்கு ஈடான குதூகலத்தை தருகிறது இந்த நாவல்.

    படம் வருவதற்கு முன் இந்தியாவில் இந்தப் புத்தகம் பற்றி சரிவர அறிமுகமில்லாமல் போனது துரதிர்ஷ்டம். இதன் விலையும் பலரைப் பயமுறுத்தியிருக்கக் கூடும். ஆனாலும், எனக்கு அது பெரிய அதிர்ஷ்டமாகவே அமைந்துவிட்டது; இல்லையென்றால் ரூ.790 மதிப்புள்ள (டாலர் 50 ரூபாய்க்குக் கீழே இருந்த காலம்!) புத்தகத்தை ஒரு பிரபல புத்தகக்கடையில் ஒரு ஆடித்தள்ளுபடியில் அடிமாட்டு விலையாக 79 ரூபாய்க்கு நான் வாங்கியிருக்க முடியுமா :)



இணையத்தில் வாங்க: Flipkart

Cover courtesy: biblioradio.blogspot.in 
       
Book photo & inside image courtesy: spellsaab.com


1 comment:

  1. அருமையான அறிமுகம்... நான் HUGO-வைப் படமாக மட்டுமே பார்த்துள்ளேன்... உங்கள் அறிமுகத்தில் படத்தின் பாதிக் கதைக்கு மேல் வந்துவிட்டது...
    AUTOMATON-ன் வரைபடம் toy-shopkeepeருடைய கடந்தகாலத்தோடு தொடர்புடையதென்று தெரிந்தவுடன்,நமக்கும் ஹூகோ போல அதைப்பற்றித் தெரிந்துகொள்வதில் ஆர்வம் தொற்றிக்கொள்ளும்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...