A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

26 Oct 2012

தந்தையும் மகனும் - பெருவிலை ஆரம் பிறை - மூன்று ஜாமங்கள் கொண்ட இரவு.



புத்தகங்களில் ஆண்-பிரதி பெண்-பிரதி என எழுதும் பின்நவீனத்துவ வழக்கத்துக்கும் இந்தப் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு விதத்தில் எழுதுபவர் ஆணாக இருப்பதால் ஆண் மையப் பார்வை சற்றே அதிகமாக இருக்கலாம். ஒரு ஆணாக தந்தை - மகனுக்கிடையே இருக்கும் உறவை எழுதும்போது பெண் வாசகிகளுக்கு பதிவின் நுண்மையான தளங்கள் பிடிபடாமல் போகலாம்.இதைப் படிப்பவர் பெண்ணாக இருக்கும் பட்சத்தில், பெண் சம்பந்தமானப் பார்வையை தங்களது கற்பனையைக் கொண்டு உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவரவர் இஷ்டப்படி கற்பனை செய்துகொள்ள நீ எதற்கு எனும் கேள்விகளுக்கு ஆம்னிபஸ்ஸில் தடையில்லை. பதில் எதிர்பார்க்கக்கூடாது. அவ்வளவுதான்.

பத்து வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன தனது தந்தையைப் பற்றி எனது நண்பன் திடீரென நிறையப் பேசத் தொடங்கினான். எதைப் பற்றிப் பேசினாலும் தனது அப்பாவைப் பற்றி நுழைத்துவிடுவான். இப்படித்தான் மாற்றான் படம் பார்த்தியான்னு யதார்த்தமாகக் கேட்டதுக்கு, பார்த்தேன் பிடிக்கலை எனச் சொல்வதற்கு பதிலாக, 'ஒட்டிப் பிறக்கும் ரெட்டை வெளிப்படையாக காட்டப்பட்டிருக்கு அவ்வளவுதான், எல்லாருக்குள்ளயும் அப்பா உள்பிறந்த ரெட்டைப் போல நம்மை கவனித்தபடியே இருக்காங்க, சில சமயம் அவங்க சொல்வதைக் கேப்போம், பல சமயம் வாய மூடுடான்னு நிராகரிப்போம்', அப்படின்னு சொன்னான். இந்தக் கோணம் படத்தில் இருந்தால் கேரண்டியா நூறு நாளும் என் நண்பனே படத்தைப் பார்த்திருப்பான்.

இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருந்த வேளையில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ’மகளும் நானும்’ எனும் பதிவில் நேற்று தனது வலைதளத்தில் - மகள்கள் மாறுவது கிடையாது. தந்தை மகள் உறவு மாறுவதில்லை என எழுதியுள்ளார். மிக அற்புதமானக் கட்டுரை. ஆம்னிபஸ் வாசகர்கள் அதனைப் படித்துவிட்டு மேலே தொடரலாம். ஆம், தந்தை - மகள் உறவு வளர்வதும் இல்லை - அம்மா மகன் உறவு போல உருவாகி ஒரு கட்டத்தில் நிலைபெற்றுவிடுகிறது. 




எவ்வளவு வெறுப்பு வந்தாலும் அம்மா - மகன் உறவு கசந்துபோவதில்லை. தாய் என்றாலே பாசம், தாய்மை எனும் கருத்துகளைத் தவிர வேறு பார்வையை நாம் எக்காலத்திலும் முன்வைப்பதில்லை. இந்த உறவு பற்றிய விசாரணையில் நாம் எக்காலத்திலும் இறங்குவதில்லை. ஆனால் தந்தை - மகனுக்கான உறவு பிறை போல ஒவ்வொரு காலத்திலும் மாறியபடி இருக்கிறது. பதின்பருவத்தில் எதிர் எதிர் துருவங்களில் முறுக்கிக்கொண்டிருக்கும் உறவு மகன் தந்தையானதற்குப் பின்னர் கனியத்தொடங்குகிறது எனலாம். ஒவ்வொரு காலத்திலும் தனது தந்தையின் நிலைப்பாட்டோடு மகன் பொருத்திப் பார்க்கிறான். மெல்ல தந்தையோடு இருந்த/இருக்கும் உறவு சுமூக நிலைபெறுகிறது. காலாகாலத்துக்கு இப்படியே நீடிக்காமல் நிலையில்லா ஊசலாட்டத்தோடு தனது தந்தையின் வாழ்வை மறுபரிசீலனை செய்துபார்க்கிறான். ஒரு திடமான முடிவுக்கு அவனால் வரமுடிவதில்லை என என் நண்பன் கூறுவதும் உண்மையாக இருக்கலாம். அம்மாவைப் பற்றி அப்படிப்பட்ட ஊசலாட்டங்கள் பெரும்பாலும் சாத்தியப்படுவதில்லை. You don't appreciate lots of things until you are above a certain age and for some never என பி.ஜி,உட்ஹவுஸின் பிரபலமான வாசகத்தைப் போல் தந்தை வேடத்தில் இருக்கும் மகனும், சிறுவன் எனும் அடையாளத்தை தன்னுள் மறைத்து ரகசியமாகச் சீராட்டி வளர்க்கும் வயதானவனும் வளர்வதேயில்லையா? எவ்வளவு வெறுப்பு வந்தாலும் தன் தாய் புனிதமானவள் எனும் நினைப்பும் சிறு பிளவில் தந்தையை பரமவைரியாக கீழ்த்தரமாகப் பார்ப்பதும் எப்படி நடக்கிறது? 

தந்தை - மகன் உறவை மையப்படுத்தி பல புனைவுகள் தமிழில் வந்திருக்கின்றன. தந்தையை ஆதர்சமாகக் கொண்ட எழுத்தாளர்கள் நேரடியாக அவரையே ஒரு கதாபாத்திரமாக மாற்றியுள்ளனர். ‘அப்பா அன்புள்ள அப்பா’ எனும் கட்டுரை மூலம் சுஜாதா தந்தையின் அந்திமக் காலத்தில் அவருடனான உறவை மறுபரிசீலனை செய்கிறார். ’மகன் தந்தைக்காற்றும்’, எனும் சிறுகதை தந்தை மகன் உறவைப் பற்றியது. அதே போல, ஜெயமோகன் தனது தந்தையுடனான உறவை பல கட்டுரைகளில் எழுதியுள்ளார். எழுத்தாளர் ஓரான் பாமுக் ‘எனது தந்தையின் சூட்கேஸ்’என அவரது தந்தையைப் பற்றி நோபல் உரையில் பேசினார். எழுத்தாளர் பிரபஞ்சன் தனது தந்தை நடத்தி வந்த கள்ளுக்கடையின் வீழ்ச்சியைப் பற்றி எழுதிய காகித மனிதர்கள், யூமா வாசுகி எழுதிய ரத்த உறவு போன்ற நாவல்களில் அப்பா எனும் பாத்திரம் மற்றவர் பார்வையில் உயர்வதும் தாழ்வதும் மிக நெகிழ்வானச் சித்திரம். 

இன்று நாம் பார்க்கயிருக்கும் யுவன் சந்திரசேகர் எழுதிய ‘மூன்று ஜாமங்கள் கொண்ட இரவு’ தகப்பன்சாமிகளை நம்முன் நிறுத்திக்காட்டுகிறது. இன்றும் தந்தை - மகன் பற்றிய உறவை மிக அழகாக முன்வைத்த சிறுகதையாக நான் படித்தவனுற்றுள் இந்த கதை இருக்கிறது. ஒவ்வொரு வரியையும் செதுக்கி அமைத்துள்ளார். ஆங்காங்கே ஒரு கவிஞனின் மனச்சித்திரம் நமக்குக் கிடைத்தாலும், தாய்மையைப் போல் தந்தைமையை விவரித்து விமர்சித்து கொண்டாடும் கதை. மனதிற்குள் இருக்கும் நிலைகொள்ளாத தவிப்பு ஒரு கட்டத்தில் பீறிடும்போது வரும் வேகமும் இயல்பும் இந்தக் கதையில் இயல்பாகக் கூடியுள்ளது. இழப்பு என்பது பெரும் வலி. ஆனால் அதைவிட நினைவு பல சமயங்களில் உயிரோடு மனிதர்களைக் கொன்றுவிடும் வல்லமை கொண்டது - நிதானமாக நாட்கணக்கில் வருடக்கணக்கில் நம்மை உண்டு செரிக்கும் உறவுகள். அவை நமக்கு வாழ்வாதாரமும் கூட.

கதை நாயகன் கிருஷ்ணன் தனது தந்தை பற்றிய ஞாபகங்களில் மொட்டைமாடியில் நின்றிருக்கிறார். ‘தொலைவின் ஆழத்தில் கண்சிமிட்டும் நட்சத்திரங்கள் பூர்விக ஞாபகங்களாக’ அவருக்குத் தெரிகின்றன. நினைத்த மாத்திரத்தில் பூத கணங்கள் போல 'நெஞ்சில் நிரைந்த நினைவுகள் மூடி திறந்து வெள்ளமென வெளிவருகிறது'. அப்பாவினுடைய சுட்டுவிரல் வழியே பெருகிய இசை ஞானம் கிருஷ்ணனை விடாமல் துரத்துகிறது. சூரியனின் முகம் பார்த்து மலரும் பூக்களைப் போல தொடர்பில்லாத நிகழ்வுகள் வழியே மறைந்தவர்களின் ஞாபகங்கள் நம்மை அடைகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் தொடர்பில்லாதவை. ஆனால் அடியாழத்தில் ஏதோ ஒரு இழை, சிறு கண்ணி நமது ஞாபகக்கதவைத் திறக்கக் காத்திருக்கின்றது. காக்காய் உட்கார பனங்கிழங்கு விழுந்த கதையாகத் தெரிந்தாலும், நம்முள்ளே முடங்கிக் கிடக்கும் நினைவுத்தாழ்வாரங்கள் சட்டென தொடர்புறுத்தி மடமடவென ஞாபகங்களை நம்முள் நிரப்பிவிடுகிறது.

தகப்பனானப் பின்னும் அவ்வப்போது தன்னுள்  பத்திரமாக வசித்து வரும் குழந்தையின் தலையைப் பரிவாகக் போத விழைகிறார் கிருஷ்ணன். தனது சிறுவயதில் அப்பா இறந்ததை நம்பாத அதே சிறுவன் இப்போதும் அவரது வருகையை எதிர்பார்க்கிறான். நினைவுகள் அனைத்தும் அப்பா மீண்டு வருவதாகவே அவனுக்குத் தோன்றுகிறது. முல்லையாற்றில் விட்ட பித்தளைத் தவலையைப் பிடிக்கக் கிளம்பிய அப்பாவை தடுத்து நிறுத்துகிறான் கிருஷ்ணன். இதை நினைவு கூறும்போது, child is the father of the man என கிருஷ்ணன் தனது மனைவி பத்மினியிடம் சொல்கிறார். ஆனாலும் இந்நிகழ்வுக்கு அடுத்த வருடமே தண்ணீரில் தந்தை இறந்துவிடுகிறார். எல்லாம் இழந்து நிற்கையில், நம்பிக்கையும் சில நினைவுகளும் மட்டுமே எஞ்சுகின்றன.

வழக்கமாக யுவன் கதைகளில் வரும் கதைக்குள் கதை பாணி இதிலும் தொடர்கிறது. தந்தையென ஒவ்வொருவருக்குள்ளும் திரண்டு எஞ்சும் கசண்டு தான் இந்த கதைகளை இணைக்கும் இழை. கிருஷ்ணனின் நண்பன் சுகவனம் சித்தி கொடுமை தாங்காமல் தந்தையிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு ஓடுகிறான். தெருவில் கிடக்கும் கடவுளர்போல, தந்தை கிடைப்பதில்லை. யாருமற்ற வெளியில் கூட ஏதேனும் ஒரு தாயை நாம் கண்டடையக் கூடும். ஆனால் தகப்பன்கள் அப்படி இலவசகத்துக்கு சர்வீஸ் செய்வதில்லை. ஆனால் சுகவனத்துக்குக் கிடைக்கிறார் - நாயர் ஒருவர். கடலுக்குள் சாக ஓடியவனைக் காப்பாற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் அதே இரவில் ‘எனக்கு மறுபிறவி கொடுத்த மதுசூதன் நாயரும் எனக்கு ஒரு தகப்பந்தானே’, எனக் கூறும் சுகவனத்தை வன்கலவிக்கு ஆட்படுத்துகிறார் (’என்னைக் கழுவேத்திட்டான்’)

கரையில் கிடக்கும் கூழாங்கற்களைப் போல வெவ்வேறு வடிவங்களிலும் தன்மைகளிலும் இந்த உறவு தொடர்கிறது. பிம்பம் வெளிறின தகப்பன்மார்கள், இருளின் கருமையில் ஒளிரும் தாய்மை உள்ளங்களோடு அமையும் தகப்பன்கள், ஒப்பனை முகங்களை அடையாளங்களாக மாற்றிக்கொண்ட தகப்பன்கள் என எத்தனைவிதம். நம் உறவுகள் பலவடிவங்களில் நம்மை பாதிக்கும்; அவற்றில் தந்தையை போன்ற கலவையான உணர்வுகளை நம்முள் ஏற்றுவன குறைவே. தந்தை - மகன் உறவின் வசீகரமும் இதில் அமைந்துள்ளது. வயதின் முதிர்ச்சிக்கேற்ப புலரும் உறவின் மாற்றத்தை ஒவ்வொரு கட்டத்திலும் புது உறவின் தொடக்கமாகப் பார்க்கலாம். காலாகாலத்துக்கும் அணுகி ஆராய, புது மதிப்பீடுகளை உருவாக்குவதற்கு, நம்மையே அளப்பதற்கானச் சந்தர்ப்பம் தந்தை - மகன் உறவில் இருப்பதாகத் தோன்றுகிறது. பிறப்பில் தொடங்கும் இந்த உறவு திட்டவட்டமாக நிலைபெறாமல் நாம் மறையும்வரை நம்முடனேயே வளர்ந்து நம்மை வாழ்விப்பது ஒரு கொடுப்பினை.

4 comments:

  1. ஐயா சாமி, புக்கு போட்டது யாரு, எத்தனை பக்கம், என்ன விலை, எங்கே கிடைக்கும்ன்ற விவரங்கள் கொடுக்க மாட்டிங்களா! :(

    ReplyDelete
  2. //எவ்வளவு வெறுப்பு வந்தாலும் தன் தாய் புனிதமானவள் எனும் நினைப்பும் சிறு பிளவில் தந்தையை பரமவைரியாக கீழ்த்தரமாகப் பார்ப்பதும் எப்படி நடக்கிறது? // ஹ்ம்..அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கட்டுரைகளை திண்ணை இதழில் தொடர்ந்து வாசிக்கிறேன் - தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி

      Delete
  3. சமீபத்தில் யுவனின் மணற்கேணி வாசித்தேன். அந்நூலிலும் அவருக்கும் அவருடைய தந்தைக்குமான உறவு விவரிக்கப்பட்டிருந்தது. யுவன் நம் அன்றாட வாழ்க்கையை அழகான கதைகளாக மாற்றிவிடும் அற்புதக்கதையாளன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...